வேளானி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வேளானி என்பது வேளாண் ஏரி என்பதின் மருவூச் சொல் ஆகும். தமிழ் நாட்டின் சிவகங்கைக்கு அருகில் உள்ள மானாமதுரையிலிருந்து 8 கல் தொலைவில் உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் மக்கள் தொகை நெருக்கம் குறைவான சிற்றூர் வேளானி யாகும்.

இந்த ஊரின் அருகில் கிட்டத்தட்ட 2 கல் தொலைவிற்கு வேறு எந்த ஊரும் இல்லை. ஆதலால் இந்தச் சிற்றூர் மிக அமைதியான குடியிருப்பு ஆகும். வேளானியில் வடக்குக் குடியிருப்பு, தெற்குக் குடியிருப்பு என இரண்டு குடியிப்புகள் உண்டு. இரண்டு குடியிருப்பின் நடுவிலும் வயல்வெளிகள் உள்ளன. இந்த இரண்டு குடியிருப்புக்களையும் இணைக்க ஊரின் கிழக்கில் ஒரு மண் சாலை உள்ளது.

ஊரின் எல்லையில் கிழக்குப் பக்கம் மருதங்கநல்லூர் என்ற ஊரும், வடக்கில் கீழப்பிடாவூர் என்ற ஊரும், மேற்கில் சீகன் குளம் என்ற ஊரும், தெற்கில் நெடுந்தொலைவிற்கு அப்பால் கிட்டத்தட்ட 5 கல் தொலைவில் மேலநெட்டூர் என்ற ஊரும் உள்ளது.

மானாமதுரையை இணைப்பதற்கு ஊரின் வடபுறத்திலிருந்து ஒரு தார்ச்சாலை செல்கிறது. இந்த ஊர் மக்களின் முதன்மைத் தொழில் வேளாண் தொழில் ஆகும். அதனின் துணைத்தொழில் ஆடுமாடு மேய்த்தல் ஆகும். இந்தச் சிற்றூரில் பனைமரக் காடு உள்ளது. பாசன ஏரியின் கரை நெடுகிலும் ஆலமரங்கள் நிறைந்து காணப்படும். அதனின் நிழலில் ஆடு மாடுகளும் அதன் மேய்ப்பர்களான மனிதர்களும் வெயிலின் தாக்கத்தைப் போக்கிக் கொள்வார்கள். ஏரியின் உட்புறத்தில் கருவேல மரங்கள் அடர்ந்து காணப்படும். அம்மரத்தின் இருப்பே ஆடு மாடுகளுக்கு மேய்ச்சல் தளங்களாக இருக்கிறது.

கோயில்கள்

கிராமத்தின் தெய்வமாக ’’காட்டுக்கருப்பையா’’ என்ற ஐயனார் கோயிலும், அவருக்கு துணையாக "நொண்டிச்சோணை"யும் இன்னும் சிலரும் இருக்கின்றனர்.

ஊரின் மேற்கு எல்லையில் மிக சக்தி வாய்ந்த ’’கருங்கல் முனி’’ என்ற முனியய்யா கோயிலும் உள்ளது. இதன் வழியே திருமணமாகி செல்பவர்கள், கர்ப்பிணிப் பெண்களை அழைத்து செல்பவர்கள் தேங்காய் உடைத்து விட்டே செல்ல வேண்டும். அதுவே எழுதப்பாத விதியாக சுற்றுக்வட்டாரக் கிராம மக்கள் கடைப்பிடித்து வருகின்றனர்.

கிராமத்தின் ஊரணிக்கரையில் ’’கற்பகவினாயகர்’’ என்னும் பிள்ளையார் கோயில் உள்ளது. அதன் எதிரே மிக அருமையான நீரூற்று கொண்ட ஆழ்குழாய் கிணறும் உள்ளது. இது ஜீவ ஊற்றாக இருந்து வேளானி கிராமமக்களின் நீர்த்தேவையை நிறைவு செய்து வருகிறது.

வேலுக்கோனார் இந்திரா தம்பதிகளின் பெண்மரபு வழி கோயிலான “ராக்கச்சி அம்மன்” கோயில் ஒன்றும் உள்ளது.

நீர் நிலைகள்

ஒரு பெரிய கண்மாய் அதன் கரை நெடுகிலும் ஆலமரங்கள் (ஒரு காலத்தில் மிக அடர்த்தியான பெரும் மரங்கள் இருந்தன) ஆங்காங்கே இருக்கும். இந்தக் கண்மாய் கரையின் மேல் தான் கிராமத்தின் தெய்வமான காட்டுக் கருப்பையா அமர்ந்து அருள் பாலித்திக் கொண்டிருக்கிறார்.

தெற்கு குடியிருப்பின் அருகில் ஊரணி உள்ளது. மழைக்காலங்களில் மட்டும் நீர் நிறைந்து இருக்கும் வெய்யில் காலங்களில் வரண்டோ அல்லது நீர் சுருங்கியோ காணப்படும்.


சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வேளானி&oldid=3693486" இலிருந்து மீள்விக்கப்பட்டது