வட்டக் கோட்டை
வட்டக்கோட்டை (அல்லது 'வட்ட வடிவத்தில் அமைந்த கோட்டை') என்பது தமிழ்நாட்டில் கன்னியாகுமரிக்கு அருகில் அமைந்துள்ள கோட்டையாகும். திருவிதாங்கூர் அரசின் கரை ஓரங்களை கண்காணிக்கவும் மேலும் கடல் மார்கமாக அன்னியர்களின் படையெடுப்புகளில் இருந்து நாட்டை பாதுகாக்கும் நோக்கத்துடன் படைவீடுகளுடன் இந்தக்கோட்டை 18 ஆம் நூற்றாண்டில் இந்த கோட்டை சீரமைக்கப்பட்டது. எதிரிகளை வீழ்த்துவதற்காக 3.5 ஏக்கர் நிலத்தில் 25 மீட்டர் உயரத்தில் இக்கோட்டை கட்டப்பட்டுள்ளது .இந்தக் கோட்டையானது கன்னியாகுமரியில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
பொருளடக்கம் |
[தொகு] வரலாறு
இந்தக் கோட்டையானது ஒரு காலத்தில் டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் (டச்சு மொழியில் Vereenigde Oostindische Compagnie அல்லது VOC) கடற்படை அலுவலராக இருந்து, திருவிதாங்கூர் படையுடன் 1741 ஆம் ஆண்டில் இடம்பெற்ற குளச்சல் போரில் மோதிய டச்சுத் தளபதியான இயுஸ்ட்டாச்சியஸ் டி லனோய் அவர்களின் மேற்பார்வையில், இந்தக் கோட்டை செங்கற்கோட்டையாக இருந்ததை கற்கோட்டையாக மாற்றி கட்டப்பட்டது, காலப்போக்கில் அவர் திருவிதாங்கூர் அரசரின் நம்பிக்கைக்கு உரியவராகி திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மாவால் படைத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.
[தொகு] கோட்டை அமைப்பு
1809 ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் திருவிதாங்கூர் அரசை தோற்கடித்தப்போது இந்த கோட்டையை அழிக்காமல் விட்டுவிட்டனர். உள் கொத்தளங்களுக்குள் பீரங்கிகள் கொண்டுசெல்ல வசதியாக சாய்தளம் அமைக்கப்பட்டுள்ளது. நுழைவு வாயிலில் திருவிதாங்கூர் அரசின் சின்னமான யானை சிலைகள் வரவேற்கின்றன. கோட்டைக்குள் கண்காணிப்பு அறை, ஓய்வறை ஆயுதசாலை ஆகியவையும் உள்ளன. மண்டபத்தில் மீன் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளதால் கி.பி 12 ம் நூற்றாண்டில் இந்த கோட்டை பாண்டியர்களின் கைவசமிருந்திருக்கலாம் என்று கருதப்படுகின்றது.
[தொகு] பாதுகாப்பு
தற்போது, இந்தக்கோட்டையின் சில பாகங்கள் கடலுக்குள் அமைந்திருக்கின்றது. இந்த கோட்டையின் பராமரிப்பு இந்திய தொல்பொருளியல் ஆராய்ச்சித் துறையினரின் பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தத் துறையானது அண்மையில் இந்தக் கோட்டையின் புனரமைப்பு பணிகளை மேற்கொண்டது.
[தொகு] சுற்றுலா தலம்
மேலும் இந்தக் கோட்டை இப்பொழுது பயணிகள் மிகவும் விரும்பும் சுற்றுலாத்தலமாக திகழ்கிறது. அமைதியான சூழ்நிலையில் அமைந்துள்ள வட்டக்கோட்டை, இயற்கை எழில் கொஞ்சும் அழகுடன் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்து இழுக்கிறது, ஒரு பக்கம் கடலின் அலைகள் சுற்றுலா பயணிகளை நோக்கி வரும் காட்சி இருக்க, மற்றொரு பக்கம் எழில் கொஞ்சும் மேற்கத்திய மலைகள் கம்பீரத்துடன் காட்சி அளிக்கின்றன. மேலும் கடற்கரை ஓரத்தில் காணப்படும் கறுப்பு நிறத்தில் அமைந்த மணல், சுற்றுலா பயணிகளின் மனதிற்கு மிகவும் இன்பத்தை அளிப்பதாக விளங்குகிறது.