வீரமாமுனிவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வீரமாமுனிவர்
பிறப்புகான்ஸ்டான்டினோ கியூசெப் பெஸ்கி
நவம்பர் 8, 1680
கேசுதிகிலியோன்,  இத்தாலி
இறப்புபெப்ரவரி 4, 1747[சான்று தேவை]
மற்ற பெயர்கள்தைரியநாதன்
சமயம்கத்தோலிக்க திருச்சபை

வீரமாமுனிவர் (ஆங்கிலம்: Constanzo Beschi, நவம்பர் 8, 1680 – பெப்ரவரி 4, 1747)[1] என்று அழைக்கப்படும் கான்சுடான்சோ பெசுக்கி என்பவர் இத்தாலிய நாட்டு கிறித்தவ மத போதகர் ஆவார். இவர் இத்தாலி நாட்டிலுள்ள கேசுதிகிலியோன் என்னும் இடத்தில் பிறந்தார். இவர் இயேசு சபையைச் சேர்ந்த குரு ஆவார். கிறித்தவ மதத்தைப் பரப்பும் நோக்கில், 1709ஆம் ஆண்டு இயேசுசபையில் குருவானபின், 1710-ஆம் ஆண்டு தமிழகத்துக்கு அதாவது அவரது 30-ஆவது அகவையில் வந்தார்.

இவர் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் சிறப்பான பணிகளைச் செய்துள்ளார். 23 நூல்களைத் தமிழில் எழுதியதுடன், இயேசு கிறித்துவின் வாழ்க்கை தொடர்பான நிகழ்ச்சிகளையும் இயேசுவின் வளர்ப்புத் தந்தையாகிய புனித யோசேப்பின் வரலாற்றையும் தமிழ்ப் பண்பாட்டுக்கேற்ப "தேம்பாவணி" என்ற பெருங்காவியமாக இயற்றியது இவரின் தமிழ்ப் புலமைக்குச் சான்றாக உள்ளது. சுப்ரதீபக் கவிராயர் மூலம் தமிழில் புலமை பெற்றார்.[2]

இந்தியாவில்[தொகு]

வீரமாமுனிவரின் இயற்பெயர் 'கான்சுடண்டைன் சோசப்பு பெசுக்கி (Constantine Joseph Beschi). இவர் இலிசுபனில் இருந்து புறப்பட்டு 1710 சூனில் கிறித்தவ மதப் பரப்புப் பணி செய்ய கோவா வந்து சேர்ந்தார்.

தமிழகத்தில்[தொகு]

கோனான்குப்பத்தில் பெரிய நாயகி அன்னை ஆலயத்தின் முன் அமைந்துள்ள வீரமாமுனிவர் திருவுருவம்

சில நாட்கள் கோவாவில் தங்கியவர், தமிழ்நாடு செல்லத் திட்டமிட்டு, கொச்சி வந்து அங்கிருந்து கால்நடையாக அம்பலக்காடு வந்து தங்கி; மதுரையில் காமநாயக்கன்பட்டி வந்து சேர்ந்தார்.

தமிழகத்தில் பல மாவட்டங்களில் கிறிஸ்தவ தேவாலயங்களைக் கட்டியுள்ளார். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டம் முகாசபரூர் பாளையக்காரரின் உதவிகொண்டு புனித பெரிய நாயகி அன்னைக்கு திருத்தலம் கட்டி எழுப்பியவர் வீரமாமுனிவர். கோனான்குப்பம் புனித பெரியநாயகி அன்னைக்குத் தமிழ் கலாச்சாரப்படி அன்னை மாமரிக்குப் புடவை உடுத்தியபடி மரத்தாலான சுரூபங்களைச் செய்து அன்னைக்குப் பெருமையும் புகழும் உலகறியச் செய்துள்ளார் வீரமாமுனிவர். புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி வட்டத்தில் உள்ள தவளப்பள்ளம் கிராமத்தில் புனித பெரியநாயகி அன்னை ஆலயம், ஆவூர் கிராமத்தில் புனித பெரியநாயகி அன்னை ஆலயம், கடலூர் மாவட்டம் கோனான்குப்பம் கிராமத்தில் புனித பெரியநாயகி அன்னைக்கு ஆலயம், ஏலாக்குறிச்சி கிராமத்தில் புனித அடைக்கல அன்னை ஆலயம் ஆகியவற்றைக் கட்டி உள்ளார்.[சான்று தேவை]

இவர் கட்டியுள்ள அனைத்து ஆலயங்களும் ஒரே வடிவில் இருக்கிறது. இவர் கட்டி எழுப்பியுள்ள ஆலயத்திற்குல் ஐம்பது பேர் மட்டுமே அமரலாம்.[சான்று தேவை]

அவரது தமிழக வாழ்க்கை முறை[தொகு]

1822-இல், முதன் முதலாக இவருடைய சரித்திரத்தைத் தமிழில் எழுதி வெளியிட்ட வித்துவான் முத்துசாமி பிள்ளை, இவருடைய நடையுடை பாவனைகளை, அந்நூலில் கீழ்வருமாறு எழுதியிருக்கிறார்.

இந்தத் தேசத்தில் வந்தநாள் முதலாகப் புலால் மாமிசங்களை நிவர்த்தித்து, இரண்டு தமிழ்த் தவசிப் பிள்ளைகளைப் பரிசுத்த அன்னபாகஞ் செய்யச் சொல்லித் தினமொரு பொழுது மாத்திரம் போசனம் பண்ணிக்கொண்டிருப்பார். தமது மடத்திலிருக்கும் பொழுது, கோபிச் சந்தனம் நெற்றியிலிட்டுக் கொண்டு, தலைக்குச் சூரியகாந்திப பட்டுக் குல்லாவும், அரைக்கு நீர்க்காவிச் சோமனுந் திருநெல்வேலிக் கம்பிச் சோமன் போர்வை முக்காடுமிட்டுக் காலிற் பாதகுறடும் போட்டுக் கொண்டிருப்பார். இவர் வெளியிற் சாரி போகும் போது பூங்காவி அங்கியும் நடுக்கட்டும், வெள்ளைப்பாகையும் , இளங்காவி யுத்தரிய முக்காடும், கையினிற் காவி யுருமாலையும், காதில் முத்துக் கடுக்கனும், கெம்பொட்டுக் கடுக்கனும், விரலிற்றம்பாக்கு மோதிரமும், கையிற் றண்டுக் கோலும், காலிற் சோடுடனும் வந்து, பல்லக்கு மெத்தையின் மேலிட்டிருக்கும் புலித்தோலாசனத்தின் மேலெழுந்தருளியிருந்து, உபய வெண்சாமரை வீசவும், இரண்டு மயிற்றோகைக்கொத் திரட்டவும், தங்கக் கலசம் வைத்த காவிப்பட்டுக் குடைபிடிக்கவுஞ் சாரிபோவார். இவரிறங்கும் இடங்களிலும் புலித்தோலாசனத்தின் மேலுட்காருவார்.

வீரமாமுனிவரின் தமிழக வாழ்க்கை முறை பற்றிய மாற்றுக் கருத்து[தொகு]

முத்துசாமிப் பிள்ளை வீரமாமுனிவரின் வாழ்க்கை வரலாற்றை 1822-இல் எழுதி, அந்நூலை அவரே ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து 1840-இல் வெளியிட்டார். அவர் 1840-இல் இறந்த பிறகு அவரது தமிழ் வரலாற்றை 1843-இல் அப்பாவுபிள்ளை பதிப்பித்தார். எனவே, வீரமாமுனிவர் வரலாறு பற்றி அச்சான முதல் நூல் இதுவே. ஆனால், இதற்கு முன்னரே சாமிநாத பிள்ளை என்பவர் முனிவரின் வரலாற்றை 1798-இல் எழுதியதாகவும், அது அச்சேறாமல் இருந்ததாகவும் அதைத் தாம் பயன்படுத்தியதாகவும் முத்துசாமிப் பிள்ளையே தம் வரலாற்றில் கூறியுள்ளார்.[3]

வீரமாமுனிவரின் வரலாற்றை எழுதிய முத்துசாமிப் பிள்ளையின் நூலில் முனிவரின் வாழ்க்கைமுறை பற்றிய பல தவறான செய்திகள் அடங்கியிருப்பதை வீரமாமுனிவர் தொண்டும் புலமையும் என்னும் ஆய்வுநூலில் ச. இராசமாணிக்கம் சுட்டிக்காட்டியுள்ளார் [4]. முனிவர் பற்றிய தவறான செய்திகள் எழுந்ததற்கு முக்கிய காரணம் தத்துவ போதகர் என்று சிறப்புப்பெயர் பெற்ற இராபர்ட் தெ நோபிலி என்னும் மறைபரப்பாளர் பற்றிய செய்திகளை வீரமாமுனிவருக்கு ஏற்றியுரைத்ததே என்று இராசமாணிக்கம் ஆய்வினடிப்படையில் நிறுவியுள்ளார். தத்துவ போதகர் 1606-இல் மதுரை வந்து ஐம்பது ஆண்டுகளாக உழைத்தபின் 1656 சனவரி 16-ஆம் நாள் மயிலாப்பூரில் உயிர்துறந்தார். அவருக்குத்தான் தத்துவ போதகர் என்ற பெயர் இருந்தது.

வீரமாமுனிவரையும் தத்துவ போதகரையும் பிரித்தறியாமல் எழுந்த குழப்பத்தை இராசமாணிக்கம் பின்வருமாறு விவரிக்கிறார்:

வீரமாமுனிவரே தமிழ் நாட்டில் செல்வாக்கோடு வழங்கி வருவதாலும், தத்துவ போதகர் யார் என்றுகூடப் பொதுமக்கள் அறியாததாலும், தத்துவபோதகர் ஆற்றிய தொண்டு முதலிய எல்லாம் வீரமாமுனிவர் மீது ஏற்றிக் கூறுவதோடு வீரமாமுனிவரையும் தத்துவ போதகர் என்று அழைக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. சைவ உணவையே கையாண்டது, அன்றாட நோன்பு இருந்தது, உயர்ந்த ஆடைகளையே அணிந்தது, பூணூல் போட்டது, கொடியுடைய கோல் ஏந்திச் சென்றது, பல்லக்கில் சென்றது, வடமொழியிலும் தெலுங்கிலும் தமிழில்போல் பாண்டித்தியம் பெற்றது, முதல் முதலாகத் தமிழிலும் தெலுங்கிலும் உரைநடை நூல்கள்.இயற்றியது, இவைபோன்ற பலவற்றைக் கையாண்டவர் தத்துவ போதகர். இவற்றை எல்லாம் வீரமாமுனிவர் செய்ததாக முத்துச்சாமிப் பிள்ளையும் அவரைப் பின்பற்றிய பல ஆசிரியர்களும் கூறுவது உண்மைக்குப் புறம்பானது...கொடியுடைய கோலோ, பூணூலோ வீரமாமுனிவர் மேற்கொள்ளவில்லை. அவற்றை அணிந்தவர் தத்துவ போதகரே. தத்துவ போதகர் வேறு, வீரமாமுனிவர் வேறு. ஆகவே வீரமாமுனிவரைத் தத்துவ போதகர் என்று அழைப்பதோ, தத்துவ போதகர் படத்தை வீரமாமுனிவரின் உருவமாகக் காட்டுவதோ பொருத்தமற்றது [5]

பெயர்மாற்றம்[தொகு]

மறை பரப்பு முயற்சிக்காக முதலில் தமிழைக் கற்றுக்கொண்ட இவர், தமிழில் வியத்தகு புலமை பெற்று இலக்கணம், இலக்கியம், அகராதி படைத்து தமிழுக்குச் செழுமையூட்டினார். தமது பெயரினை தைரியநாதசாமி என்று முதலில் மாற்றிக் கொண்டார். பின்னர், அப்பெயர் வடமொழி என்பதாலும், நன்கு தமிழ் கற்றதாலும், தமது இயற்பெயரின் பொருளைத் தழுவிச் செந்தமிழில் வீரமாமுனிவர் என மாற்றிக் கொண்டார்.

தமிழ்ப் பணி[தொகு]

இவர் தமிழகம் வந்தபின், சுப்பிரதீபக் கவிராயரிடம் தமிழ் இலக்கண, இலக்கியம் கற்று, இலக்கியப் பேருரைகள் நடத்துமளவுக்குப் புலமை பெற்றார்.

இலக்கியச் சுவடிகளைப் பல இடங்கள் சென்று தேடி எடுத்ததால்; "சுவடி தேடும் சாமியார்" எனவும் அழைக்கப்பட்டார். இவற்றில் காண அரிதான பல பொக்கிசங்கள் அழிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

தமிழின் சிறப்பை மேல் நாட்டார் உணர திருக்குறள், தேவாரம்[சான்று தேவை], திருப்புகழ்[சான்று தேவை], நன்னூல்[சான்று தேவை], ஆத்திசூடி[சான்று தேவை] போன்ற நூல்களை பிற ஐரோப்பிய மொழியில் வெளியிட்டார்.

தமிழ் கற்க ஏதுவாகத் தமிழ் - லத்தீன் அகராதியை உருவாக்கினார். அதில் 1000 தமிழ்ச் சொற்களுக்கு லத்தீன் விளக்கம் அளிக்கப்பட்டது. இதுவே முதல் தமிழ் அகரமுதலி ஆகும். பின்பு 4400 சொற்களைக் கொண்ட தமிழ்-போத்துக்கீய அகராதியை உருவாக்கினார்.

சதுரகராதியை, நிகண்டுக்கு ஒரு மாற்றாகக் கொண்டு வந்தார்.

அக்காலத்தில் சுவடிகளில் மெய்யெழுத்துகளுக்குப் புள்ளி வைக்காமலே எழுதுவது வழக்கம். புள்ளிக்குப் ஈடாக நீண்ட கோடிருக்கும். மேலும் குறில், நெடில் விளக்க என்று "ாாாா" சேர்த்தேழுதுவது வழக்கம். "ஆ" என எழுத "அர" என 2 எழுத்துகள் வழக்கிலிருந்தது. (அ:அர, எ:எர) இந்த நிலையை மாற்றி "ஆ, ஏ" என மாறுதல் செய்தவர் இவர்.

தமிழ் இலக்கிய இலக்கணங்கள் கவிதை வடிவில் இருந்து வந்தன. அவற்றை மக்கள் எளிதில் படித்தறிய முடியவில்லை என்பதனை உணர்ந்து உரைநடையாக மாற்றியவர் இவர்.

பிற தமிழ் படைப்புகள்[தொகு]

  1. வேத விளக்கம்,
  2. வேதியர் ஒழுக்கம்,
  3. ஞானக் கண்ணாடி,
  4. செந்தமிழ் இலக்கணம்,
  5. பரமார்த்த குருவின் கதை,
  6. வாமன் கதை

ஆகிய நூல்களைப் படைத்தார்.

  • திருக்காவல் ஊர்க் கலம்பகம், கித்தேரி அம்மன் அம்மானை இவரது பிற நூல்கள்.
  • 1728-இல் புதுவையில் இவரின் "பரமார்த்த குருவின் கதை" என்ற நூல் இவரால் அச்சிட்டு வெளியிடப்பட்டது. இந்த நகைச்சுவைக் கதைகள் Jean de la Fontaine (1621-1695) எனும் பிரன்சியரால் எழுதப்பட்டது. ஐரோப்பாவில் பிரபலமாக இருந்ததை பெசுக்கி தமிழிலும் மொழிபெயர்த்தார் என்று சிலர் கருதுகின்றனர். இது தமிழில் முதல் முதலாக வந்த நகைச்சுவை இலக்கியம் ஆகும்.
  • காவியத்தில் தேம்பாவணி இவர் இயற்றியது. மூன்று காண்டங்களில் 36 படலங்களைக் கொண்டு மொத்தமாக 3615 விருத்தம்|விருத்தப் பாக்களால் ஆனது இந்தக் காவியம். இதிலும் ஒரு சிறப்பு இருக்கிறது. பின்னிணைப்பாக யாப்பு வடிவங்களை அளித்திருக்கிறார். தமிழில் அமைந்த காப்பியங்களிலேயே, தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத வெளிநாட்டவர் ஒருவரால் இயற்றப்பட்டது எனும் பெருமை தேம்பாவணிக்கே உண்டு. மேலும் வீரமாமுனிவரைப் போல, வேறெந்தக் காப்பியப் புலவரும் சிற்றிலக்கியம், அகராதி, இலக்கணம் உரைநடை எனப் பிற இலக்கிய வகைகளில் நூல்கள் படைத்தாரல்லர்.

மருத்துவ நூல்கள்[தொகு]

இவர் பல மருத்துவ நூல்களை எழுதியுள்ளதாக குறிப்புள்ளது. இந்நூல்கள் பாடல் வடிவில் உள்ளன. [6]

  1. நசகாண்டம்
  2. நவரத்தின சுருக்க மாலை
  3. மகா வீாிய சிந்தாமணி
  4. வைதிய சிந்தாமணி
  5. சுரமஞ்சாி
  6. பூவரசங்காய் எண்ணெய்
  7. மேகநாதத்தைலம் கலிவெண்பா
  8. பஞ்சாட்சர மூலி எண்ணெய்(ஆனந்தகளிப்பு)
  9. சத்துருசங்கார எண்ணெய்(நொண்டிச் சிந்து)
  10. வீரமெழுகு
  11. முப்புசூத்திரம்(நொண்டிச் சிந்து)
  12. அனுபோகவைத்திய சிகாமணி
  13. வீாிய சிந்தாமணி இரண்டாம் பாகம்
  14. குணவாடகம்
  15. நிலக்கண்ணடாடி

வீரமாமுனிவரின் இறப்பு[தொகு]

வீரமாமுனிவரின் வாழ்வையும் பணியையும் விரிவாக ஆய்ந்துள்ள முனைவர் ச. இராசமாணிக்கம் வீரமாமுனிவரின் இறப்புப் பற்றிய செய்தியைக் கீழ்வருமாறு தருகின்றார்:

1742இல் மதுரைப் பணித்தளம் விட்டுச்சென்ற வீரமாமுனிவர், கடற்கரையில் 1745 வரை பணிபுரிந்தபின், 1746-47 ஆண்டுகளைக் கேரள நாட்டிலுள்ள அம்பலக்காட்டில் அமைந்த குருமடத்தில் செலவழித்து, 1747ஆம் ஆண்டு பெப்ருவரி நான்காம் நாளில் தமது 67ஆம் வயதில் உயிர்துறந்தார். திப்பு சுல்தான் காலத்தில் நடந்த வேதகலாபனையில் பல கிறித்துவ நிறுவனங்கள் இடம் தெரியாமல் அழிந்து போயின. வீரமாமுனிவரது கல்லறைக்கும் அந்தக் கதி நேர்ந்திருக்கிறது. தமிழுக்கு இவ்வளவு தொண்டு செய்த பெரியார், தமிழ் நாட்டை விட்டுக் கேரள நாடு சென்று செத்ததும், அங்கு அவரை அடக்கம் செய்த கல்லறையும் தெரியாத நிலையில் இருப்பதும், தமிழ் மக்களுக்கு வருத்தமளிக்கும் செய்திகள். நிற்க, சிலர் இவர் மணப்பாட்டில் இறந்தார் என்றும், வேறு சிலர் மணப்பாறையில் உயிர் துறந்தார் என்றும் கூறுவது வரலாற்றுச் சான்றுக்குப் புறம்பானது. 1746-47 ஆண்டுகளில் கேரள நாட்டு அம்பலக்காட்டில் முனிவர் வாழ்ந்தார் என்பதையும், அங்கே மரித்தார் என்பதையும் அக்கால அதிகாரபூர்வமான அறிக்கையின் வாயிலாக உறுதியாக அறியலாம் [7]

வீரமா முனிவர் எழுதிய பரமார்த்த குருவின் கதையை 1822 இல் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பெஞ்சமின் பாபிங்டன் என்பவர் "வீரமா முனிவர் திருச்சியில் சந்தா சாகிப் என்பவரின் அரசில் திவானாகப் பணியாற்றினார் என்றும், பின்னர் மரதர்களின் படையெடுப்பை அடுத்து, வீரமாமுனிவர் டச்சு ஆட்சியில் இருந்த காயல்பட்டினத்தில் வாழ்ந்து நோயால் தாக்கப்பட்டு இறந்தார்" எனக் குறிப்பிடுகிறார்.[8]

குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

  1. John H. Martyn, Notes on Jaffna, அமெரிக்க இலங்கை மிசன் அச்சியந்திரசாலை, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 6
  2. P20346 தற்கால உரைநடைத் தன்மைகள் 6.1.3 வீரமாமுனிவர். த.இ.க.. http://www.tamilvu.org/courses/degree/p203/p2034/html/p2034661.htm. பார்த்த நாள்: 8 July 2019. 
  3. வீரமாமுனிவர் வரலாறு: வளர்ந்து நிலவும் குழப்பங்கள்
  4. ச. இராசமாணிக்கம், சே.ச., வீரமாமுனிவர் தொண்டும் புலமையும், தே நொபிலி ஆராய்ச்சி நிலையம், இலயோலாக் கல்லூரி, சென்னை, 1996; 1998 (இரண்டாம் பதிப்பு), பக். 24.
  5. மேற்குறிப்பு, பக். 46-47.
  6. பதிப்பாசிாியா்-திருமதி,கண்ணகி கலைவேந்தன், தமிழ் இலக்கியங்களில் மருத்துவம்,2005, பக் 41, தமிழய்யா வெளியீட்டகம், திருவையாறு.
  7. மேற்குறிப்பு, பக். 23.
  8. பாபிங்டன், பெஞ்சமின் (1822). Paramār̲atakuruvin̲ Katai. லண்டன்: ஜே. எம். ரிச்சார்ட்சன். http://books.google.com.au/books?id=F8o-AAAAYAAJ. 

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வீரமாமுனிவர்&oldid=3840273" இலிருந்து மீள்விக்கப்பட்டது