மு. இராகவையங்கார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மு. இராகவையங்கார்
பிறப்பு(1878-07-26)26 சூலை 1878
இராமநாதபுரம்
இறப்புபெப்ரவரி 2, 1960(1960-02-02) (அகவை 81)
மானாமதுரை
தேசியம்இந்தியன்
பணிதமிழ்ப் பேராசிரியர்
பணியகம்மதுரைத் தமிழ்ச் சங்கம்
பெற்றோர்முத்துசுவாமி ஐயங்கார்

முத்துசுவாமி இராகவையங்கார் (1878 சூலை 261960 பிப்ரவரி 2) என்னும் மு. இராகவையங்கார் தமிழ், வடமொழி, ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் புலமை பெற்றவர். இவர் தமிழ் ஆய்வாளராகவும், பதிப்பாசிரியராகவும், இதழாசிரியராகவும், சொற்பொழிவாளராகவும், கவிஞராகவும் திகழ்ந்தார்.

பிறப்பு[தொகு]

இராமநாதபுரத்தில் சேதுபதி அவைப்புலவராக விளங்கிய முத்துசுவாமி ஐயங்காருக்கு மகனாக 1878 சூலை 26-ஆம் நாள் இராகவையங்கார் பிறந்தார்.[1] இவர் இளமையிலேயே தம் தந்தையை இழந்துவிட்டார். அதன் பின்னர் பாண்டித்துரைத் தேவர் இவரை வளர்த்துக் கல்வி புகட்டினார்.

அவைக்களப் புலவர்[தொகு]

மு. இராகவையங்கார் இளம் வயதிலேயே தமிழ் இலக்கண, இலக்கியங்களில் தேர்ச்சி பெற்றார். இதனால் 1896-ஆம் ஆண்டில் தம்முடைய பதினெட்டாம் வயதிலேயே பாண்டித்துரைத் தேவரின் அவைக்களப் புலவர் ஆனார்.[2]

தமிழாசிரியர்[தொகு]

பாண்டித்துரைத் தேவரால் 1901-ஆம் ஆண்டில் மதுரைத் தமிழ்ச் சங்கம் தொடங்கப்பட்டது. இதன் ஓர் உறுப்பான செந்தமிழ்க் கல்லூரியில் 1901-ஆம் ஆண்டில் மு. இராகவையங்கார் தமிழாசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார்.[2] அப்பணியை 1912-ஆம் ஆண்டு வரை ஆற்றினார்.

1944-ஆம் ஆண்டில் சென்னை இலயோலாக் கல்லூரியில் கீழ்த்திசை மொழியியல் இளவர் (பி. ஓ. எல்.) பட்ட வகுப்புத் தொடங்கப்பட்ட பொழுது, மு. இராகவையங்கார் அத்துறையில் பேராசிரியராகப் பணியாற்றினார்.[2]

1945-ஆம் ஆண்டில் திருவனந்தபுரம் பல்கலைக் கழகத்தில் இராம. அழகப்பச் செட்டியார் வழங்கிய நன்கொடையால் தமிழ் ஆராய்ச்சித் துறை தொடங்கப்பட்டது. மு. இராகவையங்கார் அத்துறையின் தலைவராக அவ்வாண்டிலேயே பொறுப்பேற்றார்.[2] 1951-ஆம் ஆண்டு வரை அப்பணியை ஆற்றினார்.

இதழாசிரியர்[தொகு]

மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் மற்றோர் உறுப்பான செந்தமிழ் இதழில் 1901-ஆம் ஆண்டு முதல் 1904-ஆம் ஆண்டு வரை உதவியாசிரியராக இருந்தார். பின்னர் 1904-ஆம் ஆண்டில் ஆசிரியப் பொறுப்பை ஏற்றார். 1912-ஆம் ஆண்டு வரை அப்பணியைச் செவ்வனே ஆற்றினார்.[2] இவருக்கு முன்னர் 1901 – 03-ஆம் ஆண்டுகளில் மு. இராகவையங்காரின் மாமா மகன் இரா. இராகவையங்கார் அவ்விதழுக்கு ஆசிரியராக இருந்தார். இவருக்குப் பின்னர் 1912-ஆம் ஆண்டு முதல் 1947-ஆம் ஆண்டு வரை அ. நாராயண ஐயங்கார் அவ்விதழுக்கு ஆசிரியராக இருந்தார்.

பின்னாளில் தமிழர் நேசன், கலைமகள், ஸ்ரீவாணி விலாசினி, கலைக்கதிர், அமுதசுரபி ஆகிய இதழ்களின் ஆசிரியராகவும் பணியாற்றினார்.[3]

தமிழ்ப் பேரகராதிக் குழுவின் தலைமை தமிழ்ப் பண்டிதர்[தொகு]

செந்தமிழ்க் கல்லூரி ஆசிரியப் பணியையும் செந்தமிழ் இதழின் ஆசிரியப் பணியையும் 1912ஆம் ஆண்டில் இறுதியில் துறந்த மு. இராகவையங்கார் 1913-ஆம் ஆண்டு முதல் 1939-ஆம் ஆண்டு வரை சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்ப் பேரகராதிக் குழுவில் தலைமைத் தமிழ்ப் பண்டிதராகப் பணியாற்றினார். அப்பணியைப் பாராட்டி அப்பொழுதைய அரசாங்கம் இராவ் சாகிப் என்னும் விருதினை வழங்கியது.[2]

பதிப்பாசிரியர்[தொகு]

அண்ணாமலை பல்கலைக் கழகம் கம்பராமயாணத்தை உரையோடு பதிப்பிக்க விழைந்தது. எனவே 1951 ஆம் ஆண்டில் பதிப்பாசிரியர் குழுவை உருவாக்கியது. அக்குழுவில் மு. இராகவையங்கார் இடம்பெற்றார். கம்பராமாயணத்தின் சிலபகுதிகளைப் பாடபேத ஆராய்ச்சிக் குறிப்பும் விளக்கவுரையும் எழுதி பதிப்பித்தார்.[4] இந்நூல் தவிர பின்வரும் நூல்களையும் பதிப்பித்திருக்கிறார்.

வ.எண் ஆண்டு நூல்
01 1910 திருக்குறள் பரிமேலழகர் உரையுடன்
02 நரிவிருத்தம் அரும்பத உரையுடன்
03 சிதம்பரப் பாட்டியல் உரையுடன்
04 திருக்கலம்பகம் உரையுடன்
05 விக்கிரம சோழனுலா
06 சந்திரா லோகம்
07 கேசவப் பெருமாள் இரட்டை மணிமாலை
08 1936 பெருந்தொகை
09 1936 திருவைகுந்தன் பிள்ளைத்தமிழ்
10 1949 அரிச்சந்திர வெண்பா
11 1951 கம்பராமாயணம் – பால காண்டம்
12 1953 திரிசிராமலை அந்தாதி
13 1958 கம்பராமாயணம் - சுந்தர காண்டம்

நூல்கள்[தொகு]

மு. இராகவையங்கார் தன்னுடைய கருத்துகளை நூல்களாக எழுதி வெளியிட்டார். அவை வருமாறு:

வ. எண் ஆண்டு நூலின் பெயர் பொருள்
01 1905 வேளிர் வரலாறு வரலாறு
02 1912 தொல்காப்பிய பொருளதிகார ஆராய்ச்சி திறனாய்வு
03 1915 சேரன் செங்குட்டுவன் வரலாறு
04 1924 தமிழரும் ஆந்திரரும் ஆராய்ச்சி
05 1926 ஆழ்வார்கள் காலநிலை வரலாறு
06 1929 சாசனத் தமிழ்க்கவி சரிதம் வரலாறு
07 1938 ஆராய்ச்சித் தொகுதி இலக்கிய ஆராய்ச்சி
08 1939 திருவிடவெந்தை எம்பெருமான் திருமங்கை ஆழ்வார் பாடல்களின் விளக்கம்
09 1947 சேர வேந்தர் செய்யுட் கோவை (முதல் தொகுதி) இலக்கிய ஆராய்ச்சி
10 1948 செந்தமிழ் வளர்த்த தேவர்கள் வரலாறு
11 1950 Some Aspects of Kerala and Tamil Literature – 2 volumes
12 1950 இலக்கியக் கட்டுரைகள் இலக்கிய ஆராய்ச்சி
13 1951 சேர வேந்தர் செய்யுட் கோவை (இரண்டாம் தொகுதி) இலக்கிய ஆராய்ச்சி
14 1958 வினைதிரிபு விளக்கம் இலக்கணம்
15 1959 கட்டுரை மணிகள் இலக்கிய ஆராய்ச்சி
16 1969 தெய்வப் புலவர் கம்பர் வரலாறு
17 இலக்கிய சாசன வழக்காறுகள் வரலாறு
18 நூற்பொருட் குறிப்பகராதி
19 நிகண்டகராதி

சொற்பொழிவாளர்[தொகு]

மு. இராகவையங்கார் சிறந்த சொற்பொழிவாளராகவும் திகழ்ந்தார். அவர் ஆற்றிய சொற்பொழிவுகள் சில நூல்களாகவும் வெளிவந்தன. அவர் ஆற்றிய புகழ்பெற்ற சொற்பொழிவுகள் சில:

வ. எண் ஆண்டு தலைப்பு இடம் தலைமை
01 1929 சாசனத் தமிழ்க்கவி சரிதம் சென்னைப் பல்கலைக் கழகம் உ. வே. சாமிநாதையர்
02 1950 காந்தளூர்ச் சாலை திருவனந்தபுரம் பல்கலைக் கழகம் சர். சி. வி. இராமன்
03 1950 சேரத் தமிழ் இலக்கியங்கள் திருவனந்தபுரம் பல்கலைக் கழகம் கோபால மேனன்
04 1959 தெய்வப் புலமை சென்னை மாநிலக் கல்லூரி தெ. பொ. மீனாட்சிசுந்தரம்
05 கம்பனின் தெய்வப் புலமை காரைக்குடி கம்பன் கழகம் சா. கணேசன்

மறைவு[தொகு]

மு. இராகவையங்கார் தன்னுடைய 18-ஆம் அகவை முதல் 82-ஆம் அகவை வரை தமிழ்த் தொண்டாற்றி 1960 பிப்ரவரி 2 ஆம் நாள் மானாமதுரையில் தன் மகன் வீட்டில் மரணமடைந்தார்.

சான்றடைவு[தொகு]

  1. பாலசுப்பிரமணியன் சி., சான்றோர் தமிழ், நறுமலர் பதிப்பகம் சென்னை, நா.பதி.1993, பக்.70
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 பாலசுப்பிரமணியன் சி., சான்றோர் தமிழ், நறுமலர் பதிப்பகம் சென்னை, நா.பதி.1993, பக்.71
  3. பாலசுப்பிரமணியன் சி., சான்றோர் தமிழ், நறுமலர் பதிப்பகம் சென்னை, நா.பதி.1993, பக்.80
  4. பாலசுப்பிரமணியன் சி., சான்றோர் தமிழ், நறுமலர் பதிப்பகம் சென்னை, நா.பதி.1993, பக்.72

வெளி இணைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மு._இராகவையங்கார்&oldid=3394392" இலிருந்து மீள்விக்கப்பட்டது