பேச்சு:மேகநாத சாஃகா

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேகநாத சாஃகா எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

இவர் பெயரை மேகநாத சாஃகா என்று எழுதுவது சரியாக இருக்கும். மேக்நாத் என்பது சரியில்லை. மேநா (வங்காளம் মেঘনাদ সাহা, தேவநாகரியில் मेघनाद साहा) என்று இருப்பது சரி. சாஃகா என்பது ஏறத்தாழ அதே ஒலிப்பு கொண்டதே. சாகா என்றும் எழுதலாம், ஆனால் சாகா என்பதைவிட சாஃகா என்று எழுதினால் சற்று நெருக்கமாக இருக்கும். தலைப்பை மேகநாத சாஃகா என நான் மாற்றட்டுமா?--செல்வா 15:39, 29 மே 2009 (UTC)[பதிலளி]

செல்வாவின் கருத்துடன் ஒத்துப் போகிறேன்.--சிவக்குமார் \பேச்சு 16:44, 29 மே 2009 (UTC)[பதிலளி]
மாற்றுவதில் தவறு இல்லை. இருப்பினும் Meghnad Saha வைப்பற்றி தமிழ் விக்கியில் தேடும் பொது பயனருக்கு சட்டென்று புரியக்கூடிய வகையில் அடைப்புக்குறியில் பொதுவான பயன்பாட்டுச் சொல்லையும், அதாவது., மேக்நாத் சாகா அல்லது சாகா, கொடுத்து விடுவது நலம் என்று எண்ணுகிறேன்.--பரிதிமதி
சிவக்குமார், பரிதிமதி, உங்கள் கருத்துகளுக்கு நன்றி. வங்காள மொழியில் மேகநாத என்பது சரியான ஒலிப்பு. வங்காள எழுத்துகளை ஒற்றி, இங்கே ஒட்டிப் பார்க்கலாம். ஒரு கட்டுரைக்குப் பல வழிமாற்றுகள் இருக்கலாம்-அது வரவேற்கத்தக்கதே. பல வழிகளிலும் தேடுவோர்க்கும் கட்டாயம் இக்கட்டுரை சிக்கும். சிறீதரன் கனகு சாஃகா என்பதை விரும்புவாரா எனத் தெரியவில்லை. --செல்வா 17:15, 29 மே 2009 (UTC)[பதிலளி]
மேகநாத் சாஹா அல்லது சாகா தான் சரி . தமிழில் இல்லாத ’ஃகா’ என்ற எழுத்தை புகுத்த வேண்டாம். எல்லோருக்கும் தெரிந்த தமிழ் எழுத்துகளை உபயோகிக்க வேண்டுமே தவிற, தனி மனிதர்களின் மனம் போன போக்குக்கு விக்கியில் இடம் கொடுக்க கூடாது.உடனே பெயறை மாற்றவும். நன்றி.--92.39.199.91 18:41, 31 மே 2009 (UTC)[பதிலளி]

தயவுசெய்து, சாகா என்றே எழுத வேண்டுகிறேன். மேலே உள்ள பெயர் தெரிவிக்காத நண்பரின் கருத்து போல், இது இல்லாத எழுத்து இல்லை. எஃகு போன்ற இடங்களில் பயன்படும் எடுத்துக்காட்டு இருக்கிறது. ஆனால், ஹ - வுக்குப் பதில் ஃக பயன்படுத்தும் வழக்கம் இது வரை இல்லை. சொல்லின் இடையில் வரும் ஹகரம் ககரம் ஆவது பொதுத் தமிழ் வழக்கில் மிக இயல்பாக உள்ள ஒன்று. எடுத்துக்காட்டு, mohan -> மோகன், ahimsai -> அகிம்சை. சாஃகா என்று எழுதவதால் வரக்கூடிய போக்குகள்: ஃஅனுமன், ஃஇந்து என்று சொல்லின் முதலிலும் எழுதத் தொடங்குவார்கள். காஃகம், முருஃகன் என்றெல்லாம் மக்கள் எழுதத் தொடங்கினாலும் ஆச்சரியப்படுதற்கில்லை. (ஸெல்வன், ஷரவணன் என்று எழுதும் புது வழக்கத்தை நோக்கலாம்) சொல்லின் முதலில் ஆய்த எழுத்து வருமா, ஆய்த எழுத்துக்கு அடுத்து உயிரெழுத்துகள் வருமா என்று தெரியவில்லை. இயன்ற அளவு கிரந்தம் தவிர்க்க வேண்டும். அதே வேளை மிகவும் புதிய வழிமுறைகளை அறிமுகப்படுத்தாமல் ஏற்கனவே உள்ள நல்ல தமிழ் வழக்குகளையும் பின்பற்ற வேண்டும். இப்புதிய வழிமுறை ஏற்கனவே உள்ள நல்ல வழக்குகளை அழிக்கும் தன்மை இல்லாததாகவும் பார்க்க வேண்டும்.--ரவி 03:26, 2 ஜூன் 2009 (UTC)

"இயன்ற அளவு கிரந்தம் தவிர்க்க வேண்டும்" - யாரால் இயன்ற அளவு? உஙளாலா, என்னாலா, அல்லது குமரி அனந்தன் போன்றவறார? நீங்கள் குமரி அனந்தன் எழுத்தை பார்த்திர்ர்களானால், சுத்தமாக கிரந்த எழுத்து இருக்காது. ‘தவிர்க்க வேண்டும்’ என்று சொல்லும் போதே , எதோ இயற்கையான வெளியீட்டில் பாதகம் போல இருக்கிறது. நீங்கள் உங்கள் கட்டுரைகளில் எப்படியானாலும், அதாவது மற்றவர்களுக்கு புரிகிறார்போல், எழுதுங்கள். ஆனால் பொதுவாக ‘இயன்ற அளவு’ ஒன்றை - கிரந்தமோ வேறு எதோ- தவிர்க்க வேண்டும் என்பது செயர்க்கையாகவும், தகாததாகவும், கேலித்தனமாகவும் உள்ளது. நீங்கள் ‘இயன்ற வரை பொய் சொல்லாதீர்கள்’ என்று புது குறள் சொன்னால் எப்படி, அப்படித்தான் கேலித்தனமாக உள்ளது.--92.39.200.17 17:30, 5 ஜூன் 2009 (UTC)
பெயர் அறிவிக்காத பயனரே, தமிழில் எப்படி எழுத வேண்டும் என்று வரைமுறைகள் உண்டு. அதன்படி இயங்குவது தவறில்லை. Gnanasekar, Yazhini, Valli எழுதுவது திரிபு என்று உணர்ந்தாலோ அல்லது ஏன் அவர்கள் ஞாnasekar, Yaaழிni, vaள்ளி என்றோ எழுதுவதில்லை என்று உணர்ந்தாலோ இது உங்களுக்குப் புரியும். வடவெழுத்து ஒரீஇ என்னும் முறை தமிழைத் தமிழாக இருக்க உதவியுள்ளது. இது தமிழ் முறை. ஏதும் செயற்கை இல்லை. வேற்று மொழி ஒலியன்களை ஒரு மொழியில் எழுதும்பொழுது சில திரிபுகள் நிகழ்வது இயற்கை. இதனை நீங்கள் அருள்கூர்ந்து புரிந்துகொள்ளுங்கள். கிரந்தம் இல்லாமலே எழுதுக என்று இல்லாமல், ஏதோ ஒருசில இடங்களில் இருக்க வேண்டியிருந்தால் இடுக, என்னும் முகமாக "இயன்றவரை" கொள்கிறோம். தாஜ் மகால் என்பதை தாச்சு மகால் என்றால் தவறாகாது. தாட்சு மகால் என்றும் கூட எழுதலாம். மிகத் தேவை என்றால் தாஜ் மகால் என்று எழுதலாம் என்று பொருள். உடனே மகால் அல்ல மஹால் என்று எழுதவேண்டும், சாகா அல்ல சாஹா என்று எழுதவேண்டும் என்று மிகப்பரவலாக திணிப்பு செய்ய பலர் முற்படுவதால் தொன்றுதொட்டு நலம் காத்து வரும் தமிழ்முறையை வலியுறுத்துவது தேவையாகின்றது. மற்ற பல மொழிகளில் இல்லாதவாறு மிகப்பழங்காலத்தே இருந்து இலக்கண வரம்புகளுடன் செழிப்பாக வளர்ந்து, இன்றும் உயிர்வாழும் ஒரு சில மொழிகளில் தமிழும் ஒன்று. எனவே அதன் முறைகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பது குறிக்கோள். தாட்சு மகால் என்று எழுதுவதால் ஒன்றும் குறைவு படாது. தமிழ் வள்ளியை, ஞானசேகரனை, பிறர் அவர்கள் தங்கள் மொழிகளில் இயன்றவாறு திரிப்பது போன்றதுதான் இதுவும். இது பற்றிய அடிப்படை அறிவும் நேர்மையும் இருந்தால் இவற்றை எளிதாக உணரலாம். சாஃகா என்பது கூடிய அளவு துல்லியமான ஒலிப்பு. தமிழில் இப்படி எழுதுவது தவறல்ல. சாகா என்றும் கட்டாயம் எழுதலாம். கிரந்தம் இட்டுத்தான் எழுதவேண்டும் என்பது உங்கள் வாதம், ஆனால் அதில் வலுவேதும் இல்லை. தமிழ் மொழியை, அதன் முறைமைகளை மதிக்க வேண்டும் என்று நினைக்கிறோம். மதிக்காதவர்களுக்கு இது புரியாது. அதுவும் உரையாடல் பண்பாடு அறியாமல், தனிமனிதத் தாக்குதல்களோடு பேசும் நீங்கள் புரிந்துகொள்ளாதது வியப்பில்லை. --செல்வா 20:33, 6 ஜூன் 2009 (UTC)
நீங்கள், உங்கள் முறையினால்தான் தமிழே அழிவிலிருந்து பாதுகாக்கப்படுகிரது போல் எழுதுகிறீர்கள். உதாரணமாக, தாஜ் மஹால் என எடுத்துக் கொண்டாலும், ஊடகங்கள் அப்படிதான் எழுதுகிறன வீரகேசரி, பிபிசி, தினமலர் , தினகரன் போன்ற சிறிய அளவு உதாரணங்களை காண்க. http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=9637 http://www.bbc.co.uk/tamil/news/story/2008/11/081129_mumbai_day3.shtml http://in.tamil.yahoo.com/News/National/0812/01/1081201031_1.htm http://www.dinamalar.com/pothunewsdetail.asp?News_id=12515&ncat=TN http://www.thinakaran.lk/2008/10/21/_art.asp?fn=r0810212 . லட்சக்கணகான மக்கள் படிக்கும் செய்திதாள்களே, அப்படி செய்யும் போது, உங்கள் வாதத்திற்கு ஆதாரமே இல்லை. யார் தமிழ் எழுதுகிறார்கள்? லட்சக் கணக்கான மக்கள் படிக்கும் செய்தித்தாள்களா அல்லது ஆங்கிலத்தில் பிழைப்பு நடத்தும் ஒருவரா என சிந்தித்து பாருங்கள் −முன்நிற்கும் கருத்து 92.39.200.17 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
தமிழ் விக்கிப்பீடியாவை நாளொன்றுக்கு 50,000 பேருக்கு மேல் படிக்கின்றனர். தவிர இது பொது ஊடகம் அல்ல, கலைக்களஞ்சியம். கலைக்களஞ்சிய நடை பொதுநடையில் இருப்பதில்லை (எந்த மொழியானாலும்). -- சுந்தர் \பேச்சு 02:50, 7 ஜூன் 2009 (UTC)
சுந்தர், நீங்கள் சொல்வது தவறு. விகி ஊடகங்களில் ஒரு வகைதான். http://en.wikipedia.org/wiki/Media_(communication) சென்று அதை புரிந்து கொள்க.விகியை யாரும் புத்தகம் போல் விலை கொடுத்து வங்குவதில்லை--92.39.200.17 08:54, 7 ஜூன் 2009 (UTC).
ரவியின் கருத்துடன் உடன்படுகிறேன். அத்துடன் Kirchhoff என்பதன் சரியான ஒலிப்பு கிர்க்காஃப் (அவ்வாறே நாம் படித்தோம்). கிர்ச்சாஃப் அல்ல.--Kanags \பேச்சு 10:17, 2 ஜூன் 2009 (UTC)


காகம் என்பதை kaagam என்றுதான் ஒலிக்க வேண்டும். kaaham என்று ஒலிப்பது கொச்சையான பேச்சு வழக்கு. இது பற்றி நிறைய உரையாடி உள்ளோம். மிக அண்மையில் தமிழ் ஒலிப்பியலில் ஓலியதிர்வுப்படம் மூலம் அலசும் ஆக்ஃசுபோர்டு பல்கலைக்கழக ஆய்வாளர் எலினோர் கீன் (Elinor Keane) அவர்களிடமும் நேரடியாக தனி மடலில் உரையாடி உள்ளேன். அவருடைய ஆய்வுத்தாளைப் பார்க்கவும். முருகன் என்பதன் Murugan என்றுதான் எழுதுகிறார். Elinor Kean's paper entitled, "Phonetics vs. Phonology in Tamil wh-questions" (which I saw at http://aune.lpl.univ-aix.fr/~sprosig/sp2006/contents/papers/PS2-01_0002.pdf ) She has given a spectrogram of the question, "Murugan yaaroodu Maduraiyilirundu varuvaan?" in Fig. 2. மேலும் ஏராளமான எடுத்துக்காட்டுகள் காட்ட முடியும். இடைவரும் ககரம் ga என்னும் ஒலிப்புதான் ஆனால் சிறிது காற்றொலி உண்டு. இது நுட்பம். இதனை மிகைப்படுத்துவது தவறு. Muruhan, mahan, kaaham என்பன தவறான ஒலிப்பு, Murug*an, mag*an, kaag*am என்பது சரியான ஒலிப்பு. இதில் g* என்பது ஏறத்தாழ 80-90% ga + 10-20% h. பேச்சு வழக்கில் வெவ்வேறு அளவு காற்றொலி கலந்து பேசுகிறோம் (வெவ்வேறு தமிழ்க் குழுமங்கள். வருவாக (varuvaaga) என்பதை varuvaaha என்பது கொச்சையான பேச்சு வழக்கு). சாகா என்று எழுதுனால் Saagaa என்று ஒலிக்க வேண்டும். saag*aa என்று ஒலிப்பதற்கு மாறாக saahaa என்று ஒலிப்பது திரித்து ஒலிப்பதாகும். ஆனால் அப்படி எழுதுவதில் எனக்கு மறுப்பு இல்லை. எப்படியாயினும் சாஃகா என்பது புது முறை அல்ல. தமிழில் 2500 ஆண்டுகளாக வழங்கும் தெளிவான ஒலிப்பு. பெயர் அறிவிக்காத பயனர் கூறியது தவறான கூற்று (தனி மனிதர்களின் மனம் போன போக்கு என தனிமனித தாக்குதலான கூற்றுடன் வேறு உள்ளது). இது பற்றி பின்னர் மேலும் கூறுகிறேன். சுருக்கமாக, கனகு, கிர்ச்சாஃவ் அல்லது கிர்ச்சாஃப் என்பதுதான் அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் வழங்கும் ஒலிப்பு. கிர்க்காஃப் என்று யாரும் சொல்லி நான் கேள்விப்பட்டதில்லை கிர்க்காஃவ் என்றும் சொல்வது வழக்கம் (இரு முறையில் ஒலிக்கிறார்கள். கிட்^சாவ்' (kiətʃɒf) அல்லது கிர்ஃகாவ்' (kɪrxhɔf) <- ஆக்ஃசுபோர்டு அகராதிப்படி). தமிழில் கிர்ட்சாஃவ் என்று கூறினால் நெருக்கமாக இருக்கும். நான் இவ்விதிகளை பல்கலைக்கழக மாணவர்களுக்குப் பயிற்றுவிப்பவன். இங்கு இட்டுள்ள ரவியின் வேறு பல கருத்துகளுக்கும் மறுமொழி தருகிறேன் பின்னர். --செல்வா 14:18, 2 ஜூன் 2009 (UTC)

"எலினோர் கீன் (Elinor Keane) .... ஆய்வுத்தாளைப் பார்க்கவும். முருகன் என்பதன் Murugan என்றுதான் எழுதுகிறார். Elinor Kean's paper entitled, "Phonetics vs. Phonology in Tamil wh-questions" (which I saw at http://aune.lpl.univ-aix.fr/~sprosig/sp2006/contents/papers/PS2-01_0002.pdf ) She has given a spectrogram of the question, "Murugan yaaroodu Maduraiyilirundu varuvaan?" in Fig. 2. மேலும் ஏராளமான எடுத்துக்காட்டுகள் காட்ட முடியும்". எலினோர் கீனின் ஆராய்சி `முருகன்` என்பதைப் பற்றியதே அல்ல. அந்த ஆராய்சி கட்டுரை `சாஹா` என்பதின் விமர்சனதின் தொடர்பற்றது. எலினோரின் ஆராய்சியின் நோக்கம் எப்படி சொல்லாடல்களில் கேள்வி ஒலிகள் முடிகின்றன. முக்கியமாக, ஒரு அடுக்கின் முடிவில் எப்படி கேள்வி ஒலியன்கள் ஒலிக்கின்றன என்பது--92.39.200.17 11:10, 10 ஜூன் 2009 (UTC).
"தமிழில் 2500 ஆண்டுகளாக வழங்கும் தெளிவான ஒலிப்பு. பெயர் அறிவிக்காத பயனர் கூறியது தவறான கூற்று (தனி மனிதர்களின் மனம் போன போக்கு என தனிமனித தாக்குதலான கூற்றுடன் வேறு உள்ளது)." செல்வா,தமிழ் கூகிளில் தேடை பாருங்கள், தமிழர்கள் எப்படி இதை எழுதுகிறார்கள் என்று. உங்கள் முறையில் யாரும் எழுதவில்லை. சாஹா என்றுதான் இப்பெயரை எழுதிறார்கள். சாகா என்று போட்டு தேடினால் 'சாகா வரம்’ போன்ற ’சாவு’ இன் திரிபுதான். 2500 ஆண்டு வழக்கம் என்று புருடா விடுகிறீர்கள்.−முன்நிற்கும் கருத்து 92.39.200.17 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

92.39.200.17ல் இருந்து எழுதும் நண்பரே, தயவுசெய்து உரையாடல் தலைப்பை மட்டும் முன்வைத்து உரையாடுங்கள். "புருடா விடுகிறீர்கள், மனம் போன போக்கில்" போன்ற தனிநபர் பற்றிய கருத்துகளைத் தெரிவிக்க வேண்டாம். வெஃகாமை என்று திருக்குறள் அதிகாரம் ஒன்றே உள்ளது. வெஃகாமை என்பதை எப்படி ஒலிப்பீர்கள்? திருக்குறள் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது தானே? இப்படி இலக்கியங்களில் காணும் பயன்பாட்டைத் தான் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருந்த வழக்கம் என்று குறிப்பிடுகிறார்.

தமிழில் எப்படி எழுதுவது சரி என்பதை முடிவு செய்ய கூகுளை இறுதி ஆதாரமாக கொள்ள இயலாது. கூகுளுக்குத் தமிழ் தெரியாது படித்துப் பாருங்கள். ஒரு வாதத்துக்கு கூகுளைப் பார்த்தாலும், மோகன் என வரும் கூகுள் முடிவுகள் 138,000. மோஹன் என வரும் கூகுள் முடிவுகள் 5990 மட்டுமே. mohanஐ மோகன் என்று எழுதும் போது sahaவை ஏன் சாகா என்று எழுதக் கூடாது?--ரவி 04:15, 6 ஜூன் 2009 (UTC)

ஃ ஐ போடுவது எனக்கு தெரியும் - உதாரனம் எஃகு. ஆனால் அதை சரியான இடத்தில் பயன்படுத்த வேண்டும். நான் சாகா விற்கு ஆட்சேபிக்க வில்லை. - ஆனால் இப்பெயரை சாஹா என்றதான் பலர் எழுதுகிறார்கள் என்பதையும் சொல்ல வேண்டும். மோகன் - மோஹன் இது ஒரு பிரச்சினையே இல்லை. சொல்கிறதற்கும் ஒன்றுமில்லை--92.39.200.17 09:49, 6 ஜூன் 2009 (UTC)
ஆய்தம் இட்டு எழுதுவது உங்களுக்குத் தெரியும் என்கிறீர்களே, அப்பொழுது சாஃகா என்று எழுதுவதில் என்ன தவறு? கிரந்த எழுத்து தேவை இல்லை என்பதை நீங்கள் ஏற்க மறுக்கிறீர்கள். ஒலிப்பு நெருக்க வேண்டின் சாஃகா என்று எழுதலாம், அல்லது சாகா என்று எழுதலாம். கிரந்தம் தேவை இல்லை. --செல்வா 20:37, 6 ஜூன் 2009 (UTC)


செல்வா, எஃகு போன்ற இடங்களில் இயல்பாகவே ஹகர ஒலி வருகிறது. இது தமிழில் ஏற்கனவே உள்ள வழக்கம் தான். ஆனால், பிற மொழிகளில் ஹகரம் வரும் இடங்களுக்கு, ஃ பயன்படுத்துவது தற்காலத் தமிழில் காணாத வழக்கம். இதைத் தான் குறிப்பிட விரும்பினேன்.

காகம், முருகன் ஆகியவை தான் சரியான ஒலிப்பு என நாம் அறிவோம். ஆனால், kaaham, muruhan என்று ஒலிப்பது, எழுதுவது பிழை எனத் தெரியாத, தெரிந்தும் வலிந்து எழுதும் மக்களுக்கு, இந்த ஃ வழிமுறை பிழையான வழிகாட்டாக அமைந்து விடலாம் என்பது தான் என் கவலை.

சாகா என்று எழுதிவிட்டு சாஹா என்று ஒலிக்கலாகாது என்ற உங்கள் கருத்து புரிகிறது. ஆனால், கிரந்த ஒலிகளிலேயே ஹகர ஒலி தான் பெரும்பான்மை மக்களால் விடுத்து ஒலிக்கப்படுகிறது. எனவே, பெரும்பான்மை மக்கள் இயல்பாகவே சாகா என்று தான் ஒலிப்பார்கள்.

ஏற்கனவே, தமிழ் விக்கிப்பீடியா பொதுத் தமிழ் நடையில் இருந்து மிகவும் மாறுபடுகிறது என்பது ஒரு முக்கிய விமர்சனமாக இருக்கிறது. இயன்ற அளவு பொது நடைமுறைகளைப் பின்பற்றுவோமே?--ரவி 18:01, 2 ஜூன் 2009 (UTC)

ரவி, ஆய்த எழுத்து ஒரு சார்பெழுத்து. அதன் ஒலிப்பு சிறிதளவு வெவ்வேறு வகையான காற்றொலியை அடுத்து வரும் எழுத்துக்குத் தருவது. இதன் ஒலி சற்றேறக்குறைய H என்பது போன்றதே. சாஃகா, முஃகமது, முதலான இடங்களில் கட்டாயம் பயன்படுத்தலாம். இடையே வரும் H ஒலிகளுக்கும் கடைசியில் வரும் H உக்கும் கட்டாயம் ஆய்த எழுத்தைப் பயன்படுத்தலாம். சொல்லப்போனால் எங்கெல்லாம் H ஒலியை கிரந்த எழுத்தை இட்டு எழுதுகிறார்களோ அங்கெல்லாம் இயல்பாய் ஃ இட்டு எழுதலாம். மகா, மகால், என்பதை மஹா, மஹால் என்றுதான் எழுத வேண்டும் என்று ஒலிப்பைப் போற்றுவோர்கள் மஃகா,, மஃகால் என்று எழுதட்டும் (ஒலிப்புதானே முக்கியம் என்கிறார்கள் அவர்கள்). மகா, மகால், சாகா என்று எழுதுவதில் எனக்கு எந்தவித மறுப்பும் இல்லை. சற்று திரித்து ஒலிப்பார்கள். ஆனால் பல இடங்களில் இப்படி எழுதுவதால், மகா, சாகா என்று வரும் இடங்களில் வரும் ககரத்திற்கு "சரியான" ஒலிப்பு Haa என்று கூற முற்பட்டால்தான் கெடுதிகள் உண்டு. முருகா என்னும் சொல்லை Muruhaa என்று ஒலிப்பதால் தவறில்லை, ஆனால் சரியான ஒலிப்பு Murugaa என்பது. தமிழை எப்படியெல்லாம் திரிக்கிறார்கள் என்று அறிதல் வேண்டும். சொன்னான், எப்படிச் சொன்னான் (chonnaan, eppadic chonnaan) என்பது போக sonnaan, eppadi sonnaan என்று ஆகி, சிலர் இப்பொழுது shonnaan, eppadi shonnaan என்கின்றனர். பேசினான் என்பதை pEshinaan என்கின்றனர். அதெல்லாம் கொச்சையான பேச்சு வழக்கு (குழு வழக்கு). இப்பொழுது ககரத்தைக் கெடுத்து வருகிறார்கள். varuvaaha, vaaraaha என்பன இருக்கட்டும், அதற்கான அழகு உண்டே. அதனை நானும் ரசிப்பவன் மட்டுமல்ல , அப்படிப் பேசுபவனும்தான் (ஒரு சிறிது). மகனை மவன், மோன் என்று கூறட்டும் அவையும் அழகே. ஆனால் சரியான திருந்திய, செம்மொழி ஒலிப்பு magan என்பதை மறுக்கிறார்கள், திரிக்கிறார்கள்- அது தவறு. ஒலிப்புத் துல்லியம் வேண்டும் எனில், சாஃகா, இல்லாவிடில் சாகா என்று எழுதலாம். ரவி, சாஃகா, கஃசு (kahsu) ,அஃது (ahdhu), பஃறுளி (pahRuLi) முதலானவை இயல்பானவை. ஃஅனுமான் என்று எழுதவேண்டும் என்று சொல்லவில்லை, ஹனுமான் என்றுதான் எழுதவேண்டும் என்று வலியுறுத்தினால், ஃஅனுமான், ஃகனுமான் என்று கட்டாயம் எழுதலாம் என்று நாம் சொல்வது முறை. ஒலிப்புத் துல்லியம் கூடுதலாக வேண்டும் என்றால் மட்டுமே அப்படி. இல்லாவிடில் தமிழ் முறைப்படி அனுமான் (மிக எளிமையான (தமிழ் மொழிக்கணிப்பில்) இனிமையான ஒலிப்பு) என அழகாக எழுதிவிட்டுப் போகலாம். ரவி நீங்கள் கூறுகின்றீர்களே, காஃகம், முருஃகன் என்றெல்லாம் மக்கள் எழுதத் தொடங்கினாலும் ஆச்சரியப்படுதற்கில்லை, அப்படி எழுத நினைப்பவர்கள், காஹம், முருஹன் என்றும் எழுதுவார்கள் என்றும் கூறலாம் அல்லவா? பஞ்சு என்பதை பஞ்ஜு என்றும், நெஞ்சு என்பதை நெஞ்ஜு என்று எழுதுவதைப் பார்த்திருக்கிறேன். அவை எழுத்துப் பிழை இல்லை (பார்க்கவும்) நெஞ்ஜு என்று எழுதுவதை இங்கே பார்க்கலாம்). இப்படியெல்லாம் எழுதுவார்கள் என்று பேராசிரியர் சியார்ச் ஆர்ட் அவர்களுடன் தமிழ் டாட் நெட்டில் 1997 வாக்கில் நான் கருத்துரையாடிய பொழுது கூறியது இப்பொழுது உண்மையாகியிருப்பதைக் கண்டிருக்கிறேன். தமிழை நுணுக்கமாகக் கெடுப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். 1965 இல் இருந்து இப்படி வலிந்து கெடுப்பவர்களை நான் நேரில் கண்டு வந்திருக்கின்றேன். இப்படிப் பல நூற்றாண்டுகளாக வேண்டுமென்றே தமிழ்-கெடுப்பு, பழிப்பு நடந்து வந்துள்ளது! "விமர்சனம்" செய்பவர்கள் யார், எதற்காக செய்கிறார்கள் என்று பாருங்கள். எடுபடும் விமர்சனமா எனப் பார்க்க வேண்டுவது கடமை. ஏன் நாம் செய்யும் "விமர்சனத்தை" அவர்கள் ஏற்கலாமே? ஏன் செய்வதில்லை?? ஒலிப்பு முக்கியம் எனில் ஃ பயன்படுத்தலாமே. வழிவழியாய் 2500 ஆண்டுகளாக வந்திருக்கும் வடவெழுத்து ஒரீஇ என்னும் விதிப்படி கிரந்த எழுத்தை விலக்கி எழுதவேண்டும் எனில் விக்கிப்பீடியா:கிரந்த எழுத்துப் பயன்பாடு என்னும் பக்கத்தில் உள்ள பரிந்துரையைப் பின்பற்றலாம். தமிழ் மொழியின் வெற்றியின் உட்கூறுகளில் அதன் எளிமையும் ஒன்று. அதனைப் பின்பற்றுவதில் தவறில்லை. --செல்வா 01:46, 3 ஜூன் 2009 (UTC)
செல்வா, தமிழின் நன்மை கருதி நாம் ஒரு மாற்று வழியைப் பரிந்துரைத்தால் அது எல்லா இடங்களிலும் பொருந்துவதாகவும் தமிழின் இலக்கணத்துக்கு உட்பட்டதாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். Fக்குப் பதில் ஃப் பயன்படுத்துவதால் ஆய்த எழுத்தின் சீர்மை கெடுவதாக ஏற்கனவே உரையாடி உள்ளோம். பின்வரும் இலக்கணக் கேள்விகளுக்கு விடை அறிய விரும்புகிறேன். (உண்மையிலேயே எனக்கு இது குறித்து தெளிவில்லை):
  • ஹனுமன் - > ஃகனுமன்: ஆய்தம் சொல்லின் முதலில் வரலாமா? தமிழ்ச் சொல்லின் முதலில் இன்னின்ன எழுத்துகள் தாம் வரலாம் என்பது ஒரு முக்கிய இலக்கணம் அல்லவா?
  • ஹனுமன் - > ஃஅனுமன்: ஆய்தத்தை அடுத்து உயிரெழுத்து வரலாமா? உயிரொலியை இது எவ்வாறு மாற்றுகிறது?
  • ஹ்ருதயம் -> ஃக்ருதயம்: ஆய்தத்துக்கு அடுத்து மெய்யெழுத்து வருமா?
  • ஹ்ருதயம் - > ஃருதயம்: ஆய்தத்துக்கு அடுத்து இடையினம் வருமா? குறிப்பிட்ட சில வல்லின எழுத்துகளுக்கு முன்பு மட்டும் தானே ஆய்தம் வரும்?

இம்முறைகள் வலுவூன்றினால், ஆய்தத்தை "அக்கு" என்று சொல்லிக் கொண்டிருப்பவர்கள் "ஹ" என்று சொல்லத் தொடங்கினாலும் சொல்வார்கள்.--ரவி 03:56, 3 ஜூன் 2009 (UTC)

தமிழில் முதலில் வரும் எழுத்துகள் யாவை என்று தெளிவாக வரையறை செய்யப்பட்டுள்ளன. ஆய்தம் சார்பெழுத்து. அது அதற்கு அடுத்து வரும் எழுத்தின் ஒலிப்புடன் சேர்ந்து ஒலிப்பது. ஆய்தம் முதலில் வரும் தமிழ்ச்சொற்கள் ஏதும் இல்லை. வேற்றுமொழிப் பெயர்களாகிய அனுமன், அரன், இட்லர் என்பதைத தமிழ்ப்படுத்திதான் ஏற்கிறோம். ஆனால் ஒலிப்பைக் காட்டவேண்டும் எனில் ஃஅனுமன் என்று காட்டலாம். ஆய்தம் எதனைச் சார்ந்து வரலாம் என்றும் எதனைச் சார்ந்து வரலாகாது என்னும் விதி இருப்பதாகத் தெரியவில்லை. தமிழில் இதுகாறும் அறிந்த சொற்களில் ஆய்தத்தை அடுத்து டகரம், பகரம், உயிரெழுத்துகள் முதலியன வருவதில்லை. வரலாகாது என்று விதி இருப்பதாகாத் தெரியவில்லை. ஆனால் க,ச,த,ற ஆகிய எழுத்துகளுக்கு முன் ஆய்தம் வருகின்றது. ஆய்தம் வரும் தமிழ்ச்சொற்களில் ஒலிப்பை உற்று கேட்கும் பொழுது அதன் காற்றொலி விளங்குகின்றது. இதுவே ஃஅ = Ha முதலான ஒலிப்புகளுக்கு அடிப்படை. ஏமா மாலினி என்பதே சரி (தமிழ் முறைப்படி). ஃகேமா மாலினி என்பது மூல மொழிக்கு ஓரளவு நெருக்கமான ஒலிப்பைக் காட்டுவது. கிரந்த எழுத்து இல்லாமல் ஓரளவு நெருக்கமான ஒலிப்பைக் காட்ட உதவலாம். ஒலிப்பைக் காட்ட ஏ'மா மாலினி என்றோ ஏ°மா மாலினி என்றோ ஃஏமா மாலினி என்றோ கூட எழுதிக்காட்டலாம். ஆனால் தமிழில் தமிழ்முறைப்படி எழுத ஏமா மாலினிதான். ஆங்கிலத்தில் Gnanasekar, Valli, Yaazhini போல. --செல்வா 02:22, 8 ஜூன் 2009 (UTC)


முருஃகன், காஃகம் என்று எழுதுபவர்கள் முருஹன், காஹம் என்றும் எழுதலாம் தான். ஆனால், கிரந்த எழுத்துகளின் இருப்பு, "இது முறையற்றது, வேற்று மொழி வழக்கு" என்பதற்கு ஒரு நினைவூட்டலாக இருக்கும். தமிழ் எழுத்துகளைக் கொண்டே எழுதினால், அது முறை தான் என்று ஒப்புதல் கொடுத்தது போல் ஆகிவிடும். --ரவி 03:53, 3 ஜூன் 2009 (UTC)

சிறிய விஷயங்களை பெரிதாக ஊதும் முயற்சியாக உள்ளது. விகியில் வழக்கமான conventions அதாவது நடைமுறைகளை பின்பற்றினால் போதும். ஊடகங்களில் சாஹா என்றுதான் பெரும்பாலானவர்கள் எழுதுகிறார்கள். `கிரந்தத்தை தவிற்பது` அல்லது `கூடிய அளவு தவிற்பது` என்பது சகதியை வீண்படுத்துவதாகும். இப்படி தவிற்பதற்கே பெரும் உரையாடல்களும், எண்ணங்களும், மாற்றுவழிகளும் நேரம் விரையமாகிறது. மேலும் இது ஊடகங்கள் (ஒலி, ஒளி, எழுத்து ஊடகங்கள்), இலக்கியம்,புத்தகங்கள், கடிதங்கள், அரசாங்க ஆவணங்கள், பிளாகுகள் கைப்பற்றிவரும் முறைகளில் இருந்து பெரிதாக மாறி வருவதால், படிக்கும் மக்களுக்கு கேலித்தனமாக இருக்கும்.--92.39.200.17 19:42, 6 ஜூன் 2009 (UTC)
இங்கு கிரந்தத்தை `தவிற்கவும்` `முடிந்த வரை தவிற்கவும்` ஏற்படும் முயற்சிகள், பிரித்தானிய டெலிவிஷனில் 30 வருடங்களுக்கு முன் `மாண்டி பைதான்சஸ்` என்ற காமெடி குழு செய்த Ministry of Silly walks ”மடத்தனமான நடைகள் அமைச்சரவை” என்ற புரோகிராமை நினைவூட்டுகிறன. அந்த அமைச்சரவையில் ஒரு ஆணை - நேராக நடக்க கூடாது , வழக்கமான நடையை விட்டு கால்களை எவ்வ்ளவு வளைக்க முடியுமோ அப்படி நடக்கவேண்டும். தமிழ்விக்கியிலும் வழக்கமான மக்கள் உபயோகிக்கும் நடையை (என்ன சிலேடை) விட்டு, கஷடமான முறையில் எழுதும் முயற்சிகள் செய்யப்படுகிறன. `Ministry of Silly walks`ஐ ரசிக்கவும்.

http://www.youtube.com/watch?v=wippooDL6WE http://www.youtube.com/watch?v=9ZlBUglE6Hc --92.39.200.17 19:56, 6 ஜூன் 2009 (UTC)

மேலே உள்ளது இது தொடர்பில்லாத பேச்சு. நீக்கப் பரிந்துரைக்கிறேன்.
தவிர, பொதுவான கிரந்தப் பயன்பாடு பற்றியதை தொடர்பான பேச்சுப் பக்கத்தில் உரையாடலாம். -- சுந்தர் \பேச்சு 02:50, 7 ஜூன் 2009 (UTC)

//இப்படி தவிற்பதற்கே பெரும் உரையாடல்களும், எண்ணங்களும், மாற்றுவழிகளும் நேரம் விரையமாகிறது. //

இதைப் பற்றி கட்டுரை எழுதுவோர் அல்லவா கவலைப்பட வேண்டும்? விக்கியில் உங்கள் பங்களிப்புகள் என்ன? உங்கள் பங்களிப்புகளுக்கு எப்படி தடையாக இருக்கிறது? 999 பக்கங்களில் கிரந்தம் இருந்தால் ஒரு பக்கத்தில் மட்டுமே இது குறித்து உரையாடப் படுகிறது. இது போன்ற எண்ணற்ற கொள்கை முடிவுகளில் பொறுமையாக உரையாடத் தான் வேண்டும்.

//மேலும் இது ஊடகங்கள் (ஒலி, ஒளி, எழுத்து ஊடகங்கள்), இலக்கியம்,புத்தகங்கள், கடிதங்கள், அரசாங்க ஆவணங்கள், பிளாகுகள் கைப்பற்றிவரும் முறைகளில் இருந்து பெரிதாக மாறி வருவதால், படிக்கும் மக்களுக்கு கேலித்தனமாக இருக்கும்//

முதலில் கிரந்தம் தவிர்த்து எழுதுவது கேலித் தனமாக இருக்கிறது என்பதை மறுக்கிறேன். நீங்கள் குறிப்பிடும் ஊடகங்களிலேயே கூட கிரந்தம் தவிர்த்து எழுதவே செய்கிறார்கள். ஓட்டல், அனுமன், இந்தி என்று எழுதுவது இல்லையா? என்ன, அவர்கள் இதைப் பற்றிய ஒரு முறையான கொள்கை கொண்டு சீராக எல்லா இடங்களிலும் எழுதுவதில்லை. கிரந்தம் தவிர்த்து எழுதிய 'பழகிய' சொற்கள் இயல்பாகத் தெரிகின்றன. இது ஒரு கலைக்களஞ்சியம் என்பதால் ஒரு கொள்கையை சீராக எல்லா இடத்திலும் பின்பற்ற நினைக்கிறோம். புதிதாக கிரந்தம் தவிர்த்து எழுதப்படும் சொற்கள் பழக்கமாகவில்லையே தவிர, அவற்றில் கேலிக்கு ஒன்றும் இல்லை.

எல்லா ஊடகங்களின் மேலும் ஏதேனும் விமர்சனம் இருக்கத் தான் செய்யும். நீங்கள் சுட்டிக் காட்டியுள்ள ஊடகங்களில் முறையற்றதாக குறிப்பிடுவதற்கு எவ்வளவோ இருக்கின்றன. எடுத்துக்காட்டுக்கு, அவற்றின் ஆங்கிலக் கலப்பு. அதற்காக, இங்கும் அப்படியே எழுத முடியுமா? விக்கிப்பீடியா ஒரு கலைக்களஞ்சியம் என்பதால் கண்டிப்பாக அதன் நடை வெகு மக்கள் ஊடக நடையில் இருந்து மாறுபட்டும், மொழியின் இயல்பு, இலக்கணத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகவே இருக்கும். இது ஒரு கூட்டு முயற்சி என்பதால், பல்வேறு கருத்துகளையும் முன்வைத்து உரையாடத் தான் வேண்டும். "உரையாடலே வேண்டாம். பொதுப் புத்தியைப் பின்பற்று" என்பது ஆபத்தான போக்கு.--ரவி 07:14, 7 ஜூன் 2009 (UTC)

நான் பொதுவாக கிரந்தங்களை உபயோகிக்கவும் என சொல்லவேயில்லையே. நீங்கள் தான் ‘தவிற்பு’ இயக்கத்தை மும்முரமாக செயல் படுத்துகிறீர்கள். இயல்பாக ஒரு கட்டுரையளர் / எழுத்தாளர் எப்படி எழுதுவாரோ அப்படியே விட்டுவிட வேண்டும் தானே. ஊடகங்கள் மொழி தவறு, மக்கள் மொழி தவறு.இலக்கியகர்த்தாக்கள் மொழி தவறு, ரேடியோ/டிவி மொழி தவறு , அரசாங்க மொழி தவறு ; மொத்தமாக ரவி, செல்வா, சுந்தர், இன்னும் சிலர் இவர்கள் மொழிதான் தமிழ் மொழி - மற்றவர்களுக்கு நல்ல தமிழில் அக்கரை இல்லை எண்ர தொனியில் தான் நீங்கள் எல்லோரும் பேசுகிறீர்கள். அதனால் நீங்கள் தான் இதை பெரிய விடயமாக்கி, திணிப்பு கொள்கையில் ஈடுபட்டூள்கள். திணிப்பில் ஈடுபடுவது தமிழ் விகி குழு - ஆனால் நீங்கள் சாடுவது மற்றவர்களை. செல்வா தமிழில் செழுமை என்கிறார். என்ன செழுமை . சிறிய உதாரணம் . அண்ணாதுரை பற்றி ஆங்கில விகியில் பாருங்கள் http://en.wikipedia.org/wiki/C._N._Annadurai . பிறகு தமிழ் விகியில் பாருங்கள். தமிழ் விகி ஏனோதானோ என மெலோட்டமாக உள்ளது. ஆங்கில விகியில் தகவல்களில் பத்து ஒரு பங்கு கூட இல்லை. நமக்கு தெரிந்த விஷயங்களையே தமிழ் விகியில் எழுத முடியாவிட்டால், செல்வாவின் ‘தமிழின் செழுமை’ பேச்சு பெரிய ஜோக்காகவும், அர்தமற்ற வீம்பாகவும் உள்ளது. நமக்கு தெரிந்த விஷயங்களை எழுதுவதற்கே தமிழ் விகியில் முடியவில்லை. நீங்கள் இன்னும் பெரிய ”தவிற்பு” இயக்கங்களை ஆரம்பியுங்குங்கள்.தமிழ் விகி ஒரு 5-6 பேர்களின் முதுகு சொறியும் இடமாக ஆகும்.--92.39.200.17 09:14, 7 ஜூன் 2009 (UTC)

//இயல்பாக ஒரு கட்டுரையளர் / எழுத்தாளர் எப்படி எழுதுவாரோ அப்படியே விட்டுவிட வேண்டும் தானே.//

கிரந்தத்தை இயல்பாகப் பயன்படுத்தலாமே என்று தெரிவித்த செல்வம், வினோத் உள்ளிட்டோர் எழுதிய நூற்றுக்கணக்கான பக்கங்கள் அப்படியே தான் உள்ளன. இன்னும் சிலரும் கிரந்தம் கலந்து எழுதிக் கொண்டு தான் உள்ளனர். அவர்களின் பங்களிப்புக்குப் பக்கம் பக்கமாய் போய் எந்த முட்டுக் கட்டையும் போடவில்லை.

//இயல்பாக ஒரு கட்டுரையளர் / எழுத்தாளர் எப்படி எழுதுவாரோ அப்படியே விட்டுவிட வேண்டும் தானே.//

விக்கி கட்டுரைகளின் எழுத்து நடை எப்படி இருக்கலாம் என்று உரையாடுவதில், வேண்டுவதில் தவறில்லை. இது ஆங்கிலம் உட்பட பல மொழி விக்கிகளிலும் உள்ள வழக்கம் தான்.

//அதனால் நீங்கள் தான் இதை பெரிய விடயமாக்கி, திணிப்பு கொள்கையில் ஈடுபட்டூள்கள். திணிப்பில் ஈடுபடுவது தமிழ் விகி குழு - ஆனால் நீங்கள் சாடுவது மற்றவர்களை.//

கிரந்தப் பயன்பாடு பற்றிய உரையாடல் ஒரு 100 பக்கங்களிலாவது இருக்குமா? கிரந்தம் கலந்த ஆயிரக்கணக்கான பக்கங்கள் உள்ளன.

//அண்ணாதுரை பற்றி ஆங்கில விகியில் பாருங்கள் http://en.wikipedia.org/wiki/C._N._Annadurai . பிறகு தமிழ் விகியில் பாருங்கள். தமிழ் விகி ஏனோதானோ என மெலோட்டமாக உள்ளது. ஆங்கில விகியில் தகவல்களில் பத்து ஒரு பங்கு கூட இல்லை. //

நீங்கள் ஏன் இது போன்ற தலைப்புகளில் தமிழ் விக்கிப்பீடியாவில் எழுதக் கூடாது? நீங்கள் எவ்வளவு கட்டுரைகளை எழுதினாலும் உங்கள் பங்களிப்புக்கு இடையூறு வராமல் இருக்க உறுதி அளிக்கிறோம்.--ரவி 10:20, 7 ஜூன் 2009 (UTC)

ரவி, இது எனக்குமட்டும் கிடைக்கும் விதிவிலக்கு பற்றி அல்ல. நான் ஒரு விதிவிலக்கையும் கோரவில்லை. நான் சொல்வது எழுது முறைகள் உலக வழக்கை ஒட்டி போகவேண்டும்; அவ்வளவுதான். அலால் என்று யாரும் எழுதுவதில்லை; ஹலால் என்றுதான் எழுதுகிறார்கள். பியானோ கட்டுரையில் வதிப்பலகை என கீபோர்டை குறிப்பிட்டார். கீபோர்ட் என்பது எல்லோருக்கும் தெரியும்; கூகிளில் வதிப்பலகை என்று போட்டால் விடை வராது. உலக வழக்கை ஒட்டிதான் போகவேண்டுமே தவிறே, இது தனி உலகம் இல்லை. அப்படிப்பட்ட pragmatic approach ஐ தான் கோருகிறேனே தவிற, விஷயம் கிரந்தம் பற்றியது அல்ல.--92.39.200.17 16:23, 9 ஜூன் 2009 (UTC)


உங்களுக்கு மட்டும் விதிவிலக்காய் சொல்லவில்லை. இங்கு இருக்கும் உண்மை நிலையைப் புரிந்து கொள்ள வேண்டியே சொன்னேன். கிரந்தம் தொடர்பாக அவ்வப்போது உரையாடல் வருவது உண்மை தான். அது அதிகபட்சம் ஒரே பயனரின் ஒன்று அல்லது இரண்டு கட்டுரைகளில் நிகழும். ஒரே பயனரைத் திரும்ப திரும்ப இது குறித்துப் பேச வைத்து முட்டுக் கட்டை போடுவதில்லை. எப்போதெல்லாம் இவ்வுரையாடல்கள் நீண்டு பங்களிப்புக்கு தடை வருவதாக உணர்கிறோமோ, அப்போதெல்லாம் அவற்றை ஒத்தி வைத்து விட்டே செல்கிறோம். அண்மையில் பங்களிக்கத் தொடங்கி இருக்கும் செல்வம் தமிழ் வரை, அவரவர் பாணியில் தொடர்ந்து எழுத எந்தத் தடையும் இல்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

வதிபலகை என்பது இலங்கை வழக்காக / இசை வழக்காக இருக்கலாம். கட்டுரை ஆசிரியரிடம் கேட்டுக் கொண்டு தெளிவுபடுத்தலாம். கணினி keyboard விசைப்பலகை என்று அழைக்கப் பெறுகிறது. கீபோர்டு என்று அப்படியே எழுதுவதில் உடன்பாடு இல்லை. "இயன்ற அளவு" (திரும்பவும் "இயன்ற அளவு" :)) எளிமையான சொற்களுக்காவது தமிழ்க் கலைச்சொற்கள் உருவாக்கி எழுதுவதே நல்லது. --ரவி 16:33, 9 ஜூன் 2009 (UTC)


கிர்க்காஃப்[தொகு]

செல்வா, Kirchhoff என்பதை ஐக்கிய அமெரிக்காவில் எவ்வாறு பலுக்குகிறார்கள் என்பதை இங்கு கேட்கலாம்: [1]. அத்துடன் இந்தியப் பாடப்புத்தகங்களிலும் அவ்வாறே இருந்ததாக ஞாபகம். (உறுதிப்படுத்த முடியவில்ல்லை)--Kanags \பேச்சு 00:31, 8 ஜூன் 2009 (UTC)

நான் வெப்சிட்டர் அகராதியிலும் பார்த்தேன். அவர்கள் கிர்க்காவ்' என்று காட்டியுள்ளார்கள். ஆனால் கனடாவிலும், அமெரிக்காவிலும் நான் கேட்டதெல்லாம் கிர்ட்சாவ்' என்றுதான். கிர்க்காவ்' என்று கூறுவோர்களும் இருக்க வேண்டும். ஆக்ஃசுபோர்டு அகராதியில் கிர்ட்சாவ்' என்று கொடுத்துள்ள ஒலிப்பே இங்கே நான் கேட்பது.--செல்வா 01:31, 8 ஜூன் 2009 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மேகநாத_சாஃகா&oldid=825369" இலிருந்து மீள்விக்கப்பட்டது