மேலைச் சாளுக்கியர்
|
|||||||||||||||||||||||||||||||||
மேலைச் சாளுக்கியர் கி.பி 10 மற்றும் கி.பி 12 நூற்றாண்டுகளுக்கிடையில் தக்காண பீடபூமி மற்றும் தென்னிந்தியாவில் ஆட்சி செலுத்திய மன்னர்கள். இவர்கள் கல்யாணி நகரை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்ததால் கல்யாணிச் சாளுக்கியர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள், இந்நகரம் தற்போதைய கர்நாடகாவில் இருக்கும் பசவகல்யாண் என்ற நகரமாகும். கீழைச் சாளுக்கியரிடம் இருந்து பிரித்துக் காட்டப்படுவேண்டியே மேலைச் சாளுக்கியர் என்று இவர்கள் வழங்கப்படுகிறார்கள். கீழைச் சாளுக்கியர் வேங்கியை தலைநகராகக் கொண்டு தென் இந்தியாவில் ஆட்சி செய்த சாளுக்கிய மன்னர்கள் ஆவர்.
மேலைச் சாளுக்கியர் பல நூற்றாண்டுகளாக இராஷ்டிரகூடர்களின் அடிமைகளாக இருந்து இரண்டாம் தைலப்பனின் தலைமையில் தன்னுரிமையை நிலைநாட்டித் தனிநாடாக உருவெடுத்திருந்தனர். இவர்கள் ஏறக்குறைய ஒரு நூற்றாண்டு காலம் வேங்கி நாட்டைக் கைப்பற்றும் நடவடிக்கையில் சோழ நாட்டுடன் தொடர்ந்து போரிட்டு வந்தனர். எனினும் மேலைச் சாளுக்கியருடன் தாயாதி உறவு இருக்கும் கீழைச் சாளுக்கியர்கள், சோழ அரசுடன் ஏற்பட்ட திருமண உறவுகள் காரணமாக சோழர்களுடன் இணைந்து மேலைச் சாளுக்கியருக்கு எதிராக இயங்கினர். இராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தில் இளவரசனாகயிருந்த இராஜேந்திர சோழன் மேலைச் சாளுக்கியருடனான போரில் வெற்றி பெற்றான்.