மரபணு கோளாறு
மரபணு கோளாறுகள் (genetic disorders) என்பது மரபணு, மற்றும் நிறப்புரிகளில் ஏற்படும் குறைபாடுகளைக் குறிக்கும். இவ்வாறான குறைபாடுகள் மரபியல் வழியாகத் தோன்றி, அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படும் நோய் அல்லது கோளாறு ஆக இருப்பதனால் இவை பரம்பரை நோய் எனவும் அழைக்கப்படுகின்றது.
இது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அசாதாரண மரபணு, குறைவான மரபணு, மேலதிக மரபணு, தொழிற்பாட்டை இழந்த மரபணு, மேலதிகமாகத் தொழிற்படும் மரபணு, அசாதாரண எண்ணிக்கையிலான நிறப்புரிகள் போன்ற காரணிகளால் ஏற்படும். இவ்வாறான நோய்கள் பெற்றோரிலிருந்து குழந்தைகளுக்கு கடத்தப்படும். ஆனாலும் இவற்றில் சில முட்டை, விந்து, முளையம் போன்றவற்றில் எழுந்தமானமாக நிகழும் மரபணு திடீர்மாற்றத்தினாலும் ஏற்படும். அப்படி குறிப்பிட்ட ஒருவரில் ஏற்படும் மாற்றமானது, தொடர்ந்து வரும் சந்ததிக்கு கடத்தப்படுகின்றது.
புற்றுநோய் போன்ற சில நோய்களுக்கு மரபணுக் கோளாறும் காரணமாக இருக்கும் அதேவேளையில், வேறு சூழலியல் காரணிகளும் காரணமாகின்றன. பொதுவாக இவை கருவிலுள்ள நிறப்புரிகளில் அல்லது மரபணுக்களின் அசாதாரண நிலைகளாலேயே உருவாகும். ஆனால் சில சமயம் இழைமணியிலிருக்கும் டி.என்.ஏயில் ஏற்படும் அசாதாரண நிலையும் இவ்வாறான மரபணு கோளாறு நோய்களில் வகைப்படுத்தப்படும்.
சில வகை புற்றுநோய்கள், இரத்தம் உறையாமை, டெளன் நோய்க்கூட்டறிகுறி, நடுக்குவாதம், போன்றன பரவலாக அறியப்பட்ட சில பரம்பரை நோய்களாகும்.