வன்பரணர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வன்பரணர் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். வரலாற்றுப் புலவர் என்று போற்றப்படும் வேறொரு புலவர் பரணர். இவர் அவர் அல்லர் என்பதை உணர்த்த இவரை வன்பரணர் எனக் குறிப்பிடலாயினர்.

வன்பரணர் பாடல்கள்153[தொகு]

நற்றிணை 374, புறநானூறு 148[1], 149[2], 150[3], 152, 153, 155,255

சமகால அரசர்கள்[தொகு]

கண்டீரக்கோப் பெருநள்ளி (கண்டீர மலை அரசன்)
வல்வில் ஓரி (கொல்லிமலை அரசன்) (= ஆதன் ஓரி)

வன்பரணர் சொல்லும் செய்திகள்[தொகு]

நற்றிணை 374[தொகு]

வினை முற்றி மீளும் தலைவன் வரும் வழியில் கண்டவர்களிடம் தன் மனையாளைப் பற்றி வினவுகிறான்.

நிலம் வறண்டு முரம்பு பட்டிருக்கும் வழியில் புளிக்கும் களாக்காய்களைத் தின்று பசியைப் போக்கிக்கொண்டு வெயிலுக்காகத் தலைக்குமேல் குடை பிடித்துக்கொண்டு சிறுகுடியில் உப்பு விற்கச் செல்லும் உமணர்களே! என்னவள் நான் தரும் புணர்ச்சி விருந்து பெறலாம் என்னும் விருப்பத்தோடு காத்திருப்பாள். அவள் கண்ணீர் அவளது ஆகத்தை நனைத்துக்கொண்டிருக்கும். பின்புறமாகத் தொங்கும் அவள் கூந்தலில் மணி புனைந்திருப்பாள். அவளைப் பார்த்ததுண்டா? என்கிறான் தலைவன்.

புறநானூறு 148 கண்டீரக் கோப்பெரு நள்ளி[தொகு]

அருவி கொட்டும் மலைநாட்டு அரசன் நள்ளி. அவனைப் பாடுபவர்களுக்கு அவன் யானைகளைப் பரிசிலாகத் தருவானாம். வன்பரணர் அவனைப் பாடும்போது பரிசில் பெறுவதற்காக அவன் செய்யாதனவற்றைப் பொய்யாகப் பாடமாட்டாராம்.

புறநானூறு 149 கண்டீரக் கோப்பெரு நள்ளி[தொகு]

நள்ளி வன்பரணரை அவரது குடும்பத்தோடு காப்பாற்றுவதால், அவரது குடும்பமே மாலையில் மருதப்பண் பாடுவதையும், காலையில் செவ்வழிப்பண் பாடுவதையும் மறந்துவிட்டதாம்.

புறநானூறு 150 கண்டீரக் கோப்பெரு நள்ளி[தொகு]

இவன் வேட்டுவக் குலத்தைச் சார்ந்தவன்.தோட்டி நளிமலை நாடன் என்று போற்றப்படும் அரசன் நள்ளி. தோட்டி இப்போது தொட்டபெட்டா என்னும் பெயர் பூண்டு விளங்குகிறது. இவன் வல்வில் வேட்டுவன் என்று போற்றப்படுகிறான்.

நள்ளி தன்னை எப்படிப் பேணினான் என்பதை இப்பாடலில் புலவர் குறிப்பிடுகிறார். குளிரில் நடுங்கும் பருந்தின் சிறகு போல அவரது ஆடை கிழிந்திருந்ததாம். தன்னை அறியாமல் கால் போன வழியில் தனக்குத் தெரியாத வேறொரு நாட்டுக்கு அவர் வந்துவிட்டாராம். வழியில் ஒருவன் இவரது உடல் வருத்தத்தையும், உள்ள உலைவையும் கண்டானாம். அவன் மானை வேட்டையாடிக் குருதி படிந்த கழல் அணிந்திருந்தானாம். தலையில் திருமணி முடி அணிந்திருந்தானாம். அதனால் ஒரு செல்வத் தோன்றல் போல் காணப்பட்டானாம். அவனைப் பார்த்ததும் புலவர் அவனைத் தொழுது எழுந்தாராம். அவனோடு வந்த இளையர் வருவதற்கு முன் தன்னிடமிருந்த ஞெலிகோலில் தீ மூட்டி தான் வேட்டையாடிய மானைச் சுட்டுப் புலவரும் அவரது சுற்றத்தாரும் தின்னும்படி கொடுத்தானாம். அவர்கள் வயிறார உண்டு பசி நீங்கி, அருவி நீரைப் பருகிவிட்டுச் செல்லத் தொடங்கினார்களாம். உடனே அவன் தன் மார்பில் அணிந்திருந்த விலைமதிக்க முடியாத ஆரத்தையும், கையில் அணிந்திருந்த கடகத்தையும் கழற்றிப் புலவர்க்குக் கொடுத்தானாம். புலவர் அவனிடம், "நீர் யார்? எந்த நாட்டில் இருப்பவர்?" என்று வினவினாராம். அவன் எதுவுமே சொல்லாமல் போய்விட்டானாம். பின்னர் புலவர் அங்கே வந்த சிலரைக் கேட்டாராம். அவன் தோட்டி மலை மக்களைக் காப்பவனாம்."நளிமலை நாடன் நள்ளி"யாம்.

புறநானூறு 152 வல்வில் ஓரி[தொகு]

வல்வில் ஓரி கொல்லிப் பொருநன் என்று சிறப்பிக்கப்பட்டுள்ளான். அவன் தனக்கு எங்கே எவ்வாறு பரிசளித்தான் என்பதைப் புலவர் வன்பரணர் நிரல்பட விளக்குகிறார்.

ஓரியின் வல்வில் வேட்டம்

ஓரி அம்பு எய்தான். முதலில் அது யானையை வீழ்த்தியது. அடுத்து உழுவைப்புலியைச் சாகடித்தது. அடுத்து மானை உருண்டுவிழச் செய்தது. அடுத்து முள்ளம்பன்றியை வீழ்த்தியது. இறுதியாகப் புற்றிலிருந்த உடும்பின் உடலில் தைத்துக்கொண்டு நின்றது.

இப்படிக் கொன்றவன் விற்பனைக்காக எய்ததாகத் தோன்றவில்லை. வெறுக்கத்தக்க மிகுதியான செல்வம் உடையவனாகத் தென்படுகிறான். அவன் மார்பில் முத்தாரம் இருக்கிறது. ஓரியாக இருப்பானோ? எப்படியாயினும் ஆகட்டும்.
இசைமுழக்கம்

விறலியரே! நாம் பாடுவோம்.
முழவை முழக்குங்கள்.
யாழை மீட்டுங்கள்.
தூம்புப் பறையைக் களிற்று முழக்கம் போல ஊதுங்கள்.
எல்லரி தட்டுங்கள்.
ஆகுளி என்னும் உடுக்கை அடியுங்கள்.
பதலை என்னும் பானைக்கடம் தட்டுங்கள்.
மதலை என்னும் மாக்கோலை வலத்தோளில் உயர்த்திப் பிடியுங்கள்.
இசையின் 21 துறைகளிலும் முறையாகப் பாடுங்கள். - என்றார்.

அப்படியே அனைவரும் பாடினர்.
இறுதியில் "கோ" எனக் கூட்டிசை முழக்கம் செய்தனர். 'கோ' என்பது அரசனைக் குறிக்கும் சொல் ஆதலின் ஓரி தன்னைக் கண்டுகொண்டதாக எண்ணி நாணித் தலைகுனிந்தான்.

புலவர் புகழுரை

இங்கு உன்னைப்போல் சிறந்த வேட்டுவர் இல்லை. உன் நாட்டுக்கு வருகிறோம் என்றார்.

சுரத்தில் கொடை

தான் வேட்டையாடிய மானைச் சுட்டுக் கொடுத்தான். தொட்டுத் தின்ன தேனும் கொடுத்தான். தன்மலையில் பிறந்த பொன், மணி முதலானவற்றைத் திரட்டிக் கொடுத்தான். இவனது ஈகை தனக்கென எதையும் வைத்துக்கொள்ளாத 'ஓம்பா ஈகை'

புறநானூறு 153 வல்வில் ஓரி[தொகு]

ஓரியின் தந்தை பெயர் ஊதன். இதனால் இவனைப் புலவர் 'ஆதன் ஓரி' எனக் குறிப்பிடுகிறார். கொல்லிநாட்டை இவன் போரிட்டு வென்றதற்கான குறிப்பும் இதில் உள்ளது. இவன் தன் கையில் பசும்பூண் அணிந்திருந்தான்.இவன் வேளிர் குலத்தை சார்ந்தவன்.

இவன் தன்னிடம் இரப்போர்க்கு யானைகளை அணிகலன்கள் பூட்டி நல்குவான். புலவரது சுற்றம் யானைகளோடு நீரில் பூக்காத குவளை மலரையும் (பொற்குவளை) விருதாகப் பெற்றனர். வான்நார் எனப்படும் வெள்ளிநாரில் தொடுத்த கண்ணிகளும், அணிகலன்களும் பெற்றனர்.

இவனிடம் இருக்கும்போது பசி என்பதே இவர்களுக்கு இல்லாமல் போனதால் பசி போக்க ஆடுவதையும் பாடுவதையும் மறந்துபோயினர்.

புறநானூறு 155[தொகு]

வன்பரணர் தன் புரவலன் ஒருவன் இறந்துபோன செய்தியை இப்பாடலில் குறிப்பிடுகிறார். இந்தப் பாடல் யார்மீது பாடப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்த வரிகள் மூலச் சுவடிகளில் அழிந்துபோயின.

பெண் ஒருத்தி வருந்துவதாக இந்தப் பாடல் உள்ளது. அவள் சொல்கிறாள். "ஐயோ என்னும் ஒலி கேட்டால், நான் புலி என்று எண்ணி அஞ்சுவேன். அவன் அணைத்துக்கொண்டால் அவன் மார்பிலிருந்து என்னை எடுத்துக்கொள்ள முடியவில்லை. 'இவனை'க் கொன்ற கூற்றம் என்னைப்போல் துடிக்கட்டும். ("பெரு விதுப்பு உறுக"). ஊர்மக்களே! வளைக்கையைப் பற்றிக்கொண்டு என்னுடன் நடந்து வாருங்கள். ('அவனைக்' காண்போம்)

வெளி இணைப்புகள்[தொகு]

  1. வன்பரணர் பாடல்கள் புறநானூறு 148
  2. வன்பரணர் பாடல்கள் புறநானூறு 149
  3. வன்பரணர் பாடல்கள் புறநானூறு 150
"https://ta.wikipedia.org/w/index.php?title=வன்பரணர்&oldid=3486338" இலிருந்து மீள்விக்கப்பட்டது