யூலியசு சீசர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சூலியசு சீசர்
சூலியசு சீசரின் ஒரு பளிங்குச் சிற்பமான துசுகுலும் சிலை
சூலியசு சீசரின் துசுகுலும் சிலை. இவரது வாழ் நாளின் போது உருவாக்கப்பட்டு எஞ்சியுள்ள ஒரே சிலை இது தான் என்று கருதப்படுகிறது. இது இப்போது இத்தாலியின் துரின் தொல்லியல் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
பிறப்பு12 சூலை 100 பொ. ஊ. மு.[1]
சுபுர்ரா, உரோம், உரோமைக் குடியரசு
இறப்பு15 மார்ச் 44 பொ. ஊ. மு. (அகவை 55)
பொம்பெயி அரங்கம், உரோம், உரோமைக் குடியரசு
இறப்பிற்கான
காரணம்
அரசியல் கொலை (கத்திக் குத்துக் காயங்கள்)
கல்லறைஉரோமின் சீசர் கோயில்
41°53′31″N 12°29′10″E / 41.891943°N 12.486246°E / 41.891943; 12.486246
பணி
  • அரசியல்வாதி
  • இராணுவ வீரன்
  • எழுத்தாளர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்
  • பெல்லம் கலீசம்
  • பெல்லம் சிவில்லே
பெற்றோர்
  • கையசு சூலியசு சீசர்
  • ஔரேலியா
துணைவர்ஏழாம் கிளியோபாற்றா
வாழ்க்கைத்
துணை
  • கோசுதியா (விவாதத்திற்குரியது)
  • கார்னேலியா
    (தி. 84 பொ. ஊ. மு.; இ. 69 பொ. ஊ. மு.)
  • பொம்பெயியா
    (தி. 67 பொ. ஊ. மு.; வி. 61 பொ. ஊ. மு.)
  • கல்புர்னியா
    (தி. 59 பொ. ஊ. மு.)
பிள்ளைகள்
விருதுகள்குடிசார் மகுடம்
Military service
சேவை ஆண்டுகள்81–45 பொ. ஊ. மு.
போர்கள்/யுத்தங்கள்
  • மைதிலேன் முற்றுகை
  • கல்லிய போர்கள்
    • அரார் யுத்தம்
    • பிப்புரக்குதே யுத்தம்
    • ஓசுகீசு யுத்தம்
    • சாபிசு யுத்தம்
    • அக்சோனா யுத்தம்
    • பிரித்தன் படையெடுப்புகள்
    • செர்கோவியா யுத்தம்
    • அலேசியா யுத்தம்
    • உக்செல்லோதுனும் முற்றுகை
  • சீசரின் உள்நாட்டுப் போர்
    • கோர்பினியம் முற்றுகை
    • புருந்திசியம் முற்றுகை
    • இலேர்தா யுத்தம்
    • திர்ராச்சியம் யுத்தம்
    • பர்சலுசு யுத்தம்
    • அலெக்சாந்திரியப் போர்
      • அலெக்சாந்திரியா முற்றுகை
      • நைல் யுத்தம்
    • செலா யுத்தம்
    • உருசுபினா யுத்தம்
    • தபுசுசு யுத்தம்
    • முந்தா யுத்தம்
    • கோர்துபா முற்றுகை
    • பர்சலுசு யுத்தம்

கையசு சூலியசு சீசர் (ஆங்கிலம்: Gaius Julius Caesar; இலத்தீன்: கையசு சூலியசு கீசர்; 12 சூலை 100 பொ. ஊ. மு. – 15 மார்ச் 44 பொ. ஊ. மு.) என்பவர் ஓர் உரோமானியத் தளபதி மற்றும் அரசியல் மேதை ஆவார். முதலாம் மூவராட்சியின் ஓர் உறுப்பினர் ஆவார். இவர் கௌல் போர்களில் உரோமானிய இராணுவத்திற்குத் தலைமை தாங்கினார். பிறகு தன் அரசியல் எதிரி பாம்பேயை ஓர் உள்நாட்டுப் போரில் தோற்கடித்தார். இறுதியாக பொ. ஊ. மு. 49இல் சர்வாதிகாரியானார் (திக்தேத்தர்). பொ. ஊ. மு. 44இல் அரசியல் கொலை செய்யப்படும் வரை இப்பதவியில் தொடர்ந்தார். உரோமைக் குடியரசின் வீழ்ச்சி மற்றும் உரோமைப் பேரரசின் வளர்ச்சிக்கு வழி வகுத்த நிகழ்வுகளில் ஒரு முக்கியப் பங்கை ஆற்றினார்.

பொ. ஊ. மு. 60இல் சீசர், கிராசுசு மற்றும் பாம்பே ஆகியோர் முதலாம் மூவராட்சியை உருவாக்கினர். உரோமானிய அரசியலில் பல ஆண்டுகளுக்கு ஆதிக்கம் செலுத்திய ஓர் அலுவல் முறை சாராத அரசியல் கூட்டணி இதுவாகும். அரசியல் சக்தியைக் குவிக்கும் இவர்களது முயற்சிகள் செனட் சபையிலிருந்த பலரால் எதிர்க்கப்பட்டன. இவர்களில் இளைய காதோவும் ஒருவராவார். அவருக்கு சிசெரோவின் மறைமுக ஆதரவு இருந்தது. ஒரு தொடர்ச்சியான இராணுவ வெற்றிகளை கௌல் போர்களில் பெற்றதன் வழியாக உரோமைக் குடியரசில் மிகுந்த சக்தி வாய்ந்த அரசியல்வாதிகளில் ஒருவராக சீசர் வளர்ந்தார். கௌல் போர்கள் பொ. ஊ. மு. 51ஆம் ஆண்டு வாக்கில் முடிக்கப்பட்டன. இவை உரோமானிய நிலப்பரப்பைப் பெருமளவுக்கு விரிவாக்கின. இந்த நேரத்தின் போது இவர் பிரித்தானியா மீது படையெடுத்தார். ரைன் ஆற்றில் ஒரு பாலத்தைக் கட்டினார். இந்தச் சாதனைகள் மற்றும் இவரது அனுபவமுள்ள இராணுவத்தின் ஆதரவு ஆகியவை பாம்பேயின் நிலை மங்கும் வகையில் அச்சுறுத்தலாக விளங்கின. பொ. ஊ. மு. 53இல் கிராசுசுவின் இறப்பிற்குப் பிறகு பாம்பே செனட் சபையுடன் மீண்டும் ஒத்துழைக்கத் தொடங்கினார். கௌல் போர்கள் முடிவடைந்தவுடன் தன்னுடைய இராணுவ தளபதித்துவத்தில் இருந்து இறங்கி, உரோமுக்குத் திரும்புமாறு செனட் சபையானது சீசருக்கு ஆணையிட்டது. பொ. ஊ. மு. 49இல் உரூபிகன் ஆற்றைக் கடந்து, உரோமை நோக்கி ஓர் இராணுவத்திற்குத் தலைமை தாங்கி அணி வகுத்ததன் மூலம் செனட் சபையின் அதிகாரத்திற்குச் சீசர் வெளிப்படையாகப் பணிய மறுத்தார்.[2] உரூபிகனைக் கடப்பது என்பது மீள இயலாத நிலைக்குச் செல்வதைக் குறிக்கும் ஒரு சொற்றொடராக ஆங்கிலத்தில் இன்றும் பயன்படுத்தப்படுகிறது. இது சீசரின் உள்நாட்டுப் போரைத் தொடங்கியது. இதில் இவர் வெற்றி பெற்றார். இது பொ. ஊ. மு. 45இல் கிட்டத் தட்ட போட்டியற்ற சக்தி மற்றும் செல்வாக்குடைய ஒரு நிலையில் இவரை நிறுத்தியது.

அரசாங்கத்தின் கட்டுப்பாட்டை பெற்றதற்குப் பிறகு சமூக மற்றும் அரசாங்கச் சீர்திருத்தங்களின் ஓர் அமல்படுத்தலைச் சீசர் தொடங்கினார். இதில் யூலியன் நாட்காட்டியின் உருவாக்கமும் அடங்கும். உரோமைக் குடியரசின் தொலை தூரப் பகுதிகளின் பல குடி மக்களுக்கு இவர் உரோமானியக் குடியுரிமையை வழங்கினார். தன்னுடைய அனுபவசாலிப் போர் வீரர்களுக்கு ஆதரவளிக்க நிலச் சீர்திருத்தங்களை இவர் தொடங்கினார். ஒரு பெருமளவிலான உட்கட்டமைப்பு திட்டத்தையும் இவர் தொடங்கி வைத்தார். 44ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இவர் "வாழ்நாள் முழுவதுக்குமான சர்வாதிகாரி" (திக்தேத்தர் பெர்பெச்சுவோ) என்று பொது அறிவிப்பு செய்யப்பட்டார். இவரது சக்தி மற்றும் அரசு மீது இவரது ஆதிக்கம் ஆகியவற்றால் அச்சமடைந்த புரூட்டசு மற்றும் காசியசு தலைமையிலான செனட் உறுப்பினர்களின் ஒரு குழுவானது சீசரை பொ. ஊ. மு. 44 ஆம் ஆண்டு நட்ட நடு மார்ச்சு (15 மார்ச்சு) அன்று அரசியல் கொலை செய்தது. ஒரு புதிய தொடர்ச்சியான உள்நாட்டுப் போர்கள் வெடித்தன. இதற்குப் பிறகு குடியரசின் அரசியலமைப்பு அரசாங்கமானது என்றுமே மீண்டும் அதன் பழைய நிலைக்குச் செல்லவில்லை. சீசரின் அக்காவின் மகள் வழிப் பேரனும், தத்தெடுக்கப்பட்ட வாரிசுமான ஆக்தேவியன் உரோமைக் குடியரசின் கடைசி உள்நாட்டு போரில் தன்னுடைய எதிரிகளைத் தோற்கடித்ததற்குப் பிறகு ஒற்றை சக்தியாக வளர்ச்சியடைந்தார். இவர் பின்னாட்களில் அகத்தசு என்று அறியப்பட்டார். ஆக்தேவியன் தன்னுடைய சக்தியை நிலை நிறுத்தத் தொடங்கினார். இவ்வாறாக உரோமைப் பேரரசின் சகாப்தமானது தொடங்கியது.

சீசர் ஒரு செயல் திறமை வாய்ந்த எழுத்தாளர் மற்றும் வரலாற்றாளர், மற்றும் ஓர் அரசியல் மேதையாவார். இவரது வாழ்வு குறித்த பெரும்பாலான தகவல்கள் இவரது இராணுவ படையெடுப்புகள் குறித்த இவரது சொந்த குறிப்புகளில் இருந்து பெறப்படுகின்றன. சிசெரோவின் மடல்களும், பேச்சுகளும் மற்றும் சல்லுசுதுவின் வரலாற்றுப் பதிவுகள் உள்ளிட்டவையும் பிற சம கால ஆதாரங்களாகக் கருதப்படுகின்றன. பின்னாட்களில் சுவேதோனியசு மற்றும் புளூட்டாக்கால் எழுதப்பட்ட சுய சரிதைகளும் கூட முக்கியமான ஆதாரங்களாக விளங்குகின்றன. பல வரலாற்றாளர்கள் சீசரை வரலாற்றின் மிகச் சிறந்த இராணுவத் தளபதிகளில் ஒருவராகக் கருதுகின்றனர்.[3] இவரது மூன்றாவது பெயரானது (சீசர்) இறுதியாகப் பேரரசர் என்பதற்கான சொல்லாகப் பின்பற்றப்பட்டது; இவரது பெயரான "சீசரானது" உரோமைப் பேரரசு முழுவதும் பயன்படுத்தப்பட்டது. செருமனியின் கெய்சர் மற்றும் உருசியாவின் சார் போன்ற பட்டங்கள் இவரது பெயரின் நவீன கால உருவாக்கங்கள் ஆகும். இலக்கியம் மற்றும் கலை வேலைப்பாடுகளில் இவர் அடிக்கடி தோன்றுகிறார்.

தொடக்க வாழ்வும், பணிக் காலமும்[தொகு]

சீசரின் அத்தை சூலியாவின் கணவரான கையசு மரியசு. இவர் சுல்லாவின் எதிரியாவார். பொ. ஊ. மு. 87இல் லூசியசு கார்னேலியசு சின்னாவுடன் இணைந்து இவர் நகரத்தைக் கைப்பற்றினார்.

கையசு சூலியசு சீசர் பண்டைக்கால உரோமில் ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தில் பொ. ஊ. மு. 100இல் 12 சூலை அன்று சென்சு சூலியா என்ற குடும்பத்தில் பிறந்தார்.[4] இவர்களது நகரத்தை உரோமின் மூன்றாவது மன்னனான துல்லுசு ஓசுதிலியசு கைப்பற்றி அழித்ததற்குப் பிறகு பொ. ஊ. மு. ஏழாம் நூற்றாண்டில் ஆல்பா லோங்கா என்ற பகுதியில் இருந்து உரோமுக்கு இடம் பெயர்ந்ததாக இக்குடும்பம் கூறியது. ஆல்பா லோங்காவை நிறுவியவரும், அயேனியசின் மகனுமான சூலுசுவில் இருந்து தோன்றியதாக இக்குடும்பம் குறிப்பிட்டது. அயேனியசு உரோமானிய பெண் தெய்வமான வீனசின் மகன் என்று குறிப்பிடப்படுவதால் இத்தகைய வழித்தோன்றலானது இந்த இனத்தவரை தெய்வீக பூர்வீகத்தையுடையவர்களாக ஆக்கியது. இத்தகைய வழித்தோன்றல் மரபானது அதன் முழுமையான வடிவத்தை ஒன்றாம் நூற்றாண்டு வரை அடையவில்லை. ஆனால் வீனசின் வழித்தோன்றல்கள் என கோரிய இந்த இனத்தவரின் கோரலானது பொது மக்களின் மனங்களில் நன்றாக நிறுவப்பட்டிருந்தது.[5] சிசேரியன் எனப்படும் அறுவைசிகிச்சை மகப்பேறு மூலம் சீசர் பிறந்தார் என்பதற்கு எந்தவித ஆதாரங்களும் இல்லை. இத்தகைய அறுவை சிகிச்சைகள் தாயின் இறப்பை தடுத்து நிறுத்துவதில் இன்றியமையாததாக இருந்தன. ஆனால் சீசரின் தாய் இவரை பெற்றதற்கு பிறகு தசாப்தங்களுக்கு வாழ்ந்தார். அவர் சீசரைப் பெற்ற போது எந்த வித துன்பத்தையும் அனுபவித்ததாக எந்த ஒரு பண்டைய ஆதாரமும் பதிவு செய்யவில்லை.[6]

இவர்களது குடும்பம் பண்டைய பூர்வீகத்தைக் கொண்டிருந்த போதிலும் குடியரசின் நடுக் காலத்தின் போது சூலீ சீசரேசுகள் குறிப்பாக அரசியல் ரீதியாக செல்வாக்குடன் இல்லை. சீசர் என்ற பெயரை மூன்றாவது பெயராக கொண்டிருந்ததாக அறியப்பட்ட முதல் நபர் இரண்டாவது பியூனிக் போரின் போது பொ. ஊ. மு. 208இல் இருந்த ஒரு பிரயேத்தர் எனப்படும் இராணுவ தளபதி அல்லது நீதிபதி ஆவார். இக்குடும்பத்தின் அயல்நாட்டில் பணிபுரிந்த முதல் பேராளர் பொ. ஊ. மு. 157ஆம் ஆண்டு பதவிக்கு வந்தார். எனினும், இவர்களது அரசியல் நன்னிலையானது முதலாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே மீண்டும் உருப்பெற்று இருந்தது. பொ. ஊ. மு. 91 மற்றும் 90ஆம் ஆண்டுகளில் இரண்டு பேராளர்கள் இக்குடும்பத்திலிருந்து பதவிக்கு வந்தனர்.[7] சீசரின் பெயரையே கொண்டிருந்த சீசரின் தந்தை அரசியல் ரீதியாக மிதமான அளவுக்கு வெற்றி பெற்றிருந்தார். அரசியல் ரீதியாக செல்வாக்கு மிகுந்த ஔரேலி காட்டே குடும்பத்தைச் சேர்ந்த ஔரேலியாவை சீசரின் தந்தை மணமுடித்துக் கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் மற்றும் சீசர் பிறந்தனர். தனது சொந்த திருமணம் மற்றும் மிகுந்த செல்வாக்குடைய கையசு மரியசுக்கு தனது சகோதரி மண முடிக்கப்பட்டது ஆகியவற்றால் ஊக்குவிக்கப்பட்ட சீசரின் தந்தை பொ. ஊ. மு. 103இல் சாத்தர்னினிய நில ஆணையத்திலும் கூட சேவையாற்றினார். பொ. ஊ. மு. 92 மற்றும் 85ஆம் ஆண்டுக்கு இடையில் ஒரு நேரத்தில் ஒர் இராணுவ தளபதி அல்லது பிரயேத்தராகவும் (பேராளருக்குக் கீழ் நிலையிலுள்ள நீதிபதி) கூட இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டு ஆண்டுகளுக்கு ஆசியாவின் ஆளுநரின் அதிகாரியாக இவர் சேவையாற்றினார். இவர் சேவையாற்றிய காலமானது அநேகமாக பொ. ஊ. மு. 91-90ஆம் ஆண்டு என்று கருதப்படுகிறது.[8]

சுல்லாவின் கீழ் வாழ்வும், இராணுவ சேவையும்[தொகு]

பொ. ஊ. மு. 54இல் குயிந்துசு பாம்பேயசு உரூபசால் அச்சிடப்பட்ட ஒரு நாணயத்தில் சித்தரிக்கப்பட்டுள்ள படி சுல்லா. பொ. ஊ. மு. 82இல் நகரத்தை சுல்லா கைப்பற்றினார், தன்னுடைய அரசியல் எதிரிகளை ஒழித்துக் கட்டினார், புதிய அரசியலமைப்புச் சீர்திருத்தங்களைத் தொடங்கி வைத்தார்.

லூசியசு கார்னேலியசு சின்னாவின் ஆதிக்கத்தின் போது பேராளர் பதவியை சீசரின் தந்தை வேண்டவில்லை. மாறாகப் பணி ஓய்வைத் தேர்ந்தெடுத்தார்.[9] சின்னாவின் ஆதிக்கத்தின் போது சீசர் பிலேமன் தியாலிசுவாகப் (ஜூப்பிட்டர் கோயிலின் ஒரு பூசாரி) பெயரிடப்பட்டார். சின்னாவின் மகளான கார்னேலியாவை இவர் திருமணம் செய்து கொள்ளவதற்கு இது இட்டுச் சென்றது. பூசாரிப் பதவியில் சமய ரீதியாகத் தடை செய்யப்பட்ட செயல்களானவை ஓர் அரசியல் வாழ்வைக் கைவிட சீசரைக் கட்டாயப்படுத்தியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. அரசியல் சாராத மிக உயர்ந்த மதிப்புகளில் ஒன்றான இந்த நியமிப்பானது சீசரின் அரசியல் வாழ்வு குறித்து பெரிதாக எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லை என்பதைக் காட்டுகிறது.[10] பொ. ஊ. மு. 84ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சீசரின் தந்தை திடீரென்று இறந்தார்.[11] பொ. ஊ. மு. 82இல் உள்நாட்டுப் போரில் சுல்லாவின் வெற்றிக்குப் பிறகு சின்னாவின் முடிவுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டன. பூசாரிப் பதவியிலிருந்து விலகி சின்னாவின் மகளை விவாகரத்து செய்யுமாறு இறுதியாக சுல்லா சீசருக்கு ஆணையிட்டார். சீசர் மறுத்தார். சுல்லா செல்லாது என அறிவித்ததன் முறைமைத் தன்மையை இதன் மூலம் சீசர் மறை முகமாகக் கேள்விக்குள்ளாக்கினார். தன்னுடைய தடை செய்யப்பட்டவர்களின் பட்டியலில் சுல்லா சீசரையும் சேர்த்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. எனினும், அறிஞர்கள் இது குறித்து கலவையான கருத்துக்களைக் கொண்டுள்ளனர்.[12] சீசர் பிறகு தலைமறைவானார். உரோமைப் பெண் கடவுள் வேசுதாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கன்னிப் பெண்கள் மத்தியில் இவரது உறவினர்கள் மற்றும் இவருடைய தொடர்புகள் ஆகியோர் இவர் பக்கம் தலையிட்டு இவரைக் காப்பாற்றினர்.[13] பிறகு இவர்கள் சீசர் தன்னுடைய பூசாரிப் பதவியை ராஜினாமா செய்வார், ஆனால் தன்னுடைய மனைவி மற்றும் உடைமைகளை வைத்துக் கொள்வார் என்ற ஒரு சமரசத்தை அடைந்தனர். "[சீசரிடம்] பல கையசு மரியசுகளைப்"[14] பார்த்தேன் என்று சுல்லா குறிப்பிட்டதாகக் கூறப்படுவது ஒரு வதந்தியாகும்.[15]

ஏகாதிபத்திய காலத்தைச் சேர்ந்த ஒரு மனிதனின் மார்பளவுச் சிலை. இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது அகத்தசின் மார்பளவுச் சிலை ஆகும். குடிமகனுக்கான மகுடத்தை (இலத்தீன்: கொரோனா சிவிகா) இவர் அணிந்துள்ளார். பொ. ஊ. மு. 81ஆம் ஆண்டில் மைதிலேன் முற்றுகையில் தன்னுடைய வீரத்திற்காக சீசர் குடிமகனுக்கான மகுடத்தை வென்றார்.

ஆசியாவில் ஆளுநரான மார்க்கசு மினுசியசு தெர்மசுவுக்குப் பணியாளராகச் சேவையாற்ற பிறகு இத்தாலியிலிருந்து சீசர் சென்றார். அங்கிருந்த போது இவர் கடற்படை வலுவூட்டல் படைகளை சேகரிப்பதற்காக பிதினியாவிற்குப் பயணம் மேற்கொண்டார். சில காலத்திற்கு மன்னர் நான்காம் நிக்கோமெதிசின் ஒரு விருந்தினராகத் தங்கினார்.[16][17] பிறகு இவர் மைதிலேன் முற்றுகையில் சேவையாற்றினார். யுத்தத்தில் தன்னுடைய சக குடிமகனின் உயிரைக் காப்பாற்றியதற்காக குடிமகனுக்கான மகுடத்தை இவர் வென்றார். இம்மகுடத்தின் தனிச் சலுகைகளானவை பிறரிடமிருந்து மதிப்பைப் பெற வேண்டும் என்ற சீசரின் ஆர்வத்தைத் தூண்டியது. இம்மகுடத்தைக் கொண்டுள்ளவர் நுழையும் போது செனட் சபையானது எழுந்திருக்க வேண்டியிருந்தது. பொது விழாக்களில் மகுடத்தைக் கொண்டுள்ளவர்கள் அதை அணிந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. மைதிலேன் கைப்பற்றப்பட்டதற்குப் பிறகு சிலிசியாவிலிருந்த பப்பிலியசு செர்விலியசு வதியாவின் பணியாளர்களில் ஒவ்வொருவராக சீசர் மாற்றம் செய்யப்பட்டார். பிறகு பொ. ஊ. மு. 78இல் சுல்லாவின் இறப்பை இவர் அறிந்தார். உடனடியாக தாயகம் திரும்பினார்.[18] அந்த ஆண்டு பேராளர் லெபிதுசுவின் கிளர்ச்சியில் இணைய இவர் விரும்பினார் என்று இவர் மீது ஆதாரமில்லாவிட்டாலும் குற்றம் சுமத்தப்படுகிறது.[19] இளம் வயதிலேயே சர்வாதிகாரத்திற்கான சீசரின் விருப்பம் குறித்த இலக்கிய மிகைப்படுத்தல் இது என்று கருதப்படுகிறது.[20]

இதற்குப் பிறகு அரசவைகளில் சுல்லா உயர்குடியினரை சீசர் தாக்கினார். ஆனால், பொ. ஊ. மு. 77இல் கினேயசு கார்னேலியசு தோலபெல்லாவை இவர் குற்றம் சுமத்திய முயற்சியில் இவர் வெற்றியடையவில்லை. தோலபெல்லா அப்போது தான் மாசிடோனியாவின் ஆளுநர் பதவியிலிருந்து திரும்பியிருந்தார். பிறகு, ஒரு குறைவான, நன்முறையில் தொடர்புடைய செனட் சபை உறுப்பினர் மீது சீசர் குற்றம் சுமத்தினார். தடை செய்ததன் மூலம் வருவாய் ஈட்டியதாக கையசு ஆன்டோனியசு ஐப்பிரிதாவை (பொ. ஊ. மு. 63இல் பேராளர்) குற்றம் சுமத்துகையில் அடுத்த ஆண்டு இவர் வெற்றியடைந்தார். ஆனால் ஆன்டோனியசின் பக்கம் ஒரு தீர்ப்பாயமானது தலையிட்ட போது இந்நடவடிக்கையானது தடுத்து வைக்கப்பட்டது.[21] இந்த பேச்சாற்றல் முயற்சிகளுக்குப் பிறகு சீசர் ரோட்சு தீவுக்குச் செல்வதற்காக உரோமிலிருந்து வெளியேறினார். பேச்சாளர் அப்பல்லோனியசு மோலோனின் பாதுகாப்பை வேண்டினார்.[22] பயணம் செய்யும் போது இவர் கடற்கொள்ளையர்களால் இடைமறிக்கப்பட்டு பிடிக்கப்பட்டார். பிணையத் தொகை கொடுத்து மீட்கப்பட்டார். மேலும், இக்கதை பிற்காலத்தில் மிகைப்படுத்தப்பட்டது என்று குறிப்பிடப்படுகிறது. புளூட்டாக் மற்றும் சுவேதோனியாசு ஆகியோரின் கூற்றுப் படி, 50 தாலத்துகளைப் (சுமார் 1,615 கிலோ வெள்ளி) பிணையத் தொகையாக செலுத்திய பிறகு இவர் விடுதலை செய்யப்பட்டார். பதிலுக்கு, பிறகு ஒரு கப்பல் குழுவுடன் திரும்பினார். கடற் கொள்ளையர்களைப் பிடித்து மரணதண்டனைக்கு உட்படுத்தினார். இங்கு பிணையத் தொகையாகப் பதிவு செய்யப்பட்ட பணமானது இலக்கிய மிகைப்படுத்தல் என்று கருதப்படுகிறது. கடற்கொள்ளையர்கள் அடிமைகளாக விற்கப்பட்டிருக்க வேண்டும் என்பதே மிக சாத்தியமான ஒன்றாக உள்ளது என்கிறார் வல்லேயசு பதர்குலுசு.[23] பொ. ஊ. மு. 75ஆம் ஆண்டின் குளிர்காலம் மற்றும் 74ஆம் ஆண்டு மூன்றாம் மித்ரிததிக் போரின் வெடிப்பானது இவரது கல்விக்கு இடையூறாக அமைந்தது. அங்கு சென்று உள்ளூர் மக்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் மாகாணத்தில் துருப்புக்களை சீசர் சேர்த்தார் என்று இவர் மீது ஆதாரமில்லாவிட்டாலும் குற்றம் சாட்டப்படுகிறது. மித்ரிததிக்கின் படைகளுக்கு எதிராக வெற்றிகரமாக இவர் தலைமை தாங்கினார் என்று குறிப்பிடப்படுகிறது.[24]

அரசியலுக்குள் நுழைதல்[தொகு]

பொ. ஊ. மு. 73இல் உரோமில் இல்லாத நேரத்தில் தன்னுடைய இறந்த உறவினரான கையசு அரேலியசு கோட்டாவின் இடத்தில் பூசாரிகளின் உறுப்பினர்களில் ஒருவராகச் சேர்க்கப்பட்டார். இவரது அரசியல் வாழ்வுக்கு சிறப்பான எதிர் கால வாய்ப்புகளுடன் கூடிய, ஒரு நன்றாக ஏற்றுக் கொள்ளப்பட்ட உயர்குடியினரின் உறுப்பினராக இப்பதவிக்கு வாந்தார்.[25] இதற்குப் பிறகு சீக்கிரமே திரும்புவதற்கு சீசர் முடிவெடுத்தார். திரும்பி வந்த போது பொ. ஊ. மு. 71ஆம் ஆண்டுக்கான இராணுவத் தீர்ப்பாயர்களில் ஒருவராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[26] ஸ்பாட்டகஸ் போரானது இவரது காலத்தின் போது நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் சீசர் இப்போரில் சேவையாற்றினார் என்பதற்கு எந்த வித ஆதாரமும் இல்லை. பிலேபேயியத் தீர்ப்பாயத்தில் சுல்லாவின் ஊறுபாடுகளின் நீக்கம் மற்றும் லெபிதுசுவின் கிளர்ச்சிக்கு ஆதரவளித்தவர்களுக்கு மன்னிப்பு அளித்தல் ஆகியவற்றுக்காக இவர் செயல்பட்டார்.[27] இச்செயல்பாடுகள் பொதுவானவையாகவும், சர்ச்சையற்றவையாகவும் இருந்தன.[28] அடுத்த ஆண்டு பொ. ஊ. மு. 70இல் பாம்பே மற்றும் கிராசுசு பேராளர் ஆயினர். பிலேபேயியத் தீர்ப்பாய உரிமைகளை மீண்டும் நிறுவ சட்டம் கொண்டு வந்தனர். இத்தீர்ப்பாயங்களில் ஒன்று சீசரின் ஆதரவுடன் லெபிதுசுவின் கிளர்ச்சியில் பங்கெடுத்ததால் நாடு கடத்தப்பட்டவர்களை மன்னிக்கும் சட்டத்தைக் கொண்டு வந்தது.[29]

பொ. ஊ. மு. 69இல் இவரது வருவாய் அதிகாரிப் பணிக்காக இசுபானியா அல்தீரியர் பகுதியில் கையசு ஆன்டிசுதியசு வேதுசுவின் கீழ் சேவையாற்ற சீசர் ஒதுக்கிக் கொடுக்கப்பட்டார். இவரது தேர்ந்தெடுப்பானது செனட் சபையில் வாழ்நாள் முழுவதும் ஒரு இருக்கையைக் கூட இவருக்குக் கொடுத்தது. எனினும், இவர் திரும்பிச் செல்வதற்கு முன்னதாகவே கையசு மரியசுவின் விதவையான இவரது அத்தை சூலியா இறந்தார். இதற்குப் பிறகு சீக்கிரமே இவரது ஒரே முறைமை வாய்ந்த பிள்ளையான சூலியாவைப் பெற்றதற்குப் பிறகு இவரது மனைவி கார்னேலியா சீக்கிரமே இறந்தார். இவர்களது ஈமச்சடங்குகளில் இவர்கள் இருவருக்குமே புகழுரையை சீசர் ஆற்றினார்.[30] சூலியாவின் ஈமாச்சடங்கின் போது என்பது சீசர் தன்னுடைய அத்தையின் கணவராகிய மரியசுவின் படங்களைக் காட்டினார். உள்நாட்டுப் போரில் சுல்லாவின் வெற்றிக்குப் பிறகு மரியசு குறித்த நினைவுகளானவை ஒடுக்கப்பட்டிருந்தன. குயிந்துசு லுதாதியசு கதுலுசு உள்ளிட்ட சுல்லா உயர்குடியினர் சிலர் மரியசுவின் அரசின் கீழ் பாதிப்படைந்திருந்தனர். அவர்கள் மரியசுவின் படங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனால், உயர்குடியினப் பெண்களின் இறுதி ஊர்வலங்களின் போது அவர்களது கணவர்களின் படங்களைக் காட்டுவது என்பது இந்நேரத்தில் பொதுவான ஒன்றாகிப் போயிருந்தது.[31] புளூட்டாக்கின் குறிப்புகளுக்கு மாறாக,[32] சீசரின் செயலானது சமரசம் மற்றும் இயல்பு நிலைக்கான ஓர் அரசியல் போக்குடன் ஒத்ததாக அமைந்திருந்தது. புதுப்பிக்கப்பட்ட பிரிவைக் காட்டுவதாக அமையவில்லை.[33] சீசர் சீக்கிரமே சுல்லாவின் பேத்தியான பொம்பெயியாவை மறுமணம் புரிந்து கொண்டார்.[34]

அயேதிலாக, பாந்திபெக்சு மேக்சிமசாகத் தேர்வு[தொகு]

இக்காலத்தின் பெரும்பாலான நேரத்திற்கு சீசர் பாம்பேயின் ஆதரவாளர்களில் ஒருவராக இருந்தார். 70களின் பிற்பகுதியில் பாம்பேயுடன் சீசர் தீர்ப்பாய உரிமைகளை மீண்டும் நிறுவுவதற்கு ஆதரவளிப்பதற்காகச் சேர்ந்தார். லெபிதுசுவின் கிளர்ச்சியில் பங்கெடுத்ததால் நாடு கடத்தப்பட்டவர்களை மீண்டும் அழைக்கும் சட்டத்திற்கான இவரது ஆதரவானது, பாம்பேயின் அனுபவசாலிப் போர் வீரர்களுக்கு நிலங்களை வழங்கிய அதே தீர்ப்பாய ஆணையுடன் தொடர்புடையதாக இருந்திருக்கலாம் என்றூ கருதப்படுகிறது. பொ. ஊ. மு. 67இல் லெக்சு கபினியா சட்டத்தையும் கூட சீசர் ஆதரித்தார். மத்தியத் தரைக்கடலில் கடற்கொள்ளையர்களுக்கு எதிராக ஒரு சிறப்பு வாய்ந்த தலைமையை பாம்பேவுக்கு இச்சட்டம் கொடுத்தது. மூன்றாம் மித்ரிததிக் போரை அப்போதைய தளபதியான லுகுல்லுசுவிடமிருந்து பாம்பேவிடம் அளித்த சட்டமான பொ. ஊ. மு. 66இல் இயற்றப்பட்ட லெக்சு மனிலியாவையும் கூட இவர் ஆதரித்தார்.[35]

கோச்சுதியசு மரிதியானுசுவின் தெனாரியசு நாணயம், ஆண்டு பொ. ஊ. மு. 44. முன்புறம் பாந்திபெக்சு மேக்சிமசாக சூலியசு சீசரின் தலையைச் சித்தரித்துள்ளது. பின்புறத்தில் உள்ள எழுத்துக்கள் ஏ. ஏ. ஏ. எப். எப். என்று குறிப்பிடுகின்றன.

இவரது அத்தை சூலியாவின் இறுதிச் சடங்கு நடைபெற்று நான்கு ஆண்டுகள் கழித்து பொ. ஊ. மு. 65இல் குருலே அடில் எனப்படும் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரியாக சீசர் சேவையாற்றினார். மேற்கொண்ட கவனத்தைத் தன் மீது ஈர்த்த மற்றும் பொதுமக்களின் ஆதரவை அதிகமாக்கிய மட்டு மிஞ்சி செலவழிக்கப்பட்ட விளையாட்டுகளை நடத்தினார். [36]சுகுர்த்தா மற்றும் சிம்பபிரி போர்களில் மரியசுவால் வெல்லப்பட்ட, சுல்லாவால் நீக்கப்பட்ட வெற்றிக் கோப்பைகளையும் கூட இவர் மீண்டும் நிறுவினார்.[37] புளூட்டாக்கின் குறிப்புப் படி, இந்தக் கோப்பைகள் ஒரே இரவில் கண்டு கொண்டிருந்தவர்களின் கரவொலி மற்றும் ஆனந்தக் கண்ணீருடன் மீண்டும் நிறுவப்பட்டன. கட்டடக்கலை நிபுணர்கள், மறு நிறுவுதல் செய்வோர் மற்றும் பிற பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு, ஊதியம் வழங்கப்பட்டிருக்கப்படாவிட்டால் இத்தகைய எந்த ஒரு திடீர் மற்றும் இரகசிய மறு நிறுவலானது சாத்தியமாகி இருக்காது, இந்தப் பணியும் ஒரே நாள் இரவில் செய்து முடிக்க இயலாததாக இருந்திருக்கும்.[38] தன்னுடைய குடும்பத்தின் பொது நினைவுச் சின்னங்களை வெறுமனே சீசர் மீண்டும் நிறுவினார் என்பது இதைப் பற்றிக் குறிப்பிடப் பொருத்தமானதாக இருக்கும். பொதுவான உயர்குடியினப் பழக்கவழக்கம் மற்றும் பியேதசு எனப்படும் நடத்தையுடன் இது ஒத்திருந்தது. இந்த மறு நிறுவுதலை கதுலுசுவிடமிருந்து வந்த எதிர்ப்புகளைத் தாண்டி இவர் செய்தார். இவரது செயலானது செனட் சபையால் பரவலாக ஆதரவளிக்கப்பட்டிருந்தது.[39]

பொ. ஊ. மு. 63இல் சீசர் அயேதில் (பொதுக் கட்டடங்களுக்குப் பொறுப்பாளரான உரோமானிய நீதிபதி) மற்றும் பாந்திபெக்சு மேக்சிமசு ஆகிய பதவுகளுக்கு நின்றார். பாந்திபெக்சு மேக்சிமசு என்பவர் பூசாரிகளின் கல்லூரியின் தலைவராவார்.[40] உரோமை அரசின் உயர்ந்த நிலையில் உள்ள சமய அதிகாரியும் ஆவார். உரோமானிய மக்கள் குழுக்களுக்கு முன்னாள் தேர்தலில் சீசர் இரண்டு செல்வாக்கு மிகுந்த செனட் சபை உறுப்பினர்களுக்கு எதிராகப் போட்டியிட்டார். அவர்கள் குயிந்துசு லுதாதியசு கதுலுசு மற்றும் பப்பிலியசு செர்விலியசு இசௌரிகசு ஆகியோர் ஆவர். சீசர் வெற்றி பெற்றார். சீசரின் போட்டியிடுதலானது முக்கியமானதாக எடுத்துக் கொள்ளப்பட்டது பல அறிஞர்களை ஆச்சரியத்துக்குள்ளாகியுள்ளது. எனினும், வரலாற்றில் இதற்கு முன்னர் இவ்வாறு நடந்ததில்லை என்று குறிப்பிட முடியாது.[41] பெரும் இலஞ்சங்களைக் கொடுத்தார் அல்லது நாணமற்ற முறையில் பிறரது நல்லெண்ணத்தைப் பெறத் தேவையானவற்றை செய்தார் என்று சீசர் மீது ஆதாரமில்லாவிட்டாலும் குற்றத்தைப் பண்டைக் கால ஆதாரங்கள் சுமத்துகின்றன.[42] இது குறித்து எந்த ஒரு குற்றச்சாட்டும் வைக்கப்படாதது இவரது வெற்றியை விளக்க இலஞ்சம் மட்டும் போதுமானதாக இல்லை என்பதைக் காட்டுகிறது.[43] இலஞ்சங்கள் அல்லது பிற பணங்கள் தேவைப்பட்டிருந்தால் அவை பாம்பேயால் ஆவணத்தில் உறுதியளிக்கப்பட்டிருக்கும். அந்த நேரத்தில் பாம்பேவுக்குச் சீசர் ஆதரவளித்தார். பாம்பே கதுலுசுவின் நிற்பை எதிர்த்தார்.[44]

பிலேபேயியத் தீர்ப்பாயரான பப்பிலியசு செர்விலியசு உருல்லுசுவால் அந்த ஆண்டு கொண்டு வரப்பட்ட நிலச்சீர்திருத்த முன்மொழிவுகளை சீசர் ஆதரித்தார் என்றும் கூட பல ஆதாரங்கள் உறுதிப்படுத்துகின்றன. எனினு,ம் எந்த ஒரு பண்டைக்கால ஆதாரங்களும் இதைப் பரிந்துரைக்கவில்லை.[45] சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் செனத்தசு கன்சல்த்தம் அல்திமேத்தம் என்ற ஆணையை ஒத்து சாத்தர்னினுசுவின் கொலைக்காக கையசு ரபிரியசு மீது பிலேபேயியத் தீர்ப்பாயரான தைத்தசு லபியேனுசு குற்றம் சுமத்தினார். இந்தக் குற்ற விசாரணையில் ஒரு துணைப் பினையாக சீசர் தொடர்புபடுத்தப்பட்டிருந்தார் என்று குறிப்பிடப்படுகிறது.[46][47] அந்த ஆண்டின் மிகப் பிரபலமான நிகழ்வானது கத்திலினேரிய கூட்டுச் சதித் திட்டம் ஆகும். கதுலுசு போன்ற சீசரின் எதிரிகளில் சிலர், சீசர் இந்தக் கூட்டுச் சதித் திட்டத்தில் பங்கேற்றிருந்தார் என்று ஆதாரமில்லாவிட்டாலும் குற்றம் சுமத்துகின்றனர்.[48] இதில் இவர் ஒரு பங்கெடுப்பாளராக இருந்திருப்பார் என்பதற்கான வாய்ப்பானது மிக மிகக் குறைவாகும்.[49]

பிரயேத்தராக[தொகு]

சீசர் பிரயேத்தராகத் தன்னுடைய தேர்ந்தெடுப்பை பொ. ஊ. மு. 63இல் எளிதாக வென்றார். பிரயேத்தராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் ஒருவராக, செனட் சபையில் திசம்பர் மாதத்தில் குறிப்பிட்ட குடிமகன்கள் மரண தண்டனைக்கு உட்படுத்தப்படுவதற்கு எதிராக இவர் பேசினார். கௌல் மக்களுடன் கூட்டுச் சதி செய்ததற்காக நகரத்தில் இந்தக் குடிமகன்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.[50] சீசர் எந்தப் பரிந்துரையை முன் வைத்தார் என்பது முழுவதுமாக, தெளிவாகத் தெரியவில்லை. விசாரணையின்றி அவர்களுக்கு வாழ்நாள் சிறை கொடுக்க வேண்டுமென இவர் ஆலோசனை கூறினார் என்று தொடக்க கால ஆதாரங்கள் உறுதிப்படுத்துகின்றன. விசாரணைக்காக காத்திருந்த சதிகாரர்கள் சிறைப்படுத்தப்பட வேண்டுமென இவர் மாறாக விரும்பியதாகப் பிந்தைய ஆதாரங்கள் உறுதிப்படுத்துகின்றன. சதிகாரர்களின் உடைமைகளைப் பறிமுதல் செய்வதைச் சீசர் ஆதரவளித்தார் என்று பெரும்பாலான ஆதாரங்கள் உறுதிப்படுத்துகின்றன.[51] சீசர் அநேகமாக முந்தைய பரிந்துரையையே அறிவுறுத்தியிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. லெக்சு செம்ப்ரோனியா தி கபிதே சிவிசு என்ற சட்டத்தின் வரம்புகளுக்குள் செனட் சபை நடவடிக்கைகளை உட்படுத்திய ஓர் இணக்கமான நிலையாக இது இருந்திருக்கும். செனட் சபையை இணங்க வைப்பதில் தொடக்கத்தில் இவர் வெற்றி கண்டார். எனினும், காதோ பின்னர் இதில் தலையிட்டார். சதிகாரர்களை மரண தண்டனைக்கு உட்படுத்த வேண்டும் என இறுதியாக சபையை இணங்க வைத்தார்.[52]

பொ. ஊ. மு. 63இல் பேராளரான சிசெரோ. 1889ஆம் ஆண்டின் ஒரு சுதை ஓவியத்தில் இவர் சித்தரிக்கப்பட்டுள்ளார். கதிலினைக் கண்டித்து, செனட் சபைக்கு முன்னால் அவரது சதித்திட்டத்தை வெளிக்காட்டுகிறார். நகரத்திற்குள் இருந்து சதிகாரர்கள் பிறகு கைது செய்யப்பட்ட போது, சிசெரோ அவர்களது விதியைச் செனட் சபையிடம் குறிப்பிடுகிறார். இது ஒரு விவாதத்துக்கு வழி வகுத்தது. இந்த விவாதத்தில் சீசர் பிரயேத்தராக-தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவராகப் பங்கெடுத்தார்.

பிரயேத்தராக தன்னுடைய ஆண்டின் போது சீசர் முதலில் ஜூப்பிட்டர் ஆப்திமசு மேக்சிமசின் கோயிலை தன்னுடைய எதிரி கதுலுசு மீண்டும் கட்டமைப்பதை முடிக்கும் மதிப்பு மிக்க பணியைச் செய்வதிலிருந்து தடுக்க முயற்சித்தார். நிதியைக் கையாடல் செய்ததாகக் குற்றம் சுமத்தியும், பாம்பேவுக்கு இந்தப் பணியை மாற்றும் சட்டத்தைக் கொண்டு வருவதாகவும் அச்சுறுத்தவும் செய்தார். கிட்டத்தட்ட அனைவருமே எதிர்ப்புத் தெரிவித்ததால் இந்த முன் மொழிவானது சீக்கிரமே கைவிடப்பட்டது.[53] பிலேபேயியத் தீர்ப்பாயர் மேதேல்லுசு நெபோசால் கொண்டு வரப்பட்ட கதிலினுக்கு எதிரான தலைமையை 63ஆம் ஆண்டின் பேராளரான கையசு அன்டோனியசு ஐப்ரிதாவிடமிருந்து பாம்பேவுக்கு மாற்றுவதாக எடுக்கப்பட்ட முயற்சிக்கு பிறகு இவர் ஆதரவளித்தார். உரோமைக் குடியரசின் அரசவையான கோமிதியா திரிபியூதாவில் ஒரு வன்முறையான சந்திப்புக்குப் பிறகு மேதேல்லுசுவுக்கு எதிராக செனட் சபையானது ஓர் ஆணையை நிறைவேற்றியது. தன்னுடைய தீர்ப்பாய சக நபர்களான காதோ மற்றும் குயிந்துசு மினுசியசு தெர்முசு[54] ஆகியோருடன் இச்சந்திப்பில் மேதேல்லுசு கைகலப்பில் ஈடுபட்டார். நெபோசு மற்றும் சீசர் ஆகிய இருவருமே தங்களது நீதிபதிப் பதவியில் இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்டனர் என்ற சுவேதோனியசு குறிப்பிடுகிறார். ஆனால், அரசியலமைப்பு ரீதியாக இது ஓர் இயலாத காரியமாக இருந்திருக்கும்.[55] இந்த முன் மொழிவுகளிலிருந்து சீசர் தன்னை விலக்கிக் கொள்வதற்கு இது வழி வகுத்தது. ஒரு மாகண தலைமைக்கான நம்பிக்கை மற்றும் உயர் குடியினருடன் நல்ல உறவு முறைகளை செப்பனிடுவது ஆகியவையே சீசருக்கு முதன்மையானவையாக இருந்தன.[56] போனா தியா (பிரம்மச்சாரித்துக்கான உரோமானியப் பெண் கடவுள்) விவகாரத்திலும் சீசர் ஈடுபட்டிருந்தார். இவ்விவகாரத்தில் பப்பிலியசு குளோதியசு புல்ச்சர் ஒரு பெண்களுக்கான சமய வழிபாட்டின் போது சீசரின் வீட்டிற்குள் புனிதத் தன்மையைக் கெடுக்கும் விதமாக இரகசியமாக நுழைந்தார். சீசர் தன்னுடைய மனைவியை உடனடியாக விவாகரத்து செய்ததன் மூலம் இவ்விவகாரத்தில் எந்த ஒரு பகுதியாகவும் தான் இருப்பதைத் தவிர்த்தார். தன்னுடைய மனைவி "சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவராக" இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.[57] எனினும், எந்த விதத்திலும் குளோதியசுவுக்குச் சீசர் ஆதரவளித்தார் என்பதற்கான அறிகுறிகள் இல்லை.[58]

காதோவின் வெண்கலத்தால் செய்யப்பட்ட மார்பளவு சிலை. கதிலினேரிய விவாதத்தில் சீசரின் முதன்மையான எதிரியாக இருந்தார். மேலும் இவர் சீசருக்குத் தனிப்பட்ட முறையில் எதிரியாவும் இருந்தார். பொமேரியம் எனப்படும் நகரத்தைச் சுற்றியிருந்த சமய ரீதியிலான எல்லைக்குள் ஒருவர் நேரில் வந்து தனது போட்டியிடலை அறிவிக்க வேண்டும் என்ற தேவையை ஏற்படுத்திய சட்டத்திற்கு காதோ காரணமாக இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.[59]

பிரயேத்தர் பதவிக்குப் பிறகு, சீசர் எசுப்பானியா அல்தீரியரின் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.[60] பிரயேத்தர் பதவி மற்றும் பாந்திபெக்சு பதவிகளுக்கான தனது படையெடுப்புகளில் ஆழமாக மூழ்கியிருந்த போது பொதுவாக மாகாணத்தில் இருந்து பெறப்படுவதைத் தாண்டி மிகையான இராணுவ வெற்றியை படையெடுப்புகளுக்கான பணம் செலவழிக்க சீசர் பெற வேண்டிய தேவை இருந்தது.[61] கல்லேசியர் மற்றும் லூசித்தானியா ஆகிய பகுதிகளுக்கு எதிராக இவர் போர்ப் பயணங்களை மேற்கொண்டார். வடமேற்கு எசுப்பானியாவில் கல்லேசியரின் தலைநகரைக் கைப்பற்றினார். உரோமானியத் துருப்புகளை அத்திலாந்திக்கு பெருங்கடலுக்குக் கொண்டு வந்தார். தன்னுடைய கடன்களை திருப்பிச் செலுத்த போதிய அளவுக்கான பொருட்களை போரின் மூலம் கைப்பற்றினார்.[62] தீபகற்பத்தின் வெற்றியைத் தான் முடித்து விட்டதாகக் குறிப்பிட்டார். இவர் இம்பரேத்தர் என்று புகழப்பட்டதற்குப் பிறகு தாயகத்திற்குத் திரும்பிச் சென்றார்.[63] 60ஆம் ஆண்டு கோடை காலத்தில் தாயகத்திற்கு இவர் திரும்பி வந்த போது ஒரு வெற்றி மற்றும் பேராளராக தனது தேர்ந்தெடுப்பு ஆகியவற்றுக்கு இடையில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டார். பொமேரியத்துக்கு (உரோமின் புனித எல்லை) வெளியில் இவர் ஒரு வெற்றியை எதிர்பார்த்துத் தொடர்ந்து இருக்கலாம் அல்லது எல்லையைத் தாண்டி தன்னுடைய தலைமை மற்றும் வெற்றியை விட்டு விட்டு பேராளருக்கான போட்டியிடுதலை இவர் அறிவிக்கலாம் என்ற நிலை இருந்தது.[64] இவர் நேரில் வந்து போட்டியிடுதலை அறிவிக்க வேண்டிய தேவையை கைவிட வேண்டியதானது செனட் சபையில் இவரது எதிரி காதோவால் முட்டுக் கட்டையிடப்பட்டது. இந்த விதி விலக்குக்கு செனட் சபையானது ஆதரவளிக்கத் தயாராக இருந்த போதும் இவ்வாறு நடைபெற்றது.[65] ஒரு வெற்றி மற்றும் பேராளர் பதவிக்கு இடையிலான தேர்ந்தெடுப்பை எதிர் நோக்கியிருந்த சீசர் பேராளர் பதவியைத் தேர்ந்தெடுத்தார்.[66]

முதல் முறை பேராளராகவும், கௌல் போர்களும்[தொகு]

சூலியசு சீசரைச் சித்தரிக்கும் ஒரு தெனாரியசு நாணயம். இது பொ. ஊ. மு. 44ஆம் ஆண்டின் பெப்பிரவரி-மார்ச்சு மாதங்களுக்குக் காலமிடப்படுகிறது. பின்பகுதியில் பெண் தெய்வமான வீனஸ் காட்டப்பட்டுள்ளார். கையில் விக்டோரியாவையும், ஒரு செங்கோலையும் பிடித்துள்ளார். முன் பக்கத்தில் சீசர் என்று எழுத்துக்கள் உள்ளன.

பொ. ஊ. மு. 59ஆம் ஆண்டில் பேராளர் பதவிக்காக சீசர் இரண்டு பிற போட்டியாளர்களுடன் நின்றார். இவரது அரசியல் நிலையானது அந்நேரத்தில் வலிமையாக இருந்தது. மரியசு அல்லது சின்னாவுக்கு ஆதரவளித்த குடும்பங்களின் மத்தியில் இவருக்கு ஆதரவாளர்கள் இருந்தனர். சுல்லா உயர்குடியினருடன் இவரது தொடர்பானது நன்முறையில் இருந்தது. பாம்பேவுக்கு இவரது ஆதரவானது பதிலுக்கு இவருக்கு ஆதரவை வென்று தந்தது. உள்நாட்டுப் போரின் தொடர்ந்து வந்த அதிர்ச்சிகளில் சமரசத்துக்கான இவரது ஆதரவானது சமூகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பிரபலமானதாக இருந்தது.[67] லூசியஸ் லுச்சேயசுவுடன் இணைந்த சீசரின் பதவிக்கு கிராசுசு ஆதரவளித்தார். இவருடைய ஆதரவுடன் சீசர் வெற்றி பெற்றார். எனினும், லுச்சேயசு வெற்றி பெறவில்லை. வாக்காளர்கள் மார்க்கசு கல்புர்னியசு பிபுலுசுவை மீண்டும் சபைக்கு அனுப்பி வைத்தனர். சீசரின் நீண்ட கால தனிப்பட்ட முறையிலான மற்றும் அரசியல் எதிரிகளில் இவரும் ஒருவராவார்.[68][69]

முதல் முறை பேராளராக[தொகு]

தேர்தலுக்குப் பிறகு சீசர், பாம்பே மற்றும் கிராசுசுவுடன் சமரசம் செய்து கொண்டார். பாம்பே மற்றும் கிராசுசு அரசியல் எதிரிகளாவர். இவர்கள் ஒரு மூன்று வழிக் கூட்டணியை ஏற்படுத்தினார். இது நவீன காலங்களில் தவறாக[70] "முதலாம் மூவராட்சி" என்று குறிப்பிடப்படுகிறது.[71] பொ. ஊ. மு. 60ஆம் ஆண்டும் திசம்பர் மாதத்தில் சீசர் இன்னும் வேலைகளிலேயே மூழ்கியிருந்தார். தன்னுடைய பேராளர் பதவிக்காகக் கூட்டாளிகளைத் தேடிக் கொண்டிருந்தார். கூட்டணியானது தொடக்கத்தில் சில காலத்தை ஒட்டியே இறுதி செய்யப்பட்டது.[72] பாம்பே மற்றும் கிராசுசு ஆகியோர் முறையே ஈரிலக்குகளை நோக்கி முயல்வதற்காக இணைந்தனர்: பாம்பேயின் கிழக்கு ஒப்பந்தத்தை ஏற்புடையதாக்குதல் மற்றும் ஆசியாவிலிருந்த வரி வசூலிப்பாளர்களை கடனிலிருந்து மீட்பது, இந்த வரி வசூலிப்பாளர்களில் பலர் கிராசுசுவின் ஆதரவார்களாக இருந்தனர். இம்மூவருமே நிலக்கொடைகளின் புரவலத் தன்மையை விரிவாக்க விரும்பினர். குறிப்பாக, பாம்பே தன்னுடைய அனுபவசாலிப் போர் வீரர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட நிலக்கொடைகள் அளிக்கப்பட வேண்டும் என வேண்டினார்.[73]

சீசரின் முதல் செயலானது செனட் சபை மற்றும் அவைக் குறிப்புகளை பதிப்பிப்பதாகும். பொது மக்களுக்கு செனட் சபை கடமைப்பட்டுள்ளதை இது அறிகுறியாகக் காட்டியது. பிறகு இவர் செனட் சபையில் ஒரு மசோதாவைக் கொண்டு வந்தார். விருப்பமுள்ள விற்பனையாளர்களிடமிருந்து நிலங்களை விலைக்கு வாங்கி பாம்பேயின் அனுபவசாலிப் போர் வீரர்கள் மற்றும் நகர்ப்புற ஏழைகளுக்கு விநியோகிக்க இதைக் கொண்டு வந்தார். முந்தைய நிலச் சீர்திருத்த முன்மொழிவுகளுக்கான எதிர்ப்புகள் மற்றும் முழுவதும் அரசியல் சார்பான எந்த ஓர் அறிகுறிகளையும் தவிர்த்து இது உருவாக்கப்பட்டிருந்தது. சீசரைத் தவிர்த்து 20 பேரை உள்ளடக்கிய ஒரு குழுவால் இது நிர்வகிக்கப்படும். பாம்பே போரில் பெற்ற பொருட்கள் மற்றும் நிலப்பரப்பு சேர்ப்புகளால் இது நிதி பெறும்.[74] இம்மசோதாவால் மக்கள் பெறும் அனுகூலத்தைக் கொண்டு இவ்விவகாரத்தை செனட் சபை ஏற்றுக்கொள்ளும் என்ற நம்பிக்கையில் சபைக்கு இதை சீசர் அனுப்பினார்.[75] இதற்கு சிறிதளவே எதிர்ப்பு மற்றும் தடுப்பு இருந்தது. அவையும் பெருமளவுக்கு வலிமையான கருத்துகளை உடையவையாக இல்லை. இதை எதிர்த்தவர்கள் பொது மக்களின் நன்மையை அடிப்படையாகக் கொண்டு எதிர்க்காமல், சீசரின் அரசியல் முன்னேற்றத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக நடந்து கொண்டனர்.[74] காதோவின் முட்டுக்கட்டைகளைக் கடந்து செல்ல இயலாத சீசர் மக்கள் முன் இந்த மசோதாவை ஒரு பொதுச் சந்திப்பில் முன் வைத்தார். அந்த ஆண்டு முழுவதும் நிரந்தரமான வீட்டோவே இந்த மசோதாவுக்கு எதிராகப் பயன்படுத்தப் போவதாக சீசரின் சக பேராளரான பிபுலுசு அச்சுறுத்தினார். மக்களின் நன்றாக நிறுவப்பட்ட சட்டம் இயற்றுதல் தொடர்பான இறையாண்மையை இது தெளிவாக மீறியது.[76] இது ஓர் ஆர்ப்பாட்டத்துக்குக் காரணமானது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பிபுலுசுவின் பசேசு (கோடாரியின் முனை மட்டும் வெளியே தெரியுமாறு அதன் பிடியைச் சுற்றி குச்சிகள் கட்டப்பட்ட ஒரு பெயரளவுக் கருவி) உடைக்கப்பட்டது. இவரது நீதிபதித்துவத்தைப் பொது மக்கள் நிராகரித்ததன் அறிகுறி இதுவாகும்.[77] மசோதாவானது வாக்களிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. ஆதரவின்றி வன்முறை மூலம் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது என்பதன் அடிப்படையில் செனட் சபையை இந்த மசோதாவைச் செல்லாததாக்க இணங்க வைக்க பிபுலுசு முயற்சித்தார். ஆனால், செனட் சபை இதற்கு மறுத்தது.[78]

கிராசுசுவுக்கு வரி வசூலிப்பாளர்கள் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகைகளில் மூன்றில் ஒரு பங்கைத் தள்ளுபடி செய்யவும், பாம்பேயின் கிழக்கு ஒப்பந்தங்களை ஏற்புடையதாகச் செய்யும் மசோதாக்களையும் சீசர் கொண்டு வந்து நிறைவேற்றினார். செனட் சபையில் சிறிதளவு அல்லது எந்த ஒரு விவாதமும் இல்லாமல் இரு மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன.[79] மே மாதத்தில் ஒரு நேரத்தில் தன்னுடைய விவசாய மசோதாவை கம்பனியாவுக்கு விரிவாக்க சீசர் பிறகு செயல்பட்டார். இந்நேரத்தில் தான் பிபுலுசு தன்னுடைய வீட்டிற்குப் பின் வாங்கினார் என்று கருதப்படுகிறது.[80] இதற்குப் பிறகு சீக்கிரமே பாம்பே தங்களது கூட்டணியை உறுதிப்படுத்த சீசரின் மகள் சூலியாவைத் திருமணம் செய்து கொண்டார்.[81] சீசரின் கூட்டாளியான பிலேபேயியத் தீர்ப்பாயரான பப்பிலியசு வதினியசு ஐந்தாண்டுகளுக்கு சீசருக்கு இல்லிரிகம் மற்றும் சிசால்பன் கௌல் ஆகிய மாகாணங்களைக் கொடுக்கும் லெக்சு வதினியா என்ற சட்டத்தைக் கொண்டு வந்தார்.[82][83] சீசருக்கு செனட் சபையானது சில்வே காலெஸ்க்குவை ("மரங்கள் மற்றும் தடங்கள்") ஒப்படைத்தது என்று சுவேதோனியசு குறிப்பிட்டது ஒரு மிகைப்படுத்தலாக இருக்கும் எனக் கருதப்படுகிறது: பொ. ஊ. மு. 60ஆம் ஆண்டு கௌல் படையெடுப்பு குறித்த அச்சமானது அதிகரித்தது, பேராளர்கள் இத்தாலிக்கு ஒதுக்கப்பட்டனர் என்பதே சாத்தியமான ஒன்றாக இருந்திருக்க வேண்டும், இது ஒரு தற்காப்புப் பாங்கு ஆகும், சீசரின் ஒரு தலைபட்ச ஆதரவாளர்கள் இதை "வெறும் 'காட்டுத் தடங்கள்'" என்று நிராகரித்தனர்.[84] சீசருக்குத் திரான்சால்பைன் கௌல் பகுதியையும் ஒதுக்க செனட் சபையானது இணங்க வைக்கப்பட்டது. எனினும், ஆண்டு தோறும் இது புதுப்பிக்கப்பட வேண்டியிருந்தது. ஆல்ப்சு மலையைத் தாண்டி மற்றொரு புறத்தில் போர் நடத்தும் இவரது திறனைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க இவ்வாறு செய்யப்பட்டது என்று கருதப்படுகிறது.[85]

அந்த ஆண்டில் ஒரு நேரத்தில் பிபுலுசு தன்னுடைய வீட்டிற்குப் பின் வாங்கினார். கம்பனிய நிலத்தை விநியோகித்த இந்த மசோதாவை நிறைவேற்றியது மற்றும் இத்தகைய அரசியல் தோல்விகளுக்குப் பிறகு அநேகமாக இவர் பின் வாங்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.[86] அங்கு அவர் இல்லாத நேரத்தில் பிபுலுசு தன்னுடைய ஆணைகளை வெளியிட்டார். சமய ரீதியிலான காரணங்களுக்காக எனக் கூறி சீசர் அல்லது இவரது கூட்டாளிகள் வாக்களிப்பு நடத்தும் அனைத்து நாட்களையும் அதற்கு முன்னர் நடந்திராத அளவில் இரத்து செய்தார்.[87] சீசருக்கு எதிராக பெயரளவு சைகைகளைச் செய்ய காதோவும் கூட முயற்சித்தார். காதோவும், அவரது கூட்டாளிகளும் தாங்கள் "பாதிக்கப்பட்டவர்கள் என்று காட்டிக் கொள்வதற்கு" இது அனுமதியளித்தது. அந்த ஆண்டின் போக்கில் சீசர் மற்றும் இவரது கூட்டாளிகளுக்கு எதிராக வெறுப்புணர்ச்சியை அதிகரிக்க இத்தகைய உத்திகள் வெற்றிகரமாக இருந்தன.[88][89] சீசர் மற்றும் இவரது கூட்டாளிகளுக்குக் கடுமையான அரசியல் பிரச்சனைகளை இந்த எதிர்ப்பானது உருவாக்கியது. மூவராட்சியின் அரசியல் ஆதிக்கம் என்ற பொதுவான சித்தரிப்பை இது பொய்யாக்கியது.[90] அந்த ஆண்டின் பிந்தைய பகுதியில், எனினும், சீசர் லெக்சு சூலியா தி ரெபேதுந்திசு என்ற சட்டத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றினார். இதற்கு இவருடைய எதிர்ப்பாளர்களும் ஆதரவளித்தனர். மாகாண ஊழலை ஒழிப்பதற்காக இச்சட்டத்தை இவர் கொண்டு வந்தார்.[91] இவரது பேராளர் பதவி முடிவடைந்த போது சீசரின் சட்டங்களின் தொகுதியானது இரண்டு புதிய பிரயேத்தர்களால் சவால் விடுக்கப்பட்டது. ஆனால், சபையில் இதன் விவாதமானது நிறுத்தப்பட்டது. பிறகு கைவிடப்பட்டது. மார்ச்சு மாதத்தின் நடுப் பகுதியில் ஒரு நேரம் வரை இவர் நகரத்திற்கு அருகிலேயே தங்கியிருந்தார்.[92]

கெளலில் போர்ப் பயணங்கள்[தொகு]

சீசரின் படையெடுப்புக்குப் பிறகு பொ. ஊ. மு. 40ஆம் ஆண்டில் உரோமைக் குடியரசின் விரிவு

கௌல் போரின் போது சீசர் தனது கமண்டரீசு (விளக்கவுரை) என்னும் நூலை எழுதினார். இந்நூலானது இவரது காலத்திலேயே கூட ஓர் இலத்தீன் இலக்கிய சிறந்த நூலாக ஆகியிருந்தது. இவரது சொந்த வார்த்தைகளில் சீசரின் போர்ப் பயணங்களை ஆவணப்படுத்துதல் மற்றும் இவரது இராணுவ நடவடிக்கைகம்ம் மற்றும் வாழ்வுக்கு உரோமில் ஆதரவைப் பேணுவது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்நூல் எழுதப்பட்டது. பொ. ஊ. மு. 58 முதல் 52 வரையில் கௌலில் நடந்த நடவடிக்கைகளை ஆவணப்படுத்திய சுமார் 10 தொகுதிகளை இவர் உருவாக்கினார்.[93] ஒவ்வொரு தொகுதியும் நிகழ்வுகள் நடந்த அடுத்த ஆண்டு உருவாக்கப்பட்டது என்று கருதப்படுகிறது. உரோமிலிருந்த பொதுவான அல்லது குறைந்தது கல்வியறிவு பெற்றிருந்த மக்களை இலக்காகக் கொண்டு இது உருவாக்கப்பட்டிருந்தது என்று கருதப்படுகிறது.[94] இந்நூலானது இயல்பாகவே சீசருக்கு ஆதரவாக உள்ளது. இவருடைய தோல்விகள் மன்னிக்கப்பட்டுள்ளன, வெற்றிகள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. இக்காலத்தில் கௌலில் நடைபெற்ற நிகழ்வுகளுக்கு கிட்டத்தட்ட ஒற்றை ஆதாரமாக இந்நூல் விளங்குகிறது.[95]

பொ. ஊ. மு. 58ஆம் ஆண்டு கௌல் பகுதியானது ஒரு நிலையற்ற தன்மையில் இருந்தது. பழங்குடியினங்கள் திரான்சல்பைன் கௌல் பகுதிக்குள் ஊடுருவல்களை நடத்தின. நடு கௌல் பகுதியில் இரண்டு பழங்குடியினருக்கு இடையில் பிரச்சனையானது நடைபெற்றுக் கொண்டிருந்தது. இப்பிரச்சனையில் உரோமானியக் கூட்டணிகளும், அரசியலும் பங்கெடுத்திருந்தது. கௌல்களுக்கு இடையிலான பிரிவுகளானவை பின் வந்த ஆண்டுகளில் மிகு நலம் பெற பயன்படுத்தப்பட்டன.[96] கௌல்களுக்கு இடையில் ஒன்றிணைந்த கூட்டணி என்று எதுவும் கிடையாது. முதல் உரோமானியப் பங்கெடுப்பானது பொ. ஊ. மு.58 ஆம் ஆண்டில் ஏப்பிரல் மாதத்தில் நடைபெற்றது. அப்போது உரோமானிய நிலப்பரப்பு வழியாக புலம் பெயர்ந்து கொண்டிருந்த கல்வேதீ மக்கள் செல்வதை சீசர் தடுத்தார். ஓர் உரோமானிய கூட்டாளியைப் பதவியில் இருந்து இவர்கள் நீக்குவார்கள் என்று இவர் அச்சமடைந்ததன் காரணமாக இவ்வாறு செய்தார் என்று கூறப்படுகிறது.[97] ஒரு சுவரை எழுப்பியதன் மூலம் அவர்களது நகர்வை செனீவாவுக்கு அருகில் இவர் நிறுத்தினார். இரு இலீசியப் படைப் பிரிவுகளைச் சேர்த்ததற்குப் பிறகு பிப்ரக்தே யுத்தத்தில் அவர்களைத் தோற்கடித்தார். பூர்வீக நிலங்களுக்குத் திரும்ப அவர்களைக் கட்டாயப்படுத்தினார்.[98] அயேதுயி உள்ளிட்ட கௌல் பழங்குடியினங்களிடம் இருந்து வந்த வேண்டுதலால் இவர் மேற்கொண்டு வடக்கு நோக்கி இழுக்கப்பட்டார். கௌல்களுக்கு உதவி புரிவதற்காக செருமானிய சுயேபிப் பழங்குடியினத்தின் மன்னனாகிய அரியோவிசுதுசுவுக்கு எதிராக வோசுகேசு யுத்தத்தில் அவர்களைத் தோற்கடித்தார். சீசர் பேராளராக இருந்த போதே செனட் சபையால் உரோமின் நண்பனாக அரியோவிசுதுசு அறிவிக்கப்பட்டிருந்தார்.[99] 58-57ஆம் ஆண்டு குளிர் காலத்தின் போது பெல்கேவுக்கு அருகில் வடகிழக்கு கௌலில் இவர் முகாமிட்டிருந்தார். சீசரின் முன்னோக்கிய இராணுவ நிலையானது இவரது துருப்புக்களை வெளியேற்ற வேண்டும் என்ற எழுச்சியைத் தூண்டியது. சாபிசு யுத்தத்தில் இவர் போராடி வெற்றி பெற்றார். பொ. ஊ. மு. 56ஆம் ஆண்டின் பெரும்பாலான நேரத்தை பெல்கே பழங்குடியினரை ஒடுக்குவதற்கு இவர் செலவழித்தார். பெரும்பாலான கௌல் முழுவதும் போர்ப் பயணத்திற்காக தனது துருப்புகளை சிதறி இருக்குமாறு செய்தார். தற்போது பிரித்தானி என்றழைக்கப்படும் பகுதியில் வெனேதி பழங்குடியினத்திற்கு எதிராகவும் இவர் படைகளை நிறுத்தியிருந்தார்.[100] இந்நேரத்தில் கிட்டத்தட்ட அனைத்து கௌலும் உரோமானியக் கட்டுப்பாட்டின் கீழ் வீழ்ந்தது. இதில் விதி விலக்கு கௌலின் நடுப் பகுதிகள் மட்டுமே ஆகும்.[101]

சூலியசு சீசரின் காலில் தன் ஆயுதங்களைத் தூக்கி எறியும் கௌல் அர்வேர்னி பழங்குடியினத்தின் தலைவனான வெர்சிங்கெதோரிக்சு. ஓவியர்: லயனோல் ரோயர், ஆண்டு: 1899, இடம்: மியூசீ குரோசேதியர், லே புயி-என்-வெலாய், பிரான்சு.

தன்னுடைய இராணுவ மதிப்பீட்டைத் தாங்குவதற்கு வேண்டி ரைன் ஆற்றைக் கடக்க முயன்ற செருமானியர்களுக்கு எதிரான சண்டையில் இவர் பங்கெடுத்தார். ரைன் ஆறானது ஓர் உரோமானிய எல்லைக் கோடாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.[101] உரோமானியப் பொறியியல் திறனைக் காட்டும் விதமாக ரைன் ஆற்றின் குறுக்கே ஒரு பாலத்தை இவர் அங்கு கட்டினார். உரோமின் சக்தியைக் காட்டும் விதமாக பெரிய சாதனையாக இவர் இதைச் செய்தார்.[102] தன் கௌல் எதிரிகளுக்குப் பிரித்தானிய உதவியைத் தடுப்பதற்காக என்று வெளிப்படையாகத் தோன்றும் முயற்சியாக பொ. ஊ. மு. 55 மற்றும் 54இல் தெற்கு பிரிட்டனுக்குள் இவர் படையெடுப்புக்குத் தலைமை தாங்கினார். மேற்கொண்ட படையெடுப்புகளை வேண்டியோ அல்லது உரோமிலிருந்த நூல் வாசிப்பாளர்களின் நன் மதிப்பைப் பெறுவதற்காகவோ இவ்வாறு செய்தார் என்று தோன்றுகிறது. அந்நேரத்தில் பிரிட்டனானது உரோமானியர்களால் "புதிர் தீவு" மற்றும் "அதிசய நிலம்" என்று அறியப்பட்டிருந்தது.[103] எபுரோனெசு மற்றும் பெல்கேவால் தலைமை தாங்கப்பட்ட கௌலில் நடந்த எழுச்சிகளின் காரணமாக தீவிலிருந்து இவர் பின் வாங்கினார். பொ. ஊ. மு. 54ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இந்த எழுச்சியானது தொடங்கியது. உரோமானியரின் ஓர் இலீசியன் (3,000-6,000 பேர்) மற்றும் ஐந்து கோகோர்த்து (அரை இலீசியன்) படைகள் பதுங்கியிருந்து தாக்கப்பட்டு, கிட்டத்தட்ட கொன்றழிக்கப்பட்டனர்.[104] எனினும், எதிர்ப்பாளர்களுக்குப் பாதகமான நிலப்பரப்புக்குள் அவர்களை சீசர் வரச் செய்து, தோற்றோடச் செய்தார்.[105] அடுத்த ஆண்டு பெரும்பாலான நடு கௌலின் எழுச்சியுடன் ஒரு பெரும் பிரச்சனை உருவானது. அர்வேர்னி பழங்குடியினத்தின் வெர்சிங்கெதோரிக்சுவால் இது தலைமை தாங்கப்பட்டது. கெர்கோவியாவில் சீசர் தொடக்கத்தில் தோற்கடிக்கப்பட்டார். ஆனால், அலேசியா என்ற இடத்தில் வெர்சிங்கெதோரிக்சுவை முற்றுகைக்கு உள்ளாக்கினார். சீசர் தானே முற்றுகைக்கு உள்ளாக்கப்பட்டதற்குப் பிறகு, ஒரு பெரும் வெற்றியைப் பெற்றார். இந்த வெற்றியானது வெர்சிங்கெதோரிக்சுவைச் சரணடையக் கட்டாயப்படுத்தியது. சீசர் பிறகு தன்னுடைய பெரும்பாலான நேரத்தை பொ. ஊ. மு. 51ஆம் ஆண்டிற்குள் எந்த ஓர் எஞ்சியிருந்த எதிர்ப்பையும் ஒடுக்குவதற்குச் செலவழித்தார்.[106]

அரசியல், கௌல் மற்றும் உரோம்[தொகு]

பொ. ஊ. மு. 59இல் சீசரின் பேராளர் பதவி முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்த தொடக்க ஆண்டுகளில் மிகவும் பிரபலமாக இருந்த பப்பிலியசு குளோதியசு புல்ச்சரின்[107] நன் மதிப்பைப் பேண மூவராட்சியினர் என்று அழைக்கப்பட்ட இந்த மூவரும் விரும்பினர். குளோதியசு பொ. ஊ. மு. 58ஆம் ஆண்டு பிலேபேயியத் தீர்ப்பாயராக இருந்தார். அந்த ஆண்டு வெற்றிகரமாக சிசெரோவை நாடு கடத்தினார். அதே ஆண்டின் பிந்தைய பகுதியில் பாம்பேவுக்கு எதிரான நிலைப்பாட்டை குளோதியசு எடுத்த போது பாம்பேயின் கிழக்கு ஒப்பந்தங்களை அவர் நிலையற்றதாக்கினர். சீசரின் பேராளர் சட்டங்களின் தொகுதியின் முறைமையைத் தாக்கத் தொடங்கினார். 58 ஆகத்து வாக்கில் பாம்பேயை ஒதுக்கப்பட்டு வாழும் நிலைக்குக் குளோதியசு கட்டாயப்படுத்தினார். சிசெரோவை நாடு கடத்தப்பட்டதிலிருந்து திரும்ப அழைப்பதற்காக நீதிபதிகளின் தேர்வை சீசர் மற்றும் பாம்பே வெற்றிகரமாக ஆதரித்ததன் மூலம் இச்செயலுக்குப் பதிலளித்தனர். இவர்களது கூட்டாளிகளை விமர்சிக்கும் அல்லது தடுக்கும் செயல்களை சிசெரோ செய்ய மாட்டார் என்ற நிபந்தனையின் கீழ் இவ்வாறு திரும்ப அழைத்தனர்.[108][109][110]

உரோமில் அரசியலானது குளோதியசு மற்றும் சிசெரோவின் நண்பர்களான இரண்டு தீர்ப்பாயர்களுக்கு இடையிலான வன்முறை நிறைந்த தெருச் சண்டைகளாகத் தரம் தாழ்ந்தது. தற்போது சீசர் மற்றும் பாம்பேயை சிசெரோ ஆதரித்ததுடன், சீசர் கௌல் செய்தியை உரோமுக்கு அனுப்பினார். கௌலில் முழு வெற்றி மற்றும் கௌல் அமைதிப்படுத்தப்பட்டதைக் குறிப்பிட்டார். சிசெரோவின் தீர்மானத்தின் மீது வாக்களித்த செனட் சபையானது அதற்கு முன்னர் இருந்திராத அளவில் சீசருக்கு 15 நாட்கள் நன்றி தெரிவிக்கும் விழாவை நடத்தியது.[111] இத்தகைய அறிவிப்புகள் சீசருக்குத் தேவையானவையாக இருந்தன. பொ. ஊ. மு. 54 வரை லெக்சு வதினியா சட்டத்தால் சிசால்பைன் கௌல் மற்றும் இல்லிரிகம் ஆகிய பகுதிகளில் இவரது நிலையானது உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. இருந்த போதிலும், இவரது செனட் சபை எதிரிகளின் நிலையைக் கருத்தில் கொள்ளும் போது, திரான்சால்பைன் கௌல் பகுதிக்கு இவரது தலைமையை மீண்டும் செனட் சபை ஒதுக்குவதைத் தடுப்பதற்கு இது தேவையானதாக இருந்தது.[112] சீசரின் இலீசியன்களில் சிலவற்றுக்கு அரசின் நிதியை ஒதுக்க செனட் சபை வாக்களித்த போது இவரது வெற்றியானது சான்றுடன் அங்கீகரிக்கப்பட்டது. அந்நேரம் வரை சீசர் இந்தச் செலவீனங்களை தனது சொந்த நிதியிலிருந்து செலவழித்து வந்தார்.[113]

பொ. ஊ. மு. 57இல் இந்த மூன்று கூட்டாளிகளின் உறவு முறைகளானவை முறிந்தன: பாம்பேயின் கூட்டாளிகளில் ஒருவர் சீசரின் நிலச் சீர்திருத்த மசோதாவுக்குச் சவால் விடுத்தது மற்றும் அந்த ஆண்டுத் தேர்தல்களில் கூட்டாளிகள் மோசமான முடிவுகளைப் பெற்றது.[114] சீசரின் தலைமைக்கு ஓர் உண்மையான அச்சுறுத்தல் மற்றும் பொ. ஊ. மு. 56இல் நட்பிணக்கமற்ற பேராளர்களின் ஆதரவுடன் புதிய சட்டம் உருவாகிக் கொண்டிருந்தது ஆகியவற்றால் தன்னுடைய கூட்டாளிகளின் அரசியல் ஆதரவைப் பெற வேண்டிய தேவையை சீசருக்கு ஏற்படுத்தியது.[115] பாம்பே மற்றும் கிராசுசு ஆகியோரும் இராணுவத் தலைமைகளை வேண்டினர். இவர்களது ஒன்றிணைந்த ஆர்வங்களானவை கூட்டணியின் ஒரு புதுப்பிப்புக்கு வழி வகுத்தன; அப்பியசு குளௌதியசு புல்ச்சர் மற்றும் அவரது தம்பி குளோதியசு ஆகியோரின் ஆதரவை பொ. ஊ. மு. 54இல் பேராளர் பதவிக்குப் பெற்றது ஆகியவற்றுடன், பேராளர் பதவியின் இரண்டாவது சுற்றுக்குத் திட்டமிட்டனர், இதனுடன் பொ. ஊ. மு. 55இல் பாம்பே மற்றும் கிராசுசுவுக்கு ஆளுநர் பதவிகளும் தரப்பட்டன. சீசரும் தன் பங்குக்கு தன்னுடைய தலைமைக்கு ஐந்தாண்டு நீட்டிப்பைப் பெற்றார்.[116]

சீசரின் மாகாணங்கள் மீண்டும் ஒதுக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவும், கூட்டாளிகளின் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான ஆதரவாளர்களைக் காப்பாற்றவும் சிசெரோ தூண்டப்பட்டார்; ஆண்டுகளுக்குப் பேராளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட மூவரின் குழுவுக்கு வாய்ப்புள்ளது என்ற இவரது வாடிப் போன எதிர்பார்ப்புகளானவை இறுதியில் மிகைப்படுத்துதல் என்பது நிரூபிக்கப்பட்டது. மட்டு மீறிய ஆர்வ உத்திகள், இலஞ்சம், மிரட்டல் மற்றும் வன்முறை ஆகியவற்றால் மட்டுமே பொ. ஊ. மு. 55இல் பேராளர்களாக பாம்பே மற்றும் கிராசுசு ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[117] இவர்களது பேராளர் பதவியின் போது பாம்பே மற்றும் கிராசுசு லெக்சு பொம்பெயியா லிசினியா என்ற சட்டத்தை சில தீர்ப்பாயர்களின் ஆதரவுடன் இயற்றினர். இச்சட்டம் சீசரின் தலைமையை நீட்டித்தது மற்றும் இவர்களுக்கு முறையே எசுப்பானியா மற்றும் சிரியாவின் தலைமைகளை லெக்சு திரெபோனியா சட்டம் வழங்கியது.[118] எனினும், பாம்பே என்றுமே இந்த மாகாணத்திற்குச் செல்லவில்லை. உரோமில் அரசியல் ரீதியாகச் செயல்பாட்டுடன் தொடர்ந்தார்.[119] இவர்களது கடுமையான அரசியல் உத்திகளுக்கு எதிராக எதிர்க் கட்சியினர் மீண்டும் ஒன்றிணைந்தனர். அந்த ஆண்டுத் தேர்தலில் கூட்டாளிகளைத் தோற்கடித்தனர். எனினும், எதிர்க் கட்சிகள் கௌலில் சீசரின் நடவடிக்கைகளுக்கு எதிராகச் செயல்படவில்லை.[120][121]

பொ. ஊ. மு. 55-54ஆம் ஆண்டுகளின் குளிர்காலத்தில் ஓர் இலீசியன் மற்றும் ஐந்து கோகோர்த்துப் படைகள் கௌலில் பதுங்கியிருந்து தாக்கப்பட்டு, அழிக்கப்பட்ட நிகழ்வானது உரோமில் சீசரின் தலைமை மற்றும் ஆற்றல் குறித்து குறிப்பிடத்தக்க அளவுக்குக் கவலையை ஏற்படுத்தியது. சீசரின் கமண்டரீசு நூலிலுள்ள பெருமளவுக்குத் தற்காக்கும் விளக்கங்களால் இது சான்றளிக்கப்படுகிறது.[122] சீசரின் மகளும், பாம்பேயின் மனைவியுமான சூலியா குழந்தைப் பிறப்பின் போது அண். ஆகத்து 54ஆம் ஆண்டின் பிந்திய பகுதியில் இறந்ததானது சீசர் மற்றும் பாம்பே இடையில் ஒரு விரிசலை ஏற்படுத்தியது.[123][124][125] பொ. ஊ. மு. 53ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஆள்சேர்ப்பு மற்றும் கௌல் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக பெரும்பாலும் வெற்றிகரமாக இல்லாத இரண்டு ஆண்டு போர்ப் பயணங்களுக்கு முன் பாம்பேயுடன் இவர் ஏற்படுத்திய ஒரு தனிநபர் ஒப்பந்தம் ஆகியவற்றின் மூலம் புதிய வலுவூட்டல் படைகளை சீசர் சேர்க்க விரும்பி சேர்த்தார்.[126] அதே ஆண்டு, கர்ரவே யுத்தத்தில் கிராசுசுவின் போர்ப் பயணமானது அழிவிலும், பார்த்தியர்களின் கைகளில் அவரது இறப்பிலும் முடிந்தது. பொ. ஊ. மு. 52இல் நகரத்தின் ஒழுங்கை மீண்டும் நிறுவ ஓர் ஒற்றைப் பேராளர் பதவியுடன் பாம்பே அந்த ஆண்டைத் தொடங்கிய போது[127] சீசர் கௌலில் கிளர்ச்சியாளர்களை ஒடுக்கிக் கொண்டிருந்தார். அலேசியாவில் இவரது வெற்றி குறித்த செய்திக்குப் பிறகு பாம்பேயின் ஆதரவுடன் "10 தீர்ப்பாயர்களின் சட்டத்தை" ஒத்து இவர் 20 நாட்களுக்கான நன்றி தெரிவிக்கும் விழாவையும், இவர் இல்லாத நேரத்திலும் பேராளர் பதவிக்குப் போட்டியிடும் உரிமையையும் பெற்றார்.[128][129]

உள்நாட்டுப் போர்[தொகு]

அகத்தசுவின் ஆட்சிக் காலத்தின் (பொ. ஊ. மு. 27 – பொ. ஊ. 14) போது உருவாக்கப்பட்ட பாம்பேயின் ஓர் உரோமானிய மார்பளவுச் சிலை. பொ. ஊ. மு. 70 - 60ஆம் ஆண்டுகளைச் சேர்ந்த ஒரு உண்மையான மார்பளவுச் சிலையிலிருந்து எடுக்கப்பட்ட நகல் இதுவாகும். இது தற்போது இத்தாலியின் வெனிசு தேசியத் தொல்லியல் அருங்காட்சியகத்தில் உள்ளது.

பொ. ஊ. மு. 52 - 49 வரையிலான கால கட்டத்தில் சீசர் மற்றும் பாம்பேவுக்கு இடையிலான நம்பிக்கையானது நொறுங்கியது.[130] பொ. ஊ. மு. 51இல் சீசரைத் திரும்ப அழைக்கும் முன்மொழிவை பேராளர் மார்செல்லுசு கொண்டு வந்தார். கெளலில் சீசரின் புராவின்சியாவானது (இந்த இடத்தில் "செயல்" என்று பொருள்படுகிறது) 52இல் வெர்சிங்கெதோரிக்சுவுக்கு எதிரான சீசரின் வெற்றி காரணமாக இவரின் பணி முடிவடைந்து விட்டது என்று அவர் வாதிட்டார். அந்த ஆண்டு பெல்லோவாசி பழங்குடியினருடன் சீசர் சண்டையிட்டுக் கொண்டிருந்ததால் இவரது பணி முடிவடையவில்லை என்பது சான்றுடன் புலப்படுகிறது.[131] இருந்த போதிலும் இந்த முன்மொழிவானது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி நிராகரிக்கப்பட்டது.[132] அந்த ஆண்டு செனட் சபையில் காதோவைச் சுற்றியிருந்த மாறுதலை விரும்பாதவர்கள் மதிப்புகளையோ அல்லது இரண்டாவது பேராளர் பதவியையோ இல்லாமல் கௌலிலிருந்து சீசர் திரும்புவதைக் கட்டாயப்படுத்துவதற்காக பாம்பேயைச் சேர்க்க முயல்வார்கள் என்று தோன்றியது.[133] காதோ, பிபுலுசு மற்றும் அவர்களது கூட்டாளிகள் எனினும் சீசரின் தொடர்ந்த தலைமைக்கு எதிராக விடாப்பிடியான நிலைப்பாட்டை எடுப்பதற்குப் பாம்பேயின் ஆதரவைப் பெறுவதில் வெற்றியடைந்தனர்.[134]

பொ. ஊ. மு. 50ஆம் ஆண்டு நகர்ந்த போது உள்நாட்டுப் போர் குறித்த அச்சங்களானவை அதிகரித்தன. சீசர் மற்றும் இவரது எதிரிகள் ஆகிய இருவருமே முறையே தெற்கு கௌல் மற்றும் வடக்கு இத்தாலியில் துருப்புக்களைச் சேர்க்கத் தொடங்கினர்.[135] இலையுதிர் காலத்தில் சிசெரோ மற்றும் பிறர் சீசர் மற்றும் பாம்பே ஆகிய இருவருமே ஆயுதங்களைக் கைவிட வேண்டுமென வேண்டினர். 1 திசம்பர் பொ. ஊ. மு. 50 அன்று இந்த முன் மொழிவானது செனட் சபையில் முறைப் படி முன் வைக்கப்பட்டது.[136] இதற்குப் பெருமளவிலான ஆதரவு கிடைத்தது. 370 பேர் ஆதரவாகவும், 22 பேர் எதிராகவும் வாக்களித்தனர். ஆனால், இந்த முன்மொழிவு நிறைவேற்றப்படவில்லை. ஏனெனில், பேராளர்களில் ஒருவர் இந்தச் சந்திப்பை கலைத்தார்.[137] இத்தாலிக்கு சீசர் அணி வகுத்து வருகிறார் என்ற ஒரு வதந்தியானது உரோமுமுக்கு அந்த ஆண்டு வந்த போது இரு பேராளர்களும் பாம்பேயை இத்தாலியைத் தற்காக்குமாறு அறிவுறுத்தினர். கடைசியில் வேறு வழியில்லாமல் பாம்பே இந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.[138] பொ. ஊ. மு. 49ஆம் ஆண்டின் தொடக்கத்தில் செனட் சபைக்கு சீசர் மற்றும் பாம்பேயின் ஆயுதக் கைவிடலானது வாசித்துக் காட்டப்பட வேண்டும் என சீசர் புதுப்பிக்கப்பட்ட ஒரு வாய்ப்பை அளிக்க முன் வந்தார். ஆனால் விடாப்பிடியான கொள்கை உடையவர்களால் இது நிராகரிக்கப்பட்டது.[139] பாம்பேயிடம் தனியாகக் கொடுக்கப்பட்ட ஒரு பிந்தைய சமரசமும் விடாப்பிடிக் கொள்கையாளர்களின் அறிவுறுத்தலில் நிராகரிக்கப்பட்டது.[140] 7 சனவரி அன்று இவருக்கு ஆதரவான தீர்ப்பாயர்கள் உரோமிலிருந்து வெளியேற்றப்பட்டனர். பிறகு செனட் சபையானது சீசரை ஓர் எதிரியாக அறிவித்தது. தனது இறுதி ஆணையான செனத்தசு கன்சல்த்தம் அல்திமேத்தத்தை வெளியிட்டது.[141]

உரோம் மீது ஏன் சீசர் அணி வகுத்தார் என்பதற்கான குறிப்பான காரணங்கள் குறித்து அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஒரு மிகப் பிரபலமான கோட்பாடானது, இவருடைய ஆளுநர் பதவிக் காலத்திற்கு தடைக் காப்பாற்றலைப் பெற இவருக்கு மறுப்புத் தெரிவிக்கப்பட்ட போது, சீசர் குற்ற வழக்குத் தொடர்வு, குற்ற மெய்ப்பிப்பு மற்றும் நாடு கடத்தப்படுதல் அல்லது தன்னுடைய நிலையைத் தற்காக்கும் பொருட்டு உள்நாட்டுப் போரை தொடங்குதல் ஆகியவற்றுக்கு இடையே ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் நிலைக்குக் கட்டாயப்படுத்தப்பட்டார் என்று குறிப்பிடுகிறது.[142][143] உண்மையிலேயே சீசரைக் குற்ற வழக்குத் தொடர்வுக்கு ஆளாக்குதல் மற்றும் குற்ற மெய்ப்பிப்பு ஆகியவற்றுக்கு உட்படுத்தியிருக்க முடியுமா என்பது விவாதத்திற்குரியதாக உள்ளது. வெற்றிகரமாகக் குற்ற வழக்குத் தொடர்வை இவர் மீது சாத்தியமாக்குவது மிக மிக வாய்ப்பற்றது என சில அறிஞர்கள் நம்புகின்றனர்.[144][145] சீசரின் முதன்மையான நோக்கங்களில் ஓர் இரண்டாவது பேராளர் பதவியை உறுதி செய்தல்[146] மற்றும் ஒரு வெற்றியை உறுதி செய்தல் ஆகியவை இருந்தன. பாம்பேயின் ஒற்றைப் பேராளர் பதவிக்கு சக நபராக பொ. ஊ. மு. 52ஆம் ஆண்டு இந்த எண்ணம் இவருக்கு முதன் முதலில் தோன்றியது. பொ. ஊ. மு. 50இல் இரு பேராளர் பதவிகளையும் கொண்டிருந்த இவரது எதிரிகளால் இவரது வேட்பாளர் மனு நிராகரிக்கப்படலாம் அல்லது ஒரு தேர்தலில் இவர் வென்றால் அதை உறுதி செய்ய மறுக்கலாம் என்ற அச்சம் இவருக்கு ஏற்பட்டது.[147] போருக்கான இவரது நியாயப்படுத்துதலின் மையமாகவும் கூட இது திகழ்ந்தது: பாம்பேயும், அவரது கூட்டாளிகளும் தேவைப்பட்டால் பலத்தையும் பிரயோகித்து (தீர்ப்பாயர்கள் வெளியேற்றப்பட்டதன் மூலம் இது வெளிக் காட்டப்படுகிறது[148]) சீசரை தேர்ந்தெடுக்கும் மற்றும் சீசரின் சாதனைகளைக்கு மதிப்பளிக்கும் உரோமானிய மக்களின் சுதந்திரத்தை ஒடுக்க நினைக்கலாம் என்று இவர் அச்சமடைந்தார்.[149]

இத்தாலி, எசுப்பானியா மற்றும் கிரேக்கம்[தொகு]

10 அல்லது 11 சனவரி பொ. ஊ. மு. 49 வாக்கில்[150][151] செனட் சபையின் "இறுதி ஆணைக்குப்"[152] பதிலடியாக சீசர் உரூபிகன் ஆற்றைக் கடந்தார். இத்தாலியின் வடக்கு எல்லையை வரையறுத்ததாக இந்த ஆறு அமைந்திருந்தது. இலீசியோ 13 செமினா என்ற பெயருடைய ஓர் ஒற்றை இலீசியனுடன் கடந்தார். உள்நாட்டுப் போரைத் தொடங்கினார். உரூபிகானை சீசர் கடந்த போது புளூட்டாக் மற்றும் சுவேதோனியசின் கூற்றுப் படி, ஏதேனிய நாடகாசிரியரான மெனாந்தரின் "தாயக் கட்டை உருட்டப்பட்டது" (பொருள்: இனித் திரும்பிச் செல்லப் போவதில்லை) வசனத்தை கிரேக்க மொழியில் இவர் கூறியதாகக் குறிப்பிடப்படுகிறது.[153] பாம்பே மற்றும் பிற செனட் சபை உறுப்பினர்கள் தெற்கு நோக்கித் தப்பி ஓடினர். உரோமுக்கு வேகமாக சீசர் அணி வகுப்பதாக அவர்கள் நம்பினர்.[154] உரோமுக்குச் சென்ற தொலைத் தொடர்பு வழிகளைக் கைப்பற்றியதற்குப் பிறகு சீசர் நின்றார். பேச்சுவார்த்தைகளைத் தொடங்கினர். ஆனால், பரற்பர நம்பிக்கையின்மை காரணமாக இப்பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தன.[155] பதிலுக்கு தெற்கு நோக்கி சீசர் முன்னேறினார். ஒரு பேச்சு வார்த்தைக்குக் கட்டாயப்படுத்துவதற்காக பாம்பேயைப் பிடிக்க இவர் விரும்பினார்.[156]

பாம்பே புருந்திசியம் நகருக்கு பின் வாங்கினார். கிரேக்கத்திற்குத் தப்பிச் செல்ல அவரால் முடிந்தது. சீசரின் உயர் தரமான படைகளை எதிர் கொள்ளும் சூழ்நிலையில் சீசரின் தூரத்துதலிலிருந்து தப்பிக்க இத்தாலியைக் கைவிட்டு விட்டு பாம்பே தப்பினார்.[157] சீசர் உரோமுக்கு அருகில் சுமார் இரு வாரங்களுக்குத் தன்கினார். இவர் தங்கியிருந்த போது தீர்ப்பாயர்கள் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தியது தொடர்பாக கருவூலத்தைக் கட்டாயப்படுத்தி இவர் கைப்பற்றினார். தீர்ப்பாயத்தின் பக்கமான போர் என இப்போரை இவர் முறைமைப்படுத்தியது இதன் மூலம் பொய் என்றாகிறது. பிறகு லெபிதுசுவிடம் இத்தாலியின் கட்டுப்பாட்டைக் கொடுத்து விட்டுச் சென்றார். பாம்பேயின் எசுப்பானியா மாகாணங்களைத் தாக்கினார்.[158][159] இலேர்தா யுத்தத்தில் பாம்பேயின் தளபதிகளில் இருவரைப் பிடித்தார். மூன்றாவது தளபதியைச் சரணடையும் நிலைக்குத் தள்ளினார். இவரது தளபதிகள் சிசிலிக்கு நகர்ந்தனர். பிறகு ஆப்பிரிக்காவுக்கு நகர்ந்தனர். எனினும், ஆப்பிரிக்கப் போர்ப் பயணமானது தோல்வியில் முடிந்தது.[160] இலையுதிர் காலத்தில் உரோமுக்குத் திரும்பிய சீசர் பிரயேத்தரான லெபிதுசுவை தேர்தல்களை நடத்தும் சர்வாதிகாரியாகச் சீசரை நியமிக்கும் சட்டத்தைக் கொண்டு வரச் செய்தார். இவர், பப்பிலியசு செர்விலியசு இசௌரிகசுவுடன் சேர்ந்து தொடர்ந்து வந்த தேர்தல்களில் வென்றார். பொ. ஊ. மு. 48ஆம் ஆண்டின் பேராளர்களாக இருவரும் சேவையாற்றினர்.[161] 11 நாட்களுக்குப் பிறகு இவர் சர்வாதிகாரிப் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார்.[162] சீசர் பிறகு பாம்பேயின் ஆயத்தங்களை நிறுத்துவதற்காக இத்தாலியிலிருந்து கிரேக்கத்திற்குச் சென்றார். பொ. ஊ. மு. 48ஆம் ஆண்டின் தொடக்கத்தில் படையுடன் கிரேக்கத்திற்கு வந்தார்.[163]

பாம்பேயை திர்ராச்சியம் என்ற இடத்தில் சீசர் முற்றுகையிட்டார். ஆனால், முற்றுகையிலிருந்து உடைத்து வெளியேற பாம்பேயால் முடிந்தது. சீசரின் படைகளைத் தப்பியோடும் நிலைக்கு அவர் தள்ளினார். பாம்பேயைப் பின் தொடர்ந்து தென் கிழக்கே கிரேக்கத்திற்கும், தன்னுடைய தளபதிகளில் ஒருவரைக் காப்பாற்றுவதற்காகவும் பாம்பேயுடன் பர்சலுசு என்ற இடத்தில் இவர் சண்டையிட்டு பாம்பேயைத் தீர்க்கமாக 9 ஆகத்து பொ. ஊ. மு. 48 அன்று தோற்கடித்தார். பாம்பே பிறகு எகிப்துக்குத் தப்பியோடினார். காதோ ஆப்பிரிக்காவுக்குத் தப்பியோடினார். சிசெரோ மற்றும் மார்க்கசு சூனியசு புரூட்டசு போன்ற பிறர் சீசரின் மன்னிப்புக்காக மன்றாடினர்.[164]

அலெக்சாந்திரியாப் போரும், ஆசியா மைனரும்[தொகு]

கிளியோபாற்றா மற்றும் சீசர், ஜீன் லியோன் ஜேர்மியின் 1866ஆம் ஆண்டு ஓவியம்
இது பொம்பெயியின் பொ. ஊ. மு. முதலாம் நூற்றாண்டின் நடுப் பகுதியைச் சேர்ந்த ஓர் உரோமானிய சுவர் ஓவியம் ஆகும். ஏழாம் கிளியோபாற்றாவை வீனசு செனத்ரிக்சுவாகவும், அவரது மகன் சிசேரியனை குபிட்டாகவும் இது அநேகமாகச் சித்தரிக்கிறது. பொ. ஊ. மு. 30ஆம் ஆண்டில் அகத்தசுவின் ஆணைகளின் கீழ் சிசேரியன் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டதன் விளைவாக இதன் உரிமையாளரான மார்க்கசு பாபியசு உரூபசு அநேகமாக இதை ஒரு சுவருக்குப் பின்னால் மறைத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.[165][166]

எகிப்தின் தலை நகரமான அலெக்சாந்திரியாவுக்கு வருகை புரிந்த போது பாம்பே கொல்லப்பட்டார். மூன்று நாட்கள் கழித்து 2 அக்தோபர் பொ. ஊ. மு. 48 அன்று சீசர் வருகை புரிந்தார். ஏதேசியக் காற்றுகளானவை நகரத்திலிருந்து இவர் வெளியேறுவதைத் தடுத்தன. குழந்தை பார்வோனான பதிமூன்றாம் தாலமி தியோசு பிலோபதோர் மற்றும், அவரது சகோதரி, மனைவி மற்றும் துணை-பிரதிநிதி அரசியான ஏழாம் கிளியோபாற்றாவுக்கு இடையிலான எகிப்திய உள்நாட்டுப் போரில் சமரசம் செய்து வைக்க சீசர் முடிவெடுத்தார்.[167] பொ. ஊ. மு. 48ஆம் ஆண்டின் அக்தோபர் மாதத்தின் பிந்தைய பகுதியில் இவர் இல்லாத சமயத்திலும், பர்சலுசுவில் இவரது வெற்றி குறித்த செய்தியானது உரோமுக்கு வந்த போது[168] 1 ஆண்டு கால சர்வாதிகாரப் பதவிக்குச்[169] சீசர் நியமிக்கப்பட்டார்.

அந்தியோக்கியாவில் சீசர் வந்திறங்கிய போது தான் எகிப்திலிருந்த நேரத்தில் தற்போதைய கிரிமியாவை அக்காலத்தில் ஆண்ட மன்னனாகிய பர்னசேசு தன்னுடைய தந்தையின் இராச்சியமான பாந்துசுவை கருங்கடல் தாண்டி வடக்கு அனத்தோலியாவில் கைப்பற்ற முயற்சித்து இருந்தான் என்பதை அறிந்தார். அவன் தனது படையெடுப்பால் சீசரின் தளபதிகள் மற்றும் உள்ளூர் மன்னர்களை எளிதாகத் துரத்தியிருந்தான். ஆனால், சீசர் பர்னசேசுவுடன் செலா என்ற இடத்தில் சண்டையிட்டுத் தோற்கடித்தார். இது வேனி, விடி, விசி (பொருள்: "வந்தேன், கண்டேன், வென்றேன்") என்று சீசர் எழுதுவதற்கு வழி வகுத்தது. பாம்பேயியின் முந்தைய பாந்திக் பகுதி வெற்றிகளை இது சிறுமையாக்கியது. பிறகு இவர் இத்தாலிக்கு சீக்கிரமே திரும்பிச் சென்றார்.[170]

இத்தாலி, ஆப்பிரிக்கா மற்றும் எசுப்பானியா[தொகு]

இத்தாலியில் சீசர் இல்லாத நிலையானது இவருக்குத் துணை அதிகாரியான மார்க் ஆண்டனியை அதிகாரத்திற்குக் கொண்டு வந்தது. அவரது ஆட்சியும் பிரபலமற்றதாக இருந்தது. பொ. ஊ. மு. 47இல் பிலேபேயியத் தீர்ப்பாயராகச் சேவையாற்றிய பப்பிலியசு கார்னேலியசு தோலபெல்லா கடன் தள்ளுபடிக்காகப் போராடினார். ஆனால், அந்தப் போராட்டமானது கைமீறிப் போனதால் செனட் சபையானது ஆண்டனியிடம் முறையிட்டு ஒழுங்கை நிலைநாட்ட வேண்டியது. தெற்கு இத்தாலியில் ஒரு கிளர்ச்சியால் தாமதமடைந்த ஆண்டனி திரும்பி வந்து படைகளை உபயோகித்து ஆர்ப்பாட்டக்காரர்களை ஒடுக்கினார். பலரைக் கொன்றார். அதே அளவுக்கு அவரது பிரபலத்தன்மையும் வீழ்ச்சியடைந்தது. காதோ ஆப்பிரிக்காவுக்கு அணி வகுத்தார்.[171] எஞ்சிய குடியரசுவாதிகளுக்குத் தலைவராக மெதேல்லுசு சிபியோ அங்கு இருந்தார். இவர்கள் சூபா மற்றும் நுமிதியாவுடன் கூட்டணி வைத்தனர். பாம்பேயின் கப்பல் குழுவாக இருந்தது நடு மத்தியத் தரைக்கடல் தீவுகளுக்குள் ஊடுருவலையும் நடத்தியது. எசுப்பானியாவில் இருந்த சீசரின் ஆளுநர் அம்மாகாணத்தில் பிரபலமற்றவராக இருந்தார். அம்மாகாணமானது கிளர்ச்சி செய்தது. குடியரசுவாதிகளின் பக்கம் மாறியது.[172]

தான் திரும்பி வந்த போது சீசர் ஆண்டனியைப் பதவியிறக்கம் செய்தார். வன்முறையின்றி கிளர்ச்சியாளர்களை அமைதிப்படுத்தினார்.[173] பொ. ஊ. மு. 47ஆம் ஆண்டுக்கான எஞ்சிய நீதிபதிகளுக்கான தேர்தல் பணிகளை மேற்பார்வையிட்டார். மேலும், பொ. ஊ. மு. 46ஆம் ஆண்டுக்கான தேர்தல் பணிகளையும் கூட மேற்பார்வையிட்டார். எனினும், எந்தத் தேர்தலும் நடைபெறவில்லை. 46ஆம் ஆண்டு பேராளராக லெபிதுசுவுடன் சீசர் சேவையாற்றினார். போருக்காக நிதியைக் கடனாக சீசர் பெற்றிருந்தார். தன்னுடைய எதிரிகளின் உடைமைகளைப் பறிமுதல் செய்து நியாயமான விலையில் விற்றிருந்தார். பொ. ஊ. மு. 47ஆம் ஆண்டு திசம்பர் 25 அன்று ஆப்பிரிக்காவுக்குப் பிறகு புறப்பட்டார்.[174] ஆப்பிரிக்காவில் சீசர் வந்திறங்கிய நிகழ்வானது ஒரு தகுந்த இடத்தை நிறுவுவதில் சில கடினங்களைக் காட்டியது. 4 சனவரி பொ. ஊ. மு. 46 அன்று உருசுபினாவில் தைத்தசு லபியேனுசுவால் இவர் தோற்கடிக்கப்பட்டார். இதற்குப் பிறகு ஓர் எச்சரிக்கை உணர்வுடன் கூடிய அணுகு முறையை இவர் பின்பற்றினார்.[175] குடியரசுவாதிகள் பக்கமிருந்து கட்சி தாவிய சிலரை சேர்த்ததற்குப் பிறகு தப்சுசு என்ற இடத்தில் சுற்றி வளைக்கப்படும் நிலைக்கு சீசர் உள்ளானார். பொ. ஊ. மு. 46 ஏப்பிரல் 6 அன்று இவரது துருப்புகள் அவசர கதியில் தாக்கின. ஒரு யுத்தத்தைத் தொடங்கின. இவர்கள் யுத்தத்தை வென்றனர். குடியரசுவாதிகளின் படைகளை இரக்கமின்றி படுகொலை செய்தனர். காதோவால் தலைமை தாங்கப்பட்ட உதிகா மீது சீசர் அணி வகுத்தார். சீசரின் கருணைக்காக காத்திருக்காமல் காதோ தற்கொலை செய்து கொண்டதை அங்கு வந்த போது சீசர் அறிந்தார்.[176] மெதேல்லுசு சிபியோ மற்றும் சூபா உள்ளிட்ட எஞ்சியிருந்த சீசருக்கு எதிரான தலைவர்களில் பலரும் இதற்குப் பிறகு சீக்கிரமே தற்கொலை செய்து கொண்டனர்.[177] லபியேனுசு மற்றும் பாம்பேயின் மகன்களில் இருவர் ஆகியோர் கிளர்ச்சியிலிருந்து எசுப்பானியா மாகாணங்களுக்கு இடம் பெயர்ந்திருந்தனர். நுமிதியாவின் பகுதிகளை இணைக்கும் ஒரு செயல் முறையை சீசர் தொடங்கினார். பிறகு சார்தீனியா வழியாக இத்தாலிக்கு பொ. ஊ. மு. 46ஆம் ஆண்டு சூன் மாதத்தில் திரும்பி வந்தார்.[178]

பிந்தைய செப்தெம்பரில் நான்கு வெற்றிகளைக் கொண்டாடுவதற்காக சீசர் இத்தாலியிலேயே தங்கினார். இது இவரது நான்கு அயல்நாட்டு எதிரிகளுக்கு எதிராக என்று கருதப்படுகிறது: கெளல், எகிப்து, பர்னசேசு (ஆசியா) மற்றும் சூபா (ஆப்பிரிக்கா). வெர்சிங்கெதோரிக்சு, கிளியோபாற்றாவின் தங்கை அர்சினோயே மற்றும் சூபாவின் மகன் ஆகியோரை தனது இரதத்திற்குப் பின்னால் வருமாறு செய்தார். வெர்சிங்கெதோரிக்சு மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார்.[178] அப்பியனின் கூற்றுப் படி, இந்த வெற்றிகளில் சிலவற்றில் உள்நாட்டுப் போர்களில் சக உரோமானியர்கள் மீதான தனது வெற்றிகளின் படங்கள் மற்றும் மாதிரிகளை சீசர் ஊர்வலமாகக் கொண்டு வந்தார். இது பொது மக்களுக்கு வருத்தம் மற்றும் ஏமாற்ற உணர்வைக் கொடுத்தது.[179] படை வீரர்கள் ஒவ்வொருவருக்கும் 24,000 செசுதெர்செசு நாணயங்கள் கொடுக்கப்பட்டன. இது அவர்களின் வாழ்நாள் சம்பளத்திற்கு ஈடானதாகும். பிலேபேயியர்களுக்காக மேற்கொண்ட விளையாட்டுகள் மற்றும் விழாக்கள் நடத்தப்பட்டன. அந்த ஆண்டின் இறுதியை நெருங்கிய போது சீசர் எசுப்பானியாவில் இருந்து கெட்ட செய்தியை அறிந்தார். தன்னுடைய துணை அதிகாரியாக லெபிதுசுவை நியமித்து விட்டு ஓர் இராணுவத்துடன் தீபகற்பத்திற்குச் சென்றார்.[180]

பொ. ஊ. மு. 45ஆம் ஆண்டு 17 மார்ச்சு அன்று முண்டாவில் நடந்த ஒரு குருதி தோய்ந்த யுத்தத்தில் சீசர் நூலிலையில் வெற்றி பெற்றார்.[181] இவரது எதிரிகள் கிளர்ச்சியாளர்களாகக் கருதப்பட்டனர். அவர்களை இவர் படுகொலை செய்தார்.[182] லபியேனுசு யுத்த களத்தில் மடிந்தார். பாம்பேயின் மகன்களில் ஒருவரான செக்துசு தப்பித்தார். போரானது வெற்றிகரமாக முடிவடைந்து விட்டது.[183] சூன் மாதம் வரை மாகாணத்திலேயே சீசர் தங்கியிருந்தார். பிறகு உரோமுக்குப் பயணம் மேற்கொண்டார். அதே ஆண்டு அக்தோபரில் உரோமை வந்தடைந்தார். சக உரோமானியர்கள் மீதான பண்பு நயமற்ற வெற்றியைக் கொண்டாடினார்.[182] பொ. ஊ. மு. 53ஆம் ஆண்டில் கர்ரவே என்ற இடத்தில் கிராசுசுவின் இறப்புக்குப் பழி வாங்குவதற்காக பார்த்தியர்கள் மீது போர் தொடுக்க ஆயத்தங்களை இந்நேரத்தில் இவர் தொடங்கினார். பரவலாக வேறுபட்ட இலக்குகளுடன் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் இவரை தற்போதைய உருமேனியாவில் அக்காலத்தில் அமைந்திருந்தது தசியா என்ற நாட்டிற்குள் இது கொண்டு சென்றது. பொ. ஊ. மு. 44ஆம் ஆண்டு 18 மார்ச்சு அன்று இப்போர் தொடங்குவதாக இருந்தது.[184]

அரசியல் கொலை[தொகு]

பச்சை சீசர், பொ. ஊ. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த இவரது இறப்புக்குப் பிந்தைய ஒரு சிலை இது. தற்போது அல்தேசு அருங்காட்சியகம், பெர்லினில் உள்ளது.

சர்வாதிகாரி பதவிக் காலங்களும், மதிப்புகளும்[தொகு]

பொ. ஊ. மு. 44ஆம் ஆண்டு பெப்பிரவரி மாதத்தில் திக்தேத்தர் பெர்பெச்சுவோ என்ற பட்டத்தை சீசர் பெறுவதற்கு முன்னர், பொ. ஊ. மு. 49ஆம் ஆண்டில் இவரது முதல் சர்வாதிகாரி பதவிக் காலத்திலிருந்து சுமார் நான்கு முறை இவர் சர்வாதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்தார். உரோமை ஆக்கிரமித்ததற்குப் பிறகு இவர் தன்னுடைய முதல் நியமிப்பை பெரும்பாலும் தேர்தல்களை நடத்துவதற்காக ஏற்படுத்தினார். 11 நாட்களுக்குப் பிறகு இவர் ராஜினாமா செய்தார். பிற சர்வாதிகாரி பதவிக் காலங்கள் நீண்ட காலங்களுக்கு நீடித்தன. 1 ஆண்டு வரையிலும் கூட நீடித்தன. பொ. ஊ. மு. 46ஆம் ஆண்டின் ஏப்பிரல் மாதம் வாக்கில் இவருக்கு ஆண்டு தோறும் ஒரு புதிய சர்வாதிகாரி பதவிக் காலம் கொடுக்கப்பட்டது.[185] இவருக்குக் கொடுக்கப்பட்ட பணியானது சுல்லாவின் சர்வாதிகாரப் பதவியை புத்தூக்கம் செய்ததாக இருந்தது. இது இலத்தீனில் ரெயி பப்பிலிகே கன்சிதியூவன்டே என்று குறிப்பிடப்படுகிறது.[186] இந்த நிகழ்வுகள் எனினும் சட்டப்பூர்வ சக்திக்கு ஆதாரங்களாக விளங்கவில்லை. இலக்கிய ஆதாரங்களின் பார்வையில் மாறாக இவை மதிப்புகள் மற்றும் பட்டங்கள் ஆகும். அரசியலில் சீசரின் ஆதிக்க நிலையை இவை பிரதிபலித்தன. மட்டு மீறிய நீதிபதித்துவம் அல்லது சட்ட ரீதியிலான சக்திகளால் இவை உறுதிப்படுத்தப்படவில்லை. உரோமானியர்கள் மீதான வெற்றியாளராக சீசரின் தனி நபர் நிலையை இவை காட்டின.[187]

பர்சலுசுவுக்குப் பிந்தைய கால கட்டம் முழுவதும் செனட் சபையானது சீசருக்கு மதிப்புகளைக் கொட்டியது.[188] பிரீபெக்துசு மோர்பியசு (பொருள். நன்னெறிகளில் குறைபாடற்றவர்) போன்ற பட்டங்களையும் கொடுத்தது. செனட் சபையின் நீளுருளை வடிவக் கட்டுகளை செம்மைப்படுத்தும் மக்கள் தொகை கணக்கெடுப்பு சக்தியுடன் இப்பட்டம் வரலாற்று ரீதியாக தொடர்புடையதாகும். போர் மற்றும் அமைதி மீதான சக்தியும் கூட இவருக்கு வழங்கப்பட்டது.[189] கமிதியா செஞ்சுரியேதா என்ற உரோமானிய அவை பாரம்பரியமாகக் கொண்டிருந்த சக்தியை முறையற்ற வகையில் இவருக்கு வழங்கியது.[190] இத்தகைய சக்திகள் சீசருக்கு தனிப்பட்ட முறையில் தொடர்புடையதாக ஆக்கப்பட்டன.[191] உரோமின் நாணயங்களில் சீசரின் உருவங்கள் இடப்பட்டதைக் கண்ட ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான பெயரளவு மதிப்புகளும் இது போலவே இயல்பு கடந்தவையாக இருந்தன. உயிரோடு இருந்த ஓர் உரோமானியருக்கு முதல் முறையாக இது நடந்தது.[192][193] மேலும், அரச உடையை அணியும் சிறப்பு உரிமைகள், செனட் சபையில் ஒரு தங்க இருக்கையின் மீது அமர்தல் மற்றும் பொது கோயில்களில் இவரது சிலைகள் எழுப்பப்பட்டது ஆகிய செயல்பாடுகள் நடைபெற்றன. இவர் பிறந்த குயிந்திலிசு மாதமானது சூலியசு என்று பெயர் மாற்றப்பட்டது. இது தற்போது சூலை என்று அழைக்கப்படுகிறது.[194] தெய்வீக முடியரசின் அறிகுறிகளாக இவை இருந்தன. பின்னர் வெறுப்புணர்ச்சிக்கான காரணங்களாயின.

நீதித் துறை, சட்டத் துறை, நிர்வாகம் மற்றும் பொதுப்பணித் துறை போன்ற அரசின் இயல்பான நடவடிக்கைகள் மீதான முடிவுகளானவை குடியரசின் பாரம்பரிய அமைப்புகளுக்கு மதிப்பு கொடுக்கப்படாமல் அல்லது தகவல்கள் கூட கொடுக்கப்படாமல் இவரிடம் குவிக்கப்பட்டன.[195] பொது விவகாரங்கள் மீதான சீசரின் ஆதிக்கம் மற்றும் அனைத்து பிறரையும் ஒதுக்கிய இவரது போட்டி உள்ளுணர்வானது அரசியல் வகுப்பினரை இவரிடமிருந்து பிரித்தது. இறுதியாக இவரது உயிருக்கு எதிரான கூட்டுச் சதித் திட்டத்திற்கு வழி வகுத்தது.[196]

சீர்திருத்தங்கள்[தொகு]

சான்றுகளில் குறிப்பிட்டுள்ள படி சீசர் உரோமானிய சமூகத்தை மீண்டும் மறு கட்டமைப்பு செய்ய முயலவில்லை. ஆக்சுபோர்டு பாரம்பரிய அகராதியில் எழுதிய எர்னஸ்டு பாதியன் குறிப்பிட்டுள்ளதாவது, ஒரு தொடர்ச்சியான சீர்திருத்தங்களை சீசர் தொடங்கினாலும், குடியரசு அமைப்பின் மையப் பகுதியை தொடவில்லை: "அடிப்படை சமூக மற்றும் அரசியல் அமைப்பு சீர்திருத்தத்திற்கு இவர் எந்தவிதத் திட்டங்களையும் கொண்டிருக்கவில்லை" மற்றும் "இவர் மீது பொழியப்பட்ட இயல்பு கடந்த மதிப்புகளானவை... பாரம்பரிய அமைப்பு எனப்படும் உடலின் மீது பொருந்தாத ஒரு தலையாக இவரை வெறுமனே ஒட்டுச் சினையாக்கின".[186]

சீசரின் சீர்திருத்தங்களில் மிக முக்கியமானது நாட்காட்டியாகும். பாரம்பரிய குடியரசு சந்திர-சூரிய நாட்காட்டியை நீக்கி விட்டு தற்போது யூலியன் நாட்காட்டி என்று அழைக்கப்படும் ஒரு சூரிய நாட்காட்டியை இவர் கொண்டு வந்தார்.[197] பேரரசை நன்முறையில் நிர்வாகம் செய்ய நீதிபதிகள் மற்றும் செனட் சபை உறுப்பினர்களின் எண்ணிக்கையையும் கூட இவர் 600லிருந்து 900ஆக அதிகரித்தார். தனது ஆதரவாளர்களுக்குப் பதவிகளை வழங்கினார். இத்தாலிக்கு வெளியே காலனிகளும் கூட தொடங்கப்பட்டன. கார்த்தேஜ் மற்றும் கோரிந்து ஆகிய தளங்களில் அமைக்கப்பட்டவற்றை எடுத்துக்காட்டாகக் குறிப்பிடலாம். உரோமின் பொ. ஊ. மு. 2ஆம் நூற்றாண்டுப் படையெடுப்புகளின் போது இந்த இரு தளங்களுமே அழிக்கப்பட்டிருந்தன. இத்தாலியின் மக்கள் தொகையை மாகாணங்களுக்கு மாற்றவும், அமைதியின்மையைக் குறைக்கவும் இவை பயன்பட்டன.[198] உயர்குடியினருக்குப் பெயரிடும் அரசு சக்தியானது இவரது ஆட்களின் குடும்பங்களின் அனுகூலத்திற்காக மீண்டும் பயன்படுத்தப்படத் தொடங்கியது.[199] நிரந்தர நீதிமன்ற நீதிபதி குழுக்களானவை திரிபியூனி அயேரரீ என்ற அமைப்பை நீக்குவதற்காக மாற்றம் செய்யப்பட்டன. இதையடுத்து குதிரை வீரர்கள் வரிசை மற்றும் செனட் சபை உறுப்பினர்கள் மட்டுமே எஞ்சியிருந்தனர்.[200]

தனது ஆட்சி மற்றும் அரசு ஆட்சி ஆகியவற்றை நிலைப்படுத்த மேற்கொண்ட நிர்வாக நடவடிக்கைகளையும் கூட இவர் மேற்கொண்டார்.[201] தானிய விநியோகத்தின் அளவை 3,20,000லிருந்து சுமார் 1,50,000ஆக இவர் தகுதிகளை கடுமையாக்கியதன் மூலம் குறைத்தார். மக்கள் தொகைக் குறைவை நிறுத்துவதற்காக பல குழந்தைகளையுடைய குடும்பங்களுக்கு சிறப்பு நிதிக் கொடையானது அளிக்கப்பட்டது.[202] ஒரு மக்கள் தொகையைக் கணக்கிட்டு நடத்துவதற்கான திட்டங்கள் வரையறுக்கப்பட்டன. சிசால்பைன் கௌல் மற்றும் காதிசு ஆகிய பகுதிகளிலிருந்த ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான சமுதாயங்களுக்கு குடியுரிமையானது நீட்டிக்கப்பட்டது.[203] உள்நாட்டுப் போர்களின் போது ஒரு புதிய கடன் திருப்பிச் செலுத்தும் திட்டத்தையும் கூட சீசர் தொடங்கி வைத்தார். இதன்படி எந்த ஒரு கடனும் தள்ளுபடி செய்யப்படாது. ஆனால், சிறு சிறு தொகைகளாக அவை திருப்பிச் செலுத்தப்படலாம். ஒரு குறிப்பிடத்தக்க அளவு பணம் வரை வாடகைகளை இவர் வழங்கினார். உணவு விநியோகித்த விளையாட்டுகளை நடத்தினார்.[204] உள்நாட்டுப் போர்களின் போது இவரது எதிரிகளாக இருந்தவர்களில் பலர் மன்னிக்கப்பட்டனர். அவர்களது நன்றியுணர்வைப் பெறுவதற்கும், தன்னுடைய மற்றும் பழி வாங்கும் குணமுடையதாக இருந்த சுல்லாவின் சர்வாதிகார ஆட்சிக்கும் இடையில் ஒரு வேறுபாட்டை காட்டும் ஒரு முயற்சியாகவும் சீசர் இதைச் செய்தார். சீசரின் மன்னிக்கும் குணமானது இவரது பரப்புரை மற்றும் கோயில் வேலைப்பாடுகளில் மிகுதியாகப் பாராட்டப்பட்டுள்ளது.[205]

எசுப்பானியாவுக்குள்ளன இவரது படையெடுப்புக்கு முன்னரே தொடங்கப்பட்ட உட்கட்டமைப்புத் திட்டங்களானவை தொடர்ந்தன. சீசரின் அவை மற்றும் வீனசு செனேத்ரிக்சுவின் கோயில் ஆகியவை கட்டமைக்கப்பட்டன. ஓசிதியாவின் துறைமுகத்தின் விரிவாக்கம் மற்றும் கொரிந்தின் பூசந்தி வழியாக ஒரு கால்வாய் அமைப்பது உள்ளிட்ட பிற பொதுப் பணிகளும் கூட திட்டமிடப்பட்டன. [சான்று தேவை]இந்த வேலைப்பாடுகளில் மிகவும் மூழ்கியிருந்த போது செனட் சபை, நீதிபதிகள் மற்றும் தன்னைச் சந்திக்க வந்த பலரையும் கூட கடுமையாக ஒதுக்கியதால் உரோமில் இருந்த பலர் இவரிடமிருந்து விலகினர்.[206]

பொ. ஊ. மு. 58இல் கிளோதியசுவால் மீண்டும் நிறுவப்பட்ட பொதுப் பணி அமைப்புகளான காலேஜியா ஆகியவை மீண்டும் நீக்கப்பட்டன.[202] தன்னுடைய ஆதரவாளர்களுக்கு வெகுமதி வழங்குவதற்கான இவரது செயல்களானவை இவரது பணியாளர்கள் முறையற்ற வகையில் வெற்றி ஊர்வலங்களை நடத்துவதற்கு அனுமதியளித்தது. பேராளர் பதவியை அந்த ஆண்டின் கடைசி நாளில் இவர்கள் ராஜினாமா செய்தனர். எனவே, விருப்பமுள்ள எந்த ஒரு கூட்டாளியும் கடைசி ஒரு நாளுக்கு பேராளராக தேர்ந்தெடுக்கப்படலாம் என்ற நிலை இருந்தது.[207] இவருக்கு ஒரு தலைபட்சமாக நடந்து கொண்டவர்களின் ஊழலும் அவர்களது ஆதரவை உறுதி செய்வதற்காக கவனிக்காமல் விடப்பட்டது. மாகாண நகரங்கள் மற்றும் சார்புடைய இராச்சியங்களின் அனுகூலத்திற்கு பிரதி பலனாக, இவரது செலவினங்களுக்கு செலுத்துவதற்காக அவற்றிடமிருந்து பறிமுதல்கள் செய்யப்பட்டன.[208]

சதியும், இறப்பும்[தொகு]

கசியசு மற்றும் லெந்துலுசு இசுபிந்தர் ஆகியோரின் தெனாரியசு (பொ. ஊ. மு. 42) நாணயம். சுதந்திரத்தின் மகுடம் சூட்டப்பட்ட தலையைச் சித்தரிக்கிறது. பின்புறத்தில் ஒரு படையல் சாடியும், லிதூசுவும் (வளைந்த காற்றுக் கருவி) உள்ளன.[209]
சீசரின் இறப்பைச் சித்தரிக்கும் 1867ஆம் ஆண்டு ஓவியம். ஓவியர்: ஜீன் லியோன் ஜேர்மி, ஓவியத்தின் பெயர்: சீசரின் இறப்பு.

பொ. ஊ. மு. 44ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் சீசரை ரெக்சு (பொருள். மன்னன்) என்று அழைக்க நடந்த முயற்சிகள் இரண்டு தீர்ப்பாயர்களால் ஓர் ஆதரவளித்த மக்களுக்கு முன்னால் நிராகரிக்கப்பட்டன. குடிமக்களுக்கு எதிரான நியாயமற்ற ஒடுக்கு முறையுடன் இந்தப் பட்டமானது தொடர்புபடுத்தப்பட்டு இருந்தது. தன்னுடைய மாண்பு மீது வரம்பு கடந்து இரண்டு தீர்ப்பாயர்களும் நடந்து கொண்டதாகக் கூறிய சீசர் அவர்களை அலுவலகப் பதவியிலிருந்தும், செனட் சபையிலிருந்தும் நீக்கினார்.[210] தீர்ப்பாயர்களை பாதுகாப்பதற்காக என்று கூறி உள்நாட்டுப் போரைத் தொடங்கிய சீசரின் உண்மையான வாதங்களை இந்த நிகழ்வானது மட்டுப்படுத்தியது. பிரபல சுதந்திரத்தின் பாதுகாவலர்களாக தீர்ப்பாயர்களை இன்னும் எண்ணிய பொது மக்களை இது கோபப்படுத்தியது.[211] பொ. ஊ. மு. 44ஆம் ஆண்டு 15 பெப்பிரவரிக்கு சற்று முன்னர் வாழ்நாள் முழுவதுக்குமான சர்வாதிகாரி பதவியை இவர் பெற்றார். இவரது சக்திகள் வெறுமனே தற்காலிகமானவை என்ற நம்பிக்கைகளுக்கு இது முடிவு கட்டியது.[212] இவரது சர்வாதிகார தன்மையை, இவர் ஒரு தசாப்தத்திற்கு நியமிக்கப்பட்டாலும், மாற்றுவதற்காக வாழ்நாள் முழுவதற்குமான ஒன்றாக மாற்றியது என்பது அனைத்து சம காலத்தவர்களுக்கும், ஒரு சுதந்திரக் குடியரசை மீண்டும் நிறுவுவதற்கான எந்த ஓர் எண்ணமும் சீசருக்கு இல்லை, இவர் பதவியில் இருக்கும் காலம் வரை எந்த ஒரு சுதந்திர குடியரசும் மீண்டும் நிறுவப்படாது என்று தெளிவாகக் காட்டியது.[213]

வாழ்நாள் சர்வாதிகாரியாக இவர் அறிவிக்கப்பட்டு சில நாட்களுக்குப் பிறகு லூப்பர்கலியாவுக்காக நடத்தப்பட்ட விழாக்களில் ஆண்டனியிடமிருந்து ஒரு மகுடத்தை அனைவருடைய முன்னிலையிலும் இவர் நிராகரித்தார். இந்நிகழ்வு குறித்த விளக்கங்கள் பலவாறாக உள்ளன: மகுடமானது போதுமான அளவுக்கு பொருந்தாததால் இவர் மகுடத்தை அனைவரது முன்னிலையிலும் நிராகரித்திருக்கலாம்; தான் ஒரு முடியரசன் இல்லை என்பதை அறிகுறியாகக் காட்டுவதற்காக இவர் இவ்வாறு செய்திருக்கலாம்; மாறாக, ஆண்டனி தனது சொந்த செயலாக இவ்வாறு செய்திருக்கலாம். இவர் ஏற்கனவே ஒரு முடியரசனுக்கான உடையை அணிந்திருந்தார். எனினும், இந்நிலையில் சீசர் ஒரு அதிகாரப்பூர்வ மகுடத்தை வேண்டினார் என்ற வதந்தியானது பரவியிருந்தது. இந்நிகழ்வானது இதை மீண்டும் உறுதிப்படுத்தியதாக அமைந்தது.[214]

சீசரை அரசியல் கொலை செய்யும் திட்டமானது பொ. ஊ. மு. 45ஆம் ஆண்டின் கோடைக்காலத்தில் தொடங்கியது. இதே நேரத்தில் இச்சதியில் ஆண்டனியைச் சேர்க்கும் ஒரு முயற்சியும் நடத்தப்பட்டது. ஆனால் ஆண்டனி மறுத்துவிட்டார். சீசருக்கு எந்த எச்சரிக்கையையும் அவர் கொடுக்கவில்லை. பொ. ஊ. மு. 44ஆம் ஆண்டின் பிப்ரவரி வாக்கில் சுமார் 60 சதிகாரர்கள் இருந்தனர்.[215] உள்நாட்டுப் போரில் வெற்றியடைந்த சீசரின் கூட்டணியானது சிதறிவிட்டது என்பது இந்நேரத்தில் தெளிவாகத் தெரிந்தது.[216] சதிகாரர்களில் பெரும்பாலானோர் பாம்பேயின் முந்தைய ஆதரவாளர்களாக இருந்த அதே நேரத்தில் சீசரின் ஆதரவாளர்களில் ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலானவர்களும் இதில் இணைந்திருந்தனர்.[217] இவர்களின் தலைவர்களில் கையசு திரேபோனியசு (45ஆம் ஆண்டின் பேராளர்), தெசிமசு புரூட்டசு (42ஆம் ஆண்டுக்குப் பேராளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்), மேலும் காசியசு மற்றும் புரூட்டசு (இருவருமே பொ. ஊ. மு. 44ஆம் ஆண்டின் பிரயேத்தர்களாக இருந்தனர்) ஆகியோர் அடங்கியிருந்தனர்.[218] போரின் போது சீசருடன் திரேபோனியசு மற்றும் தெசிமசு இணைந்திருந்தனர். அதே நேரத்தில் புரூட்டசு மற்றும் காசியசு பாம்பேயுடன் இணைந்திருந்தனர். இதில் இணைந்த பிற சீசரின் ஆதரவாளர்களில் செர்வியசு சுல்பிசியசு கல்பா, லூசியசு மினுசியசு பாசிலுசு, லூசியசு துல்லியசு சிம்பர், மற்றும் கையசு செர்விலியசு கசுகா ஆகியோர் அடங்குவர்.[219] சதிகாரர்களில் பெரும்பாலானோர் பொ. ஊ. மு. 43 - 41ஆம் ஆண்டு வரையிலான பேராளர் தேர்தல்களில் வேட்பாளர்களாக இருந்திருக்க வேண்டியவர்கள்.[220] பொ. ஊ. மு. 44ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சீசரின் பாசாங்குத் தேர்தல்களால் இவர்கள் ஏமாற்றமும், வருத்த உணர்வும் அடைந்திருக்க வேண்டும். இத்தேர்தல்களானவை பொ. ஊ. மு. 43-41ஆம் ஆண்டுக்கான முடிவுகளை முன்னரே எடுத்திருந்தன. இந்தத் தேர்தல் முடிவுகள் சர்வாதிகாரியின் கருணையில் இருந்து வந்திருந்தன. மக்களிடமிருந்து வரவில்லை. குடியரசு உயர்குடியினருக்கு இது உண்மையான பொதுமக்களின் ஆதரவுக்கான ஒரு மாற்று கிடையாது.[221] இயல்பான நீதிபதிகளை சீசரின் குதிரை எசமானர்களுக்குத் துணை அதிகாரிகளாக மாற்றியதும் பாராட்டப்பட்டதாகத் தெரியவில்லை.[222]

மன்னர்களைத் துரத்தியடித்த லூசியசு சூனியசு புரூட்டசு மற்றும் வளர்ந்து வந்த கொடுங்கோன்மையிலிருந்து உரோமை விடுவித்த கையசு செர்விலியசு அகாலா ஆகியோரின் வழித்தோன்றலாகத் தன்னைக் கூறிய புரூட்டசு கூட்டுச்சதியின் முதன்மையான தலைவராக இருந்தார்.[223] பொ. ஊ. மு. 45ஆம் ஆண்டின் இலையுதிர் காலத்தின் பிந்தைய பகுதி வாக்கில் பொது இட சுவ ர் ஓவியங்கள் மற்றும் எழுத்துகள்,[224] மற்றும் உரோமில் சில பொது கருத்துக்கள் ஆகியவை சீசரை ஒரு கொடுங்கோலனாகக் கண்டித்தன. சர்வாதிகாரியை நீக்குவதற்கான ஒரு புரூட்டசுவின் தேவையைக் குறிப்புணர்த்தின. நிகோலசு தமாசுகசுவைத் தவிர்த்து பண்டைக்கால ஆதாரங்கள் அனைத்தும் ஒரே குரலில் சீசருக்கு எதிராக பொது மக்களின் எண்ணமானது உண்மையிலேயே மாறியிருந்தது என்பதை இது பிரதிபலித்ததாகக் குறிப்பிடுகின்றன.[225] சீசர் மீதான பொதுவான மனக் கொதிப்பானது இவரது கடன் கொள்கைகள் (இவை கடன் வழங்குபவர்களுக்கு மிகவும் சாதகமாக இருந்தன), கடன் தள்ளுபடிக்காக நடந்த போராட்டங்களை ஒரு ஊறு விளைவிக்கும் படையைப் பயன்படுத்தி ஒடுக்கியது, தானிய விநியோகத்தை இவர் குறைத்தது, குளோதியசுவால் மீண்டும் நிறுவப்பட்ட காலேசியாவை இவர் நீக்கியது. நிரந்தர நீதிமன்றங்களில் நீதிபதிகளின் ஏழ்மையான குழுவை இவர் நீக்கியது, மற்றும் மக்களை அவர்களது பண்டைக்கால உரிமையான முடிவெடுக்கும் வாய்ப்பைத் தட்டிப்பறித்த இவரது வெளிப்படையான தேர்தல்களின் நீக்கம் ஆகியவற்றால் வேரூன்றியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.[226] சீசரின் முன்கூட்டிய பேராளர் தேர்தல்களில் சீசரின் வேட்பாளர்களின் இடத்தில் சீசரால் நீக்கப்பட்ட தீர்ப்பாயர்களின் பெயர்களானவை வாக்குப் பெட்டிகளில் எழுதப்பட்டிருந்தன என்ற செய்திகள் சீசருக்கு எதிரான பொது மக்களின் ஒரு மன மாற்றத்தைக் காட்டுகின்றன.[227] உரோமில் ஒரு கொடுங்கோன்மைப் பாரம்பரியம் இருந்ததா என்பது தெளிவாகத் தெரியவில்லை. கொடுங்கோலர்களைக் கொல்லும் பணியானது ஏற்கனவே கொடுக்கப்பட்டது போல சிசெரோ தனிமையில் எழுதியுள்ளார். எனினும், இதில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய அளவிற்கு அவர் எந்த ஒரு பொது உரையையும் ஆற்றவில்லை. கொடுங்கோன்மையைத் தடுப்பதற்காக ஒருவரைக் கொல்ல வேண்டும் என்ற தர்க்கத்தைப் பொதுமக்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்பதற்கும் சிறிதளவே சான்று உள்ளது.[228] பிளாட்டோவின் பிளாட்டோனியக் கல்விக்கழகத்தின் தத்துவப் பாரம்பரியமும் இந்த அரசியல் கொலையைச் செய்ய புரூட்டசுவை உந்திய ஒரு காரணியாகக் கருதப்படுகிறது. கொடுங்கோன்மையிலிருந்து அரசை விடுவிக்கும் ஒரு பணி மீது முக்கியத்துவத்தை இப்பாரம்பரியமானது கொடுத்தது.[229]

சதித்திட்டம் குறித்த சில செய்திகளானவை கசிந்த அதே நேரத்தில் சீசர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மறுத்தார். ஒரு பாதுகாவலரால் காக்கப்படுவதை நிராகரித்தார். சதிகாரர்களால் முடிவெடுக்கப்பட்ட நாளானது நட்ட நடு மார்ச்சான 15 மார்ச்சு ஆகும். தன்னுடைய பார்த்தியப் போர்ப் பயணத்துக்காக சீசர் புறப்படலாம் என்று முடிவெடுத்திருந்தார். அதற்கு மூன்று நாட்கள் முந்தைய நாள் இதுவாகும்.[230] இவரது நெருங்கி வந்து கொண்டிருந்த புறப்பாடு குறித்த செய்தியானது சதியாளர்கள் தங்களது திட்டங்களை மாற்றும் நிலைக்குத் தள்ளியது. 15ஆம் தேதி அன்று செனட் சபை சந்திப்பானது இவர் புறப்படுவதற்கு முந்தைய கடைசி சந்திப்பாக இருந்திருக்கும்.[231] கொலையை அரசியல் சார்புடையதாகச் சித்தரிக்க ஒரு செனட் சபை சந்திப்பு இடமே சிறந்த இடமாக இருக்கும் என அவர்கள் முடிவெடுத்தனர். விளையாட்டுக்கள், தேர்தல்கள், அல்லது சாலையில் சென்று கொண்டிருக்கும் போது கொல்லலாம் என்ற பிற வழிகளை நிராகரித்தனர்.[232] செனட் சபை சந்திப்பில் சதிகாரர்கள் மட்டுமே ஆயுதங்களைக் கொண்டிருக்கலாம் என்ற கருத்தும் ஒரு அனுகூலமாக இருந்திருக்கலாம். பொ. ஊ. மு. 2ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை பேராளர்கள் தங்களது பதவியில் அமர்ந்த நாளாக 15 மார்ச்சு இருந்தது. எனவே, ஒரு குறியீடாகவும் இது முக்கியத்துவம் மிகுந்த நாளாக இருந்தது.[233]

பொ. ஊ. மு. 42இல் அச்சிடப்பட்ட நட்ட நடு மார்ச்சு நாணயம். இது மார்க்கசு சூனியசு புரூத்தசைச் சித்தரிக்கிறது. பின்புறத்தில் கத்திகள் மற்றும் ஒரு பிளேயசு (தொப்பி) ஆகியவை உள்ளன. இப்பொருட்கள் சுதந்திரத்தை மீண்டும் பெற உதவின என்று அறிகுறியாக உணர்த்துகின்றன.

நூலிலையில் இந்தச் சந்திப்புக்கு வராத நிலையில் சீசர் இருந்தார் அல்லது இந்தச் சதித் திட்டம் குறித்து அவருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது என பலவறான கதைகள் உள்ளன.[233][234] பாம்பேயின் சிலையின் காலடியில் தன்னுடைய தங்க இருக்கையில் சீசர் அமர்ந்திருந்த போது அவரை நோக்கி வந்த சதிகாரர்கள் கத்திகளைக் கொண்டு தாக்கினர். கடைசியாக இவர் என்ன செய்தார் என்பது பலவாறாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சுவேதோனியசின் கூற்றுப் படி, இவர் அமைதியாக விழுந்தார் அல்லது புரூட்டசு கடைசியாகத் தோன்றியதைக் கண்டு - கை சு டெக்னோன்? ("நீயுமா, குழந்தை?") என்று கேட்டார்.[235] 23 மற்றும் 35க்கு இடைப்பட்ட காயங்களுக்குப் பிறகு வாழ்நாள் முழுவதுக்குமான சர்வாதிகாரி இறந்தார்.[236][237]

கொலைக்குப் பிறகு[தொகு]

சீசரின் இறுதிச் சடங்கில் மார்க் ஆண்டனியின் உரை, ஓவியர்: ஜார்ஜ் எட்வர்டு ராபர்ட்சன், ஆண்டு: பிந்தைய 19ஆம் அல்லது தொடக்க 20ஆம் நூற்றாண்டு.

சர்வாதிகாரியைக் கொன்றதற்குப் பிறகு உரோமின் ஏழு குன்றுகளில் ஒன்றான கேப்பித்தலின் குன்றை கொலையாளிகள் கைப்பற்றினர். பிறகு அரசவையில் ஒரு பொது சந்திப்பிற்கு அனைவரையும் வரவழைத்தனர். அங்கு மக்களால் நட்புணர்வு அற்ற முறையில் வரவேற்கப்பட்டனர். கொலையாளிகளால் நகரத்தையும் முழுவதுமாகப் பாதுகாக்க இயலவில்லை. சர்வாதிகார முறையில் சீசரின் துணை அதிகாரியாக இருந்த லெபிதுசு திபேர் தீவிலிருந்து நகரத்திற்குள் துருப்புகளை நகர்த்தினார். கொலையிலிருந்து தப்பிய பேராளரான ஆண்டனி செனட் சபையில் பகுத்தறிவற்ற இணக்கமான ஒரு நிலைக்கு வலிந்து செயல்பட்டார்:[238] சீசர் ஒரு கொடுங்கோலனாக அறிவிக்கப்படவில்லை மற்றும் சதிகாரர்கள் தண்டிக்கப்படவில்லை.[239] பிறகு சீசரின் இறுதிச் சடங்குக்கு இசைவு தெரிவிக்கப்பட்டது. இறுதிச் சடங்கில் கொலையாளிகளுக்கு எதிராகப் பொது மக்களை ஆண்டனி தூண்டினார். இது மக்கள் வன்முறையில் இறங்குவதற்குக் காரணமானது. இவ்வன்முறையானது சில மாதங்களுக்கு நீடித்தது. தலை நகரத்திலிருந்து தப்பித்து ஓடும் நிலைக்குக் கொலையாளிகள் ஆளாயினர். பிறகு ஆண்டனி படையைக் கொண்டு வன்முறையை இறுதியாக ஒடுக்கினார்.[240]

பொ. ஊ. மு. 44இல் ஏழு நாட்களுக்கு எரி நட்சத்திரங்கள் விழுந்தன. சீசர் தெய்வமாக்கப்பட்டதை இது பிரதிநிதித்துவப்படுத்துவதாக உரோமானியர்கள் நம்பினர். சீசரின் வால் நட்சத்திரம் என்ற பெயரை இதற்குக் கொடுத்தனர். இவரது உடல் எரிக்கப்பட்ட இடத்தில் பொ. ஊ. மு. 42ஆம் ஆண்டில் மூவராட்சியில் இருந்தவர்களால் சீசர் கோயிலின் கட்டுமானமானது தொடங்கப்பட்டது. உரோமானிய அரசவையின் முதன்மையான சதுக்கத்தின் கிழக்குப் பகுதியில் இது தொடங்கியது. தற்போது இதன் பீடம் மட்டுமே எஞ்சியுள்ளது.[241] இவரது உயிலின் குறிப்புகளும் கூட பொது மக்களுக்கு வாசித்துக் காட்டப்பட்டன: பெரும்பாலும் பிலேபேயியர்களுக்கு ஈகைக் குணத்துடன் கொடைகளை அளித்தது மற்றும் முதன்மையான வாரிசாக கையசு ஆக்தேவியசைக் குறிப்பிட்டது. ஆக்தேவியசை சீசர் தத்தெடுத்துக் கொண்டதையும் உயிலில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆக்தேவியசை சீசரின் அக்காவின் மகள் வழிப் பேரன் ஆவார். ஆக்தேவியசை அந்நேரத்தில் தற்போதைய அல்பேனியாவின் அப்பலோனியாவில் இருந்தார்.[242]

ஏற்கனவே இருந்த குடியரசை மீண்டும் தொடர்வது என்பது நடக்க இயலாததாக இருந்தது. ஏனெனில் சீசரின் இறப்பிற்குப் பிறகு பல்வேறு நபர்கள் சுதந்திரத்திற்காகவோ அல்லது பழி வாங்குவதற்காகவவோ பெருமளவிலான இராணுவங்களைச் சேர்க்க வேண்டினர். இது ஒரு தொடர்ச்சியான உள்நாட்டுப் போர்களுக்கு இட்டுச் சென்றது.[243] முதல் போரானது பொ. ஊ. மு. 43ஆம் ஆண்டு ஆண்டனி மற்றும் செனட் சபைக்கு (சீசர் மற்றும் பாம்பே ஆகிய இருவரையும் சார்ந்த செனட் சபை உறுப்பினர்களும் இதில் உள்ளடங்கியிருந்தனர்) இடையே நடைபெற்றறது. சீசரின் வாரிசான ஆக்தேவியன் இந்த அமளியைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி மிகு நலம் பெற்று பேராளர் பதவியைக் கைப்பற்றுவதற்கு வழி வகுத்தது. ஆண்டனி மற்றும் லெபிதுசுவுடன் இணைந்து ஆக்தேவியன் மூன்றாவது மூவராட்சியை ஏற்படுத்தினார்.[244] ஒரு தொடர்ச்சியான தடைகளின் மூலம் தங்களது அரசியல் எதிரிகளை ஒழித்துக் கட்டியதற்குப் பிறகு[245] சீசர் தெய்வமாக்கப்படுவதை இரண்டாம் மூவராட்சியினர் உறுதி செய்தனர். 1 சனவரி பொ. ஊ. மு. 42 அன்று செனட் சபையானது உரோமானியக் கடவுள்களில் ஒருவராகச் சீசர் நிலைப்படுத்தப்படுவார் என்று அறிவித்தது.[246] இவர்கள் கிழக்கு நோக்கி அணி வகுத்தனர். அங்கு ஓர் இரண்டாவது போர் நடைபெற்றது. இரண்டாவது மூவராட்சியினர் யுத்தத்தில் சீசரைக் கொலை செய்தவர்களைத் தோற்கடித்தனர்.[247] குடியரசு என்ற காரணத்திற்காகப் போராடியவர்களின் இறுதி இறப்பில் இது முடிந்தது. பெரும்பாலான உரோமானிய உலகமானது மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது.[248] பொ. ஊ. மு. 31 வாக்கில் சீசரின் வாரிசான ஆக்தேவியன் பேரரசின் கட்டுப்பாட்டை ஒற்றை நபராக எடுத்துக் கொண்டார். இரு தசாப்தங்களுக்கு நடைபெற்ற உள்நாட்டுப் போருக்குப் பிறகு இரண்டாவது மூவராட்சியில் தன்னுடன் இருந்த எதிரிகளை ஆக்தேவியன் வெளியேற்றினார். குடியரசை மீண்டும் நிறுவுவதாகக் காட்டிக் கொண்டு, திரைக்குப் பின்னால் நடந்த இவரது ஏகாதிபத்தியமானது போரால் சோர்வடைந்திருந்த உரோமானியர்களுக்கு ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தது. ஒரு புதிய உரோமானிய முடியரசின் நிறுவுதலை இது குறித்தது.[249]

கிளியோபட்ராவுடனான வாழ்க்கை[தொகு]

ஜூலியஸ் சீசர் எகிப்தினை போரின் மூலம் வெல்ல துணிந்தார். அப்பொழுது ஆதரவற்ற நிலையில் இருந்த கிளியோபாட்ரா சீசருடன் இணைந்து கொண்டார். கிளியோபாட்ராவை விரட்டிவிட்ட அவரது கணவன் தொலமியுடன் சீசர் போரிட்டார். இப்போரில் தோலமியை சீசர் கொன்றார். வரலாற்று ஆசிரியர்கள் சிலர் தொலமியை கொன்றது கிளியோபாட்ரா என்றும் கூறுகின்றனர்.

கிளியோபாட்ராவின் அழகில் மயங்கிய ஜூலியஸ் சீசர் அவரை காதலியாக ஏற்றுக் கொண்டார். எகிப்தினை வென்றவர் அதற்கு கிளியோபாட்ராவை தலைவியாக்கினார். இவர்களுக்கு சிசேரியன் என்ற மகனுண்டு.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

உடல் நலமும், உடல் தோற்றமும்[தொகு]

சீசரின் சியரமோந்தி மார்பளவுச் சிலை. இது பளிங்குக் கல்லில் செய்யப்பட்ட இவரது இறப்பிற்குப் பிந்தைய சிலை ஆகும். ஆண்டு: 44–30 பொ. ஊ. மு., இடம்: மியூசியோ பியோ-கிளமென்டினோ, வாதிகன் அருங்காட்சியகங்கள்.

புளூட்டாக்கின் குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு,[250] சீசர் சில நேரங்களில் கால்-கை வலிப்பால் பாதிக்கப்பட்டிருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. நவீன அறிஞர்கள் இக்கருத்து குறித்து கூர்மையாகப் பிரிவுபட்டுள்ளனர். இவருக்கு மலேரியாவும் இருந்திருக்கலாம் என்று சில அறிஞர்கள் நம்புகின்றனர். பொ. ஊ. மு. 80களின் சுல்லா தடை நடவடிக்கையின் போது குறிப்பாகப் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று நம்புகின்றனர்.[251] இவருக்கு திடீர் வலிப்பானது ஒரு நாடாப் புழுவால் மூளையில் ஏற்பட்ட ஓர் ஒட்டுண்ணித் தொற்றின் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என பிற அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.[252][253]

சிக்கலான பகுதியளவு திடீர் வலிப்புகளாக இருந்திருக்கக் கூடிய நான்கு ஆவணப்படுத்தப்பட்ட நிகழ்வுகளுக்கு சீசர் உள்ளாகியுள்ளார். தன்னுடைய இளமைக் காலத்தில் இவர் மேற்கொண்டு சுய நினைவை குறுகிய நேரத்திற்கு இழக்கும் வலிப்புகளுக்கும் ஆளாகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த வலிப்புகள் குறித்த தொடக்கக் காலப் பதிவுகளானவை சுயசரிதையாளர் சுவேதோனியசால் குறிப்பிடப்பட்டுள்ளன. இவர் சீசர் இறந்ததற்குப் பிறகு பிறந்தார். இரத்தச் சர்க்கரைக் குறைவின் காரணமாக வலிப்பு ஏற்பட்டிருக்கலாம் என சில மருத்துவ வரலாற்றாளர்கள் இதற்கு எதிர் பதிலைக் குறிப்பிடுகின்றனர். இதன் காரணமாக வலிப்பு ஏற்படலாம்.[254][255]

சேக்சுபியரின் ஒரு வரியானது சில நேரங்களில் இவருக்கு ஒரு காது கேட்காது என்ற பொருளில் எடுத்துக் கொள்ளப்படுகிறது: "எனது வலது கைப் பக்கம் வரவும், ஏனெனில் இந்தக் காது கேட்காது".[256] எந்த ஒரு பாரம்பரிய நூலும் சீசருடன் காது கேளா குறைபாட்டை தொடர்புபடுத்திக் குறிப்பிடவில்லை. புளூட்டாக்கின் ஒரு பத்தியை உருவக ரீதியாக நாடகாசிரியர் பயன்படுத்தியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. அப்பத்தியானது காது கேளா குறைபாட்டைப் பற்றிக் குறிப்பிடவே இல்லை. மாசிடோனின் அலெக்சாந்தர் வழக்கமாக செய்த ஒரு சைகையைப் பற்றிக் குறிப்பிட்டது. தன்னுடைய காதை மூடியதன் மூலம் குற்றம் சாட்டுபவரிடமிருந்து தற்காப்புக்காக வாதிடுபவரை நோக்கி தனது கவனத்தை மாற்றியதை அலெக்சாந்தர் வெளிக் காட்டினார்.[257]

தலை வலி, உயரமான இடத்தில் நின்று கீழே பார்க்கும் போது ஏற்படும் தலை சுற்றல், கீழே விழுதல் (நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டதால் ஏற்படும் தசை பலவீனத்தால் கீழே விழுதல்), ஐம்புலன்களின் உணர்ச்சிக் குறைபாடு, தலை சுற்றல் மற்றும் சுய நினைவின்மை போன்ற சீசரின் நடத்தை வெளிப்பாடுகள், மற்றும் இரத்த அழுத்தக் குறைவால் ஏற்படும் தற்காலிக சுய நினைவிழப்பு ஆகியவை மூளை மற்றும் இரத்த நாளங்கள் தொடர்புடைய நிகழ்வுகளாகும், வலிப்புடன் தொடர்புடையவை அல்ல என்று பிரான்செசுகோ எம். கலாசி மற்றும் குதன் அசுரபியன் ஆகியோர் பரிந்துரைக்கின்றனர். தன்னுடைய இயற்கை வரலாறு நூலில் மூத்த பிளினி சீசரின் தந்தை மற்றும் முன்னோர் தங்களது மூடு காலணிகளை மாட்டிக் கொண்டிருந்த நேரத்தில் எந்த ஒரு காரணமும் இன்றி இறந்தனர் என்று குறிப்பிடுகிறார்.[258] ஒரு திடீர் மாரடைப்பு நிகழ்விலிருந்து ஏற்பட்ட இதய இரத்த நாளக் கோளாறுகளுடன் இத்தகைய நிகழ்வுகள் மிகவும் தயராகத் தொடர்புபடுத்தப்படலாம் அல்லது உயிரைப் போக்கும் மாரடைப்புடன் தொடர்புபடுத்தப்படலாம். சாத்தியத்திற்குரிய வகையிலே சீசர் மரபணு ரீதியிலேயே இருதய நோய்க்கு ஆளாகும் தன்மையுடையவராக இருந்திருக்கலாம்.[259]

சீசரின் இறப்பிற்குப் பிறகு ஒரு நூற்றாண்டுக்கும் மேலான காலம் கழித்து எழுதிய சுவேதோனியசு சீசரை "ஒரு வெளிறிய நிறத்தையுடைய, உயரமான உருவத்தையுடைய, நல்ல வடிவமைப்புடன் கூடிய கை கால்களையுடைய, ஓரளவுக்கு முழுமையான முகத்தையுடைய மற்றும் ஆர்வமுடைய கருப்புக் கண்களையுடையவர்" என்று விளக்குகிறார்.[260]

பெயர் மற்றும் குடும்பம்[தொகு]

பெற்றோர்கள்[தொகு]

  • தந்தை காயுஸ் ஜூலியஸ் சீசர்
  • தாய் ஆரேலியா

சகோதரிகள்[தொகு]

  • ஜூலியா சீசர்ஸ் மூத்தவள்
  • ஜூலியா சீசர்ஸ் இளையவள்

மனைவிகள்[தொகு]

  • முதல் திருமணம் கிமு 83ல் கார்னெலியாவுடன் நடைபெற்றது. கர்னெலியா பிரசவத்தின் பொழுது இறக்கும் (கிமு 68 அல்லது 69) வரை இந்த உறவு தொடர்ந்தது.
  • இரண்டாவது திருமணம் கிமு 67ல் பொம்பெயாவுடன் நடந்தது. இந்த உறவு கிமு 61ல் விவாகரத்து பெறும் வரை தொடர்ந்தது.
  • மூன்றாவது திருமணம் கிமு 59ல் Calpurnia Pisonisவுடன் நடந்தது. இந்த உறவு சீசரின் மரணம் வரை தொடர்ந்தது.

குழந்தைகள்[தொகு]

  • ஜூலியா, கிமு 83 அல்லது 82ல் கார்னெலியா ஜூலியஸ் சீசர் தம்பதிகளுக்குப் பிறந்தவர்.
  • சிசேரியன், கிமு 47ல் ஏழாம் கிளியோபாற்றா மற்றும் ஜூலியஸ் சீசருக்கு பிறந்தவர். இவர் 17ம் வயதில் ஆக்டோவியஸ் என்ற சீசரின் வளர்ப்பு மகனால் கொல்லப்பட்டார்.
  • பேரரசர் அகஸ்ட்டஸ் - ஜூலியஸ் சீசரின் வளர்ப்பு மகனாவார். இவர் சீசர் சகோதரியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
  • மார்கஸ் ஜுனியஸ் புருட்டஸ்

பேரப்பிள்ளைகள்[தொகு]

பாம்பே மற்றும் சீசரின் மகள் ஜூலியாவிற்குப் பிறந்த பெயரிடப்படாத குழந்தை. இக்குழந்தை சில நாட்களில் இறந்தது

காதலிகள்[தொகு]

குறிப்பிடத்தக்க உறவினர்கள்[தொகு]

இலக்கிய படைப்புகள்[தொகு]

ஜூலியஸ் சீசர் தனது வாழ்க்கை வரலாற்றினை மூன்று பாகங்களாக எழுதியிருக்கிறார். அத்துடன் படையெடுப்புகளை விவரித்து ஏழு பாகங்கள் கொண்ட நூலினை எழுதியுள்ளார்.

நாடகங்கள்[தொகு]

சீசரை மையமாக வைத்து எழுதப்பெற்ற நாடகங்கள்

  • ஜூலியஸ் சீசர் – வில்லியம் ஷேக்ஸ்பியர்
  • சீசர் அன்ட் கிளியோபட்ரா – பெர்னாட்சா

மரபு[தொகு]

யுத்தங்கள்[தொகு]

தேதி போர் நடவடிக்கை எதிரிகள் வகை தற்காலப் பகுதி முடிவு
58 பொ. ஊ. மு. 58 பொ. ஊ. மு. கௌல் போர்கள் Arar அரார் யுத்தம் .கெல்வேதீ யுத்தம் பிரான்சு வெற்றி

58 பொ. ஊ. மு. 58 பொ. ஊ. மு. Mount Haemus பிப்ரக்தே யுத்தம் கெல்வேதீ, போயீ, துலிங்கி, ரௌரசி யுத்தம் பிரான்சு வெற்றி

58 பொ. ஊ. மு. 58 பொ. ஊ. மு. Vosges வோசுகேசு யுத்தம் .சுவேபி யுத்தம் பிரான்சு வெற்றி

57 பொ. ஊ. மு. 57 பொ. ஊ. மு. அக்சோனா யுத்தம் .பெல்கே யுத்தம் பிரான்சு வெற்றி

57 பொ. ஊ. மு. 57 பொ. ஊ. மு. யுத்தம் of the Sabis சபிசு யுத்தம் .நெர்வீ, விரோமந்துயி, அத்ரேபதேசு, அதுவாதுசி யுத்தம் பிரான்சு வெற்றி

55 மற்றும் 54 பொ. ஊ. மு.55 மற்றும் 54 பொ. ஊ. மு. Julius Caesar's invasions of Britainசூலியசு சீசரின் பிரித்தானியப் படையெடுப்புகள் .பழங்கால பிரித்தானியர் போர்ப் பயணம் இங்கிலாந்து வெற்றி

54 பொ. ஊ. மு.–53 பொ. ஊ. மு. 54 பொ. ஊ. மு.–53 பொ. ஊ. மு. Ambiorix's revoltஅம்பியோரிக்சின் கிளர்ச்சி .எபுரோனெசு போர்ப் பயணம் பெல்ஜியம், பிரான்சு வெற்றி

52 பொ. ஊ. மு. 52 பொ. ஊ. மு. Avaricum அவரிகம் .பிதுரிகேசு, அர்வேர்னி முற்றுகை பிரான்சு வெற்றி

52 பொ. ஊ. மு. 52 பொ. ஊ. மு. யுத்தம் of Gergovia கெர்கோவியா யுத்தம் .கௌல் பழங்குடியினங்கள் யுத்தம் பிரான்சு தோல்வி
செப்தெம்பர் 52 பொ. ஊ. மு. யுத்தம் of Alesia அலேசியா யுத்தம் .கௌல் கூட்டமைப்பு முற்றுகை மற்றும் யுத்தம் அலீசு-செயின்-ரெயின், பிரான்சு தீர்க்கமான வெற்றி

51 பொ. ஊ. மு. 51 பொ. ஊ. மு. முற்றுகை of Uxellodunum உக்செல்லோதுனும் முற்றுகை .கௌல் முற்றுகை வய்ரக், பிரான்சு வெற்றி

June–August 49 பொ. ஊ. மு. சூன்–ஆகத்து 49 பொ. ஊ. மு. சீசரின் உள்நாட்டுப் போர் யுத்தம் of Ilerda இலேர்தா யுத்தம் ஆப்திமேத்தசு. யுத்தம் காத்தலோனியா, எசுப்பானியா வெற்றி

10 July 48 பொ. ஊ. மு. 10 சூலை 48 பொ. ஊ. மு. திர்ராச்சியம் யுத்தம் (48 பொ. ஊ. மு.) .ஆப்திமேத்தசு யுத்தம் துர்ரேசு, அல்பேனியா தோல்வி

9 August 48 பொ. ஊ. மு. 9 ஆகத்து 48 பொ. ஊ. மு. பர்சலுசு யுத்தம் .பாம்பே யுத்தம் கிரேக்கம் தீர்க்கமான வெற்றி

47 பொ. ஊ. மு. 47 பொ. ஊ. மு. நைல் யுத்தம் .தாலமி பேரரசு யுத்தம் அலெக்சாந்திரியா, எகிப்து வெற்றி

2 August 47 பொ. ஊ. மு. 2 ஆகத்து 47 பொ. ஊ. மு. செலா யுத்தம் .பாந்துசு இராச்சியம் யுத்தம் சிலே, துருக்கி வெற்றி

4 January 46 பொ. ஊ. மு. 4 சனவரி 46 பொ. ஊ. மு. யுத்தம் of Ruspina உருசிபினா யுத்தம் .ஆப்திமேத்தசு, நுமிதியா யுத்தம் உருசுபினா ஆப்பிரிக்கா தோல்வி

6 April 46 பொ. ஊ. மு. 6 ஏப்பிரல் 46 பொ. ஊ. மு. யுத்தம் of Thapsus தப்சுசு யுத்தம் .ஆப்திமேத்தசு, நுமிதியா யுத்தம் தூனிசியா தீர்க்கமான வெற்றி

17 March 45 பொ. ஊ. மு. 17 மார்ச்சு 45 பொ. ஊ. மு. யுத்தம் of Munda முண்டா யுத்தம் .பாம்பே யுத்தம் அந்தலூசிய எசுப்பானியா வெற்றி

மேற்கோள்கள்[தொகு]

  1. Badian 2009, ப. 16
  2. Keppie, Lawrence (1998). "The approach of civil war". The Making of the Roman Army: From Republic to Empire. Norman, OK: University of Oklahoma Press. பக். 102. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8061-3014-9. https://archive.org/details/makingofromanarm0000kepp_a7q6. 
  3. Tucker, Spencer (2010). Battles That Changed History: An Encyclopedia of World Conflict. ABC-CLIO. பக். 68. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-59884-430-6. https://archive.org/details/battlesthatchang00tuck_956. 
  4. Badian 2009, ப. 16
  5. Goldsworthy 2006, ப. 32–33.
  6. Goldsworthy 2006, ப. 35.
  7. Badian 2009, ப. 14; Goldsworthy 2006, ப. 31–32
  8. Badian 2009, ப. 15 dates the land commission to 103 per MRR 3.109; Goldsworthy 2006, ப. 33–34; Broughton 1952, ப. 22, dating the proconsulship to 91 with praetorship in 92 BC and citing, among others, வார்ப்புரு:CIL and வார்ப்புரு:CIL.
  9. Badian 2009, ப. 16.
  10. Badian 2009, ப. 16
  11. Goldsworthy 2006, ப. 34.
  12. Badian 2009, ப. 16–17, stating Caesar was placed on the lists. Cf, stating Caesar was only summoned for interrogation, Hinard, François (1985) (in fr). Les proscriptions de la Rome républicaine. Ecole française de Rome. பக். 64. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-2-7283-0094-5. இணையக் கணினி நூலக மையம்:1006100534. https://books.google.com/books?id=-3UaAAAAIAAJ. 
  13. Badian 2009, ப. 16–17
  14. Plut. Caes., 1.4; Suet. Iul., 1.3.
  15. Badian 2009, ப. 17
  16. Badian 2009, ப. 17–18.
  17. Suet. Iul., 2–3; Plut. Caes., 2–3; Dio, 43.20.
  18. Badian 2009, ப. 17.
  19. Badian 2009, ப. 18, citing Suet. Iul., 3.
  20. Morstein-Marx 2021, ப. 35.
  21. Alexander 1990, ப. 71 (Trial 140) noting also that Tac. Dial., 34.7 wrongly places the trial in 79 BC; Alexander 1990, ப. 71–72 (Trial 141).
  22. Badian 2009, ப. 18.
  23. Pelling, C B R (2011). Plutarch: Caesar. Oxford: Oxford University Press. பக். 139–41. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-814904-0. இணையக் கணினி நூலக மையம்:772240772.  Vell. Pat., 2.42.3 reports that the governor wanted to enslave and sell the pirates but that Caesar returned quickly and had them executed. Pelling believes the second part of Vell. Pat.'s narrative – along with other sources (Plut. Caes., 1.8–2.7; Suet. Iul., 4) – are literary embellishment and that the pirates were enslaved and sold.
  24. Badian 2009, ப. 19
  25. Goldsworthy 2006, ப. 78.
  26. Badian 2009, ப. 19; Broughton 1952, ப. 114, 125; Vell. Pat., 2.43.1 (pontificate); Plut. Caes., 5.1 and Suet. Iul., 5 (military tribunate).
  27. Badian 2009, ப. 19, citing Suet. Iul., 5.
  28. Morstein-Marx 2021, ப. 63.
  29. Badian 2009, ப. 19–20; Broughton 1952, ப. 126, 128, 130 n. 4
  30. Badian 2009, ப. 20; Broughton 1952, ப. 132. Badian 2009, ப. 21 cites Suet. Iul., 6.1 for the incipit of Caesar's eulogy.
  31. Morstein-Marx 2021, ப. 43.
  32. Plut. Caes., 5.2–3.
  33. Morstein-Marx 2021, ப. 43–46.
  34. Morstein-Marx 2021, ப. 46
  35. Gruen 1995, ப. 79–80.
  36. Mouritsen, Henrik (2001). Plebs and politics in the late Roman Republic. Cambridge University Press. பக். 97. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-511-04114-4. இணையக் கணினி நூலக மையம்:56761502.  See also Broughton 1952, ப. 158 and Plut. Caes., 6.1–4.
  37. Broughton 1952, ப. 158.
  38. Morstein-Marx 2021, ப. 46–47.
  39. Morstein-Marx 2021, ப. 48–49.
  40. Morstein-Marx 2021, ப. 64, 64 n. 129
  41. Morstein-Marx 2021, ப. 64–65
  42. Morstein-Marx 2021, ப. 66, citing Suet. Iul., 13; Plut. Caes., 7.1–4; Dio, 37.37.1–3.
  43. Morstein-Marx 2021, ப. 67–68.
  44. Gruen 1995, ப. 80–81.
  45. Morstein-Marx 2021, ப. 69 n. 148.
  46. Morstein-Marx 2021, ப. 71.
  47. Alexander 1990, ப. 110
  48. Gruen 1995, ப. 80 See also Suet. Iul., 17.
  49. Morstein-Marx 2021, ப. 72–77 Gruen 1995, ப. 429 n. 107 calls the view that Caesar was one of the masterminds of the conspiracy "long... discredited and requires no further refutation".
  50. Morstein-Marx 2021, ப. 85–86, 90.
  51. Morstein-Marx 2021, ப. 92. Earlier sources being Cic. Cat., 4.8–10 and Sall. Cat., 51.42. Later sources include Plut. Caes., 7.9 and App. BCiv., 2.6.
  52. Gruen 1995, ப. 281–82.
  53. Morstein-Marx 2021, ப. 102.
  54. Morstein-Marx 2021, ப. 102–04.
  55. Morstein-Marx 2021, ப. 107 Dio reports a senatus consultum ultimum. Broughton 1952, ப. 173
  56. Morstein-Marx 2021, ப. 109.
  57. Plut. Caes., 10.9.
  58. Morstein-Marx 2021, ப. 110
  59. Drogula 2019, ப. 97–98.
  60. Broughton 1952, ப. 173, 180. Most sources give a proconsular dignity. After the Sullan era, all magistrates were prorogued pro consule. Badian, Ernst; Lintott, Andrew (2016). "pro consule, pro praetore". Oxford Classical Dictionary. Oxford University Press. doi:10.1093/acrefore/9780199381135.013.5337. ISBN 978-0-19-938113-5.
  61. Morstein-Marx 2021, ப. 109–10.
  62. Broughton 1952, ப. 180.
  63. Morstein-Marx 2021, ப. 110–11.
  64. Morstein-Marx 2021, ப. 111.
  65. Morstein-Marx 2021, ப. 112–13.
  66. Morstein-Marx 2021, ப. 114; Plut. Caes., 13; Suet. Iul., 18.2.
  67. Gruen 2009, ப. 28.
  68. Gruen 2009, ப. 30–31.
  69. Gruen 2009, ப. 28; Broughton 1952, ப. 158, 173 On credit for the aedilican games, see Suet. Iul., 10, Dio, 37.8.2, and Plut. Caes., 5.5.
  70. Morstein-Marx 2021, ப. 119
  71. Ridley, R (1999). "What's in the Name: the so-called First Triumvirate". Arctos: Acta Philological Fennica 33: 133–44. https://journal.fi/arctos/article/download/85987/44908.  The first usage of the term was in 1681.
  72. Gruen 2009, ப. 31.
  73. Gruen 2009, ப. 31; Morstein-Marx 2021, ப. 121–22
  74. 74.0 74.1 Gruen 2009, ப. 32.
  75. Morstein-Marx 2021, ப. 125–29.
  76. Morstein-Marx 2021, ப. 130, 132.
  77. Morstein-Marx 2021, ப. 138.
  78. Morstein-Marx 2021, ப. 139–40.
  79. Wiseman 1994, ப. 372.
  80. Morstein-Marx 2021, ப. 143 (Bibulus), 147 (dating to May).
  81. Wiseman 1994, ப. 374.
  82. Drogula 2019, ப. 137.
  83. Gruen 2009, ப. 33, noting that the lex Vatinia was "no means unprecedented... or even controversial".
  84. Morstein-Marx 2021, ப. 175, citing Balsdon, J P V D (1939). "Consular provinces under the late Republic – II. Caesar's Gallic command". Journal of Roman Studies 29: 167–83. doi:10.2307/297143. பன்னாட்டுத் தர தொடர் எண்:0075-4358. https://www.jstor.org/stable/297143.  Moreover, Caesar's eventual provinces of Trans- and Cisalpine Gaul had been assigned to the consuls of 60 and therefore would have been unavailable. Rafferty, David (2017). "Cisalpine Gaul as a consular province in the late Republic". Historia: Zeitschrift für Alte Geschichte 66 (2): 147–172. doi:10.25162/historia-2017-0008. பன்னாட்டுத் தர தொடர் எண்:0018-2311. https://www.jstor.org/stable/45019257. 
  85. Morstein-Marx 2021, pp. 176–77; Gruen 2009, p. 34.
  86. Morstein-Marx 2021, ப. 143: Dio, 38.6.5 and Suet. Iul., 20.1 say around late January; Plut. Pomp., 48.5 says in early May; Vell. Pat., 2.44.5 says May.
  87. Morstein-Marx 2021, ப. 142–44.
  88. Gruen 2009, ப. 34
  89. Morstein-Marx 2021, ப. 150–51
  90. Gruen 2009, ப. 34.
  91. Drogula 2019, ப. 138–39, noting Cato's support of Caesar's anti-corruption bill and the possibility that Cato gave input for some of its provisions.
  92. Morstein-Marx 2021, ப. 182–83, 182 n. 260, citing Suet. Iul., 23.1; pace Ramsey 2009, ப. 38.
  93. Goldsworthy 2006, ப. 186–87.
  94. Goldsworthy 2006, ப. 188–89.
  95. Goldsworthy 2006, ப. 189–90.
  96. Goldsworthy 2006, ப. 204.
  97. Goldsworthy 2006, ப. 205, 208–10.
  98. Goldsworthy 2016, ப. 212–15.
  99. Goldsworthy 2016, ப. 217.
  100. Goldsworthy 2016, ப. 220.
  101. 101.0 101.1 Boatwright 2004, ப. 242.
  102. Goldsworthy 2016, ப. 203.
  103. Goldsworthy 2016, pp. 221–22; Boatwright 2004, p. 242.
  104. Goldsworthy 2016, ப. 222.
  105. Goldsworthy 2016, ப. 223.
  106. Goldsworthy 2016, pp. 229–32, 233–38; Boatwright 2004, p. 242.
  107. Gruen 1995, ப. 98
  108. Ramsey 2009, ப. 37–38.
  109. Morstein-Marx 2021, ப. 194
  110. Ramsey 2009, ப. 39.
  111. Morstein-Marx 2021, ப. 220
  112. Morstein-Marx 2021, pp. 196, 220; Ramsey 2009, pp. 39–40.
  113. Morstein-Marx 2021, ப. 220–21.
  114. Ramsey 2009, ப. 39–40.
  115. Morstein-Marx 2021, ப. 229.
  116. Ramsey 2009, pp. 41–42; Morstein-Marx 2021, p. 232.
  117. Ramsey 2009, p. 43; Morstein-Marx 2021, pp. 232–33.
  118. Ramsey 2009, p. 44; Morstein-Marx 2021, pp. 232–33.
  119. Gruen 1995, ப. 451.
  120. Morstein-Marx 2021, ப. 238, citing Cic. Sest., 51, "hardly anyone has lost popularity among the citizens for winning wars".
  121. Ramsey 2009, ப. 44.
  122. Morstein-Marx 2021, ப. 241ff
  123. Morstein-Marx 2021, ப. 272 n. 42
  124. Ramsey 2009, ப. 46
  125. Gruen 1995, ப. 451–52, 453
  126. Morstein-Marx 2021, ப. 243–44.
  127. Ramsey, J T (2016). "How and why was Pompey made sole consul in 52 BC?". Historia: Zeitschrift für Alte Geschichte 65 (3): 298–324. doi:10.25162/historia-2016-0017. பன்னாட்டுத் தர தொடர் எண்:0018-2311. https://www.jstor.org/stable/45019234. 
  128. Morstein-Marx 2021, ப. 247–48, 260, 265–66.
  129. Wiseman 1994, ப. 412.
  130. Morstein-Marx 2021, ப. 258. See also Appendix 4 in the same book, analysing the conflict between Caesar and Pompey in terms of a கைதியின் குழப்பம்.
  131. Wiseman 1994, ப. 414
  132. Morstein-Marx 2021, p. 270; Drogula 2019, p. 223.
  133. Morstein-Marx 2021, ப. 273.
  134. Morstein-Marx 2021, ப. 272, 276, 295 (identities of Cato's allies).
  135. Morstein-Marx 2021, ப. 291.
  136. Morstein-Marx 2021, ப. 292–93.
  137. Morstein-Marx 2021, ப. 297.
  138. Wiseman 1994, ப. 412–22
  139. Morstein-Marx 2021, ப. 304.
  140. Morstein-Marx 2021, ப. 306.
  141. Morstein-Marx 2021, ப. 308.
  142. Boatwright 2004, p. 247; Meier 1995, pp. 1, 4; Mackay 2009, pp. 279–81; Wiseman 1994, p. 419.
  143. Ehrhardt, C T H R (1995). "Crossing the Rubicon". Antichthon 29: 30–41. doi:10.1017/S0066477400000927. பன்னாட்டுத் தர தொடர் எண்:0066-4774. https://www.cambridge.org/core/journals/antichthon/article/abs/crossing-the-rubicon/80ABC3DF2369F0E3035A2B68FF6B23F1. பார்த்த நாள்: 26 April 2022. "Everyone knows that Caesar crossed the Rubicon because [he would have been...] put on trial, found guilty and have his political career ended... Yet over thirty years ago, Shackleton Bailey, in less than two pages of his introduction to Cicero's Letters to Atticus, destroyed the basis for this belief, and... no one has been able to rebuild it.". 
  144. Morstein-Marx, Robert (2007). "Caesar's alleged fear of prosecution and his "ratio absentis" in the approach to the civil war". Historia: Zeitschrift für Alte Geschichte 56 (2): 159–78. doi:10.25162/historia-2007-0013. பன்னாட்டுத் தர தொடர் எண்:0018-2311. 
  145. Morstein-Marx 2021, ப. 262–63, explaining:
    • Any prosecution was extremely unlikely to succeed.
    • No contemporary source expresses dissatisfaction with an inability to prosecute.
    • No timely charges could have been brought. The possibility of conviction for irregularities during his consulship in 59 was a fantasy when none of Caesar's actions in 59 were overturned. Morstein-Marx 2021, ப. 624.
    • Caesar proposed giving up his command – opening himself up to prosecution – in January 49 BC as part of peace negotiations, something he would not have proposed if he were worried about a sure-fire conviction.
    See also Morstein-Marx 2021, Appendix 2, and, contra Morstein-Marx, Girardet, Klaus Martin (2020) (in de). Januar 49 v. Chr.: Vorgeschichte, Rechtslage, politische Aspekte. Bonn: Dr. Rudolf Habelt GmbH. doi:10.22028/d291-30177. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3-7749-4068-0. https://publikationen.sulb.uni-saarland.de/handle/20.500.11880/28669. 
  146. Morstein-Marx 2021, ப. 247 n. 234, citing Suet. Iul., 26.1; Plut. Pomp., 56.1–3.
  147. Morstein-Marx 2021, ப. 288
  148. Morstein-Marx 2021, ப. 309.
  149. Morstein-Marx 2021, ப. 320.
  150. Beard, Mary (2016). SPQR: a history of ancient Rome. W W Norton. பக். 286. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-84668-381-7. "The exact date is unknown." 
  151. Morstein-Marx 2021, ப. 322.
  152. Morstein-Marx 2021, ப. 331.
  153. Boatwright 2004, ப. 246, citing Plut. Caes., 32.8. Rawson 1994a, ப. 424
  154. Morstein-Marx 2021, ப. 336.
  155. Morstein-Marx 2021, ப. 340 (Caesar's pause), 342 (Caesar's offer), 343 (Pompey's counter-offer), 345 (negotiations collapse).
  156. Morstein-Marx 2021, ப. 347.
  157. Rawson 1994a, ப. 424–25, 427
  158. Rawson 1994a, ப. 430
  159. Boatwright 2004, ப. 252.
  160. Rawson 1994a, ப. 431
  161. Rawson 1994a, ப. 431
  162. Wilson 2021, ப. 309
  163. Rawson 1994a, p. 432; Boatwright 2004, p. 252.
  164. Rawson 1994a, p. 433; Boatwright 2004, pp. 252–53; Plut. Caes., 42–45.
  165. Roller, Duane W (2010). Cleopatra: a biography. Oxford: Oxford University Press. பக். 175. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-536553-5. இணையக் கணினி நூலக மையம்:405105996. https://archive.org/details/cleopatrabiograp00roll_0. 
  166. Walker, Susan (2008). "Cleopatra in Pompeii?". Papers of the British School at Rome 76: 35–46. doi:10.1017/S0068246200000404. பன்னாட்டுத் தர தொடர் எண்:2045-239X. 
  167. Rawson 1994a, ப. 433–34 Boatwright 2004.
  168. Rawson 1994a, ப. 435
  169. Wilson 2021, ப. 309, citing Plut. Caes., 51.1 and Dio, 42.17.1–22.2.
  170. Rawson 1994a, ப. 434, citing Plut. Caes., 50.2 and Suet. Iul., 35.2, 37.2.
  171. Rawson 1994a, ப. 435
  172. Rawson 1994a, ப. 435
  173. Rawson 1994a, ப. 435 n. 58, citing Suet. Iul., 70.
  174. Rawson 1994a, ப. 435.
  175. Rawson 1994a, ப. 435–36.
  176. Rawson 1994a, ப. 436; see also Plut. Caes., 52–54.
  177. Rawson 1994a, p. 436; Boatwright 2004, p. 253.
  178. 178.0 178.1 Rawson 1994a, ப. 436.
  179. Rawson 1994a, ப. 436
  180. Rawson 1994a, ப. 436–37.
  181. Rawson 1994a, ப. 436
  182. 182.0 182.1 Rawson 1994a, ப. 437.
  183. Rawson 1994a, ப. 436
  184. Rawson 1994a, pp. 437–38; Boatwright 2004, pp. 253–54.
  185. Wilson 2021, ப. 309.
  186. 186.0 186.1 Badian 2012.
  187. Wilson 2021, ப. 311–13. "In the view of the ancient historians and biographers self-tasked with assessing Caesar's rule, his dictatorships, and indeed his consulships... were incidental to the authority he possessed on account of being himself".
  188. See Wilson 2021, ப. 313 n. 46. Meier 1995, ப. 474–75.
  189. Wilson 2021, ப. 314.
  190. Lintott 1999, ப. 21; eg Livy (1905) (in ஆங்கில மொழி). Wikisource link to From the Founding of the City. Wikisource. 31.5–7. 
  191. Wilson 2021, ப. 314–15.
  192. Titus Quinctius Flamininus was the first Roman to appear on coinage, specifically on a stater minted after the Second Macedonian War. Caesar was the first portrait of a living Roman on coins meant to circulate in Rome. Sellars, Ian J (2013). The monetary system of the Romans. பக். 33. https://books.google.com/books?id=m_Y-CgAAQBAJ. "Though technically not the first living Roman to appear on coinage... Caesar was the first to appear on the coins of Rome." 
  193. West, R (2005). "The chronological development of Roman provincial coin iconography". in Howgego, Christopher. Coinage and identity in the Roman provinces. Oxford University Press. பக். 44. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-19-926526-7. "As far as the Roman republican coinage is concerned, a major change occurred when Caesar became the first living Roman to have his portrait depicted on Roman coins." 
  194. Meier 1995, ப. 473–74.
  195. Meier 1995, ப. 448. "He acted as he saw fit. Others had no right even to be informed of his intentions... Rome still had a Senate and magistrates, but they were not free in their decision-making... in all matters the decisive authority lay with Caesar alone".
  196. Badian 2012; Meier 1995, pp. 447–48.
  197. Wilson 2021, p. 318; Badian 2012; Meier 1995, p. 447.
  198. Badian 2012 for administration and colonial activity. Wilson 2021, ப. 318 Meier 1995, ப. 464 notes "such a large membership [in the Senate] would certainly make the house incapable of functioning properly, but it enabled Caesar to show favour to many".
  199. Meier 1995, ப. 464.
  200. Wilson 2021, p. 318; Lintott 1999, p. 160.
  201. Wilson 2021, ப. 318.
  202. 202.0 202.1 Meier 1995, ப. 447.
  203. Wilson 2021, ப. 319, 321.
  204. Wilson 2021, ப. 319.
  205. Wilson 2021, ப. 321–22.
  206. Meier 1995, ப. 447–49.
  207. Meier 1995, ப. 462.
  208. Wilson 2021, ப. 322 n. 92 on favours for clients. Wilson 2021, ப. 322 n. 94, noting Suet. Iul., 54.1–3 reporting on Caesar looting and extorting client states and Dio, 42.49–50, 43.24 on Caesar's forced loans to pay soldiers.
  209. Crawford, Michael Hewson (1974). Roman republican coinage. Cambridge University Press. பக். 514. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-521-07492-6. https://books.google.com/books?id=w0pmAAAAMAAJ. 
  210. Meier 1995, ப. 476.
  211. Morstein-Marx 2021, p. 522 (noting attempts to restore the tribunes to office after Caesar's death); Tempest 2017, p. 81.
  212. Meier 1995, ப. 474, 476.
  213. Badian, Ernst (1990). "Review of "Caesar"". Gnomon 62 (1): 35. பன்னாட்டுத் தர தொடர் எண்:0017-1417. "At this point, some time in early February 44, no one could persuade himself that the res publica would ever be restored as long as Caesar lived.". 
  214. Meier 1995, ப. 476–77.
  215. Meier 1995, ப. 479.
  216. Morstein-Marx 2021, ப. 561–62.
  217. Morstein-Marx 2021, ப. 556.
  218. Meier 1995, ப. 480.
  219. Morstein-Marx 2021, ப. 556, noting Basilus and Cimber as praetors in 45 and Casca as plebeian tribune in 44 or 43..
  220. Morstein-Marx 2021, ப. 560.
  221. Tempest 2017, p. 93; Meier 1995, p. 465 ("their dignity would have been spurious"); Morstein-Marx 2021, pp. 547–48, 549–50 ("honores obtained as a personal favour rather than by a judgment of the People were in fact no 'honour' at all").
  222. Morstein-Marx 2021, ப. 553.
  223. Tempest 2017, p. 41; Meier 1995, pp. 480–81.
  224. Morstein-Marx 2021, ப. 524–25 gives a number of examples:
    • Plut. Brut., 9.6: "If only you lived now, Brutus", on the Capitoline statue of Lucius Brutus.
    • Suet. Iul., 80.3: "If only you [Lucius Brutus] were alive".
    • App. BCiv., 2.112: "[Lucius Brutus,] your descendants are unworthy of you", challenging Marcus Brutus to act.
    • Suet. Iul., 80.3: "Brutus became the first consul, since he had expelled the kings; This man [Caesar] at last became king, since he had expelled the consuls", on a statue of Caesar.
    • Plut. Brut., 9.7; Plut. Caes., 62.7; App. BCiv., 2.112; Dio, 44.12.3: graffiti at Marcus Brutus' praetorian seat in the forum challenging him as asleep, corrupt, or not a true descendant of the Lucius Brutus who founded the republic.
  225. Morstein-Marx 2021, pp. 523, 526–27, 528 (calling the belief in modern scholarship that Caesar remained "the darling of the People" unsupported by the evidence and "infantilising"); Tempest 2017, pp. 86–87.
  226. Morstein-Marx 2021, ப. 528 (debts), 529 (lethal force, corn dole, collegia), 530 (juries, elections).
  227. Morstein-Marx 2021, ப. 548 (the two candidates for the consulship of 43 BC were the only two men allowed to stand), 550.
  228. Morstein-Marx 2021, ப. 318, 573–75.
  229. Tempest 2017, ப. 95–99.
  230. Meier 1995, ப. 485.
  231. Morstein-Marx 2021, ப. 563.
  232. Tempest 2017, ப. 99–100.
  233. 233.0 233.1 Tempest 2017, ப. 100.
  234. Meier 1995, ப. 485–86, noting three: Caesar felt unwell and had to be persuaded by a conspirator to attend the Senate; one Artemidorus of Knidos gave Caesar a scroll informing on the conspiracy; the augur Spurinna allegedly prophesied misfortune for Caesar on the Ides.
  235. Tempest 2017, ப. 101–3, citing Suet. Iul., 81–82.
  236. Tempest 2017, p. 3–4, 261 n. 1; Meier 1995, p. 486 (reporting 23 wounds).
  237. Tempest 2017, ப. 261 n. 1 cites all ancient accounts: Nic. Dam., 58–106; Plut. Caes., 60–68; Plut. Brut., 8–20; Suet. Iul., 76–85; App. BCiv., 2.106–147; Dio, 44.9–19.
  238. Mackay 2009, ப. 316.
  239. Rawson 1994b, ப. 469
  240. Rawson 1994b, ப. 470.
  241. Richardson, L (1992). "Iulius, Divus, Aedes". A new topographical dictionary of ancient Rome. Johns Hopkins University Press. 213–14. ISBN 0-8018-4300-6. 
  242. Mackay 2009, pp. 318–19; Rawson 1994b, p. 471.
  243. Mackay 2009, ப. 315–16.
  244. Boatwright 2004, ப. 270–72.
  245. Mackay 2009, ப. 332.
  246. Mackay 2009, ப. 334
  247. Boatwright 2004, ப. 273.
  248. Mackay 2009, p. 335; Boatwright 2004, p. 274.
  249. Meier 1995, ப. 494, 496.
  250. Plut. Caes., 17, 45, 60; Suet. Iul., 45.
  251. Ridley, Ronald T. (2000). "The Dictator's Mistake: Caesar's Escape from Sulla". Historia: Zeitschrift für Alte Geschichte 49 (2): 211–29. பன்னாட்டுத் தர தொடர் எண்:0018-2311. https://www.jstor.org/stable/4436576.  Ridley cites:
  252. Bruschi, Fabrizio (2011). "Was Julius Caesar's epilepsy due to neurocysticercosis?". Trends in Parasitology 27 (9): 373–74. doi:10.1016/j.pt.2011.06.001. பப்மெட்:21757405. https://linkinghub.elsevier.com/retrieve/pii/S1471492211001139. 
  253. McLachlan, Richard S (2010). "Julius Caesar's late onset epilepsy: a case of historic proportions". Canadian Journal of Neurological Sciences 37 (5): 557–561. doi:10.1017/S0317167100010696. பன்னாட்டுத் தர தொடர் எண்:0317-1671. பப்மெட்:21059498. 
  254. Hughes, John R (2004). "Dictator perpetuus: Julius Caesar – Did he have seizures? If so, what was the etiology?". Epilepsy & Behavior 5 (5): 756–64. doi:10.1016/j.yebeh.2004.05.006. பப்மெட்:15380131. https://linkinghub.elsevier.com/retrieve/pii/S152550500400160X. 
  255. Gomez, J G (1995). "Was Julius Caesar's epilepsy due to a brain tumor?". Journal of the Florida Medical Association 82 (3): 199–201. பன்னாட்டுத் தர தொடர் எண்:0015-4148. பப்மெட்:7738524. https://pubmed.ncbi.nlm.nih.gov/7738524. 
  256. William Shakespeare, Julius Caesar I.ii.209.
  257. Paterson 2009, ப. 130.
  258. Pliny, Natural History, vii.181
  259. Galassi, Francesco M.; Ashrafian, Hutan (2015). "Has the diagnosis of a stroke been overlooked in the symptoms of Julius Caesar?". Neurological Sciences 36 (8): 1521–22. doi:10.1007/s10072-015-2191-4. பன்னாட்டுத் தர தொடர் எண்:1590-3478. பப்மெட்:25820216. https://pubmed.ncbi.nlm.nih.gov/25820216. 
  260. Suet. Iul., 45. excelsa statura, colore candido, teretibus membris, ore paulo pleniore, nigris vegetisque oculis.

ஆதாரங்கள்[தொகு]

முதன்மை ஆதாரங்கள்[தொகு]

சொந்த நூல்கள்[தொகு]

பண்டைக் கால வரலாற்றாளர்களின் நூல்கள்[தொகு]

இரண்டாம் நிலை ஆதாரங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

அரசியல் பதவிகள்
முன்னர்
லூசியசு அபிரானியசு
உரோமைப் பேராளர்
பொ. ஊ. மு. 59
இணைந்து: மார்க்கசு கல்புர்னியசு பிபுலுசு
பின்னர்
லூசியசு கல்புர்னியசு பிசோ கசோனினுசு
முன்னர்
லூசியசு கார்னேலியசு லெந்துலுசு குருசு
2ஆம் உரோமைப் பேராளர்
பொ. ஊ. மு. 48
இணைந்து: பப்பிலியசு செர்விலியசு இசௌரிகசு
பின்னர்
குயிந்துசு பாபியசு கலேனசு
முன்னர்
குயிந்துசு பாபியசு கலேனசு
3ஆம் உரோமைப் பேராளர்
பொ. ஊ. மு. 46
இணைந்து: மார்க்கசு ஏமிலியசு லெபிதுசு
பின்னர்
இவரே
சக நபரின்றி
முன்னர்
இவரே
4ஆம் உரோமைப் பேராளர்
சனவரி–செப்தெம்பர் பொ. ஊ. மு. 45
பின்னர்
இவரே
முன்னர்
இவரே
சக நபரின்றி
5ஆம் உரோமைப் பேராளர்
பொ. ஊ. மு. 44
இணைந்து: மார்க் ஆண்டனி
பின்னர்
பப்பிலியசு கார்னேலியசு தோலபெல்லா
Religious titles
முன்னர்
குயிந்துசு கேசிலியசு மெதேல்லுசு பையசு
பாந்திபெக்சு மேக்சிமசு
பொ. ஊ. மு. 63 – பொ. ஊ. மு. 44
பின்னர்
மார்க்கசு ஏமிலியசு லெபிதுசு
"https://ta.wikipedia.org/w/index.php?title=யூலியசு_சீசர்&oldid=3937266" இலிருந்து மீள்விக்கப்பட்டது