பேச்சு:கணக்கதிகாரம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


கணக்கதிகாரம், கொறுக்கையூரைச் சேர்ந்த காரி நாயனார் என்பவர் எழுதிய ஒரு நூல். "தமிழ்க் கணித ஆவணங்களின் ஒரு பகுதி கணக்கதிகாரம் எனப்படுகிறது" என்று எழுதியிருப்பது சரியாகத் தெரியவில்லை. இந் நூலை Digital Laibrary of India இணையத் தளத்தில் முழுமையாகப் பார்க்கலாம். மயூரநாதன் 19:15, 23 ஜனவரி 2009 (UTC)

அப்படியா. ஒரே நூல் பல பதிப்புகளில் வெளி வந்ததா. --Natkeeran 00:56, 24 ஜனவரி 2009 (UTC)


அப்படித்தான் தோன்றுகிறது. உங்கள் இணைப்பில் தந்த கட்டுரைப்படி, பின்வரும் தகவல்கள் கிடைக்கின்றன.
1. 19ஆம் நூற் றாண்டு முழுவதிலும் கணக்கதிகாரம் அச்சுப் பதிப்புக்குள்ளாகியது.
2. முதன் முதலில் 1854ல் தஞ்சையில் பதிப் பிக்கப்பட்டது.
3. அதே சுவடி 1899, 1938ல் வெவ்வேறு பதிப்பகத் தாரால் வெளியிடப்பட்டது.
4. 1958ல் சைவ சித்தாந்தக் கழகம் ஒரு பதிப்பை வெளியிட்டது.
5. 1998ல் தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம் ஒரு தொகுப்புப் பதிப்பை வெளியிட்டது.
இவற்றுள் 1998 ஆம் ஆண்டுப் பதிப்பு மட்டுமே தொகுப்புப் பதிப்பு எனப்படுகின்றது. பிற இணையத் தகவல்களின்படி, இப்பதிப்பின் பதிப்பாசிரியர் சத்தியபாமா காமேஸ்வரன் என்பவர். இது 716 பக்கங்களைக் கொண்டது. அண்மையில் வெளியிடப்பட்டது ஆகையால் விவரமான குறிப்புக்களைக் கொண்டிருக்கக்கூடும்.
சண்முக முதலியார் பதிப்பித்த கணக்கதிகாரத்தின் முதல் பக்கம்
இவை தவிர சண்முகமுதலியார் என்பவர் பார்வையிட்டு வெளியிட்ட கணக்கதிகாரம் 1872 ஆம் ஆண்டில் புரசைப்பாக்கம் என்னுமிடத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டதாகத் தெரிகிறது. இது இணையத்தில் கிடைக்கிறது. இதன்படி பார்க்கும்போது தமிழரின் பிற அறிவுத்துறை நூல்களைப் போலவே ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் வழக்கில் இருந்த கணித நூல்கள் வடமொழியில் எழுதப்பட்டிருந்தனபோல் தெரிகிறது. அல்லது முற்காலத்தில் இருந்த தமிழ் நூல்களைப் பின்னொரு காலத்தில் வடமொழியில் மொழிபெயர்த்து இருக்கவும் கூடும். எனினும் காரி நாயனார் எழுதிய கணக்கதிகாரம் என்னும் நூலின் "மூலம்" அதில் தெளிவாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. இந் நூலின் காணப்படும் பாயிரச் செய்யுள்கள் பின்வருமாறு:
ஆரிய மொழியால்முன்ன ரந்தண ரெடுத்துரைத்த
கூரிய கணிதநூலைக் குவலயந் தன்னில் யானும்
சூரியன் றனக்குநேரே தோன்றுமின் மினிப்புழுப்போல்
சீரிய தமிழாற் சொல்வேன் சிறந்தவரிகழாரம்மா
பன்னு வடசொற் பனுவறனை யிப்பொழுது
கன்னித் தமிழ் வாயாற் கட்டுரைத்தேன் - முன்ன
மகிழ்கின்ற வெண்ணின் வழிவந்த கணக்கெல்லா
மிகழ்வின்றி யேயுரைப்பேன் யான்.
இதிலிருந்து இதனை ஆக்கியோன் இதற்கான மூல நூல்களாக வடமொழியில் இருந்த நூல்களைப் பயன்படுத்தியது தெளிவு. மேற்படி செய்யுளுக்கு விளக்கம் எழுதிய சண்முக முதலியார், வடமொழியில் வழக்கில் இருந்த நூல்களாக,
அஞ்சனம்
செய்தவம்
கோவிந்தனார் படிகம்
புவனதீபம்
கணிதரத்னம்
என்பவற்றைக் குறிப்பிட்டுள்ளார். கணக்கதிகாரம் உட்பட மேற்படி வடமொழி நூல்களிலிருந்து வழிவந்தனவாகப் பிற தமிழ் நூல்களையும் அவர் குறித்துள்ளார். அவை:
கணக்கதிகாரம்
ஓரம்பம்
கிளராலயம்
அதிசாகரம்
கலம்பகம்
திரிபுவன திலகம்
கணிதரத்தினம்
சிறுகணக்கு
எனவே கணக்கதிகாரம் என்பது பல மூல நூல்களைப் பயன்படுத்தி காரிநாயனார் என்பவரால் ஆக்கப்பட்ட ஒரு நூலையே குறிக்கிறது. என்று தெரிகிறது. மயூரநாதன் 06:13, 24 ஜனவரி 2009 (UTC)


உங்கள் விளக்கத்து நன்றி. ஆனால் "கணகதிகாரம் பல இருப்பினும்..." என்று கட்டுரை ஆசிரியர் குறிப்பிடுவது இன்னும் குழப்பமாகவே இருக்கிறது. --Natkeeran 16:06, 24 ஜனவரி 2009 (UTC)
கட்டுரை ஆசிரியர் இந்த விடயத்தைத் தெளிவாக எழுதவில்லை. முதலில் கணக்கதிகாரம் பல இருப்பினும் என்று எழுதியவர் பின்னர் பின்வர்மாறும் எழுதியுள்ளார்:
19ஆம் நூற் றாண்டு முழுவதிலும் கணக்கதிகாரம் அச்சுப் பதிப்புக்குள்ளாகியது. முதன் முதலில் 1854ல் தஞ்சையில் பதிப் பிக்கப்பட்டது. பின்னர், அதே சுவடி 1899, 1938ல் வெவ்வேறு பதிப்பகத் தாரால் வெளியிடப்பட்டது. 1958ல் சைவ சித்தாந்தக் கழகம் ஒரு பதிப்பை வெளியிட்டது. 1998ல் தஞ்சை சரஸ் வதி மகால் நூலகம் ஒரு தொகுப்புப் பதிப்பை வெளியிட்டது. 1958 கழகப் பதிப்பின் முன்னுரையில் சுவடியின் ஆசிரியர் அறியாதவர் என்று குறிப் பிடப்பட்டுள்ளார். ஏன் தெரியுமா? கணக்கதிகாரப் பாயிரத்தில் நூலாசிரியர், பிற மொழியிலிருந்தும் சில கணக்கு வழிமுறைகள் தமிழுக்கு வந்திருக்கலாம் என்று சுட்டிக்காட்டி யதால்.
இதிலிருந்து 1854, 1899, 1938 ஆகிய ஆண்டுகளில் வெளியிடப்பட்டவை ஒரே நூல் என்பது வெளிப்படையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 1998 ல் சரஸ்வதி மகால் வெளியிட்ட நூல் தொகுப்பு நூலெனக் குறிப்பிடப்பட்டாலும் இதை எழுதியவர் காரி நாயனார் எனக் குறிப்பிட்டுள்ளதால் அதுவும் அதே நூல்தான் என்பது வெளிப்படை. 1958 ஆம் ஆண்டு நூலின் பாயிரத்தைப் பற்றி ஆசிரியர் குறிப்பிட்டதைப் பற்றிப் பார்க்கும்போது அதுவும் இதே நூல்தான் போல் தெரிகிறது. எனவே "கணக்கதிகாரம் பல இருப்பினும்" என்று குறிப்பிட்டிருப்பதைக் "கணக்கதிகாரப் பதிப்புக்கள் பல இருப்பினும்" என்ற பொருளில் கையாண்டிருக்கலாம் என்றுதான் தோன்றுகிறது. மேலும் மேற்படி கட்டுரையில் வேறும் சில பிழைகள் இருக்கவே செய்கின்றன. மயூரநாதன் 18:48, 24 ஜனவரி 2009 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கணக்கதிகாரம்&oldid=1617215" இலிருந்து மீள்விக்கப்பட்டது