மோசே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மோசே
மோசே பத்துக்கட்டளைகளுடன்ரெம்பிரான்ட்
சுய தரவுகள்
பிறப்பு
கோசேன், கீழ் எகிப்து
இறப்பு
நேபோ மலை, மோவாப்
பதவிகள்

மோசே அல்லது மோயீசன் (எபிரேயம்: מֹשֶׁה‎, Modern Moshe Tiberian Mōšéh ISO 259-3 Moše ; அரபு மொழி: موسى Mūsā ) என்பவர் என்பவர் எபிரேய விவிலியம், திருக்குர்ஆன் மற்றும் பகாய் சமய நூல்களின் படி, இவர் ஓர் இறைவாக்கினர் சமயத்தலைவர் மற்றும் சட்டம் அளித்தவர் என்று அறியப்படுகிறார். யூத மரபுப்படி இம்மதத்தின் படிப்பினைகள் அனைத்தையும் தொகுத்து இவரே தோராவை எழுதினார். யூத சமயத்தின் முக்கியமான தீர்க்கதரிசிகளில் ஒருவராக மோசே கருதப்படுகிறார்.[1] கிறித்துவத்திலும் ஆபிரகாமிய சமயங்களிலும் இவர் மிகவும் குறிக்கத்தக்கவராவாகவும் விளங்குகிறார்[2].

தொல்பொருளியளாலர்களிடையே விடுதலைப் பயணம் குறித்தும், மோசேயின் வரலாற்றுத் தன்மைக் குறித்தும் ஒத்தக்கருத்தில்லை.[3][4][5] பலர் இதனை வெண்கலக் காலத்தின் முடிவில் இசுரயேலர்களால் கானான் நாட்டில் இயற்றப்பட்ட புனைவுக்கதையாகக் கருதுகின்றனர்.

விடுதலைப் பயண நூலின் படி இசுரயேலர் எகிப்தில் அடிமைப்பட்டிருந்த காலத்தில் இவர் பிறந்தார் எனக்கூறப்படுகிறது. அடிமைகளாக இருந்த சிறுபான்மையினர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தது; இதனால் எகிப்திய அரசர் தங்களை எகிப்திய எதிரிகளோடு இணைத்துக் கொள்ளலாம் என்று கருதினார்.[6] இதன் தொடர்ச்சியாக எகிப்தில் பெருகிவரும் இசுரேலியர்களின் மக்கள் தொகையைக் குறைப்பதற்காக புதியதாகப் பிறந்த ஆண்குழந்தைகள் அனைவரையும் கொன்று விடும்படியும் ஆணையிட்டார். குழந்தையினைக்கொல்ல மனம்வராத மோசேயின் தாயார் குழந்தை மோசேவை ஒரு கூடையில் வைத்து நைல் நதியில் மிதக்கவிட்டார். கூடை எகிப்தின் இளவரசியால் கண்டெடுக்கப்பட்டு ஓர் அரசக் குடும்பத்தின் தத்துப்பிள்ளையாக வளர்க்கப்பட்டார். ஒரு எகிப்தியனைக் கொன்றதற்காக மிதியான் நாட்டில் பதுங்கியிருந்த போது இவருக்கு கடவுள் அருள் கிடைத்ததாக நம்பப்படுகிறது.[7]

அடிமைத்தனத்திலிருந்து இசுரவேலரை விடுதலை செய்விக்கும்படி கூறி கடவுள் மோசேயை எகிப்துக்கு திருப்பி அனுப்பினார். பேச்சாற்றலுடன் தன்னால் பேச இயலாது [8] என்று மோசே உறுதியுடன் கூறியதைத் தொடர்ந்து, ஆரோன் இவருடைய செய்தித் தொடர்பாளாராக இருக்க அனுமதிக்கப்பட்டார். மேலும் எகிப்தியரை விடுவித்து வரும் வழியில் சீனாய் மலையில் பத்துக் கட்டளைகள் கடவுளிடமிருந்து பெற்று இசுரயேலர்களுக்கு இவர் அளித்தார் எனவும் பாலைவனத்தில் அலைந்து திரிந்த 40 வருடங்களுக்குப் பிறகு, வாக்களிக்கப்பட்ட நாட்டினுள் நுழையாமலேயே இவர் இறந்தார் எனவும் விவிலியம் விவரிக்கின்றது.

மோசேவும் பத்துக் கட்டளைகளின் கற்பலகைகளும்

பாரம்பரிய யூதமதத்தின் படி மோசேயின் காலம் கி.மு 1391–1271 வரை உள்ளதாக நம்பப்படுகின்றது;[9] 4ஆம் நூற்றாண்டினைச்சேர்ந்த புனித ஜெரோம் கி.மு 1592.[10] என்றும் 17ஆம் நூற்றாண்டினைச்சேர்ந்த உஷ்சர் கி.மு 1619 என்றும் இவரின் பிறப்பு ஆண்டினைக் கணிக்கின்றனர்.[11]

விவிலியத்தில் மோசே[தொகு]

கிறிஸ்தவ விவிலியத்தின் யாத்திராகமம் நூலில் மோசேயின் வரலாறு எழுதப்பட்டுள்ளது. இதன் படி மோசேயின் தந்தை அம்ராம் ஆவார் அவரது தாய் யோகெபேத் ஆவார். மோசே இஸ்ரவேலின் லேவி எனப்பட்ட குருத்துவ குலத்தில் பிறந்தார். மோசே இஸ்ரவேல் மக்களை எகிப்தில் அவர்களது அடிமை வாழ்விலிருந்து விடுவித்து பாலைவனமூடாக இஸ்ரவேல் மக்களை கானான் நாடு நோக்கி (தற்போதைய இஸ்ரவேல் பலஸ்தீன நாடுகள் உள்ள பிரதேசம்) வழிநடத்தி சென்றார். மேலும் வழியில் கடவுள் சீனாய் மலை மீது இறைவனது திருச்சட்டத்தை கொடுத்தார். இச்சட்டமே இயேசு வரும் வரைக்கும் மாற்றமின்றி பயன்படுத்தப்பட்ட சட்டமாகும். மோசே வாழ்ந்த காலம் பற்றிய கணக்கீடுகளின் படி மோசே கி.மு. 13-16ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையே வாழ்ந்ததாக கருதப்படுகிறது.

மோசே ஒரே கடவுள் என்ற சித்தாந்தத்தை முதன் முதலாக எடுத்து கூறியவராவார். இது கடவுள் மோசே மூலமாகக் கொடுத்த பத்து கட்டளைகளில் முதலாவதாகும். மோசே கிறிஸ்தவ,இஸ்லாம்,யூத,மற்றும் பஹாய் சயங்களில் ஒரு முக்கிய தீர்க்கதரிசியாகக் கொள்ளப்படுகிறார்.

பிறப்பும் குழந்தைப் பருவமும்[தொகு]

மோசே பறையிலிருந்து நீரை வரவைத்தல்

மோசே, இஸ்ரவேலர் எகிப்தில் பார்வோன் அரசனின் ஆட்சியில் அடிமைகளாக இருக்கும் போது ஒரு அடிமை பெற்றோருக்கு பிறந்தார். அச்சமயம் இஸ்ரவேலரின் சனத்தொகையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பார்வோன் எகிப்தில் ஒரு சட்டத்தைப் பிறப்பித்திருந்தான். அதன்படி இஸ்ரவேலருக்குப் பிறந்த சகல ஆண் குழந்தைகளும் நைல் நதியில் வீசி கொலை செய்யப்பட வேண்டும். விவிலியத்தில் இந்த பாராவோ யார் என குறிப்பிடப்படவில்லை. அனால் ஆய்வாளரின் கருத்துப்படி மூன்றாவது துட்டுமோஸ் (Thutmose III) அல்லது இரண்டாம் ரம்சீஸ் (Ramses II) என கருதப்படுகிறது.

மோசே பிறந்தவுடன் அவரது தாய், குழந்தை அழகுள்ளது எனக்கண்டு, குழந்தையை நதியில் எறிய மனதில்லாது ஆறுமாதம் வரை குழந்தையை வீட்டில் ஒளித்து வைத்தார். மேலும் குழந்தையை ஒளித்துவைக்கக் கூடாமல், ஒரு நாணற்பெட்டியை எடுத்து, அதற்குப் பிசினும் கீலும் பூசி, அதிலே பிள்ளையைக் கிடத்தி, நதியோரமாய் நாணலுக்குள்ளே வைத்தாள். குழந்தைக்கு என்ன நடக்கும் என்பதை அறியும்படி அதன் தமக்கை தூரத்திலே நின்றுகொண்டிருந்தாள். அப்பொழுது பார்வோனுடைய மகள் நதியில் நீராட வந்தாள் அவளுடைய தாதிகள் நதியோரத்தில் இருந்தார்கள். இளவரசி நாணலுக்குள்ளே இருக்கிற பெட்டியைக் கண்டு, தன் தாதியை அனுப்பி அதைக் கொண்டுவரும்படி செய்தாள். அதைத் திறந்தபோது பிள்ளையைக் கண்டாள் பிள்ளை அழுதது அவள் அதின்மேல் இரக்கமுற்று, இது அடிமைகளாக இருக்கும் இஸ்ரவேல் பிள்ளைகளில் ஒன்று என ஊகித்துக்கொண்டாள்.

அப்பொழுது இதைப் பார்த்துக் கொண்டிருந்த குழந்தையின் தமக்கை பார்வோனின் மகளை நோக்கி: உமக்கு இந்தப் பிள்ளையை வளர்க்கும்படி இஸ்ரவேல் பெண்களில் பால்கொடுக்கிற ஒருத்தியை நான் போய் உம்மிடத்தில் அழைத்துக்கொண்டு வரட்டுமா? என்றாள். அதற்கு இளவரசி இணங்கவே அவள் போய் குழந்தையின் தாயையே அழைத்துக் கொண்டுவந்தாள். பின்னர் இளவரசி குழந்தயை அவளிடம் கொடுத்து குழந்தை பால் மறக்கும் வரை வளர்க்கும் பொறுப்பை கொடுத்தார். அதற்காகச் சம்பளமும் கொடுத்தாள்.அப்படியே குழந்தை தன் சுய தயிடமே வளர்ந்தது. பிள்ளை பெரியவனானபோது, அவள் அதைப் பார்வோனுடைய மகளிடத்தில் கொண்டுபோய் விட்டாள்.

மோசே பிறப்பின் விவிலியப் பதிவு, அவருடைய பெயருக்கான குறிப்பிடத்தக்க விளக்கத்தை ஒரு நாட்டுப்புற சொற்பிறப்பியல் விளக்கமாக வழங்குகிறது [12]. அரசருடைய மகளான இளவரசிக்கு இவர் மகனாகிய போது மோசே என்ற பெயரை பெற்றுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. செங்கடல் தண்ணிரில் இருந்து வெளியே எடுத்த காரணத்தால் அவனை நீரிலிருந்து எடுத்தேன் என்று பொருள்படும்படி, குழந்தைக்கு மோசே என்று பெயரிட்டாள்.

கிறித்தவத்தில்[தொகு]

மோசே
மோசே பாறையை அடித்தல்
இறைவாக்கினர்
பிறப்புகோசேன், கீழ் எகிப்து
இறப்புநேபோ மலை, மோவாப்
ஏற்கும் சபை/சமயங்கள்யூதம்
இசுலாம்
கிறித்தவம்
திருவிழாகிழக்கு மரபுவழி திருச்சபை மற்றும் கத்தோலிக்க திருச்சபையில்: செப்டம்பர் 4
சித்தரிக்கப்படும் வகைபத்துக்கட்டளைகளோடு

விடுதலைப்பயணம் விடுத்து பிற பழைய ஏற்பாடு நூல்கள் அனைத்தயும் விட மோசே புதிய ஏற்பாடு நூல்களில் அதிகம் குறிக்கப்படுகின்றார். கிறித்தவத்தில், இவர் இறை சட்டத்தின் அடையாளமாகக் கருதப்படுகின்றார். இது இயேசு கிறித்துவின் போதனைகளில் வெளிப்படுகின்றது. புதிய ஏற்பாட்டின் ஆசிரியர்கள் இயேசுவின் நற்செய்தியினை விளக்க இயேசுவின் செயல்களையும் மோசேயின் வார்த்தைகளையும் அடிக்கடி ஒப்புமை படுத்தியுள்ளனர். திருத்தூதர் பணிகள் 7:39–43, 51–53,இல் இசுரயேலரின் மூதாதையர் மோசேவுக்குக் கீழ்ப்படிய விரும்பாமல் அவரை உதறித் தள்ளியதும் கன்றுக்குட்டிச் சிலையைச் செய்து அதற்குப் பலி செலுத்தியதும் இயேசுவின் நற்செய்தியினை ஏற்க மறுப்பவரோடு ஒப்பிடப்படுகின்றது.

இயேசுவின் போதனைகள் பலவற்றிலும் மோசே இடம்பெற்றுள்ளார். யோவான் நற்செய்தி 3ஆம் அதிகாரத்தில், பரிசேயரும் யூதத் தலைவர்களுள் ஒருவருமான நிக்கதேமோடு உரையாடுகையில் "பாலைநிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டது போல மானிடமகனும் உயர்த்தப்பட வேண்டும். அப்போது அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர். என்று குறிப்பிடுகின்றார்.

மத்தேயு நற்செய்தி 17, மாற்கு நற்செய்தி 9, மற்றும் லூக்கா நற்செய்தி 9, ஆகிய புதிய ஏற்பாட்டு நூல்களில் இயேசு தோற்றம் மாறுதல் நிகழ்வில் எலியாவுடன் மோசேவும் இயேசுவோடு பேசுவதாக அமைந்துள்ளது. பிற்கால கிறித்தவர்கள் மோசேயின் வாழ்வோடும், இயேசுவின் வாழ்வோடும் பல ஒப்புமைகளைக்கண்டனர். இயேசுவின் பிறப்பின் போது நடந்த மாசில்லா குழந்தைகள் படுகொலையும் அதிலிருந்து இயேசு தப்பித்ததும், மோசேயின் பிறப்பின் போது குழந்தைகள் படுகொலையும் அதிலிருந்து மோசே தப்பித்ததும் ஒரு எடுத்துக்காட்டாகும்.

ஐக்கிய அமெரிக்க கீழவையில் உள்ள மோசேயின் புடைப்புச் சிற்பம்.

கிழக்கு மரபுவழி திருச்சபை, கத்தோலிக்க திருச்சபை மற்றும் லூதரனியத்தில் இவரின் விழா நாள் செப்டம்பர் 4 ஆகும்.[13] அர்மேனிய திருத்தூதர் திருச்சபையில் இவரின் விழா நாள் ஜூலை 30 ஆகும்.

மொர்மனியத்தில்[தொகு]

மற்ற கிறித்தவப் பிரிவுகளைவிடவும் பின்னாள் புனிதர் இயக்க மரபினைச் சேர்ந்த மொர்மனியத்தில் பல கூடுதல் நம்பிக்கைகள் உள்ளன. இவர்கள் விவிலிய விவரிப்பினை ஏற்றாலும், அதோடு, மோசே இறக்காமல் விண்ணகம் சென்றதாகவும் நம்புகின்றனர். மோசேயின் புத்தகங்கள் என்னும் நூலையும் தங்களின் புனித நூலாகக்கருதுகின்றனர்.[14] இந்த நூலை பிற கிறித்தவ பிரிவினர் திருமுறையாக ஏற்பதில்லை.[15]

இரண்டாம் யோசப்பு இசுமித்து மற்றும் ஆலிவர் கௌடரி ஏப்ரல் 3, 1836 அன்று மோசே மகிமையில் அவர்களுக்குக் காட்சியளித்ததாகவும் அவர்களிடம் பூமியின் நான்கு பாகங்களில் உள்ள இசுரயேலரினை கூட்டிச்சேர்க்கவும், மற்றும் வடக்கு நிலத்தில் வாழும் பத்து பழங்குடியினரை வழிநடத்தவும் சாவிகளை அவர்களிடம் அளித்ததாகக் கூறியுள்ளனர்.[16]

இசுலாமில்[தொகு]

திருக்குர்ஆன் அதிகமுறை குறிப்பிடப்பட்டுள்ள நபர் மோசே ஆவார். நபிமார்கள் அனைவரிலும் இவரின் வாழ்வே அதிகம் சித்தரிக்கப்படுள்ளது.[17][18] மோசேவின் பெயர் குர்ஆனில் 502 தடவை குறிப்பிடப்பட்டுள்ளது. 49-61, 7.103-160, 10.75-93, 17.101-104, 20.9-97, 26.10-66, 27.7-14, 28.3-46, 40.23-30, 43.46-55, 44.17-31, மற்றும் 79.15 -25 பத்திகளில் மோசே இடம்பெற்றிருப்பதைக் காணலாம். . மோசேயுடைய வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகளில் பெரும்பாலானவை விவிலியத்தில் இடம்பெற்றுள்ளன.

பகாய் சமயத்தில்[தொகு]

பகாய் சமயத்தில் மோசே கடவுளின் தூதராக கருதப்படுகின்றார்.[19] மோசேக்கு இச்சமயத்தாரால் கொடுக்கப்படும் ஒரு அடைமொழி கடவுளோடு உரையாடுபவர் என்பது ஆகும்.[20] பகாவுல்லாவின் வெளிப்படுத்துதலுக்கு மோசே வழிவகுத்தார் என இவர்கள் நம்புகின்றனர்.[21] அப்துல்பகா போன்ற பகாய் சமயத்தின் முக்கிய நபர்கள் ஆபிரகாமைப் போலவே மோசேவும் வரலாற்றில் மிகப்பெரிய நிகழ்வுகளுக்கு காரணமாக இருக்கவில்லை என்கின்றனர். ஆனால் கடவுளுடைய உதவியால் மோசே பல அரிய சாதனைகளை நிகழ்த்தியவர் என்பதை ஏற்கின்றனர். வனாந்தரத்திலே ஒரு மேய்ப்பனாக இருப்பதாக மோசே விவரிக்கப்படுகிறார். பகாவுல்லாவிற்கும் அவரது இறுதி வெளிப்பாட்டிற்கும் வழிகாட்டியாகவும், சத்தியத்தின் ஆசிரியராகவும் மோசே விளங்கினார். இவருடைய போதனைகள் அவருடைய காலத்தின் பழக்கவழக்கத்திற்கு இசைவாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.[22]

இறப்பு[தொகு]

மோசே மரணமடைந்தபோது 120 வயதுடையவராக இருந்தார்" இன்றுவரை அவரது எங்கு இறந்தார் என்பது யாருக்கும் தெரியாது. இறக்கும் வரை இவருடைய கண் மங்கிப்போகவில்லை, அவருடைய பலமும் குறைவுபடவில்லை. 120 வயதுவரை நீங்கள் வாழலாம்" என்ற சொற்றொடர் யூதர்களிடையே பொதுவான ஆசீர்வாதமாக மாறியுள்ளது,

இதையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Maimonides, 13 principles of faith, 7th principle
  2. Deuteronomy 34:10
  3. "Princeton University Press Press Reviews, retrieved 6th June 2009". Press.princeton.edu. 2011-11-06. பார்க்கப்பட்ட நாள் 2012-04-03.
  4. The Quest for the Historical Israel: Debating Archeology and the History of Early Israel, 2007, Society of Biblical Literature, Atlanta, ISBN 978-1-58983-277-0.
  5. John Van Seters, "The life of Moses", ISBN 90-390-0112-X
  6. Exodus 1:10
  7. Douglas K. Stuart (15 June 2006). Exodus: An Exegetical and Theological Exposition of Holy Scripture. B&H Publishing Group. பக். 110-113. 
  8. Exod. 4:10
  9. Seder Olam Rabbah[Full citation needed]
  10. ஜெரோமின் Chronicon (4th century)
  11. Annals of the World, 1658
  12. Naomi E. Pasachoff, Robert J. Littman, A Concise History of the Jewish People, Rowman & Littlefield, (1995) 2005 p.5.
  13. Great Synaxaristes: (கிரேக்கம்) Ὁ Προφήτης Μωϋσῆς. 4 Σεπτεμβρίου. ΜΕΓΑΣ ΣΥΝΑΞΑΡΙΣΤΗΣ.
  14. "About Mormons". About Mormons. Archived from the original on 2011-05-11. பார்க்கப்பட்ட நாள் 2010-03-02.
  15. "The Book of Moses". Lightplanet.com. பார்க்கப்பட்ட நாள் 2010-03-02.
  16. The Doctrine and Covenants 110:11
  17. Annabel Keeler, "Moses from a Muslim Perspective", in: Solomon, Norman; Harries, Richard; Winter, Tim (eds.), Abraham's children: Jews, Christians, and Muslims in conversation, by . T&T Clark Publ. (2005), pp. 55 – 66.
  18. திருக்குர்ஆன் 28:7
  19. Historical Context of the Bábi and Bahá'í Faiths
  20. Paradise and Paradigm: Key Symbols in Persian Christianity and the Baháí̕ Faith, Christopher Buck – 1999
  21. The Bahá'í: The Religious Construction of a Global Identity – Page 256, Michael McMullen – 2000
  22. McMullen, Michael (2000), The Bahá'í: The Religious Construction of a Global Identity, p. 256

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மோசே&oldid=3854307" இலிருந்து மீள்விக்கப்பட்டது