புஞ்சை நற்றுணையப்பர் கோயில்

ஆள்கூறுகள்: 11°7′50.4048″N 79°45′34.6098″E / 11.130668000°N 79.759613833°E / 11.130668000; 79.759613833
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நனிபள்ளி நற்றுணையப்பர் ஆலயம்
நற்றுணையப்பர் கோவில் நுழைவாயில்
நனிபள்ளி நற்றுணையப்பர் ஆலயம் is located in தமிழ் நாடு
நனிபள்ளி நற்றுணையப்பர் ஆலயம்
நனிபள்ளி நற்றுணையப்பர் ஆலயம்
தமிழ்நாட்டில் அமைவிடம்
ஆள்கூறுகள்:11°7′50.4048″N 79°45′34.6098″E / 11.130668000°N 79.759613833°E / 11.130668000; 79.759613833
பெயர்
வேறு பெயர்(கள்):பொன்செய் நற்றுணையப்பர் கோவில்
பெரிய கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:நாகபட்டினம்
அமைவு:பொன்செய்
கோயில் தகவல்கள்
மூலவர்:நற்றுணையப்பர்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:சோழர் காலக் கட்டிடக்கலை
வரலாறு
கட்டப்பட்ட நாள்:கிபி 11-ஆம் நூற்றாண்டு
அமைத்தவர்:முதலாம் பராந்தக சோழன் (கி.பி. 907-950)

புஞ்சை நற்றுணையப்பர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் ஒன்றாகும்.

அமைவிடம்[தொகு]

இத்தலம் நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்காவில் உள்ளது. பொன்செய் கிராமத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. முன்னொரு காலத்தில் சோழர்கள் ஆண்ட தஞ்சை தரணியின் ஒரு பகுதியாகும்.

பெயர் காரணம்[தொகு]

சோழப் பேரரசனான ராஜேந்திர சோழன், தந்தை ராஜராஜனின் ராஜராஜேச்சுரம் என்னும் தஞ்சை பிரகதீஸ்வரம் போன்ற கங்கை கொண்ட சோழீச்சுரத்தை, அரிய சிற்ப நுணுக்கங்களோடு படைத்தான். அதோடு இன்றைய மலேசிய நாட்டிலுள்ள பண்டைய ‘கெடா’ என்ற நகரத்தை வென்றதன் நினைவாக ‘கடாரங்கொண்ட சோழீச்சுரம்’ என்ற ஊரையும் சோழ நாட்டினில் உருவாக்கினான். இதனால் மாமன்னன் ராஜேந்திர சோழனுக்கு ‘பூர்வதேசமும் கடாரமும் கொண்ட கோப்பரகேசரி வர்மன்’ என்னும் சிறப்புப் பட்டமும் வழங்கப் பெற்றது. கடாரங்கொண்டான் என்பதே மருவி கிடாரங் கொண்டான் ஆகிவிட்டது.

வேறு காரணங்கள்[தொகு]

  • நனிபள்ளிக்கும் திருஞானசம்பந்தருக்கும் ஒரு முக்கியமான தொடர்பு உள்ளது. திருஞானசம்பந்தரின் தாயாரான பகவதி அம்மையார் பிறந்த தலமாகும் இது.[1] திருஞானசம்பந்தர் மூன்று வயதாக இருக்கும் பொழுது ஒரு நாள் தன் தந்தையுடன் திருக்குளத்தில் நீராட சென்றார். தந்தை குளத்தில் நீராட குழந்தை பசியால் வாடி அழத்துவங்கியது, குழந்தையின் அழுகுரல் கேட்டு ஈஸ்வரனும் உமையாளும் தோன்றினர். உமையாள் குழந்தையின் பசி போக்கி ஆசி வழங்கி மறைந்தனர். நீராடி முடித்து வந்த தந்தை குழந்தையின் வாயில் பால் இருப்பதை கண்டு குழந்தையை கடிந்து கொள்ள மழலை மொழியில் ஞானசம்பந்தர் பாடல் பாடினார்.பின்னாளில் ஞானசம்பந்தர் இறைவனை வேண்டி திருப்பதிகங்களை பாடினார். அன்று முதல் திருஞானசம்பந்தர் என்று அழைக்கப்பட்டார்.அதுவரை பாலையாகி காட்சியளித்த நனிப்பள்ளியை நெய்தல் நிலமாக மாற்றி பின்னர் மருத நிலமாக மாற்றி அருளினார்.பொன் விளையும் பூமியாகி போன நனிபள்ளி .பாலை சோலையாகி பொன் விளையும் பொன்செய் நிலங்கள் செழித்தோங்கியதால் இப்பகுதி பொன்செய் என்றும் பின்னர் புஞ்சை என்று மருவி அழைக்கப்பட்டது.
தந்தை மேல் அமர்ந்து சம்பந்தர் பாடிய பாடல்

கடல்வரை யோதமல்கு கழிகானல் பானல் கமழ்காழி யென்று கருதப்
படுபொரு ளாறுநாலும் உளதாக வைத்த பதியான ஞான முனிவன்
இடுபறை யொன்றவத்தர் பியன்மே லிருந்தின் இசையா லுரைத்த பனுவல்
நடுவிரு ளாடுமெந்தை நனிபள்ளி யுள்க வினை கெடுதலாணை நமதே

பொழிப்புரை :

கடல் எல்லையில் உள்ள வெள்ளம் மிக்க கழிகளையும் சோலைகளையும்
உடையதாய்க் குவளைமலரின் மணம் கமழும் காழி என்று கருதப்படும்
பதியின்கண் நால்வேத, ஆறங்கங் களை அறிந்துணர்ந்தவனாய்த் தோன்றிய
ஞானமுனிவன் தந்தையார் தோள்மேல் இருந்து இன்னிசையோடு உரைத்த
இப்பதிகத்தை ஓதிப் பறை ஓசையோடு நள்ளிருளில் நடனமாடும் எந்தை
நனிபள்ளியை உள்க வினைகள் கெடும் என்பது நமது ஆணையாகும்.

  • அகத்தியரின் கமண்டலத்திலிருந்த தீர்த்தத்தை விநாயகர் தட்டி விட்டதால் அவருக்கு தோஷம் ஏற்படுகிறது. இந்த தோஷம் நீங்க விநாயகர் இங்குள்ள குளத்தில் நீராடி வழிபாடு செய்துள்ளார். இதனால் இத்தலம் "பொன்செய்' ஆனது. இதுவே காலப்போக்கில் மருவி "புஞ்சை' ஆனது என்றும் கூறுவர்.

சிறப்புகள்[தொகு]

நற்றுணையப்பர் ஆலயம்[தொகு]

தேவாரம் பாடல் பெற்ற
திருநனிபள்ளி நற்றுணையப்பர் திருக்கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):திருநனிபள்ளி
பெயர்:திருநனிபள்ளி நற்றுணையப்பர் திருக்கோயில்
கோயில் தகவல்கள்
மூலவர்:நற்றுணையப்பர்
தாயார்:பர்வதபுத்திரி, மலையான் மடந்தை
தல விருட்சம்:சண்பகம்,புன்னை
தீர்த்தம்:சொர்ண தீர்த்தம்,தல தீர்த்தம்
சிறப்பு திருவிழாக்கள்:சித்திரை திருவிழா
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர்,திருநாவுக்கரசர்,சுந்தரர்

மூலவர் நற்றுணையப்பர் என்று அழைக்கப்படுகிறார். மனதில் உள்ள பயம் நீக்கி நல்வழிக்கு துணையாய் நிற்பவர் என்பதால் இவ்வாறு அழைக்கப்படுகிறார். இறைவியர்களாக மலையான் மடந்தை மற்றும் பர்வத புத்திரி ஆகியோர் அருள் பாளிக்கின்றனர். இங்குள்ள தீர்த்தம் சொர்ண தீர்த்தம் என்று வழங்கப்படுகிறது.

சைவ திருமுறைகளிள் திருநனிபள்ளி ஈஸ்வரனை நோக்கி திருஞானசம்பந்தர்,அப்பர்,சுந்தரர் உள்ளிட்டோர்களால் பாடபெற்ற தேவார பாடல்கள் பன்னிரு திருமுறைகள் நூலில் தொகுக்கப்பட்டுள்ளது. தேவார பாடல்கள் இடம்பெற்ற திருத்தலங்களில் நனிபள்ளியும் இன்றியமையாத ஒன்றாகும்

சம்பந்தர் -காரைகள் கூகைமுல்லை.

காரைகள் கூகைமுல்லை களவாகை ஈகை
படர்தொடரி கள்ளி கவினிச்
சூரைகள் பம்மிவிம்மு சுடுகா டமர்ந்த
சிவன்மேய சோலை நகர்தான்
தேரைக ளாரைசாய மிதிகொள்ள வாளை
குதிகொள்ள வள்ளை துவள
நாரைக ளாரல்வார வயன்மேதி வைகும்
நனிபள்ளி போலு நமர்காள்.

இது போன்று 11 தேவாரப் பாடல்கள் திருநனிபள்ளி ஈஸ்வரனை நோக்கி திருஞானசம்பந்தர் அவர்களால் இரண்டாம் திருமுறையில் 74வது பதிகமாக(திருநனிப்பள்ளி) பாடப்பட்டுள்ளது.


திருநாவுக்கரசு நாயனார் -முற்றுணை யாயினானை

முற்றுணை யாயி னானை மூவர்க்கும் முதல்வன் றன்னைச்
சொற்றுணை யாயி னானைச் சோதியை யாத ரித்து
உற்றுணர்ந் துருகி யூறி யுள்கசி வுடைய வர்க்கு
நற்றுணை யாவர் போலு நனிபள்ளி யடிக ளாரே.

இது போன்று 9 திருமுறை தேவாரப் பாடல்கள் திருநனிபள்ளி ஈஸ்வரனை நோக்கி அப்பர் அவர்களால் அருளப்பட்ட நான்காம் திருமுறையில் 70 வது பதிகமாக பாடப்பட்டுள்ளது.

சுந்தரர் -ஆதியன் ஆதிரையன்.

ஆதியன் ஆதிரை யன்அயன் மால்அறி தற்கரிய
சோதியன் சொற்பொரு ளாய்ச்சுருங் காமறை நான்கினையும்
ஓதியன் உம்பர்தங் கோனுல கத்தினுள் எவ்வுயிர்க்கும்
நாதியன் நம்பெரு மான்நண்ணும் ஊர்நனி பள்ளியதே.

முதலிய பாடல்கள் திருநனிப்பள்ளியான இத்தலத்தில் சுந்தரர் அவர்கள் அருளிய ஏழாம் திருமுறையில் 97வது பதிகத்தில் 10 பாடல்கள் பாடப்பெற்றுள்ளது.

தலத்தின் சிறப்புகள்[தொகு]

  • சிவபெருமான் அகத்தியருக்கு திருமண கோலத்தில் காட்சியளித்த தலம் மற்றும் அப்பர்,சுந்தரர், திருஞானசம்பந்தர் உள்ளிட்ட சைவ அடிகளார்களால் பாடப்பட்ட தலம் என்ற பெருமையும் உண்டு.
  • சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 106 வது தேவாரத்தலம் ஆகும்.
  • சோழர் காலக்கல்வெட்டில் இத்தலம் "ஜயங் கொண்ட வளநாட்டு ஆக்கூர் நாட்டுப்பிரமதேயமாகிய நனிபள்ளி" என்று குறிக்கப்படுகிறது
  • கோவிலின் சுற்றுபுற சுவற்றில் அகத்தியர், பிரம்மா, சிவன் உள்ளிட்ட சிலைகள் செதுக்கப்பட்டுள்ளன. இவ்வளவு அழகிய வேலைபாடுகளுன் கூடிய சிலைகளை நாம் எங்கும் காண இயலாது.
  • இக்கோவிலுக்கு ராஜகோபுரம் கிடையாது. கருவறை கோபுரம் மட்டுமே உள்ளது. இவ்வளவு பெரிய கருவறை இந்தியாவில் உள்ள எந்த சிவத் திருதலங்களிலும் காண முடியாது.
  • திருமண தடை உள்ளவர்கள் இங்குள்ள கல்யாண சுந்தரேசரை வணங்கினால் தோஷம் விலகும்.

அமைப்பு[தொகு]

கிழக்கு நோக்கி அமைந்துள்ள, ராஜகோபுரம் இல்லாத, கோயில். விநாயகர், பலிபீடம், நந்தி மண்டபத்தை அடுத்துள்ள வாயிலைக் கடந்து உள்ளே செல்லும்போது வலப்புறத்தில் மேற்கு நோக்கிய நிலையில் மலையான்மடந்தை அம்மன் சன்னதி உள்ளது. மூலவர் சன்னதிக்கு முன்பாக இடப்புறம் பருதவராஜபுத்திரி சன்னதி உள்ளது. உள்ளே கருவறையில் மூலவர் நற்றுணை ஈஸ்வரர் உள்ளார். மூலவர் சன்னதிக்கு முன் இருபுறங்களிலும் துவாரபாலகர்கள் உள்ளனர். மூலவர் கோஷ்டத்தில் அகத்தியர், விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். திருச்சுற்றில் கல்யாணசுந்தரேஸ்வரர் சன்னதி, விநாயகர் சன்னதி, வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர் சன்னதி, சண்டிகேஸ்வரர் சன்னதி ஆகிய சன்னதிகள் உள்ளன. அகத்தியருக்கு இறைவன் திருமணக்கோலம் காட்டிய தலம். புள்ளமங்கை கோயிலில் உள்ளது போல கருவறையைச் சுற்றி மிகச்சிறிய சிற்பங்களைக் கொண்ட பெருமையுடையது இக்கோயிலாகும்.

திருவிழா[தொகு]

ஆண்டு தோறும் சித்திரை மாதம் 7ம் தேதி முதல் 13ம் தேதி வரை சூரியன் சிவலிங்கத்தின் மேல் காலையில் தன் கதிரொளியை வீசும். அந்த நேரத்தில் சித்திரை திருவிழா கொண்டாடபடுகிறது. காலத்தை வென்று நிற்கும் இந்த சோழனின் கட்டிடக்கலை தமிழனின் பெருமைக்கு என்றும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

கோவில் வரலாறு[தொகு]

சுமார் 1000 ஆண்டுகள் பழமையான திருக்கோவில்.இராஜராஜ சோழனின் மூதாதையரான முதலாம் பராந்தக சோழன் (கி.பி. 907-950)கட்டிய திருக்கோவில்களில் திரு நனிபள்ளி நற்றுணையப்பர் கோவிலும் ஒன்று. 10ம் நூற்றாண்டை சேர்ந்த கோவிலாகும். கருவறையின் உள்ளே யானை சென்று வழிபாடு நடத்திய திருத்தலமாகும். யானை சென்று வழிபடும் அளவு கருவறையை உருவாக்குவது சோழனின் பார்போற்றும் கட்டிடகலை சிறப்பாகும்.

  • கோவிலின் சுற்றுப்புற சுவற்றில் கோவிலை கட்டிய பராந்தக சோழனின் சிலை பொதியப்பட்டுள்ளது.

அடையும் வழி[தொகு]

மயிலாடுதுறையிலிருந்து 13கிமீ தொலைவில் உள்ளது. பூம்புகார்,திருவெண்காடு,பெருந்தோட்டம்,மங்கைமடம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் வழியாக அடையலாம்.

சான்றுகள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-12-20. பார்க்கப்பட்ட நாள் 2014-12-20.

வெளி இணைப்புக்கள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Ponsei Natrunaiyappar Temple
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

படத்தொகுப்பு[தொகு]

நுட்பமான சிற்பங்கள் படத்தொகுப்பு[தொகு]