பொய்தல் விளையாட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பொய்தல் விளையாட்டு சங்ககாலத்தில் மகளிர் விளையாடிய விளையாட்டுகளில் ஒன்று. பெண்பால் பிள்ளைத்தமிழ் நூல்களில் இது சிற்றில் பருவத்து விளையாட்டாகக் காட்டப்பட்டுள்ளது. அண்மைய காலத்தில் இது ஆண் பெண் சிறுவர் சிறுமியர் விளையாட்டாக இருந்துவந்தது.

இது ஒரு பாவனை விளையாட்டு. சிறுமியர் மணல்வீடு கட்டிக்கொண்டு அதில் அவரவர் தாயைப் போலப் பழகி விளையாடுவர். சோறு சமைப்பது போலவும், பிறருக்குச் சோறு படைத்து ஊட்டுவது போலவும் விளையாடுவர்.

  • பொய்யாக நடித்தலைப் பொய்தல் என்பர். [1]
  • குறும்பு செய்யும் சிறுவர்கள் மணல் வீட்டை அழிப்பர். [2]
  • கொண்டி மகளிர் மணம் கமழும் வீடுகளில் பொய்தல் ஆடித் திளைத்தனர். [3]
  • இந்த விளையாட்டு நிலா வெளிச்சத்தில் விளையாடப்படும். [4]
  • பொய்தல் விளையாடிய பின்னர் குரவை ஆடுதல் உண்டு. [5]
  • பொய்தல் விளையாட்டு ஒரு விழா போலவே நடைபெறும். அப்போது முள்ளி மலர்களைக் குவித்தும் விளையாடுவர். [6]
  • வெயில் காயாத நேரத்தில் விளையாடுவர். [7]
  • ஆற்றுமணலில் விளையாடுவர். [8]
  • இன்பத்துறைப் பொதுவி எனப்படும் பொதுமகளிர் சிறுமியரோடு சேர்ந்து விளையாடுவர். [9]

அடிக்குறிப்பு[தொகு]

  1. பொலந்தொடிப் புதல்வனும் பொய்தல் கற்றனன்; (நற்றிணை 166)
  2. கைதை வேலிக் கழிவாய் வந்து, எம்
    பொய்தல் அழித்துப் போனார், ஒருவர்
    பொய்தல் அழித்துப் போனார், அவர்நம்
    மையல் மனம் விட்டு அகல்வார் அல்லர். (சிலப்பதிகாரம், கானல்வரி, 43)
  3. மணம் கமழ் மனைதொறும் பொய்தல் அயர (மதுரைக்காஞ்சி 589)
  4. பொய்தல் ஆயம்,
    மாலை விரி நிலவில் பெயர்பு புறங்காண்டற்கு, (நற்றிணை 271)
  5. பொய்தல் ஆடிய பொய்யா மகளிர்
    குப்பை வெண் மணல் குரவை நிறூஉம் (ஐங்குறுநூறு 181)
  6. பொய்தல் மகளிர் விழவு அணிக் கூட்டும் (அகநானூறு26)
  7. காயா ஞாயிற்றாக, தலைப்பெய,
    பொய்தல் ஆடிப் பொலிக! (அகநானூறு 156)
  8. ஆடுவார் பொய்தல் அணி வண்டு இமிர் மணல் (பரிபாடல் 20 அடி 23)
  9. இன்பத் துறைப் பொதுவி! கெட்டதைப்
    பொய்தல் மகளிர் கண் காண இகுத்தந்து, (பரிபாடல் 20 அடி 59)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொய்தல்_விளையாட்டு&oldid=1275820" இலிருந்து மீள்விக்கப்பட்டது