விடலைப் பருவம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
விடலைப் பருவம் அல்லது வளரிளம் பருவம் என்பது, மனிதருடைய உடல் மற்றும் உள வளர்ச்சிக் கட்டங்களில் சிறுவருக்கும், வளர்ந்தோருக்கும் இடைப்பட்ட ஒரு மாறுநிலைக் கட்டமாகும். இப் பருவத்துக்கான வயதெல்லை எல்லாப் பண்பாடுகளிலும் ஒரே அளவாகக் கருதப்படுவதில்லை. பல காலமாகவே பருவமடைதல் என்பது விடலைப் பருவத்துடன் தொடர்புபடுத்தப்பட்டு வந்துள்ளது. அண்மைக் காலங்களில் பருவமடைதல் காலம் விடலைப் பருவத்துக்கு முன்னதாகவே தொடங்கி விடலைப் பருவத்துக்கு அப்பாலும் போவதைக் காணக்கூடியதாக உள்ளது. உலக சுகாதார நிறுவனம் விடலைப் பருவத்தை 10 வயதுக்கும் 19 வயதுக்கும் இடைப்பட்ட காலம் என வரையறை செய்துள்ளது.
[தொகு] பயன்பாடு
சமூகவியலில், விடலைப் பருவம் என்பது, ஒரு பண்பாட்டுத் தோற்றப்பாடாகவே கருதப்படுகிறது. இதனால் இதன் தொடக்கமும் முடிவும் உடல்ரீதியான எல்லைகளுடன் தொடர்புபடுத்தப்படுவது கடினமாக உள்ளது. இப்பருவம் சிறுவர் வளர்ந்தவர்களாக மாறும் ஒரு காலகட்டமாக அமைகிறது. இம் மாற்றம், உயிரியல், சமூகவியல் மற்றும் உளவியல் சார்பான மாற்றங்களை உள்ளடக்கியுள்ளது. இவற்றுள் உயிரியல் மாற்றங்களும், உளவியல் மாற்றங்களுமே இலகுவாக அளவிடப்படக் கூடியவையாகும்.