பாபர் மசூதி இடிப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாபர் மசூதி இடிப்பு
அயோத்தி is located in இந்தியா
அயோத்தி
அயோத்தி
அயோத்தி (இந்தியா)
இடம்அயோத்தி, இந்தியா
நாள்6 திசம்பர் 1992
தாக்குதலுக்கு
உள்ளானோர்
பாபர் மசூதி
தாக்குதல்
வகை
கலவரம்
இறப்பு(கள்)2,000[1]
தாக்கியோர்கரசேவகர்கள் மற்றும் விசுவ இந்து பரிசத்

பாபர் மசூதி இடிப்பு (பாபர் மசூதி அழிப்பு; பாபர் மசூதி தகர்ப்பு) என்பது டிசம்பர் 6, 1992 அன்று இந்தியாவின் உத்திரப் பிரதேசத்திலுள்ள, அயோத்தியின் பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த பாபர் மசூதியை, இராமர் பிறந்த இடத்தைக் (இராமஜென்மபூமி) கைப்பற்றும் பொருட்டு இந்துக் கரசேவகர்கள் அழித்ததைக் குறிக்கும். இந்த அழிப்பினால் விளைந்த இந்து இஸ்லாமிய மதக்கலவரங்கள் பல மாதங்கள் தொடர்ந்து நடைபெற்றன. இவற்றினால் ஏறத்தாழ 2,000 பேர் உயிரிழந்தனர்.[2]

பின்னணி[தொகு]

அயோத்தி நகரம் கடவுள்-அரசர் இராமர் பிறந்த இடமென்றும் இந்தியாவின் புனிததன்மை வாய்ந்த இடங்களுள் ஒன்றாகவும் கருதப்படுகிறது.[3] 1528இல் முகலாயர் படையெடுப்பிற்குப் பின் முகலாய படைத்தலைவர் மிர் பாங்கியினால் முகலாயப் பேரரசர் பாபரின் பெயரால் ஒரு மசூதி கட்டப்பட்டது.[4] அங்கிருந்த இராமர் கோயிலை இடித்த பின்னரே, மீர் பாங்கி மசூதியைக் கட்டினார் என்று இந்துக்கள் நம்புகின்றனர். பல ஆண்டுகளாக இவ்விடம் இந்துக்களாலும் ,இஸ்லாமியர்களாலும் மத வழிபாடுகளுக்காகப் பயன்படுத்தப்பட்டுவந்தது.[5] இந்திய விடுதலைக்குப் பிறகு, பல இயக்கங்கள் அவ்விடத்தைச் சொந்தம் கொண்டாடி வழக்குகள் தொடர்ந்தன.[6]

பாரதிய ஜனதா கட்சி (பாஜக) 1989 தேர்தலின் போது அயோத்திச் சிக்கலை (அயோத்தி பிரச்சனை) தேர்தல் களத்தில் பரப்புரைக்காகப் பயன்படுத்தியது.[7] செப்டம்பர் 1990இல் பாஜக தலைவர் எல். கே. அத்வானி அயோத்திச் சிக்கலை நாடெங்கும் எடுத்துச் செல்லும்பொருட்டு ஓர் இரதப் பயணத்தைத் (இரத யாத்திரை) தொடங்கினார். இதனால் நாடெங்கும் கொந்தளிப்பு ஏற்பட்டது.

1992 டிசம்பர் முதல் வாரத்தில் நாடெங்கிலிருந்தும் கரசேவகர்கள் அயோத்தியில் வந்து குவிந்தனர். அவர்களால் டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இடிப்பு நிகவுகளை விவரிக்கும் லிபரான் குழு அறிக்கை அத்வானி, ஜோஷி, விஜய் ராஜே சிந்தியா ஆகியோர் கரசேவகர்களை மசூதி மேலிருந்து கீழே இறங்கும்படி சுரத்தற்ற வேண்டுகோள்கள் விடுத்தனர் என்று சொல்கிறது. நல்லெண்ணத்துடன் இதைச் செய்தார்களா அல்லது ஊடகங்களின் கண் துடைப்புக்காகச் செய்தார்களா என்று தெரியவில்லை. ஆனால் கரசேவகர்களை கருவறைக்குள் நுழைய வேண்டாமென்றோ கட்டிடத்தை இடிக்க வேண்டாமென்றோ யாரும் கேட்டுக் கொள்ளவில்லை. இவ்வாறு அவர்கள் கேட்டுக் கொள்ளாதது அவர்கள் சர்ச்சைக்குரிய கட்டடத்தை இடித்து விடவேண்டுமென்பதே அவர்கள் உண்மை அவா என்பதைக் காட்டுவதாக அந்த அறிக்கை சொல்கிறது. ராம் கதா குஞ்சில் இருந்த இவ்வியக்கத்தின் தலைவர்கள் நினைத்திருந்தால் எளிதாக மசூதி இடிப்பைத் தடை செய்திருக்க முடியுமென்றும் லிபரான் அறிக்கை கூறுகிறது.[8]

இந்நிகழ்வின் புகைப்படங்களும் காணொளிகளும் மிகவும் கோபம் கொண்ட மக்கள் கூட்டம் நிகழ்விடத்தைத் தாக்கி அழித்ததைக் காட்டுகின்றன. மதிய வேளையில், இளைஞர் சிலர் மசூதியின் மீது ஏறி நின்று கொடிகளைப் பொருத்தியும், தடிகளால் மசூதியை அடித்தும் இருந்தனர். அவர்கள் பாபர் மசூதி இடிக்கப்பட்டதாகக் கீழிருந்தவர்களுக்குச் சைகைகளைக் காட்டினர். கையில் கிடைத்தவற்றை வைத்தே மக்கள்கூட்டம் அவ்வமைப்பினைச் சேதப்படுத்தியது.

முன்பே திட்டமிடப்பட்ட இடிப்பு[தொகு]

2005ஆம் ஆண்டு புலனாய்வுக் கழகத்தின் (Intelligence Bureau) முன்னாள் இணை இயக்குனர் மலோய் கிருஷ்ண தர் வெளியிட்ட ஒரு நூலில் பாபர் மசூதி இடிப்பு பாஜக, ஆர்.எஸ்.எஸ், விஷ்வ இந்து பரிட்சத் ஆகியோரால் 10 மாதங்களுக்கு முன்பாகவே திட்டமிடப்பட்டதாகக் கூறுகிறார். இந்த விவகாரத்தை அன்றையப் பிரதமர் பி. வி. நரசிம்ம ராவ் கையாண்ட விதத்தையும் கேள்விக்குள்ளாக்குகிறார். கிருஷ்ண தர் பாஜக/சங்க் பரிவார் அமைப்புகளை உள்ளடக்கிய ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்ய தான் பணிக்கப்பட்டதாகக் கூறுகிறார். அச்சந்திப்பு அவர்கள் [சங் பரிவார் அமைப்புகள்] அடுத்த சில மாதங்களில் பாபர் மசூதி மீதான தாக்குதலை நடத்த திட்டமிட்டதை ஐயத்திற்கிடமின்றி உறுதிசெய்வதாகக் கூறுகிறார். இந்தச் சந்திப்பில் பதிவு செய்யப்பட்ட ஒலிக் கோப்புகள் கிருஷ்ண தர்ரின் உயரதிகாரியிடம் அளிக்கப்பட்டு பிரதமருடனும் (நரசிம்ம ராவ்) உள்துறை அமைச்சருடனும் (எஸ். பி. சவான்) பகிரப்பட்டன. "இந்துத்துவா அலையை உச்சத்திற்குக் கொண்டு சென்று அரசியல் ஆதாயம் அடைவதற்கு” மசூதி இடிப்பு ஒரு அருமையான வாய்ப்பு என ஒரு புரிந்துணர்வு நிலவியது எனக் கிருஷ்ண தர் கருதுகிறார்.[9]

பின்விளைவு[தொகு]

மதக் கலவரங்களும், தீவிரவாதமும்[தொகு]

மசூதியின் இடிப்பு நாடு முழுவதும் இஸ்லாமியர்களிடையே சீற்றத்தை ஏற்படுத்தியது. மேலும், பல மாதங்களாக இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களும் ஒருவரையொருவர் தாக்குவதும் வீடுகளுக்குத் தீ வைப்பதும் கடைகளையும் வழிபாட்டுத் தலங்களையும் சேதப்படுத்துவதுமாக இருந்துவந்தது. இக்கலவரம் மும்பை, சூரத், அகமதாபாத், கான்பூர், டெல்லி போன்ற இன்னும் பல நகரங்களுக்கும் பரவி கிட்டத்தட்ட 1,500 பேரின் உயிரிழப்புக்கு வழிவகுத்தது.[10][11] டிசம்பர் 1992இலும் சனவரி 1993இலும் ஏற்பட்ட மும்பைக் கலவரங்களில் மட்டும் 900 மக்கள் உயிரிழந்தனர். மேலும் 9,000 கோடி ($ 3.6 பில்லியன்) மதிப்பிலான பொருட்சேதமும் ஏற்பட்டது.[12][13] மசூதி இடிப்பும் அதைத் தொடர்ந்து நிகழ்ந்த கலவரங்களுமே 1993ஆம் ஆண்டு மும்பை குண்டு வெடிப்புகளுக்கும் தொடர்ந்து பல ஆண்டுகளாக நிகழ்ந்துவந்த கலவரங்களுக்கும் முதன்மையான காரணங்களாக இருந்தன.[14] இந்தியன் முஜாகுதீன் போன்ற இயக்கங்கள் தங்கள் தீவிரவாதத் தாக்குதல்களுக்கான காரணமாக பாபர் மசூதி இடிப்பைக் குறிப்பிட்டன.[15][16]

விசாரணை[தொகு]

டிசம்பர் 16, 1992 அன்று நடுவண் அமைச்சரவை ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி எம். எஸ். லிபெரான் தலைமையிலான லிபரான் குழுவை மசூதி இடிப்பைக் குறித்து விசாரணை செய்ய அமைத்தது. 16 ஆண்டுகளுக்கும் மேலாக மொத்தம் 399 அமர்வுகளுக்குப் பின்பு இக்குழு பிரதமர் மன்மோகன் சிங்கிடம் 1,029 பக்கங்கள் கொண்ட அறிக்கையை சூன் 30, 2009 அன்று அளித்தது.[17] அவ்வறிக்கையின்படி, டிசம்பர் 6, 1992 அன்று நடைபெற்ற அயோத்தி நிகழ்வுகள் "தன்னிச்சையானவையோ திட்டமிடப்படாதவையோ" அல்ல.[18] அதில் வாஜ்பாய், அத்வானி, சுதர்ஸன், கல்யாண்சிங், முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்ட 68 பேர் மற்றும் இந்துத்துவா அமைப்புகளையும் குற்றவாளிகளாக சுட்டிக் காட்டப்பட்டிருக்கின்றனர்.[19] இவ்வழக்கை விசாரித்து வந்த ரேபரேலி சிறப்பு நீதிமன்றம் எல்.கே.அத்வானி உள்ளிட்ட முக்கியக் குற்றவாளிகளை விடுவித்து உத்தரவிட்டது. இதனை அலகாபாத் உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது. ஆனால் குற்றவாளிகளின் விடுதலைக்கு சட்டரீதியான எந்த முகாந்திரமும் இல்லாத நிலையில் நம்பிக்கையை ஆதாரமாகக் கொண்டு தீர்ப்பளித்ததை உச்சநீதிமன்றம் 2017 ஏப்ரல் 19இல் நிராகரித்தது. தினந்தோறும் விசாரணை நடத்தி 2 வருடத்திற்குள் வழக்கை முடிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிரப்பித்தது.[20]

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் எல். கே. அத்வானி, உமாபாரதி, முரளி மனோகர் ஜோஷி, கல்யாண் சிங் உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மேல் முறையீட்டு மனுவை 9 நவம்பர் 2022 அன்று அலகாபாத் உயர் நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்தது.[21]

பன்னாட்டு வெளிப்பாடுகள்[தொகு]

அண்டை இஸ்லாமிய நாடுகள், மசூதி இடிப்பையும் அதைத் தொடர்ந்த மதக்கலவரங்களையும் அடக்காததற்காக இந்திய அரசைக் கண்டித்தன.

பாகிஸ்தான்

பாகிஸ்தானில், அரசு பாபர் மசூதி இடிப்பை எதிர்க்கும் வகையில் டிசம்பர் 7 அன்று பள்ளிகளையும் அலுவலகங்களையும் மூடியது.[22] பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் இந்தியத் தூதரைப் பார்த்து இஸ்லாமியர்களின் உரிமைகளை இந்தியாவில் பாதுகாக்க ஐநாவையும் இஸ்லாமிய மாநாட்டு அமைப்பையும் வலியுறுத்தப் போவதாகக் கூறினார்.[22] நாடு முழுவதும் கடையடைப்புகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் ஒரே நாளில் 30க்கும் அதிகமான கோவில்கள் தீவைத்தும் சமன்செய் இயந்திரங்களின் (bulldozers) மூலமும் சேதப்படுத்தப்பட்டன. மேலும், லாகூரிலுள்ள ஏர் இந்தியா அலுவலகமும் தாக்கப்பட்டது.[22] இந்தியாவையும், இந்துத்துவத்தையும் அழிக்க பல கும்பல்கள் அறிக்கைகள் விடுத்தன.[22] குவாயித்-ஐ-அசாம் பல்கலைக்கழக மாணவர்கள் அப்போதைய இந்தியப் பிரதமர் பி. வி. நரசிம்மராவின் உருவபொம்மையை இந்துக்களுக்கு எதிரான புனிதப் போர் என்று கூறி எரித்தனர்.[22] மசூதியிடிப்பைத் தொடர்ந்து பல கலவரங்களும் வன்முறைகளும் நடந்த காரணத்தினால் நெடுநாள் நுழைவிசைவு (long visa) பெற்று பல இந்தியர்கள், பாகிஸ்தானிலிருந்து இந்தியா திரும்பினர்.[23]

வங்க தேசம்

டிசம்பர் 1992இல் இஸ்லாமிய கும்பல்கள் நாடு முழுக்க இந்துக்கோவில்களையும், கடைகளையும், வீடுகளையும் அடித்துநொறுக்கித் தீ வைத்தனர்.[24] இந்தியா-வங்கதேசம் இடையில் வங்கதேசத் தலைநகர் டாக்காவில் நடந்துகொண்டிருந்த துடுப்பாட்டப் போட்டி கிட்டத்தட்ட 5,000 பேர் பங்கபந்து தேசிய மைதானத்தினுள் நுழைய முயன்றதால் தடைபட்டது.[24] டாக்காவில் இருந்த ஏர் இந்தியா அலுவலகம் தாக்கப்பட்டது.[22] 10 பேர் கொல்லப்பட்டனர்.[24][25][26][27]

ஈரான்

ஈரானின் தலைவர் அயடொல்லா அலி கமெய்னி (Ayatollah Ali Khameini) பாகிஸ்தானிலும், வங்கதேசத்திலும் நடைபெற்ற வன்முறைகளைச் சுட்டிக்காட்டி மசூதி இடிப்பை எதிர்த்தார்.[22] இஸ்லாமியர்களைக் காக்குமாறு இந்தியாவிற்கு கோரிக்கை விடுத்தார்.

பரவலர் ஊடகங்களில்[தொகு]

தஸ்லிமா நசுரீன் தான் எழுதிய லஜ்ஜா எனும் சர்ச்சைக்குரிய புதினத்தில் இடிப்புக்குப் பிந்தைய நாட்களை மையமாக வைத்துக் கதையை அமைத்திருந்தார். இப்புதின வெளியீட்டுக்குப் பின் அவருக்குக் கொலைமிரட்டல்கள் வந்தன. அதன்பின் அவர் வங்காளதேசத்தை விட்டு வெளியேறி நாடுகடந்து வாழ்ந்துவருகிறார். பாம்பே (1995), தைவானமதில் (2005) போன்ற படங்கள் மசூதி இடிப்பினால் உருவான கலவரங்களைப் பின்னணியாகக் கொண்டுள்ளன. இரு படங்களுமே தேசிய ஒருமைப்பாட்டுக்கான நர்கீஸ் தத் விருதினைப் பெற்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Timeline: Ayodhya holy site crisis". BBC News. 17 October 2003. http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/1844930.stm. 
  2. 'Timeline: Ayodhya crisis', BBC News, October 17, 2003.
  3. Bhagat, Rasheeda (28 September 2010). "The Ayodhya Conundrum". The Hindu Business Line. http://www.thehindubusinessline.com/2010/09/28/stories/2010092850310800.htm. பார்த்த நாள்: 29 September 2010. 
  4. "Babri Masjid controversy at a glance". Samay Live. 23 Sep 2010. http://english.samaylive.com/nation/676474102.html. பார்த்த நாள்: 29 September 2010. 
  5. P. Carnegy: A Historical Sketch of Tehsil Fyzabad, Lucknow 1870, cited by Harsh Narain The Ayodhya Temple Mosque Dispute: Focus on Muslim Sources, 1993, New Delhi, Penman Publications. ISBN 81-85504-16-4 p.8-9, and by Peter Van der Veer Religious Nationalism, p.153
  6. Das, Anil (September 28, 2010). "Chronolgy of Ayodhya's Ram Janambhoomi-Babri Masjid title suit issue". International Business Times. http://www.ibtimes.com/articles/66354/20100928/ayodhya-supreme-court-babri-masjid-ram-temple.htm. பார்த்த நாள்: 29 September 2010. 
  7. Sahgal, Priya (December 24, 2009). "1990-L.K. Advani's rath yatra: Chariot of fire". India Today. http://indiatoday.intoday.in/site/Story/76389/A+school+for+parents.html. பார்த்த நாள்: 29 September 2010. [தொடர்பிழந்த இணைப்பு]
  8. "Report: Sequence of events on December 6". NDTV. November 23, 2009. http://www.ndtv.com/news/india/report_sequence_of_events_on_december_6.php. பார்த்த நாள்: 2011-12-05. 
  9. "Babri Masjid demolition was planned 10 months in advance: Book". Press Trust of India. January 30, 2005 இம் மூலத்தில் இருந்து 14 ஜூன் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120614062714/http://news.outlookindia.com/items.aspx?artid=276473. பார்த்த நாள்: 5 December 2011. 
  10. Gort, Jerald D.; Henry Jansen, H. M. Vroom (2002). Religion, conflict and reconciliation: multifaith ideals and realities. Rodopi. பக். 248. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9042014601. http://books.google.com/books?id=6xTC8ub8RN8C&pg=PA248&dq=%22Demolition+of+Babri+Masjid%22+-inpublisher:icon&cd=10#v=onepage&q=%22Demolition%20of%20Babri%20Masjid%22%20-inpublisher%3Aicon&f=false. 
  11. Indo-Asian News Service (September 21, 2010). "Shiv Sainiks will maintain peace post-Ayodhya verdict: Uddhav". Hindustan Times இம் மூலத்தில் இருந்து 1 அக்டோபர் 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101001030410/http://www.hindustantimes.com/Shiv-Sainiks-will-maintain-peace-post-Ayodhya-verdict-Uddhav/Article1-603031.aspx. பார்த்த நாள்: 29 September 2010. 
  12. ERCES Online Quarterly Review பரணிடப்பட்டது 2011-07-10 at the வந்தவழி இயந்திரம் Religious Identity of the Perpetrators and Victims of Communal Violence in Post-Independence India
  13. Steven I. Wilkinson (2006). Votes and Violence: Electoral Competition and Ethnic Riots in India. Cambridge University Press. பக். 14. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0521536057. 
  14. Gilly, Thomas Albert; Yakov Gilinskiy, Vladimir A. Sergevnin (2009). The Ethics of Terrorism: Innovative Approaches from an International Perspective. Charles C Thomas. பக். 27. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:039807867X. http://books.google.com/books?id=w5SlnZilfMMC&pg=PA27&dq=%22Demolition+of+Babri+Masjid%22+-inpublisher:icon&cd=2#v=onepage&q=%22Demolition%20of%20Babri%20Masjid%22%20-inpublisher%3Aicon&f=false. 
  15. Raman, B. (December 9, 2010). "The Latest 'Indian Mujahideen Mail'". Outlook India. பார்க்கப்பட்ட நாள் 2011-12-05.
  16. Sinha, Amitabh (2008-09-14). "Blast a revenge for Babri". Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2011-12-05.
  17. NDTV correspondent (November 23, 2009). "What is the Liberhan Commission?". NDTV India. http://www.ndtv.com/news/india/all_about_the_liberhan_commission.php. பார்த்த நாள்: 29 September 2010. 
  18. "India Babri Masjid demolition neither spontaneous nor unplanned: Liberhan". Hindustan Times. November 24, 2009 இம் மூலத்தில் இருந்து ஜனவரி 3, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130103064212/http://www.hindustantimes.com/Babri-Masjid-demolition-neither-spontaneous-nor-unplanned-Liberhan/Article1-479698.aspx. 
  19. "CBI not to file fresh case from Liberhan Commission report". 22 மே 2011. பார்க்கப்பட்ட நாள் 20 ஏப்ரல் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  20. "நீதி நிலை பெற வேண்டும்". தீக்கதிர். 19 ஏப்ரல் 2017 இம் மூலத்தில் இருந்து 2017-08-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170821233838/https://theekkathir.in/2017/04/19/%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/. பார்த்த நாள்: 20 ஏப்ரல் 2017. 
  21. Babri Masjid case: Allahabad HC dismisses plea against acquittal of LK Advani, Uma Bharti, others
  22. 22.0 22.1 22.2 22.3 22.4 22.5 22.6 "PAKISTANIS ATTACK 30 HINDU TEMPLES". New York Times. 1992-12-07. http://query.nytimes.com/gst/fullpage.html?res=9E0CE2DD113BF93BA35751C1A964958260&sec=&spon=. பார்த்த நாள்: 2011-04-15. 
  23. "Pakistani Hindus in India unwilling to return". Deccan Herald. பார்க்கப்பட்ட நாள் 2011-04-15.
  24. 24.0 24.1 24.2 "Chronology for Hindus in Bangladesh". UNHCR. Archived from the original on 2012-10-14. பார்க்கப்பட்ட நாள் 2011-04-15.
  25. Minorities at Risk Project (2004). "Chronology for Hindus in Bangladesh". United Nations High Commissioner for Refugees. Archived from the original on 2012-10-18. பார்க்கப்பட்ட நாள் 2011-12-05.
  26. "2000 die in Indian temple strife". The Guardian (London). http://archive.guardian.co.uk/Repository/ml.asp?Ref=R1VBLzE5OTIvMTIvMDgjQXIwMDEwMA==&Mode=Gif&Locale=english-skin-custom. 
  27. Minority Rights Group International (2008). "World Directory of Minorities and Indigenous Peoples - Bangladesh : Hindus". United Nations High Commissioner for Refugees. Archived from the original on 2012-10-18. பார்க்கப்பட்ட நாள் 2011-12-05.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாபர்_மசூதி_இடிப்பு&oldid=3640623" இலிருந்து மீள்விக்கப்பட்டது