முனுசாமி நாயுடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பி. முனுசாமி நாயுடு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
முனுசாமி நாயுடு
சென்னை மாகாணத்தின் பிரதமர்
பதவியில்
அக்டோபர் 27, 1930 – நவம்பர் 4, 1932
ஆளுநர்ஜார்ஜ் ஃபெடரிக் ஸ்டான்லி
முன்னையவர்பி. சுப்பராயன்
பின்னவர்பொபிலி அரசர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1885
இறப்பு1935
சித்தூர் , ஆந்திரா , இந்தியா இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிநீதிக்கட்சி
தொழில்வழக்கறிஞர்

பொல்லினி முனுசாமி நாயுடு (1885 -1935) சென்னை மாகாணத்தின் முன்னாள் பிரதமர்[1] (முதல்வர்) மற்றும் நீதிக்கட்சியின் தலைவருமாவார். சென்னை மாகாணத்தில் இரட்டை ஆட்சிமுறையின் கீழ் பதவி வகித்த நான்காவது பிரதமர் இவர். 1930 முதல் 32 வரை பதவியில் இருந்தார்.

பிறப்பும் படிப்பும்[தொகு]

முனுசாமி 1885 ஆம் ஆண்டு தற்கால ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் வேலமஜேரி என்னும் கிராமத்தில் கம்மா நாயுடு சாதியில் பிறந்தார். இவரது குடும்பம் விவசாயப் பின்புலம் கொண்டது. அவர் சென்னைக் கிருத்துவக் கல்லூரியில் சட்டக் கல்வி படித்து பட்டம் பெற்றார்; வழக்கறிஞராக பணியாற்றினார். விவசாயம், கடன் வழங்குதல் ஆகிய தொழில்களையும் செய்த அவர் சித்தூரில் ஓர் ஆலையும் நடத்தினார்.[2][3][4][5]

அரசியல் வாழ்க்கை[தொகு]

நீதிக்கட்சியின் தலைவர் பனகல் அரசர் 1928 ஆம் ஆண்டு மரணமடைந்தார். அவருக்கு பதிலாக முனுசாமி நீதிக்கட்சியின் தலைவராக டிசம்பர் 18, 1928 இல் தேர்ந்தெடுக்கப் பட்டார். 1928 முதல் 30 வரை சென்னை சட்டமன்றத்தில் எதிர்க் கட்சித் தலைவராக செயல் பட்டார். எதிர்க்கட்சியாக இருந்தாலும், சுயேட்சை முதல்வர் சுப்பராயனின் அரசை ஆதரித்தது. பிராமணரல்லாதோர் நலனுக்காக தொடங்கப்பட்ட நீதிக்கட்சியில் பிராமணர்களையும் உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ள வேண்டுமென 1929 இல் வலியிறுத்தினார். ஆனால் மற்ற தலைவர்களின் எதிர்ப்பினால் அவரது தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது.[6][7][8][9][10]

1930 இல் நடைபெற்ற சட்ட மன்றத் தேர்தலில் முனுசாமியின் தலைமையில் நீதிக்கட்சி ஆங்கில அரசு ஆதரவாளர்களுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. 45 தொகுதிகளில் போட்டியிட்ட நீதிக்கட்சி, வலுவான எதிர்க்கட்சி இல்லாத காரணத்தால் (இந்திய தேசிய காங்கிரசு தேர்தலைப் புறக்கணித்து விட்டது) எளிதில் வெற்றி பெற்றது. எழுபது சதவிகித வாக்குகளையும், பெரும் பாலான தொகுதிகளையும் கைப்பற்றியது. அக்டோபர் 17, 1930 இல் முனுசாமி சென்னை மாகாணத்தின் முதல்வரானார்.[11][12][13]

முதல்வராக[தொகு]

முதல்வர் பதவி தவிர, உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் முனுசாமி இருந்தார். அவரது அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த மற்ற அமைச்சர்கள் – பி. டி ராஜன் (வளர்ச்சி, பதிவு மற்றும் பொதுப்பணித் துறைகள் ), குமாரசாமி ரெட்டியார் (கல்வி மற்றும் சுங்கத் துறைகள்) ஆவர். முனுசாமி முதல்வராகப் பதவியேற்ற போது, உலகைப் பீடித்திருந்த பெரும் பொருளியல் வீழ்ச்சியின் தாக்கம் சென்னை மாகாணத்தில் கடுமையாக இருந்தது. மாகாணத்தின் தென் மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டிருந்தன. நிதிப் பற்றாக்குறையால் தள்ளாடிய அரசு நிலவரியை உயர்த்தியது. இதனால், மக்களிடையே கடும் அதிருப்தி ஏற்பட்டது. முனுசாமி நாயுடுவின் பதவிக் காலத்தில் நீதிக் கட்சியில் உட்கட்சிப் பூசல்கள் பெருகின. பொபிலி அரசர், வெங்கடகிரி அரசர் ஆகியோர் தலைமையில் ஜமீந்தார்கள் கோஷ்டி, முனுசாமி, என், ஜி. ரங்கா தலைமையில் அரசு ஆதரவாளர் கோஷ்டி என இரு குழுக்கள் கட்சிக்குள் பலப் பரீட்சை செய்து வந்தன. ஜமீந்தார் கோஷ்டி, முனுசாமி காங்கிரசுக்கு ஆதரவாகச் செயல்படுவதாக குற்றஞ்சாட்டியது.[14][14][14][15]

11-12 அக்டோபர் 1932 இல் தஞ்சையில் நடைபெற்ற நீதிக்கட்சியின் பன்னிரெண்டாவது மாநில மாநாட்டில் பெரும் குழப்பத்திற்கிடையே ஜமீந்தார் கோஷ்டி பொபிலி அரசரை கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுத்தது. பின்னர் அமைச்சர்கள் ராஜனும், குமாரசாமியும் பதவி விலகினர். அடுத்து தன் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவார்கள் என்று எதிர்பார்த்த முனுசாமி நவம்பர் 4 ஆம் நாள், தானே பதவி விலகினார். அவருக்குப் பின் பொபிலி அரசர் முதல்வரானார்.[8][16]

மரணம்[தொகு]

முதல்வர் பதவியிலிருந்து விலகிய பின் முனுசாமி அரசியலிலிருந்து ஓய்வு பெற்றார். 1935 ஆம் ஆண்டு மரணமடைந்தார்.[3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "நடராசன் புகழுடம்பு எய்திய கதை". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2022-02-01.
  2. Narasimhan, C. (1986). Me and My Times. Radna Corporation. பக். 60. 
  3. 3.0 3.1 Innaiah, N. (1981). Politics for Power: The Role of Caste and Factions in Andhra Pradesh, 1880-1980. Scientific Services. பக். 180. 
  4. 4.0 4.1 Choudary, Kotta Bhavaiah (1954). A BriefHistory of the Kammas. Scientific Services. பக். 90. 
  5. Some Outstanding Alumni of the College
  6. Rao, P. Raghunadha (1983). History of Modern Andhra. Sterling Publishers. பக். 116. 
  7. Mishra, Maria (2007). Vishnu's Crowded Temple: India Since the Great Rebellion. Allan Lane. பக். 137. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:[[Special:BookSources/0713993677, ISBN 9780713993677|0713993677, ISBN 9780713993677]]. 
  8. 8.0 8.1 Innaiah, N. (1981). Politics for Power: The Role of Caste and Factions in Andhra Pradesh, 1880-1980. Scientific Publishers. பக். 47. 
  9. Mangalamurugesan, Nataraja Kandasamy (1979). Self-Respect Movement in Tamil Nadu, 1920–1940. Koodal Publishers. பக். 101. 
  10. Encyclopedia of Political Parties, Pg 165
  11. Rajaraman, P. (1988). The Justice Party: A Historical Perspective, 1916-37. Poompozhil Publishers. பக். 230. 
  12. Arooran, K. Nambi (1980). Tamil Renaissance and Dravidian Nationalism, 1905-1944. Koodal. பக். 175. 
  13. Innaiah, N. (2002). A Century of Politics in Andhra Pradesh: Ethnicity & Regionalism in Indian State. Rationalis Voice Publications. 
  14. 14.0 14.1 14.2 Ralhan, O. P. (2002). Encyclopaedia of Political Parties. Anmol Publications PVT. LTD. பக். 196–198. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:[[Special:BookSources/8174888659, ISBN 9788174888655|8174888659, ISBN 9788174888655]]. 
  15. Manikumar, K. A. (2003). A colonial economy in the Great Depression, Madras (1929-1937). Orient Blackswan. பக். 185–198. ISBN 8125024565, ISBN 9788125024569. http://books.google.com/books?id=8eWkmxJRnoAC&pg=PA185. 
  16. Innaiah, N. (1985). Charisma in Politics: A Special Study of Andhra Pradesh Politics. V. Komala. பக். 47. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=முனுசாமி_நாயுடு&oldid=3382846" இலிருந்து மீள்விக்கப்பட்டது