புனித பேதுரு சங்கிலிக் கோவில்

ஆள்கூறுகள்: 41°53′37.94″N 12°29′35.05″E / 41.8938722°N 12.4930694°E / 41.8938722; 12.4930694
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புனித பேதுரு சங்கிலிக் கோவில்
San Pietro in Vincoli al Colle Oppio (இத்தாலியம்)
S. Petri ad vincula (இலத்தீன்)
புனித பேதுரு சங்கிலிக் கோவிலின் முகப்புத் தோற்றம்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்இத்தாலி உரோமை, இத்தாலியா
புவியியல் ஆள்கூறுகள்41°53′37.94″N 12°29′35.05″E / 41.8938722°N 12.4930694°E / 41.8938722; 12.4930694
சமயம்உரோமன் கத்தோலிக்கம்
வழிபாட்டு முறைஇலத்தீன்
நிலைஇளம் பெருங்கோவில்
இணையத்
தளம்
Official website

புனித பேதுரு சங்கிலிக் கோவில் (Saint Peter in Chains) என்பது உரோமை நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற கத்தோலிக்க வழிபாட்டு இடங்களுள் ஒன்றாகும். இளம் பெருங்கோவில் என்னும் நிலை சார்ந்த இக்கோவிலில் உலகப் புகழ் பெற்ற மைக்கலாஞ்சலோ என்னும் கலைஞர் உருவாக்கிய மோசே பளிங்குச் சிலை உள்ளது. இச்சிலை இரண்டாம் ஜூலியஸ் என்னும் திருத்தந்தையின் கல்லறைக் கட்டடத்தின் ஒரு கூறாக அக்கோவிலில் அமைந்துள்ளது[1].

கோவிலின் வரலாறு[தொகு]

இக்கோவிலின் பெயர் குறித்துநிற்பதுபோல, அங்கு புனித பேதுருவைக் கட்டியிருந்த சங்கிலிகள் உள்ளன என்பது மரபு. விவிலிய நூல்களில் ஒன்றாகிய திருத்தூதர் பணிகள் என்னும் நூலில் புனித பேதுருவின் வாழ்வில் நிகழ்ந்த கீழ்வரும் நிகழ்ச்சி குறிப்பிடப்பட்டுள்ளது.

எருசலேம் சிறைக்கூடத்தில் பேதுருவைக் கட்டியிருந்த சங்கிலி எருசலேம் நகரில் ஆயராக இருந்த யுவனாலிஸ் என்பவரிடம் இருந்தது. அவர் அச்சங்கிலியை உரோமைப் பேரரசனாகிய இரண்டாம் வாலன்டீனியன் என்பவரின் மனைவியாகிய ஏலியா யூதோசியா அரசிக்கு, அவர் எருசலேமுக்குத் திருப்பயணமாகச் சென்றபோது பரிசாக அளித்திருந்தார். தம் கைவசம் வந்த சங்கிலியை ஏலியா யூதோசியா அரசி, மூன்றாம் வாலன்டீனியன் என்னும் பேரரசனின் மனைவியும் தம் மகளுமாகிய லிச்சீனியா யூதோக்சியாவுக்கு அன்பளிப்பாக்கினார். அவர் பேதுருவைக் கட்டியிருந்த சங்கிலியை திருத்தந்தை முதலாம் லியோ என்பவருக்குக் காணிக்கையாகக் கொடுத்தார்.

உரோமையில் புனித பேதுரு இறப்பதற்கு முன் "மாமெர்த்தின்" என்னும் சிறையில் அடைக்கப்பட்டபோது அவரைக் கட்டியிருந்த சங்கிலி ஏற்கனவே வணக்கத்துடன் காக்கப்பட்டு வந்தது. அச்சங்கிலியையும் எருசலேமிலிருந்து கொண்டுவரப்பட்ட சங்கிலியையும் ஒப்பிட்டுப்பார்க்க அருகருகே கொண்டுசென்றபோது அவை இரண்டும் ஒன்றொடொன்று இணைபிரியாமல் ஒன்றுசேர்ந்துவிட்டன என்றொரு புராதன கதை உண்டு. இந்த அற்புத சங்கிலியைப் பாதுகாக்க கட்டப்பட்ட கோவில் "புனித பேதுரு சங்கிலிக் கோவில்" என்றும், "யூதோக்சியா கோவில்" என்றும் அழைக்கப்பட்டது.

கோவில் கட்டடமும் நேர்ந்தளிப்பும்[தொகு]

லிச்சீனியா யூதோக்சியா என்னும் அரசியின் ஆணையின்படி இக்கோவில் கி.பி. 432-440இல் கட்டப்பட்டது. 1956-59 ஆண்டுகளில் நடந்த அகழ்வாய்வுகளின் பயனாக, இக்கோவில் இருந்த இடத்தில் ஏற்கனவே ஒரு கிறித்தவக் கோவில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அக்கோவிலின் அடியில் பண்டைய உரோமைக் காலத்துக் கட்டடங்களும் இருந்தனவென்று தெரிகிறது.

திருத்தந்தை மூன்றாம் சிக்ஸ்துஸ் என்பவர் இக்கோவிலை 439இல் நேர்ந்தளித்தார். இக்கோவில் பல முறை புதுப்பிக்கப்பட்டது. குறிப்பாக, முதலாம் ஹேட்ரியன் என்னும் திருத்தந்தை செய்த புதுப்பித்தல் பணியையும் பதினொன்றாம் நூற்றாண்டில் நிகழ்ந்த பணிகளையும் கூறலாம். ஆறாம் சிக்ஸ்துஸ் என்னும் திருத்தந்தையின் உறவினர் கர்தினால் தெல்லா ரோவெரே (இவர் 1503இல் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இரண்டாம் ஜூலியஸ் என்னும் பெயரை ஏற்றார்) இக்கோவிலைச் சீரமைத்துக் கட்டினார்.

1475இல் கோவிலின் முன் நுழைவாயில் பகுதி இணைக்கப்பட்டது. கோவிலை அடுத்த துறவியர் இல்லம் 1493-1503இல் சேர்க்கப்பட்டது. 18ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் 1875இலும் சீரமைப்புப் பணிகள் செய்யப்பட்டன.

கோவிலின் உட்பகுதி[தொகு]

கோவிலின் உட்பகுதி நெடுநீளத்தில் மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பண்டைய "டோரிக்" கலைப்பாணியில் அமைந்த பெருந்தூண்கள் கூரையைத் தாங்கிநிற்கின்றன. நடுப்பகுதியின் உள்கூரையில் ஜொவான்னி பத்தீஸ்தா பரோடி என்பவர் வரைந்த ஓவியம் புனித பேதுருவைக் கட்டியிருந்த சங்கிலிகள் இணைந்த அதிசயத்தைச் சித்தரிக்கின்றன (1706).

கோவிலின் உள் காணப்படுகின்ற ஓவியங்களுள் குறிப்பிடத்தக்கதொன்று புனித செபஸ்தியான் கற்பதிகை ஓவியம் ஆகும். இது 7ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது. வடக்கு இத்தாலியாவில் பவீயா என்னும் நகரில் ஏற்பட்ட கொள்ளைநோயின்போது, அந்நகரில் அமைந்திருந்த "புனித பேதுரு சங்கிலிக் கோவிலில்" புனித செபஸ்தியானுக்கு ஒரு பீடம் கட்டினால் அந்நோய் தணியும் என்னும் நம்பிக்கையில் ஒரு பீடம் எழுப்பப்பட்டது. அதுபோலவே, உரோமையில் அமைந்த புனித பேதுரு சங்கிலிக் கோவிலிலும் புனித செபஸ்தியானுக்கு வணக்கம் செலுத்தும் வகையில் ஒரு பீடம் கட்டினர் என்பது வரலாறு.

மைக்கலாஞ்சலோ செதுக்கிய புகழ்மிக்க மோசே பளிங்குச் சிலை[தொகு]

மைக்கலாஞ்சலோ வடித்த புகழ்மிக்க மோசே பளிங்குச் சிலை. ஆண்டு: 1515. இருப்பிடம்: புனித பேதுரு சங்கிலிக் கோவில், உரோமை

புனித பேதுரு சங்கிலிக் கோவிலின் சிறப்புக்கு ஒரு முக்கிய காரணம் அக்கோவிலில் உள்ள மோசே சிலை ஆகும்[2]. இதை மைக்கலாஞ்சலோ என்னும் தலைசிறந்த கலைஞர் 1515இல் பளிங்குக் கல்லில் செதுக்கி முடித்தார். உரோமை நகரின் கலை வளர்ச்சிக்குப் பெரிதும் துணைபுரிந்த இரண்டாம் ஜூலியஸ் என்னும் திருத்தந்தையின் கல்லறையைக் கலையழகோடு அமைக்கும் பணி மைக்கலாஞ்சலோவிடம் ஒப்படைக்கப்பட்டது. கல்லறைக் கட்டடத்தை அணிசெய்ய 47 சிலைகள் வடிப்பதாய் இருந்தது. கல்லறையும் வத்திக்கானில் அமைந்த புனித பேதுரு பெருங்கோவிலில் நிறுவப்படுவதாய் இருந்தது. ஆனால் நிதி தட்டுப்பாடு காரணமாக அத்திட்டம் குறுக்கப்பட்டு, சிலைகளின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டது. கல்லறையும் புனித பேதுரு சங்கிலிக் கோவிலில் அமைக்கப்படலாயிற்று. அச்சிலைகளுள் ஒன்றாக அமைந்த மோசே சிலை கல்லறைக் கட்டடத்தின் மையச் சிலையாக உருவெடுத்தது.

மைக்கலாஞ்சலோ வடித்த மோசே சிலையின் தலையில் இரு கொம்புகள் உள்ளன. கடவுளைக் கண்டு அவரோடு உரையாடிவிட்டுத் திரும்பிய மோசேயின் முகம் ஒளிவீசி மிளிர்ந்தது; ஒளிக்கதிர்கள் சிதறிப் பரந்தன. அக்காட்சியைக் கொம்புகள் வழி செதுக்கியுள்ளார் மைக்கலாஞ்சலோ (காண்க:விடுதலைப் பயணம் 34:29-35).

மோசே சிலையைச் செதுக்கி முடித்த மைக்கலாஞ்சலோ அதன் அழகையும் ஆற்றலையும் கண்டு வியந்த நிலையில் தம் கையிலிருந்த சுத்தியலைச் சிலையின் வலது கால் முட்டில் தட்டி, "பேசு!" என்று கூறியதாக வரலாறு. அத்துணை உயிரோட்டத்தோடு தோற்றமளித்தது அச்சிலை. வலது கால் முட்டில் தழும்பு இன்றும் உள்ளது.

படத்தொகுப்பு[தொகு]

அடிக்குறிப்புகள்[தொகு]