மாத்திரை (தமிழ் இலக்கணம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமிழ் இலக்கணத்தில் மாத்திரை எனப்படுவது கண் இமைக்கும் (சிமிட்டும்) நேரத்தைக் குறிக்கும் அளவாகும். எழுத்துக்கள் ஒலிக்கப்படும் கால நீட்டத்தைக் குறிக்க மாத்திரை என்னும் கால அளவு பயன்படுகின்றது. நாம் இயல்பாகக் கண்ணிமைப்பதற்கு ஆகும் நேரம் சற்றேறக்குறைய கைநொடிப்பதற்கு ஆகும் நேரம் ஆகும். இதுவே ஒரு மாத்திரை ஆகும்.
-
- "இயல்பெழு மாந்தர்தம் இமைநொடி மாத்திரை" - நன்னூல்
- குற்றெழுத்துக்களுக்கு (குறில் எழுத்துக்களுக்கு) மாத்திரை ஒன்று (எடுத்துக்காட்டாக: அ, இ, ப, கி, மு)
- நெட்டெழுத்துக்களுக்கு (நெடில் எழுத்துக்களுக்கு) மாத்திரை இரண்டு (எடுத்துக்காட்டாக: ஆ, ஈ, ஏ, கா, வா, போ)
இவை தவிர, தனி மெய்யெழுத்துக்கள், ஆய்த எழுத்து, குற்றியலுகரம், குற்றியலிகரம் போன்றவை அரை மாத்திரைதான் ஒலிக்கும்.
உயிரளபெடை மூன்று மாத்திரையளவும், ஒற்றளபெடை ஒரு மாத்திரையளவும், மகரக் குறுக்கம், ஆய்தக் குறுக்கம் என்பன கால் மாத்திரையளவுமே ஒலிக்கும்.