பிளையிங் பிஷ் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிளையிங் பிஷ் என்பது 2011 ஆம் ஆண்டில் வெளியான சிங்கள மொழித் திரைப்படம் ஆகும். இதை சஞ்சீவா புஷ்பகுமாரா என்பவர் இயக்கியுள்ளார். பன்னாட்டுத் திரைப்படத் திருவிழாவின் ஹுபெர்ட் பால்சு நிதியைக் கொண்டு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டது. பல உலகளாவிய திரைப்படத் திருவிழாக்களில் இத்திரைப்படம் திரையிடப்பட்டு விருதுகளையும் பெற்றுள்ளது. இயக்குனரின் வாழிடமான திருகோணமலையில் காட்சியாக்கப்பட்டது. திரைப்படத்தைப் பார்வையிட்ட பல்வேறு முன்னணி திரைத்துறையினர் பாராட்டு தெரிவித்தனர்.

கதைக்களம்[தொகு]

இத்திரைப்படம் இலங்கைப் போரின்போது நிகழ்ந்த மூன்று நிகழ்வுகளின் பின்னணியில் உருவானது.

வசனாவும் போர்வீரனும்[தொகு]

இள வயதுடைய சிங்களப் பெண் போர்வீரனின் மீது காதல் கொள்கிறாள். குறுகிய காலத்தில் அவள் வயிற்றில் கரு உருவாகிறது. இருவரும் குழந்தையைக் கருவிலேயே அழிக்க முயன்று தோற்கின்றனர். இடிந்த கட்டிடத்தில் இருவரும் காதல் கொள்வதைக் கண்ட தந்தையின் மனதில் ஆழமாகப் பதிந்துவிடுகிறது. போர் தீவிரமடையும் காலத்தில் அதிக வயதுடைய இளைஞர்கள் அந்த ஊரைக் காக்க இராணுவப் படையில் சேர்க்கப்படுகின்றனர். பாதுகாப்புப் பணியில் ஈடுபடாததால் அவளது தந்தை துன்புறுத்தப்படுகிறார். மன உளைச்சலால் தற்கொலை செய்துகொள்கிறார். அந்த போர்வீரனும் அவனது குழுவினரும் வேறு இடத்திற்கு பாதுகாப்புப் பணிக்குச் செல்கின்றனர். ஏற்கனவே தந்தை இறந்ததால் துன்பமுற்ற அப்பெண்ணை அவன் விட்டுச் சென்றதால் அதீத கோபமுற்று அந்த ஊரைவிட்டு வேறிடத்திற்கு ஓடிவிடுகிறாள்.

தாயும் மகனும்[தொகு]

இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் போர் தீவிரமடையும் ஊரில் கணவனை இழந்த பெண் ஒருத்தி தன் எட்டு குழந்தைகளுடன் வாழ்கிறாள். வறுமையில் வாடும் அப்பெண் தயிர் விற்கிறாள். அவ்வூரில் வியாபாரம் செய்யும் இளைஞன் ஒருவனுடன் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்கிறாள். அவளது மூத்த மகன் பள்ளியின் உயர்நிலை முதல் வகுப்பில் படிக்கிறான். குடும்பத்தின் நிலையை உயர்த்த மீன் விற்கிறார். இக்காலத்தில் பள்ளியில் படிக்கும் பெண்ணைக் காதலிக்கிறான். பிறருக்கு இச்செய்தி தெரியவர அவமானப்படுகிறான். இவ்வேளையில் அவன் தாயின் கள்ளத்தொடர்பு வெளியில் தெரிய வருகிறது. ஒரு நாள் அவன் தாய் அவள் காதலனுடன் உடலுறவில் ஈடுபடுவதைக் காண்கிறான். கோபமுற்ற அவன் தன் சகோதரர்களின் முன்னிலையில் தாயைக் கொன்றுவிடுகிறான்.

தமிழ்ச் சிறுமி[தொகு]

பள்ளியில் படிக்கும் தமிழ்ச் சிறுமி பேருந்தில் வீடுதிரும்பும்போது முதல் மாதவிடாயை அனுபவிக்கிறாள். இராணுவப் படையினரின் சாலையில் செல்லும் வாகனங்களைச் சோதனையிடும்போது இது தெரிய வருகிறது. போர் தீவிரமாகும் கிழக்கிலைங்கையில் வாழ்கிறாள் இப்பெண். இவளது தந்தை அலுவலராகவும் தாய் இல்லத்தரசியாகவும் இருகின்றனர். விடுதலைப் புலிகள் இலங்கையின் சிங்கள ஆதிக்க அரசிற்கு எதிரான தங்களின் போரை நியாயப்படுத்தியும், தனித் தமிழீழம் வேண்டியும் பள்ளிகளில் பாடம் நடத்துகின்றனர். ஒரு நாள் இந்தச் சிறுமியின் வீட்டிற்குள் நுழையும் விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் இவளது பெற்றோரிடம் பெருந்தொகையைத் தருமாறு விரட்டுகின்றனர். தரவில்லையென்றால் அந்தச் சிறுமி தங்கள் இயக்கத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவாள் எனக் கூறுகின்றனர். அன்றிரவு அவர்கள் அந்த வீட்டிற்கு வரும்போது சிறுமி தப்பிவிடுகிறாள். சிறுமி, பணம் இரண்டில் ஒன்றும் கிடைக்காததால் அவளது பெற்றோரைக் கொன்றுவிடுகின்றனர்.


மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]