முஹம்மது பாறூக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முஹம்மது பாறூக்
பிறப்புபெப்ரவரி 19, 1948
காத்தான்குடி,மட்டக்களப்பு
பெற்றோர்காசிமுஹம்மது, றாபியத்தும்மா

காசிமுஹம்மது முஹம்மது பாறூக் (பிறப்பு: பெப்ரவரி 19, 1948) ‘பதியதளாவை பாறூக்’, ‘கலைநதி’, ‘சாலிஹாமணாளன்’ ஆகிய புனைப்பெயர்களில் எழுதிவரும் இலங்கைக் கவிஞரும், எழுத்தாளருமாவார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

காசிமுஹம்மது, றாபியத்தும்மா தம்பதியினரின் புதல்வராக மட்டக்களப்பு, காத்தான்குடியில் பிறந்த பாறூக், காத்தான்குடி அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் தனது பாடசாலைக் கல்வியைப் பெற்றார். தற்போது பதியதளாவ நகரில் ஒரு வர்த்தகரான இவரின் மனைவி எஸ். ஏ. ஸாலிஹா, பிள்ளைகள்: அனீஸா, மாஹிர்

இலக்கிய ஈடுபாடு[தொகு]

பாறூக்கின் கன்னிக் கட்டுரை 'இஸ்லாமிய பெண்கள் ஏனையோருக்கு முன்மாதிரியாக நடக்க வேண்டும்’ எனும் தலைப்பில் 1967ஆம் ஆண்டு தினகரனிலும், முதல் கவிதை 1970ம் ஆண்டு தினபதியிலும் பிரசுரமாயின. அதிலிருந்து இன்றுவரை தொடர்ச்சியாக 4 தசாப்தங்களுக்கு மேல் எழுதிவரும் இவர் 10க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 500க்கும் மேற்பட்ட கவிதைகளையும், 200க்கும் மேற்பட்ட கட்டுரைகள், நாடகங்கள் உட்பட ஏனைய ஆக்கங்களையும் எழுதியுள்ளார்.

பிரசுரமான ஊடகங்கள்[தொகு]

தினகரன், தினபதி, சிந்தாமணி, வீரகேசரி, நவமணி, மித்திரன் வாரமலர், தினக்குரல், அபியுக்தன், வாரஉரைகல், பாசமலர், உதயம், தாமரை, தடாகம், வானோசை, பிறைக்கலசம், தலைவன், அல்அறப், அல்ஜெஸீரா, முஸ்லிம் குரல், ப்ரியநிலா, மணிமலர்கள், மல்லிகை, சுஹதாக்கள். அல் ஹிறா. வாழ்வோரை வாழ்த்துவோம், சுவடு, சாளரம், வெற்றிமணி, ஸம்ஸம், பா, முக்கனி காலத்தின் குரல்கள், ஞானச் சுரங்கம், கலப்பு, சிரிப்பொலி, ஜும்ஆ, ஹஜ்ஜத் (இந்திய சஞ்சிகை)ஆகிய பத்திரிகைகள், சஞ்சிகைகளில் இவரது ஆக்கங்கள் வெளியாகியுள்ளன.

சிங்கள மொழி மூலம்[தொகு]

பாறூக் சிங்கள மொழி மூலமாகவும் எழுதக் கூடியவர். இவரால் சிங்கள மொழி மூலமாக எழுதப்பட்ட சில கட்டுரைகளும், கவிதைகளும் சிங்களப் பத்திரிகைகளான தவஸ, குமுதுமலி, சரசவிய, விஸித்துற போன்றவற்றில் பிரசுரமாகியுள்ளன. இவரின் ‘ஆதரபஹன’ (அன்புவிளக்கு) எனும் தலைப்பிலான சிங்களக் கவிதைத் தொகுதி ஒன்று விரைவில் வெளிவரவுள்ளது என அறிய முடிகிறது.

இலங்கை வானொலியில்[தொகு]

இலங்கை வானொலி முஸ்லிம் நிகழ்ச்சி, ஒலிமஞ்சரி, வாலிப வட்டம், இளைஞர் அரங்கு, பிஞ்சு மனம், அஹதியா நிகழ்ச்சி, கதை சொல்லும் ஒரு கிராமம் போன்ற நிகழ்ச்சிகளில் சுமார் 30க்கும் மேற்பட்ட ஆக்கங்கள் ஒலிபரப்பாகியுள்ளதுடன் வானொலிக் கவியரங்குகள் பலதில் இவர் நேரடியாக கலந்து கொண்டுமுள்ளார்.

நாடகத்துறையில்[தொகு]

1972ம்ஆண்டு இவரின் கதை வசனம் தயாரிப்பில் உருவான ‘சாவதோ நீதி’ என்ற சமூக நாடகம் இவரின் முதல் நாடகமாகும். இந்நாடகம் கிழக்கிலும், மலையகத்திலும் மேடையேற்றப்பட்டு வரவேற்பினைப் பெற்றது. இதைத் தொடர்ந்து இவர் சில நாடகங்களை எழுதி தமது பிரதேசத்தில் மேடையேற்றினார்.

ஊடகத்துறையில்[தொகு]

தினகரன், தினபதி, ஜும்ஆ போன்ற பத்திரிகைகளின் பிரதேச நிருபராக கடமையாற்றிய அனுபவம் இவருக்குண்டு.

நூல்கள்[தொகு]

இதுவரை வெளிவரவில்லை.

விருதுகள்[தொகு]

  • ‘கலைதீபம்’ - 2006ஆம் ஆண்டு சாய்ந்த மருது தடாகம் கலை இலக்கிய வட்டத்தினால் குருநாகல் நகரமண்டபத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட கௌரவிப்பு விழாவின் போது வழங்கப் பட்டது.
  • ‘கவிப்பரிதி’ 2007ஆம் ஆண்டு காத்தான்குடி பிரதேச செயலக பிரதேச கலாசார சாஹித்திய விழாவில் வழங்கப்பட்டது.
  • 'கலாபூசணம்' 2009ஆம் இலங்கை அரசால் வழங்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முஹம்மது_பாறூக்&oldid=3225488" இலிருந்து மீள்விக்கப்பட்டது