பீட்டர் பெர்சிவல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பீட்டர் பெர்சிவல்
பிறப்பு1803
இறப்புசூலை 11, 1882
ஏற்காடு, இந்தியா
பணிகல்வியாளர், மொழியியலாளர், நற்செய்தி அறிவிப்பாளர்

பீட்டர் பெர்சிவல் (Peter Percival, 1803சூலை 11, 1882) ஓர் பிரித்தானிய நற்செய்தி அறிவிப்பாளரும், மொழியியலாளரும் ஆவார். இவர் இந்தியாவிலும், இலங்கையிலும் வாழ்ந்த காலத்தில், கல்வித் தரத்தை மேம்படுத்த பாடுபட்டார். இலங்கையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் தன் சேவையைத் தொடர்ந்தார். ஆங்கிலம்-தெலுங்கு அகரமுதலியையும், ஆங்கிலம்-தமிழ் அகராதியையும், ஆங்கிலத்தில் தமிழ்ப் பழமொழிகளையும், ஔவையாரின் பாடல்களையும் மொழிபெயர்த்தும் எழுதினார். தெலுங்கிலும், தமிழிலும் தினவர்த்தமணி என்ற இதழை வெளியிட்டார். இவர் சமற்கிருதத்தில் பட்டம் பெற்றவரும் ஆவார். 1882 ஆம் ஆண்டு தமிழ்நாட்டிலுள்ள ஏற்காட்டில் இறந்தார்.[1]

பணிகள்[தொகு]

இலங்கை[தொகு]

23 வயதில் பீட்டர் பெர்சிவல், 1826 ஆம் ஆண்டு வெசுலியன் மெதடிச சமயப்பரப்புக் குழுவால் இலங்கையிலுள்ள யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப்பட்டார். [2] பெர்சிவல் தனது ஆரம்ப கால வாழ்க்கையின் பெரும்பகுதியை யாழ்ப்பாணத்தில் 1851 வரை கழித்தார். சிறிது காலம் வங்காளத்தில் கழித்தார் (1829-32).[3]

பீட்டர் பெர்சிவலின் கருத்துகளால் ஜோசப் ராபர்ட்சு போன்ற சக மறைப்பணியாளர்களுடன் மோதலை ஏற்படுத்தியது. ராபர்ட்சு வெளியேறிய பிறகு, யாழ்ப்பாண மாவட்டத்தில் கிறித்தவ மறைப்பணியாளர்களின் முயற்சிகளுக்கு பெர்சிவல் தலைமை தாங்கினார்.

பெர்சிவல் பின்னர் ரால்ப் சுடோட்டுடன் மோதல்கள் இருந்ததாக ஃபிண்ட்லேயின் மறைப்பணி பற்றிய பதிவுகள் கூறுகிறது. 1834-1836 க்கு இடையில், இவரது முயற்சிகள் பெண்களுக்கான பள்ளிகள் உட்பட மதப் பள்ளிகளைத் திறக்க வழிவகுத்தது, யாழ்ப்பாணத்தில் புனித பவுல் தேவாலயம் கட்டப்பட்டது. இவற்றில் சில பள்ளிகள் பின்னர் கல்லூரிகளாக மாறின. [2] பெர்சிவல் ஆங்கிலம் அல்லது போர்த்துகீசிய மொழியில் கிறித்தவத்தை கற்பிப்பதை விட தமிழ் மொழியில் கற்பிப்பதை விரும்பினார் [2] [4]

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் முதல்வராக பணியாற்றிய காலத்தில் தனது முன்னாள் மாணவர் ஆறுமுக நாவலரை ஆசிரியராக அமர்த்தினார். இவர்கள் இருவரும் 1841-1848 க்கு இடையில் ஒன்றாக வேலை செய்தனர். திருவிவிலியத்தை தமிழில் மொழிபெயர்க்க ஆறுமுக நாவலருடன் இணைந்து பணியாற்றினார். [2] [5] [6]

இங்கிலாந்து[தொகு]

1851 ஆம் ஆண்டில், இவர் மீண்டும் இலங்கைக்கு வரும் நோக்கத்துடன் இங்கிலாந்து திரும்பினார். லண்டனிலுள்ள மெதடிச கருத்து வேறுபாடு காரணமாக, இவர் மெதடிசத்தை கைவிட்டார். [7] 1852 இல், இவர் லண்டனின் ஆங்கிலிக்க ஆயரால் உதவிக்குருவாக நியமிக்கப்பட்டார். அடுத்த இரண்டு ஆண்டுகளில், அவர் கேன்டர்பரியில் உள்ள புனித அகசுடின் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணிபுரிந்தார், இந்தியா மற்றும் இந்திய மதங்களைப் பற்றிய பாடங்களை கற்பித்தார். [3]

இந்தியா[தொகு]

1854 ஆம் ஆண்டு தென்னிந்தியாவில் உள்ள மதராசுக்கு சென்றார். இவர் 1855 இல் மதராசு ஆயரால் ஆங்கிலிக்க பாதிரியாரானார். 1856 ஆம் ஆண்டில், மதராசுப் பல்கலைக்கழகத்தின் பதிவாளராகவும், மாநிலக் கல்லூரியில் சமஸ்கிருதம் மற்றும் வடமொழி இலக்கியப் பேராசிரியராகவும் ஆனார், பிறகு இவர் மறைப்பணியாளர்கள் சமுதாயத்துடனான தனது உறவை முறித்துக் கொண்டார். [3] [8]

ஏற்காட்டிலுள்ள புனித திரித்துவ தேவாலயத்தில் பீட்டர் பெர்சிவலின் கல்லறை

மேற்கோள்கள்[தொகு]

  1. "The trail of two British innovators in India". தி இந்து. 8 July 2008. Archived from the original on 12 July 2009. பார்க்கப்பட்ட நாள் 15 November 2011.
  2. 2.0 2.1 2.2 2.3 Findlay & Holdsworth 1924
  3. 3.0 3.1 3.2 "Details of PETER PERCIVAL". பார்க்கப்பட்ட நாள் 12 November 2011.
  4. Jones & Hudson 1992, ப. 34–38.
  5. Dennis Hudson (1995). Steven Kaplan. ed. Indigenous Responses to Western Christianity. New York University Press. பக். 96–97. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8147-4649-3. https://books.google.com/books?id=XgzexEv4Y6YC. 
  6. Heidman 2001
  7. Findlay & Holdsworth 1924
  8. Armstrong 1863

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பீட்டர்_பெர்சிவல்&oldid=3856203" இலிருந்து மீள்விக்கப்பட்டது