முத்து குமாரசுவாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முத்து குமாரசுவாமி
இலங்கை சட்டவாக்கப் பேரவையின் உறுப்பினர்
பதவியில்
18621879
முன்னையவர்தெரியவில்லை
பின்னவர்பொன். இராமநாதன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசனவரி 23, 1833
இறப்புமே 4, 1879(1879-05-04) (அகவை 46)
தேசியம்இலங்கைத் தமிழர்
துணைவர்கிளே பீபி
பிள்ளைகள்ஆனந்த குமாரசுவாமி
பெற்றோர்ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமி
வேலைஅரசியல்வாதி, வழக்கறிஞர்

சேர் முத்து குமாரசுவாமி (Mutu Coomaraswamy, சனவரி 23, 1833 - மே 4, 1879) பிரித்தானிய இலங்கையின் முதலாவது சட்டவாக்கப் பேரவையில் தமிழ் மக்களின் பிரதிநிதியாகப் பதவி வகித்துச் சேவை புரிந்தவர். யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். இவரின் தந்தை கேட் முதலியார் ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமி சட்டவாக்கப் பேரவையின் முதலாவது தமிழ்ப் பிரதிநிதியாக இருந்தவர். ஆசியாவில் பிறந்து முதன் முதல் "சேர்" பட்டம் பெற்றவர் என்ற பெருமைக்குரியவர் முத்துக்குமாரசுவாமி[1]. சேர் முத்துக் குமாரசுவாமியின் புதல்வர் கலாயோகி ஆனந்த குமாரசுவாமி ஆவார்.

வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]

முத்து குமாரசுவாமி இலங்கையின் வட மாகாணத்தில் பருத்தித்துறையைச் சேர்ந்த கேட் முதலியார் ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமி (1783-1836) என்பவருக்குப் பிறந்தவர். கொழும்பு அக்கடெமியில் (இன்றைய கொழும்பு ரோயல் கல்லூரி) 1842 முதல் 1851 வரை கல்வி பயின்றார். கல்லூரியில் இவருக்கு 1851 ஆம் அண்டுக்கான டர்னர் பரிசு வழங்கப்பட்டது. கல்லூரி இதழிலும் பிரதான ஆசிரியராக இருந்தார். இலங்கை சிவில் சேவையில் சேர்ந்த முத்து குமாரசுவாமி காவல்துறை குற்றவியல் நடுவராகவும் (magistrate), முல்லைத்தீவின் அரச அதிபராகவும் பணியாற்றினார். பின்னர் ரிச்சார்க் மோர்கன் என்ற வழக்கறிஞரிடம் பயிற்சி பெற்று 1856 ஆம் ஆண்டில் இலங்கை உயர்நீதிமன்றத்துக்கு வழக்கறிஞராகச் சேர்த்துக் கொள்ளப்பட்டார். 1861 ஆம் ஆண்டில் சட்டசபையில் தமிழ்மக்களின் பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்பட்டார். மே 1862 ஆம் ஆண்டில் இங்கிலாந்து சென்று பாரிஸ்டர் ஆனார். அங்கு 1863 இல் "லிங்கனின் இன்" (Lincoln's Inn) என்ற பாரிஸ்டர்களின் மாளிகையில் சேர்க்கப்பட்டார். 1865 ஆம் ஆண்டில் இலங்கை திரும்பினார். 1867 ஆம் ஆண்டில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞரானார். 1874 ஆகத்து 11 இல் இவர் முதலாவது ஆசியராகவும், இலங்கையராகவும் சேர் பட்டம் பெற்றார்[2].

1877 ஆம் ஆண்டில் முத்து குமாரசுவாமி இங்கிலாந்தின், கெண்ட் நகரைச் சேர்ந்த எலிசபெத் கிளே பீபி என்பாரைத் திருமணம் செய்தார்[1]. இவர்களுக்குப் பிறந்தவரே கலாயோகி ஆனந்த குமாரசுவாமி. ஆனந்த குமாரசுவாமிக்கும் டோனா லூசா என்ற ஆர்ஜெண்டீனியப் பெண்மணிக்கும் பிறந்தவர் மருத்துவர் ராமா குமாரசுவாமி.

சைவ சமயச் சொற்பொழிவாளர்[தொகு]

முத்து குமாரசுவாமி சைவசித்தாந்தத்தினை முதன் முதலில் ஆங்கிலேயருக்கு விளக்கியவர். 1857 ஆம் ஆண்டு மாட்சிமை பொருந்திய ஆசியச்சங்கத்தின் (Royal Asiatic Society) இலங்கைக் கிளையில் "சைவசித்தாந்தச் சுருக்கம்" எனும் ஒரு கட்டுரையினை வாசித்து விளக்கியுள்ளார். இக்கட்டுரை அச்சங்கத்தினால் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இளம் வழக்கறிஞரான முத்துக் குமாரசுவாமி தமது 24 வது வயதில் இக்கட்டுரையை எழுதி அச்சபையில் விளக்கியுள்ளார். 1860 ஆம் ஆண்டு "இந்து சமயம்" என்ற கட்டுரை அதே சபையில் வாசிக்கப்பட்டு சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளது.

தாம் ஒரு இங்கிலாந்து வழக்கறிஞர் (Barrister) ஆவதற்கு இங்கிலாந்து சென்ற போதும் தமது சமயத்திலும் தத்துவத்திலும் அவருக்கிருந்த ஈடுபாடு குறையவில்லை எனலாம். அரிச்சந்திரனின் கதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து நாடகமாக்கி ஆங்கிலேய நடிக நடிகைகளுடன் தாம் அரிச்சந்திரனாக நடித்து அரச சபையில் மேடையேற்றினார். விக்டோரியா மகாராணியாரால் சேர் பட்டம் முத்துக் குமாரசுவாமிக்கு வழங்கப்பட்டது. ஆங்கில மொழிப் பேச்சுத் திறனுக்கும் நடிப்புக் கலைக்குமாக இக்கௌரவம் கொடுக்கப்பட்டதாக இலண்டனில் வெளிவந்த 'இல்லஸ்ட்ரேடட் லண்டன் நியூஸ்' (Illustrated London News) என்ற பத்திரிகை குறிப்பிட்டிருந்தது. 'அரிச்சந்திரன்' நாடகமாக்கப்பட்டுப் பிரசுரிக்கப்பட்டபோது அதன் பின்னிணைப்பாக 'சைவசித்தாந்தச் சுருக்கம்' என்ற கட்டுரை சேர்க்கப்பட்டது.

சேர் முத்துக் குமாரசுவாமி அவர்கள் இலண்டனில் உள்ள கலைக் கூடங்களில் (Arts Councils) தொடர்ச்சியாகச் 'சைவ சித்தாந்தம்' பற்றியும் 'இந்தியத் தத்துவம்' பற்றியும் சொற்பொழிவுகள் ஆற்றினார். சேர் முத்துவின் ஆங்கிலச் சொல்லாட்சியினை மெச்சி அவர்கள் அவரை "கிழக்கின் மிகச் சிறந்த நாவன்மை படைத்தவர்" (The Silver tongued Orator of the East) என்று அழைத்தனர்.

இலங்கை அரசால் வெளியிடப்பட்ட சேர் முத்து குமாரசுவாமியின் உருவப்படம் பொறித்த அஞ்சல்தலை

சட்டவாக்கப் பேரவையில் குமாரசாமியின் பணி[தொகு]

1862 ஆம் ஆண்டில் இலங்கையின் இலங்கை சட்டவாக்கப் பேரவைக்குத் தமிழர்களின் பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்பட்டார். 1879 ஆம் ஆண்டு வரை 17 ஆண்டுகள் இவர் இப்பதவியை வகித்துள்ளார். இங்கிலாந்தில் பெற்ற கல்வி, சமூக-அரசியல் அறிவு, சட்டத் திறமை என்பவற்றோடு உள்ளூர்ப் பாரம்பரியம், பண்பாடு, வரலாறு என்பவை தொடர்பிலும் இவருக்கு அறிவு இருந்தது. இதனால், சட்டவாக்கப் பேரவையில் சிறப்பாகப் பணியாற்ற முடிந்தது. இவரது பேச்சாற்றலாலும், துணிவாலும், அவையில் பயமின்றி மக்களுக்காகப் போராடினார். 1878-79 காலப் பகுதியில் வடமாகாணத்தில் ஏற்பட்ட காலராவினால் ஏற்பட்ட பேரழிவின் போது, அப்போதைய சுகாதாரத் திணைக்களத்தின் அசட்டை, தவறான நிர்வாகம் என்பன குறித்த மக்கள் அதிருப்தி கொண்டிருந்தனர், இவ்விடயம் குறித்து அப்போதைய வடமாகாண அரசாங்க அதிபர் டபிள்யூ. சி. துவைனம் குறித்த மக்களின் குற்றச்சாட்டுகளைப் புள்ளிவிபரங்களுடன் சட்டவாக்கப் பேரவையின் கவனத்துக்குக் கொண்டுவந்தார்.[3] இது போன்ற மேலும் பல மக்கள் பிரச்சினைகளுக்காக அவர் சட்டவாக்கப் பேரவையில் வாதாடினார். இதன்மூலம் அக்காலத்துப் பத்திரிகைகளினால் பெரிதும் பாராட்டப் பெற்றார். அதேவேளை இவரது பதவிக் காலத்தில் பல ஆண்டுகளை இங்கிலாந்தில் கழித்ததனால் இவர் பிரதிநிதித்துவப் படுத்திய மக்களுக்குப் போதிய அளவு பலன் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் உண்டு.[4]

இவரைத் தொடர்ந்து இவரது மருமக்களான சேர். பொன். இராமநாதன், சேர். பொன் அருணாசலம் ஆகியோரும் இலங்கைச் சட்ட சபையில் உறுப்பினராக இருந்ததுடன். இலங்கை அரசியலில் புகழுடன் விளங்கினர்.

பெர்னாட் ஷாவின் கதாபாத்திரம்[தொகு]

புகழ்பெற்ற பிரித்தான நாடகாசிரியரான பெர்னாட் ஷா, 1933 ஆம் ஆண்டில், "ஆன் த ராக்சு" (On the Rocks) என்னும் அரசியல் நகைச்சுவை நாடகம் ஒன்றை எழுதினார். இதில் வரும் சர். ஜாஃப்னா பன்ட்ரநாத் (Sir Jafna Pandranath) என்னும் பாத்திரம் சர். முத்துக்குமாரசாமியை மனதில் கொண்டே உருவாக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இந்த நாடகத்தில் பிரித்தானியப் பிரதமராக வரும் சர். ஆர்தர் சவென்டர் என்னும் பாத்திரம், முன்னாள் பிரித்தானியப் பிரதமரான பெஞ்சமின் டிஸ்ரைலியைக் குறிக்குமுகமாகவே எழுதப்பட்டது. முத்துக்குமாரசாமி இங்கிலாந்தில் இருந்த காலத்தில் பல உயர்மட்டத்தினருடன் அவருக்குப் பழக்கம் இருந்தது. பிரதமர் டிஸ்ரைலியும் அவருக்கு நண்பராக இருந்தார்.[5]

எழுதிய நூல்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Sorkhabi, Rasoul (2008-02-10). "Ananda K. Coomaraswamy: From geology to philosophia perennis". Current Science (Bangalore: Indian Academy of Sciences) 94 (3): 394–401. http://www.ias.ac.in/currsci/feb102008/394.pdf. பார்த்த நாள்: 2009-06-23. 
  2. NANNITHAMBY E Mudaliyar of Manipay - Family #5017
  3. குணசிங்கம், முருகர்., இலங்கையில் தமிழர், எம். வி. வெளியீடு, தென்னாசியவியல் மையம், சிட்னி, 2008. பக். 457, 458)
  4. குணசிங்கம், முருகர்., இலங்கையில் தமிழர், எம். வி. வெளியீடு, தென்னாசியவியல் மையம், சிட்னி, 2008. பக். 458)
  5. Sri Kantha, Sachi., Bernard Show's Homage to Jaffna, Tamil Nation, August 15, 1991.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முத்து_குமாரசுவாமி&oldid=2712724" இலிருந்து மீள்விக்கப்பட்டது