மடி நோய்
மடி நோய் அல்லது மடியழற்சி(Mastitis) என்பது ஒரு கால்நடைகளைத் தாக்கும் நோய். நுண்கிருமிகள் கால்நடையின் மடியைத் தாக்குவதால் உண்டாகிறது. மாடுகளை அசுத்தமாகவும் மற்றும் சேறான தரையில் வைத்திருப்பதாலும் இந்நோய் உண்டாகிறது. மடியில் ஏற்படும் காயங்கள் அல்லது பாலூட்டும்போது கன்றுகளால் கடிபட்ட காயங்கள் அல்லது தவறான பால் கறக்கும் முறைகளினால் ஏற்பட்ட காயங்கள் நோய்கிருமித் தொற்று ஏற்படக் காரணமாகின்றன. அதிகப் பால் கறக்கும் மாடுகள் போதும் பாதிக்கப்படுகின்றன.
பொருளடக்கம் |
அறிகுறிகள் மற்றும் பெறப்படும் பாலின் தரம் [தொகு]
மடி வீங்கியும், சூடாகவும், கெட்டியாகவும் மற்றும் வலியுடன் காணப்படும். பால் திரிந்தும் மற்றும் நோய் முற்றும் நிலையில் பெறப்படும் பால் இரத்தம் அல்லது சீழ் கலந்து வரும். சில நேரங்களில் பால் தண்ணீர் போன்று இருக்கும்.
பாலில் பொட்டாசியம்,இலக்ரோபெறின் என்பவற்றின் அளவு குறைவதுடன் பால் புரதமான கேசின் அளவும் குறைவடையும். கேசின் பாலிலூள்ள கல்சியத்துடன் தொடர்புள்ளதால் கல்சியம் அளவும் குறையும். இதனால் பாலைச் சேமித்தல் மற்றும் பயன்படுத்தலில் சிக்கல் இருக்கும்.[1].
தடுப்பு முறைகள் [தொகு]
மடி நோய்க்குத் தகுந்த தடுப்பூசியில்லாததால் வருமுன் காக்கும் முயற்சிகள் செய்யப்படுகின்றன. மடியில் காயம் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது, தரையைக் காய்ந்து இருக்கும்படி வைப்பது, சுண்ணாம்புத் தூளைத் தூவுவது (ஈக்கள் வராமல் தடுக்க). பால் கறக்கும்போது சுத்தமான இடத்திற்கு கொண்டு சென்று கறப்பது, பால் கறப்போர் கைகளை சோப்புப் போட்டுக் கழுவவது, மடியையும் பால் கறக்கும் முன் சுத்தமாகக் கழுவி விடுவது, பால் கறத்தலை விரைவாகவும் முழுமையாகவும் செய்வது, நோய் பாதித்த மடியிலிருந்து பாலைக் கடைசியாகத் தனிப் பாத்திரத்தில் கறப்பது, அதனை உபயோகப்படுத்தாமல் இருப்பது, நல்ல மாடுகளை முதலில் கறந்த பின்னர் நோயுற்ற மாடுகளை கறப்பது வருமுன் காக்கும் வழிமுறைகள்.
பால் கறந்த பின், மடிக்காம்பு துவாரமும் பால் வரும் பாதையும் திறந்திருப்பதால் மாடுகள் படுத்தால் நோய்கிருமிகள் மடியில் நுழைய ஏதுவாகும். எனவே, பால் கறந்தவுடன் தீவனமிளிப்பதால் 30- 45 நிமிடங்கள் வரை மாடுகள் படுப்பதைத் தவிர்க்கலாம். பால் வற்றிய மாடுகளில் மடியினை ஆரோக்கியமாகப் பராமரிக்க கால்நடை மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டும்.
சிகிச்சை [தொகு]
மடி நோயினைத் தவிர்க்கும் மருத்துவத்திற்கும் மற்றும் ஆலோசனைகளுக்கும் கால்நடை மருத்துவரை அணுகவும். நோய் பாதித்த மாட்டின் பாலை குணமடைந்த நான்கு நாட்களுக்குப் பின்புதான் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு பாதிக்கப்பட்ட பாலினை கூட்டுறவு சங்கங்களுக்கும் வழங்கக் கூடாது. இந்தப் பாலை அருந்துவோருக்கு தொண்டை கமறல் மற்றும் நச்சுத்தன்மை உண்டாகலாம்.
துணை நூல்கள் [தொகு]
- ↑ Jones, G. M.; Bailey, T. L.. "Understanding the Basics of Mastitis". Virginia Cooperative Extension. பார்த்த நாள் 4 February 2010.
- 2. கறவை மாடுகள் பராமரிப்புக் கையேடு, தேசிய பால்வளத்துறை, ஆனந்த்