விக்டோரியா கோபுரப் பூங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பக்சுட்டன் நினவு நீரூற்றுடன் கூடிய விக்டோரியா கோபுரப் பூங்கா. பின்னணியில் வெசுட்மின்சுட்டர் மாளிகை காணப்படுகிறது. 2011.

விக்டோரியா கோபுரப் பூங்கா என்பது இலண்டனின் தேம்சு ஆற்றின் வடக்குக் கரையோரம் அமைந்துள்ள ஒரு பொதுப் பூங்கா. இதன் பெயர் குறிப்பிடுவதற்கு ஏற்ப இது, வெசுட்மின்சுட்டர் மாளிகையின் தென்மேற்கு மூலையில் அமைந்துள்ள விக்டோரியா கோபுரத்துக்கு அருகில் உள்ளது. இப் பூங்கா மாளிகையில் இருந்து தெற்கே இலம்பர்ட் பாலம் வரை பரந்துள்ளது. இதற்குச் செங்குத்தான திசையில் ஒரு பக்கம் தேம்சு ஆறும் எதிர்ப் பக்கத்தில் மில்லிபாங்க்கும் உள்ளன. இப் பூங்கா தேம்சுக் கரைக்கட்டின் (embankment) ஒரு பகுதியாகவும் உள்ளது.

அம்சங்கள்[தொகு]

இந்தப் பூங்காவில் சிலைகள், நீரூற்றுக்கள் போன்ற பல்வேறு சிறப்பு அம்சங்கள் காணப்படுகின்றன. அவற்றுள் கலேயின் குடிமக்கள் சிற்பம், எமெலின் பன்கர்சுட்டு சிலை, பக்சுட்டன் நினைவு நீரூற்று என்பன அடங்குகின்றன.

  • கலேயின் குடிமக்கள் சிற்பம் - இது அகசுத்தே ரோடின் என்பரால் ஆக்கப்பட்ட மூலச் சிற்பத்தைப்போல் செய்யப்பட்ட ஒரு சிற்பம் ஆகும். 1911 ஆம் ஆண்டு பிரித்தானிய அரசு இதை வாங்கி 1915 ஆம் ஆண்டில் இப் பூங்காவில் நிறுவியது.
  • எமெலின் பன்கச்ர்ட்டு சிலை - எமெலின் பன்கர்சுட்டு மகளிருக்கான வாக்குரிமை இயக்கத்தைச் சேர்ந்தவர். ஏ. ஜி. வாக்கர் என்பவரால் செய்யப்பட்ட இவரது சிலை 1930 ஆம் ஆண்டு இப் பூங்காவில் அமைக்கப்பட்டது.
  • பக்சுட்டன் நினைவு நீரூற்று - இது 1834 ஆம் ஆண்டில் அடிமைத்தனம் ஒழிக்கப்பட்டதை நினைவுகூர்வதற்கான ஒரு நினைவுச் சின்னம். நாடாளுமன்ற உறுப்பினர் சார்லசு பக்சுட்டனின் வேண்டுகோளுக்கு இணங்க கோதிக் கட்டடக்கலைஞர் சாமுவேல் சான்டர்சு தெயுலோன் என்பவரால் வடிவமைக்கப்பட்ட இது சார்லசின் தந்தையான தாமசு பாவெல் பக்சுட்டனுக்கு உரித்தாக்கப்பட்டது.