பிரியாத வரம் வேண்டும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரியாத வரம் வேண்டும்
இயக்கம்கமல்
தயாரிப்புநிகிலா எண்டர்பிரைஸஸ்
இசைஎஸ். ஏ. ராஜ்குமார்
நடிப்புபிரசாந்த்
ஷாலினி
ஜனகராஜ்
கிருஷ்ணா
மணிவண்ணன்
நிழல்கள் ரவி
வையாபுரி
ஜோமோல்
வெளியீடு2001
நாடு இந்தியா
மொழிதமிழ்

பிரியாத வரம் வேண்டும் (Piriyadha Varam Vendum) 2001 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம்.1999 இல் மலையாளத்தில் வெற்றி பெற்ற நிறம் என்கின்ற படத்தின் தமிழாக்கம்.2000களில் தமிழ்த் திரையுலகில் பிரபலமாக இருந்த பிரசாந்த் மற்றும் ஷாலினி முதன்மை கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க, இத்திரைப்படத்தை நிறம் படத்தை இயக்கிய கமலே தமிழிலும் இயக்கினார். இத்திரைப்படத்தில் மனோரமா, ஜனகராஜ், மணிவண்ணன், வையாபுரி, கோவை சரளா என எண்ணற்ற நட்சத்திர நடிகர் பட்டாளங்களைக் கொண்டுத் தயாரிக்கப்பட்டிருந்தது.இத்திரைப்படத்திற்கு எஸ். ஏ. ராஜ்குமார் இசையமைத்திருந்தார். இத்திரைப்படம் 2001-ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

கதை[தொகு]

சஞ்சய் (பிரசாந்த்) மற்றும் நிதி (ஷாலினி) சிறுவயது முதலே இணைபிரியா நண்பர்கள். அக்கம் பக்கத்து வீடுகளில் வசிக்கும் இருவரும் பள்ளிபருவம் முதல் கல்லூரி பருவம் வரை, காலையில் கண் விழிக்கும் நேரத்திலிருந்து இரவு தூங்கப்போகும் நேரம் வரை ஒன்றாகவே வளருகின்றனர், படிக்கின்றனர், ஒன்றாகவே நேரத்தைச் செலவிடுகின்றனர். கல்லூரியில் சஞ்சயை சினேகாவும் (ஜோமோல்), நிதியை பிரவீனும் (கிருஷ்ணா) காதலிக்கின்றனர். ஒருகட்டத்தில் நிதியின் மேல் காதல் வயப்பட்ட பிரவீன் நிதியிடம் தனது காதலை வெளிப்படுத்துகிறார். இந்நிலையில் நிதி கல்லூரி சுற்றுலாவிற்காக ஒரு வாரகாலம் பெங்களூர் செல்கிறார். இந்த ஒரு வாரக்காலத்தில் நிதியின் பிரிவை உணரும் சஞ்சய் நிதி இல்லாமல் தன்னால் இருக்க முடியாததையும் நிதியை அவன் காதலிப்பதையும் வீட்டின் வேலைக்காரி சஞ்சய்க்கு உணர்த்துகின்றார். எனினும் சஞ்சய் இருவரின் நட்பின் காரணமாக தனது காதல் எண்ணங்களை நிதியிடம் மறைக்கின்றான். இதை அறியாத நிதி பிரவீனின் காதலை ஏற்றுக்கொள்கிறார். நிதி மற்றும் பிரவீன் வீடுகளில் இருவருக்கும் திருமண ஏற்பாடு நடக்கிறது. இந்த சமயங்களில் நிதியும் தன்னால் சஞ்சயை பிரிந்து இருக்க முடியாது என்பதை உணருகின்றார் சஞ்சயிடம் அதைத் தெரிவிக்கிறார். சஞ்சயும் தனது அதே நிலையை நிதியிடம் தெரியப்படுத்தி இருவரும் இறுதியில் இணைகின்றனர்.

நடிகர்,நடிகைகள் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள்[தொகு]

படத்தயாரிப்புச் செய்திகள்[தொகு]

1999இல் மலையாளத்தில் வெளிவந்து வெற்றிபெற்ற நிறம் படத்தினைத் தொடர்ந்து அப்படத்தினை தமிழில் மொழியாக்கம் செய்வதன் மூலம் அப்படத்தின் இயக்குனர் கமல் தமிழில் அறிமுகம் ஆவதென முடிவு செய்தார். அவர் பிரசாந்தை கதையின் நாயகனாகவும்,மலையாளத்தில் கதாநாயகியாக நடித்த ஷாலினியே தமிழிலும் நாயகியாக நடிக்கவிருப்பதாகவும் நிறம் படத்தின் வெற்றிவிழாவின் போது மேடையில் அறிவித்தனர். சினேகா மற்றும் கிருஷ்ணா இரண்டாவது நாயகன், நாயகியாக நடிக்க தேர்வாகினர்.[சான்று தேவை]முதலில் நடிகை குஷ்பூவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகச் செய்திகள் வெளியாகின. சினேகா நடிக்க இருந்த கதாபாத்திரத்தை நிறம் படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்த ஜோமோல் தமிழிலும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.[சான்று தேவை]மேலும் குஷ்பூவும் இத்திரைப்படத்தில் நடிக்கவில்லை என உறுதிசெய்யப்பட்டது. தயாரிப்பாளரின் பணப்பிரச்சனைக் காரணமாக இத்திரைப்படம் தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது.அத்தாமதம் காரணமாக படத்தின் நாயகன் பிரசாந்த் வேறு படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்ததால் நாயகி ஷாலினி இப்படத்திற்க்கு கொடுத்த தேதிகள் வீணடிக்கப்பட்டது.[சான்று தேவை]இந்நிலையில் ஷாலினிக்கும் நடிகர் அஜித்குமார்க்கும் திருமணம் நடக்கவிருந்ததால் ஷாலினி திருமணத்திற்குப் பிறகு நடிப்பதில்லை என முடிவெடுத்திருந்தார்.[சான்று தேவை]இந்நிலையில் இருவருக்கும் திருமணம் முடிந்ததால் மலையாள படத்தில் ஷாலினி நடித்த காட்சிகளை இத்திரைப்படத்தில் உபயோகித்து அக்டோபர் 2000 ஆம் ஆண்டு படத்தை வெளியிடுவது என முடிவெடுத்தனர்.ஆனால் ஷாலினி இப்படத்தைத் தனதுக் கடைசிப் படமாக நடித்துக் கொடுப்பதென முடிவெடுத்தார்.

அதன்படி படத்திற்கு பிரியாத வரம் வேண்டும் என பெயரிடப்பட்டு படப்பிடிப்பு வேலைகள் தொடங்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

  1. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=piriyadha%20varam%20vendum[தொடர்பிழந்த இணைப்பு]
  2. https://web.archive.org/web/20010303075810/http://www.chennaionline.com/location/varam.asp
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரியாத_வரம்_வேண்டும்&oldid=3738878" இலிருந்து மீள்விக்கப்பட்டது