விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் வரும் எதிர்மாறான பெயர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் வரும் எதிர்மாறான பெயர்கள் வேதாந்த நுணுக்கங்களையும் புராணங்கள் கூறும் தெய்வச் செயல்களையும் விளக்கக் கூடியவை. தத்துவத்தின் அடிப்படையில் அணுகினாலன்றி அவைகளினால் ஏற்படும் ஐயப்பாடுகள் விலகா. பீஷ்மர் இவைகளைத் தொகுத்ததில் இன்னொரு சிறப்பும் உள்ளது. எதிர்மாறாக உள்ள ஒவ்வொரு சோடியினிலுள்ள இரு சொற்களும் அடுத்தடுத்து வருவதைப் பார்க்கலாம். கீழே அடைப்புகளில் கொடுக்கப் பட்டிருக்கும் எண் அவ்விரு சொற்களும் ஸஹஸ்ரநாமத்தின் 107 சுலோகங்களில் வரும் தொடர் எண் என்று அறிக.

நிமிஷோநிமிஷ: (23)[தொகு]

நிமிஷ: - மூடிய கண்கள் உள்ளவர்

ஊழிக்காலத்தில் தனது மாயை யாகிய யோகநித்திரையில் கண்களை மூடிக்கொண்டு தனது வாசுதேவனாகிய பரம்பொருள் நிலையைத் தியானம் செய்து கொண்டு இருப்பவர்.[1] யோகமாயையின் சக்தியால் உலகைத் தாங்குவதற்குக் கண்கள் முதலிய பொறிகள் வேண்டாதவர்.

அநிமிஷ: - கண்களை மூடாதவர்

ஊழிக்காலத்தில் மச்சாவதார மூர்த்தியாய் தன்னுள் ஒடுங்கியதனைத்தையும் விதை வடிவில் காப்பதற்காக ஓடத்திலிட்டு ஊழிக்கடலில் நீந்துகின்ற இமைப் பாதுகாப்பற்ற கண்களுள்ள மீன் வடிவில் இருந்தவர். தேவர்கள் வடிவில் இமைக்காமல் இருப்பவர். மற்றவர்கள் ஒடுங்கி அடங்கிய ஊழி வேளையில் தான் மட்டும் அடங்காமல் விழித்திருப்பவர்[2].

நைகரூபோ பிருஹத்ரூப: (29)[தொகு]

நைகரூப:- வடிவம் ஒன்றல்லாதவர்

உபநிடதத்தில் கண்டபடி,[3] மாயைகளால் பல ரூபங்களை அடைந்த பரம்பொருள்.

பிருஹத்ரூப: - பெருவடிவமுள்ளவர்

உலகைத்தாங்குவதற்கென பெரிய உருவம் பெற்றவர். வராஹர், ஆதிசேஷர், கூர்மர் முதலான வடிவில் உள்ளவர்.[4] வராஹ வடிவில் பூமியைத்தாங்கும்போது பகவானின் பெரிய உருவின்மேல் அமைந்தபடியால் பூமி நீரில் மூழ்காதிருந்தது. திரிவிக்ரமத் தோற்றத்தில் ஆகாய இடைவெளி அனைத்திலும் பரவி நின்ற பெருவடிவினர்.

அத்ருஶ்யோவ்யக்தரூபஶ்ச (33)[தொகு]

அத்ருஶ்ய: - காணக்கிடைக்காதவர்

புலனைந்துக்கும் அறிவுக்கும் புலப்படாதவர்

வ்யக்தரூப: - புலப்படுகிற வடிவுள்ளவர்

ஆனாலும் இவ்வுலக வடிவில் புலப்படுகிறார். பரம்பொருள் என்ற நிலையில் உணரப்படாமல் இருந்தவாறே, விரிந்த இவ்வுலகமாகக் காட்சியளிக்கிறார். அடியார்களிடம் பரிவு கொண்டு இராமர், கிருஷ்ணர் முதலிய தோற்றங்கள் மூலம் தானே தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறார். மற்றும் யோகமுறைகளில் தேர்ந்து சமாதியில் அமர்ந்து உள்நோக்குபவர்களான யோகிகளின் உள்ளத்தில் தானே வடிவம் கொண்டு புலப்படுகிறார்.ஊனக்கண்ணுள்ளவர்களுக்கு புலப்படாதவரே ஞானக்கண்ணுள்ளவர்க்கு வெளிப்படையாகிறார் என்பதைக் காட்டத்தான் 'ச' என்ற இடைச்சொல்.

ஸதஸத் (51)[தொகு]

ஸத் - நிலைத்த இருக்கை கொண்டவர்

உண்மையே வடிவாகிய பரம்பொருள்.'ஆதியில் இது ஒன்றேயாக இரண்டற்றதாய் ஸத்தாக இருந்தது' என்பது உபநிடதக்கூற்று[5]. பொருள்கள் ஸத் என்றும் அஸத் என்றும் இருவகைப்படும். முக்காலத்திலும் உண்மையாக இருப்பது ஸத் எனப்படும். இதை விளக்கமாகச் சொல்வதற்காக பாரமார்த்திக ஸத் என்றும் அழைப்பதுண்டு. என்றும் ஒருபடித்தாய் உள்ளது. இது பரம்பொருள் ஒன்று தான். தோன்றும் காலத்தில் மட்டும் உலகியல் ரீதியில் குறிப்பிட்ட காலவரையில் உண்மையாக இருப்பது, வியவகார முறையில் உண்மை என்று சொல்லப்பட்டாலும், பாரமார்த்திக ஸத் அல்ல; ஏனென்றால் அது தோன்றி மறைவது. இவ்வுலகம் அப்படித்தான்.ஆண்டவனை ஸத் என்றும் மற்றதெல்லாம் ஸத் அல்ல என்றும் சொல்லும்போது நாம் பாரமார்த்திக ஸத் தைக் குறிக்கிறோம்.

அஸத் - ஸத்தாக இல்லாதவர்

ஆனால் பகவானுக்கு அஸத் என்ற ஒரு பெயரையும் கொடுக்கிறது விஷ்ணு ஸஹஸ்ரநாமம். ஏனென்றால் மாயையால் ஏற்ற உலகின் வடிவில் அவர் அஸத். உலகு முக்காலத்திலும் இருப்பதல்ல. ஸத் தான பரம்பொருளிலிருந்து தோன்றிய உலகத்தை எப்படி அஸத் என்று கூறலாம் என்ற கேள்வி நியயமானதுதான். உலகை உலகமாகப் பார்க்கும்பொழுது அது ஸத் அல்ல. உலகை பரம்பொருளாகவே பார்த்தால் அது ஸத். பகவான் ஸத் ஆக பரம்பொருளகவும் இருக்கிறார். உலகமாக அஸத் தாகவும் இருக்கிறார். இவ்விரு நிலைகளும் ஒன்றால் மற்றொன்று பாதிக்கப்படுவதில்லை. என்றும் நிலைத்திருப்பவராயினும், உலகவடிவில் பெயர் உரு இவையிரண்டினால் ஏற்பட்ட நிலையாமையினால் அஸத் ஆகிறார்.

க்ஷரமக்ஷரம் (51)[தொகு]

க்ஷரம் - தேயும் பொருளானவர்

தோன்றி மாறுபட்டு அழிவது க்ஷரம். எல்லா உயிரினங்களும் க்ஷரம் [6]. காலத்தால் மாறுபடுவதனைத்தும் க்ஷரம். மனம் புத்தி, புலன்கள், உடல், இவற்றைத்தான் என்று அபிமானிக்கும் ஜீவர்கள் யாவரும் க்ஷரம்.

அக்ஷரம் - மாறுபாடடையாதவர்

க்ஷரநிலை அடையாதது அக்ஷரம். க்ஷரநிலை என்பது காரியநிலை.இவ்வுலகம் காரியநிலையில் உள்ளது. அதைத் தோற்றுவித்தது காரணநிலையிலுள்ள மாயை. அது அக்ஷரம். எல்லாஜீவர்களின் பிறவிகளை அளிக்கக்கூடிய வினை விதைகள், வாஸனைகள் எனும் மனப்பதிப்புகள் இவையெல்லாவற்றிற்கும் இருப்பிடம்தான் அக்ஷரம். பகவத் கீதை இதை கூடஸ்தன் என்று அழைக்கிறது [7] கூடம் என்பது குவியல். இது ஜீவராசிகளாக மாற இருக்கும் காரணநிலை. தோற்றத்தில் ஒருவிதமாகவும் உண்மையில் வேறுவிதமாகவுமிருந்து ஏமாற்றுவதற்கு கூடம் என்று பெயர். உலகமாக மாறவிருக்கும் வாசனைக்குவியல் அத்தகையது. அந்த அக்ஷரமாயிருப்பர் பகவான்.

தீப்தமூர்த்திரமூர்த்திமான் (77)[தொகு]

தீப்தமூர்த்தி: - ஒளி வடிவுள்ளவர்

அறிவுமயமாக விளங்கும் உருவமுள்ளவர்.அறிவொன்றே ஆதவன் முதலியதன் ஒளி இருக்கும்போதும் இல்லாதபோதும் பொருள் இருப்பதை விளக்குகிறது.பிருகதாரண்யக உபநிடதம் இதை கேள்வியாகக்கேட்டு விடையும் பகர்கிறது:[8]. 'சூரியனும் அஸ்தமித்துச் சந்திரனும் அஸ்தமித்து தீயும் ஒடுங்கி பேச்சும் கூட மௌனமாகிவிட்டால் இந்த மனிதனுக்கு ஒளியாவது எது?' 'ஆன்மாவே இவனுக்கு ஒளியாகிறது; ஆன்ம ஒளியாலேயெ இவன் இருக்கிறான், வெளியே செல்கிறான், வேலை செய்கிறான், திரும்பி வருகிறான்'.

அமூர்த்திமான் - வடிவில்லாதவர்

வினையாலுண்டான உடம்பில்லாதவர். பகவத்கீதையில் கண்ணனுடைய உறுதியான அறிவிப்பு:[9]. 'பிறப்பற்றவனாகவும் மாறுபாடற்றவனாகவும் உண்டானவற்றிற்கெல்லாம் இறைவனாகவும் இருந்தபோதிலும் எனது பிரகிருதியை வசப்படுத்திக்கொண்டு என் மாயையினால் நான் தோன்றுகிறேன்'.

அநேகமூர்த்திரவ்யக்த: (77)[தொகு]

அநேகமூர்த்தி: - பல வடிவங்கள் கொண்டவர்

அவதாரங்களில் பல உடல்களை எடுத்திருப்பவர். தன்னிச்சையால் விளையாட்டாகச் சில. நெறிப் பாதுகாப்பிற்காகச் சில. உலகை வாழ்விப்பதற்காகச் சில. கண்ணனாக உருவெடுத்த ஒரே அவதாரத்தில் மாயையால் பல உருவங்களில் மாறி மாறித் தோன்றியவர். தான் மணந்த 16000 பெண்களுக்காக அவர்கள் ஒவ்வொருவருக்குத் தக்கபடி அவ்வளவு உருவங்களை எடுத்துக் கொண்டார் என்றும் ராஸலீலையில் ஒவ்வொரு கோபிக்கும் ஒரு கண்ணனாகக் கூடி விளையாடியதையும் ஸ்ரீமத் பாகவதமும் விஷ்ணுபுராணமும் சொல்லும்.விஷ்ணு சஹஸ்ரநாமத்திலேயே, 'நைகரூப:', 'நைகாத்மா', 'நைக:' என்ற பெயர்களும் இதை ருசுப்பிக்கின்றன.நம்மாழ்வாரும்திருவிருத்தம் 96-வது பாட்டில்[10] இதை அடிக்கோடிட்டுச் சொல்கிறார்.

அவ்யக்த: - வெளிப்படாதவர்

இவர் இப்படிப்பட்டவர் என்று யாராலும் அறியக்கூடாதவர். அவர் எடுத்த பல தோற்றங்களிலும் அவரது முழுச்சிறப்பு வெளிப்படையாக உணரப்படவில்லை.இதை கண்ணனே தன் கீதையில் சொல்லி [11] அங்கலாய்க்கிறார்.

ஏகோனைக: (78)[தொகு]

ஏக: - ஒன்றானவர்

பல வடிவங்களில் காணப்பெறுபவர் ஒருவரே. வேறுபாடுகள் அனைத்தும் உண்மையானவை அல்ல. வேறுபாடுகள் மூவகை. தன்னினத்தைச்சார்ந்த வேறுபொருளால் வேறுபாடு (ஸஜாதீய பேதம்); வேறு இனத்தைச்சார்ந்த பொருளால் வேறுபாடு (விஜாதீய பேதம்); தனக்குள்ளேயே பல பாகங்களினால் வேறுபாடு (ஸ்வகத பேதம்). சாந்தோக்ய உபநிடதம் 'ஒருவனே. இரண்டற்றவன்'[12] என்று இம்மூன்று வேறுபாடுகளும் இல்லாதவர் என்பதைச் சொல்கிறது.

மற்றும் அவரது பெருமைக்கு ஈடான பெருமைகளைக் கொண்டவர் வேறொருவர் இல்லை.பட்டர் உரை: 'எவ்வகையிலும் ஒப்பில்லாத பகவானை யாருடனும் சேர்த்து எண்ணக் கூடாமையால் ஏக: என்று சொல்கிறோம்'.

நைக: - ஒன்றாயில்லாதவர்

மாயையினால் பல உருவமாகத் தோன்றுபவர். கீதையின் பத்தாவது அத்தியாயத்தில் கூறியபடி பல விபூதிகள் கொண்டவர்.

அசலஶ்சல: (79)[தொகு]

அசல: - அசையாதவர்

தன் நிலையிலிருந்தும் தன் திறமையிலிருந்தும் தன் குணச்சிறப்புகளிலிருந்தும் சிறிதும் பிறழாதவர். மலை போன்றுபெருத்த எதிர்ப்பிலும் அசையாதிருப்பவர்.

சல: - அசைபவர்
  • அசையாதிருப்பவரே வாயுவாகத்தானும் அசைந்து மற்ற எல்லாவற்றையும் அசையும்படிச்செய்பவர்.
  • பாண்டவர் போன்ற வேண்டியவர்களுக்காகத் தானே தனக்கு ஏற்படுத்திக்கொண்ட வரையை மீறினவர்[13].

அணுர்பிருஹத் (90)[தொகு]

அணு: - அணுவானவர்.

கண்ணாலோ அதற்கு உதவுகிற வேறு உபகரணங்களாலோ காணமுடியாத அளவிற்குச் சிறியதாய் அணுவுக்கும் அணுவானவர்.[14]. தஹரம் எனும் இதயவெளி மிகச்சிறியது. அதில் உள்ள ஜீவன் அதிலும் சிறியவர். அந்த ஜீவனாக, ஆன்மாவினுள் ஆன்மாவாக உட்புகுந்திருப்பவர் ஆனதால் அணுவிலும் அணுவானவர்.

பிருஹத் - பெரிதாயிருப்பவர்.

பரம்பொருள் வியாபித்துள்ள அளவிற்குப் பரந்து இருக்கும் பொருள் வேறு எதுவுமே இல்லை. பரம்பொருளின் முழு விசுவரூபத்தில் இம்முழு உலகமும் ஓர் அணுவளவுதான். அதனால் அவர் பெரியவை எல்லாவற்றிற்கும் பெரிதானவர். [15]

க்ருஶஸ்தூல: (90)[தொகு]

க்ருஶ: - மெலிந்தவர்
ஸ்தூல: - பருத்தவர்

குணப்ருந்நிர்குண: (90)[தொகு]

குணப்ருத் -குணங்களைத் தாங்கி நிற்பவர்
நிர்குண: - குணமற்றவர்

துணை நூல்கள்[தொகு]

  • ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரம். சி. வெ. ராதகிருஷ்ண சாஸ்திரி. சிமிழி வெங்கடராம சாஸ்திரி டிரஸ்ட். 1986.
  • ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரம். உரை ஆசிரியர் "அண்ணா". ஸ்ரீ ராமகிருஷ்ண மடம். மயிலாப்பூர், சென்னை 4. 1959
  • Vishnu Sahasranama. Compiled by Dr. Arulmallige Parthasarathy. Vishnu Sahasranama Trust, Bangalore. 2007.
  • ஸ்ரீ ஜயமங்கள ஸ்தோத்திரம். (பதினொன்றாம் பாகம்). பிரம்மஸ்ரீ அனந்தராம தீக்ஷிதர். சேலம் லிட்டெரரி அச்சகம். 1964

மேற்கோள்கள்[தொகு]

  1. விஷ்ணு புராணம் 6 - 4 - 6
  2. கடோபநிடதம்: 'ய ஏஷ ஸுப்தேஷு ஜாகர்தி' 5-8
  3. இந்த்ரோ மாயாபி: புருரூப ஈயதே.பிருகதாரண்யக உபநிடதம்: 2-5-19
  4. விஷ்ணு புராணம் 1-4-46
  5. சாந்தோக்ய உபநிடதம். 6-2-1
  6. க்ஷர: ஸர்வாணி பூதானி - பகவத் கீதை. 15-16
  7. 15வது அத்தியயம், சுலோகம் 16
  8. 4.3.6, 4.3.7
  9. 4 - 6
  10. வணங்கும் துறைகள் பல பல ஆக்கி மதி விகற்பால்
    பிணங்கும் சமயம் பல பல ஆக்கி அவை அவைதோறு
    அணங்கும் பல பல ஆக்கி நின் மூர்த்தி பரப்பி வைத்தாய்
    இணங்கும் நின்னோரை இல்லாய்! நின்கண் வேட்கை எழுவிப்பனே.
  11. அவ்யக்தம் வ்யக்திமாபன்னம் மன்யந்தே மாம் அபுத்தய:/பரம் பாவம் அஜானந்தோ மமாவ்யயம் அனுத்தமம் // கீதை: 7-24
  12. ஏகமேவாத்விதீயம் பிரம்ம சா.உ. 6-2-1
  13. ஸ்ரீமத் பாகவதம், பீஷ்மர் வாக்கு: 1-9-37
  14. அணோரணீயான் - தைத்திரீய ஆரண்யகம் 10 - 1.
  15. மஹதோ மஹீயான் - தைத்திரீய ஆரண்யகம் 10 - 1.