பொன்னம்பலம் இராமநாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சேர் பொன்னம்பலம் இராமநாதன்
Sir Ponnambalam Ramanathan
 
KCMG, KC


இலங்கை சட்டசபையின் அதிகாரபூர்வமற்ற உறுப்பினர்
பதவியில்
1879 – 1892
பதவியில்
1922 – 1924

இலங்கை அரசுத் தலைமை வழக்குரைஞர்
பதவியில்
1892 – 1902
முன்னவர் சேர் சார்ல்ஸ் பீட்டர் லயார்ட்
பின்வந்தவர் ஜேம்ஸ் பெரெய்ரா

இலங்கை சட்டசபையின் இலங்கை கல்விமான்களின் பிரதிநிதி
பதவியில்
1911 – 1921

இலங்கை சட்டசபையின் வலிகாமம் வடக்கு பிரதிநிதி
பதவியில்
1924 – 1930

பிறப்பு ஏப்ரல் 16, 1851(1851-04-16)
இறப்பு நவம்பர் 30 1930 (அகவை 79)
தேசியம் இலங்கைத் தமிழர்
உறவுகள் சேர் பொன்னம்பலம் அருணாசலம்
பழைய மாணவர் ரோயல் கல்லூரி, கொழும்பு
சென்னை பிரெசிடென்சி கல்லூரி
தொழில் அரசியல்வாதி, கிரவுன் கவுன்சில்
துறை வழக்குரைஞர்
சமயம் இந்து

சேர் பொன்னம்பலம் இராமநாதன் (Sir Ponnampalam Ramanathan, ஏப்ரல் 16, 1851 - நவம்பர் 26, 1930) இலங்கையின் தேசியத் தலைவர்களுள் ஒருவராகக் கருதப்பட்டவர். சிங்களவரும், தமிழரும் இன வேறுபாடு பாராது அவரைத் தங்கள் தலைவராக ஏற்றுக்கொண்டனர்.

பொருளடக்கம்

[தொகு] வாழ்க்கை வரலாறு

பொன்னம்பலம் இராமநாதன் யாழ்ப்பாணம், மானிப்பாயைச் சேர்ந்த இராசவாசல் முதலியார் (கேட் முதலியார்) அருணாசலம் பொன்னம்பலம் என்பவரின் இரண்டாவது புதல்வராக கொழும்பில் பிறந்தார். குமாரசாமி முதலியார், சேர் பொன்னம்பலம் அருணாசலம் ஆகியோரது சகோதரர். ஆரம்பக் கல்வியை கொழும்பு இராணிக் கல்விக்கழகத்தில் (கொழும்பு வேத்தியர் கல்லூரி) கற்றார். 13 ஆவது வயதில், பிரெசிடென்சி கல்லூரியில் கல்வி கற்பதற்காக சென்னைக்கு அனுப்பப்பட்டார். சேர் றிச்சட் மோர்கனின் கீழ் சட்டக் கல்வி பயின்று 1873 இலே உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஆனார். பின்னர் சொலிசிட்டர் ஜெனரலாகப் பதவி வகித்து 1906 ஆம் ஆண்டு, பணி ஓய்வு பெற்றார்.

[தொகு] அரசியல் சேவை

1879 ஆம் ஆண்டு இலங்கையின் சட்டசபைக்கு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 1911 ஆம் ஆண்டில் நடைபெற்ற இலங்கையின் சட்டசபைக்கான முதலாவது தேர்தலில் முழு இலங்கையரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே உறுப்பினராக இராமநாதன் தெரிவு செய்யப்பட்டார். 1987ம் ஆண்டு விக்டோரியா மகாராணியாரின் 50வது ஆண்டு விழாவிற்கான இலங்கையின் பிரதிநிதியாக செல்ல பொன்னம்பலம் இராமநாதன் அவர்களே தெரிவுச்செய்யப்பட்டார். அந்த விழாவின் போது அவருக்கு பிரித்தானிய அரசினால் இலங்கையின் முழுமையான தேசியவாதி எனும் தங்கப்பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. 1921 ஆம் ஆண்டு பிரித்தானிய அரசினால் பிரபுப் பட்டம் (Sir) வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். மிகுந்த சொல்வன்மையும் வாதத் திறமையும் வாய்க்கப்பெற்ற இவர், இலங்கையில் பிரித்தானியரின் பல நடவடிக்கைகளுக்கு எதிராக வாதாடி இலங்கையரின் நலன்களைப் பாதுகாத்தார்.

[தொகு] சிங்கள அரசியல் தலைவர்களின் வரலாற்றில்

1915ம் ஆண்டு இலங்கையில் சிங்கள-முஸ்லிம் இனக்கலவரம் ஒன்று ஏற்பட்டது.[1] இது சிங்கள அரசியல் தலைவர்களால் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டதாக பிரித்தானிய ஆளுநர்கள் அறிந்துக்கொண்டனர். உடனடியாக பிரித்தானியா ஆளுநரால் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது. அத்துடன் அந்த இனக்கலவரத்திற்கு காரணமானவர்களை கைது செய்யவும் கட்டளையிட்டது. அந்த இனக்கலவரத்திற்கான பிரதான காரணிகளாக டீ. எஸ் சேனானாயக்கா, டீ. எஸ் விஜேவர்தனா, டொக்டர் நெயிசர் பெரேரா, ஈ. டீ. த சில்வா, ஆர் டயஸ் பண்டாரநாயக்கா, எச் அமரசூரிய. ஏ. எச். மொலமூறே போன்ற இலங்கையின் முன்னனி சிங்கள அரசியல் தலைவர்களே இருந்தனர். இவர்களை கைது செய்த பிரித்தானிய அரசு கடும் நடவடிக்கை எடுத்தது. அவர்களை பிரித்தானியாவில் சிறையில் அடைத்தது. அத்துடன் இனக்கலவரத்திற்கு முக்கிய காரணமான அனைவருக்கும் மரணத் தண்டனை வழங்கப்பட்டது.

இனக்கலவரத்தை ஏற்படுத்திய குற்றம் பாரிய குற்றம் என்றபோதும், அவர்களுக்கு மரண தண்டனை வழங்குவதை விரும்பாத சேர் பொன்னம்பலம் இராமநாதன், பிரித்தானிய அரசை எதிர்த்து, சிங்கள அரச தலைவர்களின் உயிரை காப்பாற்றும் முகமாக மீட்பு போராட்டம் செய்து, அவர்களை மீட்டவர் என்பதும் இலங்கை அரசியல் வரலாற்று நிகழ்வாகும்.

பொன்னம்பலம் இராமநாதன் அவர்களின் போராட்டத்தினால், உயிர் மீண்டு வந்த சிங்கள அரசியலாளர்கள், அவரை தங்கள் தோள்களில் சுமந்து, காலிமுகத்திடலில் ஊர்வலம் சென்றமையும் வரலாற்று நிகழ்வாகும். இவ்வாறு பொன்னம்பலம் இரமாநாதன் அவர்கள் சிங்கள அரசியல் தலைவர்களை மீட்டிருக்காவிட்டால் டீ. எஸ் சேனானாயக்கா, ஆர் டயஸ் பண்டாரநாயக்கா போன்ற சிங்கள அரசியல் தலைவர்கள் இலங்கை வரலாற்றில் இடம்பிடித்திருக்கவும் முடியாது என, நன்றி கூறும் தற்கால சிங்கள அரசியலாளர்களும் உளர்.

[தொகு] சமூக சேவை

இராமநாதனால் உடுவிலில் நிறுவப்பட்ட பெண்கள் கல்லூரியின் இன்றைய தோற்றம்

இவர் அரசியல் மூலம் மக்களுக்குச் செய்த தொண்டுகள் தவிர, சமய, சமூகத் துறைகளிலும் சேவை செய்துள்ளார். இந்துக்களின் கல்வி மேம்பாட்டுக்காக யாழ்ப்பாணத்தில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாக இரண்டு பாடசாலைகளை நிறுவியுள்ளார். இவற்றில் பெண்கள் பாடசாலையான உடுவிலில் அமைந்துள்ள இராமநாதன் பெண்கள் கல்லூரி இன்றும் யாழ்ப்பாணத்தின் முக்கிய கல்லூரிகளிலொன்றாக விளங்கிவருகிறது. ஆண்கள் பாடசாலையான பரமேஸ்வராக் கல்லூரி 1970 களின் தொடக்கத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் ஆரம்பிக்கப்பட்டபோது அதன் ஒரு பகுதியாக்கப்பட்டது.

[தொகு] சமய சேவை

அருள்பரானந்த சுவாமிகளின் தொடர்பால் சமயம், தத்துவம், யோகநெறி என்பனவற்றைத் தெளிவாகக் கற்றுணர்ந்தார். கீழைத்தேய மெய்யியல் தூதுவராக 1905 - 1906 இலே அமெரிக்கா சென்று சொற்பொழிவுகளாற்றிப் பெயர் பெற்றார். சைவசித்தாந்த மகாசமாஜத்தின் முதல் மாநாட்டிற்குத் (1906) தலைமை வகித்தார்.

தந்தை கொழும்பு கொச்சிக்கடையிற் கட்டி 1857 நவம்பரிலே குடமுழுக்கு செய்வித்த, ஸ்ரீ பொன்னம்பலவாணேசர் கோயில் எழுந்தருளிய இடத்திலே புதியதொரு கோயிலை 1907 ஆம் ஆண்டு கருங்கற் பணியாக ஆரம்பித்து 1912 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் திகதி குடமுழுக்கு செய்வித்தார்.

1923 ஆம் ஆண்டிலே யாழ்ப்பாணத்திற் சைவ வித்தியாவிருத்திச் சங்கம் தோன்றுவதற்குக் காலாக இருந்ததோடு அதன் முதற் தலைவராகவும் பள்ளிக்கூடங்களின் முகாமையாளராகவும் 1926 வரை சேவை செய்தார். தொடர்ந்து அதன் போஷகராகவும் விளங்கினார்.

யாழ்ப்பாணத்தில் சாதியமைப்பு முறை இறுக்கமாக இருந்த காலகட்டத்தில் வாழ்ந்த இராமநாதன் உயர்சாதியினருக்குச் சார்பாகவே நடந்துகொண்டார் எனவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்கு ஆதரவான சட்டங்களை எதிர்த்தார் எனவும் சிலர் இவர்மீது குற்றம் சாட்டுகிறார்கள்.

அரசியலில் இவர் நாட்டுக்குச் செய்த சேவையைக் கௌரவிப்பதற்காக கொழும்பில் பழைய நாடாளுமன்ற வளாகத்துக்குள் இவரது சிலை நிறுவப்பட்டுள்ளது.

[தொகு] இவரது நூல்கள்

  • An Eastern Exposition of the Gospel of Jesus According to St. Mathew (1898)
  • An Eastern Exposition of the Gospel of Jesus According to St. John (1902)
  • The Culture of the Soul Among Western Nationals (1907))
  • The Spirit of the East Contrasted with the Spirit of the West (1905)
  • On Faith or Love of God (1897)
  • பகவத்கீதா தமிழ் மொழிபெயர்ப்பும் விருத்தியுரையும் (1914)
  • திருக்குறள் பாயிரமும் இராமநாதீயம் என்னும் விருத்தியுரையும் (1919)
  • ஸ்ரீ இராமநாத தர்மசாஸ்திர பாடம்

[தொகு] மேற்கோள்கள்

[தொகு] வெளியிணைப்புகள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=பொன்னம்பலம்_இராமநாதன்&oldid=1120562" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்