மலேசியப் பழங்குடியினர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலேசியப் பழங்குடியினர்
Orang Asli
மொத்த மக்கள்தொகை: 149,512[1]
அதிக மக்கள் உள்ள இடம்:  மலேசியா
மொழி: ஆசிய மொழிகள் (ஆஸ்திர-ஆசியம்)
பழங்குடி மலாய் மொழிகள் (ஆத்திரனேசியம்)
சமயம்/சமயம் அற்றோர்: ஆன்மவாதம், கிறித்துவம், இசுலாம், இந்து
தொடர்புடைய இனக்குழுக்கள்: செமாங், செனோய், புரோட்டோ மலாய்

மலேசியப் பழங்குடியினர் (மலாய்: Orang Asli), தீபகற்ப மலேசியாவின் பூர்வீகக் குடியினர் ஆகும். பொதுவாக, இவர்களை ஒராங் அஸ்லி என்று அழைக்கின்றனர். மலேசியாவில் இந்தப் பழங்குடியினர் 18 பிரிவுகளாக இருந்தனர். இவர்களை மொழி, கலாச்சார அடிப்படையில் மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரித்துள்ளனர்.

இவர்களில் செமாங் அல்லது நெகிரிட்டோ இனத்தவர்கள் தீபகற்ப மலேசியாவின் வட எல்லைப் பகுதிகளில் வாழ்கின்றனர். செனோய் இனத்தவர் தீபகற்ப மலேசியாவின் மத்திய பகுதியில் வாழ்கின்றனர். புரோட்டோ மலாய் இனத்தவர் அல்லது மலாய்ப் பூர்வக் குடியினர் தீபகற்பத்தின் தென்பகுதியில் வாழ்கின்றனர். மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் மாநகரிலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள கோம்பாக் நகரில் ஒராங் அஸ்லி பூர்வீகக் குடியினரின் அரும்பொருள் காட்சியகம் அமைந்து உள்ளது.

வரலாறு[தொகு]

மலாய் தீபகற்பத்தில் ஒராங் அஸ்லி பிரிவுகளின் அமைவிடங்கள்

கிபி முதலாம் நூற்றாண்டில் முதல் இந்திய வணிகர்கள் மலாயாவில் வந்து தரை இறங்கினர்.[2] அது வரையில் அஸ்லி பழங்குடியினர் வெளித் தொடர்புகள் இல்லாமல் உட்புறக் காட்டுப் பகுதிகளிலேயே வாழ்ந்து வந்தனர்.

அவர்கள், பிசின் (களிம்பு), நறுமணக் கட்டைகள், தோகைகள் முதலியவற்றைச் சேகரித்தனர். அவற்றிற்குப் பதிலாக உப்பு, துணிமணி மற்றும் இரும்புக் கருவிகளை மலாயாவுக்கு வந்த இந்திய வணிகர்களிடமிருந்து பண்டமாற்று செய்து கொண்டனர்.

அடிமைகளான அஸ்லி பழங்குடி மக்கள்[தொகு]

மலாய் ஆட்சியாளர்கள் ஆட்சிக்கு வந்ததும், அஸ்லி பழங்குடி மக்களை அடிமைகளாகப் பண்டமாற்றத்திற்குப் பயன்படுத்திக் கொண்டனர். அதனால் அஸ்லி பழங்குடி மக்கள் வெளி உலகத் தொடர்புகளிலிருந்து துண்டித்துக் கொள்ள விரும்பினர். அதன் விளைவாக உட்புறக் காட்டுப் பகுதிகளுக்குள் குடியேறினர். காலனித்துவ ஆங்கிலேயரின் வருகையால் பழங்குடி மக்களின் வாழ்வில் மேலும் பாதிப்புகள் ஏற்பட்டன.

பழங்குடி மக்களைக் கிறித்தவ மதபோதர்களும், மனித இன ஆராய்ச்சியாளர்களும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள விரும்பினர்.[3]

ஒன்றிணைப்புத் திட்டம்[தொகு]

1948 முதல் 1960 வரையிலான மலேசிய அவசர காலத்தின்போது அஸ்லி பழங்குடியினர் தேசிய பாதுகாப்பில் முக்கியப் பங்கு வகித்தனர். அவர்களின் உதவியுடன் மலாய் இராணுவம் கம்யூனிசக் கலகக்காரர்களைத் தோற்கடித்தது. அஸ்லி பழங்குடியினருக்கும் அவர்களின் அடையாளங்களுக்கும் பாதுகாப்பு முக்கியத்துவத்தை மேற்கோள் காட்டி இருதுறைச் சார்ந்த நிர்வாகம் தொடங்கப்பட்டது.

1950 இல் பழங்குடித் துறையும் 1954 இல் பழங்குடியினர் மக்கள் சட்ட இயக்க வழிமுறைகளும் நிறுவப் பட்டன. சுதந்திரத்திற்குப் பிறகு அஸ்லி பழங்குடியினரின் மேம்பாட்டை முக்கிய நோக்கமாகக் கருதிய அரசாங்கம் அவர்களைப் பல்லின மலேசிய மக்களுடன் ஒன்றிணைக்கத் திட்டம் வகுத்தது. அந்தத் திட்டம் 1961-இல் ஏற்றுக் கொள்ளப்பட்டது.[3]

தீபகற்ப மலேசிய அஸ்லி பழங்குடியினர் சங்கம்[தொகு]

1970ற்கும் 1980ற்கும் இடைப்பட்ட பத்தாண்டு காலகட்டத்தில் மலேசியா, பொருளாதார வளர்ச்சியை முதன்மை படுத்தியது. இக்காலகட்டத்தில் வளர்ச்சியை மேம்படுத்த நவீனமயத்தையும் தொழில்மயத்தையும் ஒன்றிணைத்து புதிய நிலங்களை மேம்படுத்தத் தொடங்கியது.

இந்த மேம்பாட்டுத் திட்டம், அஸ்லி பழங்குடியினரின் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்வதில் போய் முடிந்தது. அத்துமீறிய செயல்களுக்குப் பதில் கொடுக்கும் வகையில் அஸ்லி பழங்குடியினர், மற்ற இடங்களுக்குக் குடியேறினர். அத்துடன், அவர்கள் தீபகற்ப மலேசிய அஸ்லி பழங்குடியினர் சங்கம் எனும் ஒரு சங்கத்தையும் உருவாக்கினர்.

இச்சசங்கத்தின் வழி அவர்களைப் பற்றிய செய்திகள் மேலும் அறியப்பட்டது. தற்போது பிரதமர் நஜீப் துன் ரசாக் அறிமுகப்படுத்திய "ஒரே மலேசியா" திட்டத்தின் கீழ் அஸ்லி பழங்குடியினர் ”நம்மவர்கள்” என்று அழைக்கப்படுகின்றார்கள்[3].

அடிமைத்தனம்[தொகு]

18ஆம் 19ஆம் நூற்றண்டுகளில் அஸ்லி பழங்குடியினரின் குடியிருப்பு பகுதிகளில் அடிக்கடி தாக்குதல் சம்பவங்கள் நடந்தன. இவர்களைத் துடைத்தொழிப்பதில் முனைப்பாக இருந்தவர்கள் உள்ளூர் மலாய்காரர்களும் பாத்தாக்களும் ஆகும். அஸ்லி பழங்குடியின மக்களை இறைவணக்கம், மனிதாபிமானம், நாகரீகம் இல்லாதவர்கள் என்றும் காட்டுமிராண்டிகளாகவும் கருதினர்.

பழங்குடி மக்களின் குடியிருப்புப் பகுதிகளை இடித்துத் தரைமட்டமாக்குவது, பழங்குடி இளைஞர்களைக் கொலை செய்வது போன்ற செயல்கள் மலாய்காரர்கள், பாத்தாக்களின் நடவடிக்கைகளாக இருந்தன. இதில் பெண்களையும் பிள்ளைகளையும் அடிமைப்படுத்துவது சுலபம் என்பதால் அவர்களைச் சிறைப்பிடித்தனர்.

சக்காய் எனும் இழிவுச் சொல்[தொகு]

சிறைப்பிடிக்கப்பட்ட அவர்களை வியாபாரப் பொருட்களாக ஆக்கினர்; அல்லது உள்ளூர் ஆட்சியாளர்கள், கிராமத்துத் தலைவர்கள் போன்றவர்களின் ஆதரவுகளைப் பெற சிறைப்பிடித்த அந்தப் பெண்களையும் பிள்ளைகளையும் ஒப்படைத்தனர். அடிமைகளை விற்கும் வியாபாரம் விரிவடைந்தது. மேலும் தொடர்ந்து 20ம் நூற்றாண்டிலும் நிகழ்ந்தது.

1884ஆம் ஆண்டு அதிகாரபூர்வமாக எல்லா வகையான அடிமைத்தனமும் நீக்கப்பட்டு சுதந்திர வாழ்வுக்கு வழிவகுக்கப்பட்டது. மத்திய 20ஆம் நூற்றாண்டு காலம் வரையில் அஸ்லி பழங்குடியினரை இழிவுபடுத்தும் சொல்லான சக்காய் எனும் சொல் பயன்படுத்தப்பட்டது.

அந்தச் சொல் அடிமைத்தனத்தைக் குறிக்கும் சொல்லாகும். அஸ்லி பழங்குடி மக்களின் கடந்த கால கசப்பான வரலாற்றை நினைத்துப் பார்க்கும்பொழுது மற்றவர்கள் தங்களை சக்காய் என்று அழைப்பதை அவர்கள் வெறுத்தனர் என்றே அறியப்படுகிறது.[4]

பொருளாதாரம்[தொகு]

புறநகர்ப் பகுதிகளில் வாழ்ந்த அஸ்லி பழங்குடியினர் மலாய்காரர்களிடம் வியாபார தொடர்புகளை வைத்திருந்தனர். அவர்களின் காட்டுவள தயாரிப்புப் பொருட்களுக்கு மாற்றுப் பொருட்களாக உப்பு, பலவகையான கத்திகள், இரும்பினாலான கோடரிகள் ஆகிவற்றைப் பண்டமாற்று செய்தனர்.

மேலும் விற்பனைக்கு ஆதாரமாக மலைவாழ் மக்களிடையே ஊது குழல், மூங்கில் குழல்கல் விளங்கின. கி.பி. 5ஆம் நூற்றாண்டு ஆரம்ப காலத்தில் மலாயாத் தீபகற்பத்தின் பொருளாதார வரலாற்றில் அஸ்லி பழங்குடியினர் சிறந்த வியாபாரிகளாகவும் பொருள் சேகரிப்பவர்களாகவும் விளங்கி வந்துள்ளனர்.

19ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் ஆற்றோரங்களில் வாழ்ந்த மலாய்த் தலைவர்களுக்கு, அஸ்லி பழங்குடியினர் மரியாதை செலுத்தும் வகையிலும், கப்பம் கட்டும் வகையிலும் காட்டுவள தயாரிப்புகளை நெகிரிட்டோ வழங்கி வந்துள்ளனர்[4].

மக்கள் தொகை[தொகு]

2000 வது ஆண்டு மலேசிய மக்கள் தொகை கணக்கின்படி அஸ்லி பழங்குடியினரின் மக்கள் தொகை 0.5 விழுக்காடாக இருந்தது.[2] இவர்களின் மக்கள் தொகை ஏறக்குறைய 148,000. இதில் பெரும்பான்மையாக செனோய் பூர்வக்குடியினர் 54 விழுக்காடாகவும் புரொட்டோ மலாய் பூர்வக்குடியின்ர் 43 விழுக்காடாகவும் இருந்தனர். இவர்களைத் தொடர்ந்து செமாங் பூர்வகுடியினர் 0.3 விழுக்காடாக இருந்தனர்.[5]

அஸ்லி பழங்குடியினரின் ஏழ்மை நிலை 76.9 விழுக்காடாக இருந்தது. மலேசிய மக்கள் தொகை புள்ளிவிபர ஆய்வின்படி 35.2 விழுக்காட்டுப் பூர்வக்குடியினர் வறுமைக் கோட்டின்கீழ் வாழ்பவர்களாக அறியப்பட்டுள்ளது.

அஸ்லி பழங்குடியினர் பெரும்பகுதியினர் புறநகர் பகுதிகளில் குடியேறியுள்ளனர். சிறுபான்மையினர் நகர்புறங்களில் குடியேறியுள்ளனர். 1991 ஆம் ஆண்டில் தேசிய எழுத்தறிவு வீதம் 86 விழுக்காடாக இருந்தது. அஸ்லி பழங்குடியினரின் எழுத்தறிவு வீதம் 43 விழுக்காடாக இருக்கிறது.[1] இவர்களின் சராசரி வாழ்நாள்: ஆண்களுக்கு 53 ஆண்டுகள். பெண்களுக்கு 52 ஆண்டுகள்.[6]

முப்பிரிவுகள்[தொகு]

மொழி[தொகு]

சமூக நலன் கருதி அஸ்லி பழங்குடியினர் மூன்று பெரும் பிரிவுகளாக வகைப்படுத்தப் பட்டுள்ளனர். மொழித் தன்மைகளில் இரு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். முதல் பிரிவினர் பேசிய மொழி அஸ்லியன் மொழியாகும். இம்மொழி ஆஸ்ட்ரொ-ஆசியடிக் மொழியின் அடிப்படைகளைக் கொண்டதாகும். மேலும் இம்மொழியை ஜய்க் (வட அஸ்லியன்) செனொய்க், செமெலைக் (தென் அஸ்லியன்) ஜா வுட் எனத் துணைப் பிரிவுகளாக வகைபடுத்தப்பட்டுள்ளது.

பழங்குடி வாழ்வியலும் சமயமும்[தொகு]

அஸ்லி பழங்குடியினர் இயற்கை வழிபாட்டிலும் ஆவி வழிபாட்டிலும் நம்பிக்கை உடையவர்கள்[7]. இவர்களில் பெரும்பாலோர் இந்த நூற்றாண்டில் இசுலாம்சமயத்தையும் கிறித்தவத்தையும் தழுவினர்.[7] இதனைத் தொடர்ந்து முஸ்லிம்களுக்கு மாநில அரசு உதவிகளும், கிறித்துவர்களுக்கு கிறித்தவ பரப்புரை குழுக்களின் மூலமாகவும் உதவிகள் வழங்கப்பட்டன.[8]

2007 ஆம் ஆண்டு சூன் மாதம் கிளாந்தான் மாநில அரசு, குவா மூசாங் எனும் இடத்தில் பழங்குடியினரின் கிறித்துவ தேவாலயத்தை இடித்துத் தரைமட்டமாக்கியது. இந்த நடவடிக்கையை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தீபகற்ப மலேசிய நெகரிட்டோ[தொகு]

மலேசிய கலைக்களஞ்சியத்தின் 2000 ஆம் ஆண்டு அறிக்கையின்படி நெகரிட்டோ பழங்குடியினர் தீபகற்ப மலேசியாவின் ஆரம்பகால ஆதிவாசிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் ஆஸ்திராலோ-மெலனேசியன் (Australo-Melanesian) கலப்பினத்தின் வழியும் ஹோபினியன் (Hoabinhian) கலாசாரக்கால மக்களிடமிருந்தும் தோன்றியவர்கள்.

இவர்களில் பெரும்பாலோரின் புதை குழிகள் கண்டுபிடிக்கப்பட்டள்ளன. இதன் காலம் 10,000 ம் ஆண்டுகள் முந்தியதெனக் கணக்கிடப்பட்டுள்ளது. செனோய் பழங்குடியினர் பேசும் அஸ்லியன் மொழி, ஆஸ்திரோ-ஆசியடிக் (Austro-Asiatic) கலப்பின மொழியில் தோன்றியது.

பலதரப்பட்ட துணைப் பிரிவுகள்[தொகு]

நெகரிட்டோ பழங்குடியினரில் பலதரப்பட்ட துணைப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் கென்சியு, கின்டெக், லானோ, ஜாஹை, மென்ரிக், பாடெக் போன்ற பிரிவுவாரியாக உள்ளனர். இவர்களில் பேராக், கெடா, பகாங் மாநிலங்களில் உள்ளவர்களைச் சக்காய் என்று அழைப்பதுண்டு. "சக்காய்" என்பது அடிமை என்று பொருள்.

மேலும் மற்ற மாநிலமான கிளந்தான், திரங்கானுவைச் (Kelantan, Teranggu) சேர்ந்தவர்களைப் பங்கான் (Pangan) என்று அழைப்பார்கள். பங்கான் என்பது "காட்டு வாசிகள்" என்று பொருள். பல காலத்திற்கு பிறகு அனேகமாகப் புதிய கற்காலத்தில் செனோய், புரொட்டொ - மலாய் பழங்குடியினர் இங்கு புலம் பெயர்ந்துள்ளனர்.

சமூக சட்ட தகுதி நிலை[தொகு]

தமான் நெகாராவில் ஒராங் அஸ்லி ஒருவர்.

அரசாங்கம் சார்ந்த நிறுவனமான 'அஸ்லி பழங்குடி விவகாரத் துறை' அவர்களின் தேவைகளுக்கு அதிக கவனிப்பும் முக்கியத்துவமும் வழங்கியது. மலேசிய புறநகர் மேம்பாட்டு அமைச்சின் கீழ் செயல்படும் இந்நிறுவனம் 1954 ல் அமைக்கப்பட்டது. இவற்றின் உள்ளடக்கத்தின் குறிக்கோள் அவர்களிடையே நிலவும் ஏழ்மையை ஒழிப்பது, சுகாதாரம், கல்வி, வாழ்கைத் தரம் மேம்படுத்துவது.

1997 ல் அஸ்லி பழங்குடியினர் அதிக அளவில் ஏழ்மையில் இருந்தனர். இவர்களில் 80 சதவீதத்தினர் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்தனர். தேசிய ஏழ்மை விகிதாச்சாரம் 8.5 சதவீதத்தை ஒப்பிடுகையில் இவர்களின் சதவீதம் மிக அதிகமாக இருந்தது[9].

சட்ட திட்டங்கள்[தொகு]

அஸ்லி பழங்குடி சார்ந்த சட்டத்திட்டங்கள் பின்வருமாறு அமைந்திருக்கிற்து:-

  1. பழங்குடி மக்கள் பாதுகாப்புச் சட்டம் 1954.
  2. நில பாதுகாப்புச் சட்டம் 1960.
  3. தேசிய நில குறியீட்டுச் சட்டம் 1965.
  4. வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 1972.
  5. தேசிய பூங்கா பாதுகாப்புச் சட்டம் 1980.

1954 ல் பழங்குடி மக்கள் பாதுகாப்புச் சட்டத்தில் அஸ்லி பழங்குடியினருக்கு சிறப்பு ஒதுகீட்டு நிலம், இயற்றம் கண்டது. எனினும் அஸ்லி பழங்குடியினர் சட்டம் உள்ளடக்கிய கட்டளையின் வழி அஸ்லி பழங்குடி விவகாரத்துறை இயக்குனர் ஆணையின் படி அஸ்லி பழங்குடி மக்களை அவர்களின் சிறப்பு நிலத்திலிருந்து வெளியேற்றவும் பாதித்த மக்களுக்கு இழப்பீடு அளிக்கவும் உரிமையுண்டு என்று அச்சட்டம் வழிவகுத்தது.

சிலாங்கூர் மாநில அரசாங்கம் 2002 இல் சகோங் டசி வி (sagong tasi v) வழக்கில் ஒரு திருப்பு முனையைக் கண்டது. இதில் தொடர்புடைய மாநிலம் 1954 இன் சட்டத்திற்கு உட்பட்டு தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி அஸ்லி மக்களின் நில சிறப்பு ஒதுக்கீட்டின் உரிமையை அரசு ஆணையத்திலிருந்து மீட்டது.

இதன் தொடர்பான வழக்கில் அஸ்லி பழங்குடியினர் பிரதிநிதியான சகோங் டசி வி விருப்பப்படி உயர் நீதிமன்றம் ஆணையிட்டது. இத்தீர்பை மேல் முறையீட்டு நீதிமன்றம் நிலை நிறுத்தியது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Health Care for the Orang Asli". Center for Orang Asli Concerns. பார்க்கப்பட்ட நாள் 2008-02-22.
  2. 2.0 2.1 Gomes, Alberto G. "The Orang Asli of Malaysia" (PDF). International Institute for Asian Studies. பார்க்கப்பட்ட நாள் 2008-02-02.
  3. 3.0 3.1 3.2 "Indigenous Politics, Development and Identity in Peninsular Malaysia: the Orang Asli and the Contest for Resources" (PDF). Commonwealth Policy Studies Unit. Archived from the original (PDF) on 2008-02-16. பார்க்கப்பட்ட நாள் 2008-02-04.
  4. 4.0 4.1 THE ORANG ASLI OF PENINSULAR MALAYSIA, Colin Nicholas
  5. "Origins, Identity and Classification". Center for Orang Asli Concerns. பார்க்கப்பட்ட நாள் 2008-02-02.
  6. "The Orang Asli of Peninsular Malaysia". University of Essex Malaysian Society Conference 2008. Archived from the original on 2008-02-27. பார்க்கப்பட்ட நாள் 2008-02-22.
  7. 7.0 7.1 "Orang Asli". Adherents.com. Archived from the original on 2007-11-28. பார்க்கப்பட்ட நாள் 2008-02-12.
  8. Nicholas, Colin. "Orang Asli and the Bumiputra policy". Center for Orang Asli Concerns. பார்க்கப்பட்ட நாள் 2008-02-12.
  9. "CHAPTER 6". Archived from the original on 2009-10-25. பார்க்கப்பட்ட நாள் 2009-10-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலேசியப்_பழங்குடியினர்&oldid=3719236" இலிருந்து மீள்விக்கப்பட்டது