வல்லெழுத்து மிகும் இடம், மிகா இடம்
தமிழின் 18 மெய்யெழுத்துக்களை வல்லினம் (6), மெல்லினம் (6), இடையினம் (6) என்று மூன்று பிரிவாகப் பிரிப்பர். மெய்யெழுத்துகள் 18இல், க, ச, ட, த, ப, ற ஆகிய 6 எழுத்துகள் மட்டுமே வல்லெழுத்துகள் ஆகும். இவற்றுள் ட, ற ஆகியவை இரண்டும் ஒரு சொல்லின் முதல் எழுத்தாக வாரா. வல்லின எழுத்துகளுள் க, ச, த, ப ஆகிய நான்கு மட்டுமே ஒரு சொல்லின் முதல் எழுத்தாக வரும்.
தமிழில் சில சொற்களுக்குப் பின்னர் வரும் சொற்களில் ககரம், சகரம், தகரம், பகரம் ஆகிய எழுத்துக்களில் தொடங்கும் சொற்கள் இருந்தால் அவ்விரண்டு சொற்களுக்கும் இடையே வல்லின மெய் எழுத்து மிகும். இவ்வாறு மிகும் இடங்களில் க், ச், த், ப் என்ற வல்லெழுத்துக்கள் தோன்றும். இவை உரிய இடங்களில் வரவில்லையானால், அந்தத் தொடரிலோ, வாக்கியத்திலோ, பொருளின் பொருத்தமும், உரிய அழுத்தமும், ஓசை நயமும், தெளிவும் இரா. சில நேரங்களில் பொருள் வேறுபாடும் ஏற்பட்டு விடும்.
[தொகு] வல்லெழுத்துக்கள் மிகும் இடங்கள்
[தொகு] அ, இ, உ சுட்டெழுத்துக்களின் பின்
- அ + காலம் = அக்காலம்
- இ + சமயம் = இச்சமயம்
- உ + பக்கம் = உப்பக்கம்
[தொகு] எ என்னும் வினா எழுத்தின் பின்
- எ + பொருள் = எப்பொருள்
[தொகு] அந்த, இந்த, எந்த என்னும் அண்மை சேய்மைச் சுட்டு மற்றும் வினாச் சுட்டுகளின் பின்
- அந்த + காலம் = அந்தக் காலம்
- இந்த + சிறுவன் = இந்தச் சிறுவன்
- எந்த + பையன் = எந்தப் பையன்
[தொகு] அப்படி, எப்படி, இப்படி என்னும் சொற்களின் பின்
- அப்படி + கேள் = அப்படிக் கேள்
- இப்படி + சொல் = இப்படிச் சொல்
- எப்படி + பார்ப்பது = எப்படிப் பார்ப்பது
[தொகு] அங்கு, எங்கு, இங்கு என்னும் சொற்களின் பின்
- அங்கு + செல் = அங்குச் செல்
- எங்கு + கற்றாய் = எங்குக் கற்றாய்
- இங்கு + பார் = இங்குப் பார்
[தொகு] இரண்டாம் வேற்றுமை உறுபுக்குப்பின் (ஐ)
- அவனைக் கண்டேன்
- செய்யுளைச் சொன்னேன்
- அவளைத் தேடினேன்
- குறளைப் படித்தேன்
[தொகு] நான்காம் வேற்றுமை உறுபுக்குப்பின் (கு)
- அவனுக்குக் கொடுதேன்
- அவளுக்குச் சொன்னேன்
[தொகு] என, ஆக என்ற சொற்களுக்குப்பின்
- எனக் கூறினான்
- அவனாகச் சொன்னான்
[தொகு] வல்லெழுத்து மிகா இடங்கள்
[தொகு] அது, இது, எது என்னும் சொற்களின் பின்
- அது காண்
- எது செய்தாய்
- இது பார்
[தொகு] ஏது, யாது என்னும் சொற்களின் பின்
- ஏது கண்டாய்
- யாது பொருள்
[தொகு] அவை, எவை, இவை, யாவை
- அவை பெரியன
- யாவை போயின
[தொகு] அத்தனை, எத்தனை, இத்தனை
- அத்தனை செடி
- எத்தனை பசு
[தொகு] அவ்வளவு, எவ்வளவு, இவ்வளவு
- அவ்வளவு தந்தாய்
- எவ்வளவு செய்தாய்
- இவ்வளவு துணிவு
[தொகு] சில மென்றொடர் குற்றியலுகரத்திற்குப்பின்
- அன்று சொன்னான்
- என்று தந்தான்
- இன்று கண்டான்
- மென்று தின்றார்
- வந்து சேர்ந்தான்
(விரியும்)
[தொகு] உசாத்துணை
இந்த இலக்கண குறிப்பில் வரும் உள்ளடக்கம் புலவர் அ.சா. குருசாமி அவர்களால் எழுதப்பட்ட தமிழில் பிழைகள் தவிர்ப்போம்! என்ற நூலையும், மயிலை சின்னத்துரை சண்முகம் அவர்கள் எழுதிய, தமிழில் பிழையின்றி எழுதுவோம் (சென்னை:1986) என்ற நூலையும் அடிப்படையாகக் கொண்டவை. இங்கு குறிப்பிடப்படும் உதாரணங்களும் அந்நூல்களில் இருந்து பெறப்பட்டவையே.
தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் இணையதளத்தில் இந்தத் தலைப்பின் கீழ் மிகத்தெளிவான, விளக்கமான, பயனுள்ள குறிப்புகள் இருக்கின்றன.