வாசவி கன்னிகாபரமேஸ்வரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வாசவி ஸ்ரீ கன்னிகாபரமேஸ்வரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வாசவி ஸ்ரீ கன்னிகாபரமேஸ்வரி ஒரு இந்து கடவுள்; ஆரிய வைசியர்களின் குலதெய்வம். ஆரிய வைசியர்கள் (வழக்கத்தில் ஆரிய வைசிய செட்டியார் எனவும், வைசிய செட்டியார் எனவும் அழைக்கப்படும் இவர்களின் முக்கிய தொழில் வாணிபம் ஆகும்) பெருமளவில் வசிக்கும் பெரும்பாலான ஊர்களில் வாசவி ஸ்ரீ கன்னிகாபரமேஸ்வரிக்கு ஒரு கோவில் கட்டி (இது சத்திரம் எனப்படும்) பூஜைகள், மற்ற சிறப்புகள் நடத்தப்படுகின்றன.

வரலாற்றுக் கதை[தொகு]

வாசவி ஸ்ரீ கன்னிகாபரமேஸ்வரியின் வரலாற்றுக் கதை என்று கீழ்கண்ட கதை சொல்லப்படுகிறது.

ஒருமுறை கைலாயத்தில் நந்தி தேவர், சிவபெருமானை நடனமாடி மகிழ்வித்து வணங்கினார். ஆனால் பார்வதி தேவியை வணங்க மறந்து விட்டார். பார்வதி தேவி நந்தி தன்னை வேண்டுமென்றே வணங்காமல் புறக்கணித்ததாக எண்ணி அவரை பூமியில் மானிடனாகப் பிறக்க சாபமிட்டார். தான் விரும்பிச் செய்யாத தவறுக்கு தன்னை சபித்ததை எண்ணி வருத்தமும், கோபமும் அடைந்த நந்தி தேவர் பதிலுக்குப் பார்வதியை பூமியில் பெண்ணாகப் பிறந்து கடைசிவரை கன்னியாகவே வாழ்ந்து அக்னி பிரவேசம் செய்ய வேண்டும் என்று சாபமிட்டார்.

இப்படி நந்தி தேவரும், பார்வதி தேவியும் ஒருவரை ஒருவர் சபித்துக் கொண்டு பெனுகொண்டா நகரை ஆண்டு வந்த குசுமஸ்ரேஷ்டி எனபாருக்கும், குசுமாம்பிகை அம்மைக்கும் இரட்டைக் குழந்தைகளாகப் பிறந்தனர். பெண் குழந்தைக்கு வாஸவாம்பா எனவும், ஆண் குழந்தைக்கு விரூபாஷன் என்றும் பெயரிட்டு வளர்த்தனர்.

சித்திரகாந்தன் என்னும் கந்தர்வன் ஒரு முனிவரின் சாபத்தால் பூமியில் விஷ்ணுவர்த்தன் என்ற மன்னனாகப் பிறந்து ஆண்டு வந்தான். அவன் வாஸவாம்பாவைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினான், அதில் ஏற்பட்ட பிரச்சனையில் பெனுகொண்டா ஆட்சிக்குட்பட்ட நகரங்களில் வாழ்ந்து வந்த 714 கோத்திரங்களைச் சேர்ந்த வைசியர்களும் ஒன்றுகூடி விவாதித்தனர். அதில் 612 கோத்திரர்கள் விஷ்ணுவர்த்தனுக்கு வாஸவாம்பாவை மணமுடிக்க வேண்டும் என்றும், மீதமுள்ள 102 கோத்திரத்தார் கூடாது எனவும் கூறினர். குலப்பெருமைக்கு மாறாக கருத்து தெரிவித்த 612 கோத்திரத்தார் தம் குடும்பங்களுடன் நகரை விட்டு வெளியேறினர். விஷ்ணுவர்த்தனின் விருப்பத்திற்கு இணங்குவதில்லை என்ற முடிவு செய்த 102 கோத்திரத்தார் ஒருங்கிணைந்தனர்.

தன்னைக் காரணமாக வைத்து, வைசிய குலத்திற்குப் பெரும் சோதனையுண்டானதை எண்ணி மனம் வருந்திய வாஸவாம்பா, தன்னால் வைசிய குலத்திற்கு எவ்வித இழிவும் நேராமல் இருக்கத் தன்னை அழித்துக் கொள்வதே சரியானது என்கிற எண்ணத்தில் தீக்குளித்து உயிரை விட முடிவெடுத்தாள். அதன்படி அவள் அக்னிப்பிரவேசம் செய்வதை தாங்கமுடியாத 102 கோத்திரத்து வைசியர்களும் தங்கள் குழந்தைகளை மட்டும் விட்டுவிட்டு தாமும் அக்னிபிரவேசம் செய்தனர். அதன் பிறகு வாசவி தன் உண்மையான ரூபத்தை அனைவரும் அறியச் செய்து, ஒழுக்கம், தியாகம், தர்மங்களை அவர்களுக்கு உபதேசித்து மறைந்ததாகச் சொல்கிறார்கள் .

அன்றிலிருந்து வாஸவாம்பாவை, வாசவி ஸ்ரீ கன்னிகாபரமேஸ்வரி எனக் கொண்டு வைசிய குலத்தார் தங்கள் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.

வெளி இணைப்புகள்[தொகு]

வாசவி ஸ்ரீ கன்னிகாபரமேஸ்வரி கோவில் பரணிடப்பட்டது 2010-11-26 at the வந்தவழி இயந்திரம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாசவி_கன்னிகாபரமேஸ்வரி&oldid=3257502" இலிருந்து மீள்விக்கப்பட்டது