மிதப்புக் கண்ணாடி
மிதப்புக் கண்ணாடி என்பது உருகிய கண்ணாடியை உருகிய உலோகத்தின் மீது மிதக்கவிட்டு உருவாக்கப்படடும் கண்ணாடி ஆகும். பொதுவாக தகரம் என்னும் உலோகம் இதற்குப் பயன்படுகிறது. ஈயம், உருகுநிலை குறைவான பிற கலப்புலோகங்கள் என்பனவும் பயன்படுத்தப்பட்டது உண்டு. இந்தமுறையில் சீரான தடிப்புக் கொண்டவையும் மட்டமான மேற்பரப்பைக் கொண்டனவுமான கண்ணாடித் தகடுகளை உற்பத்தி செய்ய முடிகிறது. தற்காலத்தில் கட்டிடங்களில் பயன்படும் கண்ணாடிகள் பெரும்பாலும் மிதப்புக் கண்ணாடிகளே. பெரும்பாலான மிதப்புக் கண்ணாடிகள் சோடாச் சுண்ணக் கண்ணாடிகள் ஆகும். சிறப்புக் கண்ணாடிகளான போரோசிலிக்கேட் கண்ணாடியும், மட்டத்திரைக் கண்ணாடிகளும் கூட குறைந்த அளவில் இம்முறை மூலம் உற்பத்தியாகின்றன. அலஸ்ட்டயர் பில்கிங்டன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டு, அவரது நிறுவனமான பிரித்தானியாவின் பில்கிங்டன் நிறுவனத்தினால் 1950 ஆம் ஆண்டில் முதலில் பயன்படுத்தப்பட்டமையால் மிதப்புக் கண்ணாடி வழிமுறையை பில்கிங்டன் வழிமுறை என்றும் அழைப்பதுண்டு.