மல்லேசுவரம்
மல்லேசுவரம் (Malleswaram, மல்லேஸ்வரம்) என்னும் பகுதி இந்தியாவில் கருநாடக மாநிலத்தில் பெங்களூரு பெரு நகரத்தில் வடமேற்கே அமைந்துள்ள பகுதி. இங்கு காடு மல்லேசுவரா கோயில் உள்ளதால் இப்பெயர் பெற்றது. முன்னர் இவ்வூர் மல்லபுரா என அழைக்கப்பட்டது. 1898 ஆம் ஆண்டு கொடுசூரி நோய் பரவிய காலத்தில், பெங்களூரு நகரத்தின் நடுவே இருந்து வெளியே போய் குடியிருக்கப் பலர் விரும்பியதால் இப்பகுதி வளர்ச்சி பெற்றது. பசவனகுடியும் மல்லேசுவரமும் பெங்களூரு நகரத்தின் பழைய குடியிருப்புப் பகுதிகள். இதனை மைசூரு நாட்டரசின் திவானாக இருந்த சேசாத்திரி ஐயர் என்பவர் திட்டமிட்டு வளர்த்தெடுத்தது என்பர்.
பண்பாட்டு அடையாளக் கூறுகள் [தொகு]
வயலின் வாசிப்பில் புகழ்பெற்ற திருமாகூடலு சௌடைய்யா நினைவாக, வயலின் வடிவத்தில் அமைந்த சௌடைய்யா நினைவு அரங்கு (The Chowdiah Memorial Hall) இங்கு உள்ளது. இது பல கலைநிகழ்வுகளுக்கு ஒரு நடுவகமாக உள்ளது.