பாதிரி (மூலிகை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Bignonia suaveolens
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: இருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத: Asterids
வரிசை: Lamiales
குடும்பம்: Bignoniaceae
சிற்றினம்: Bignonieae
பேரினம்: Bignonia
இனம்: B. suaveolens
இருசொற் பெயரீடு
Bignonia suaveolens
Roxb.

பாதிரி (Stereospermum suaveolens அல்லது Bignonia suaveolens) மூலிகை மருத்துவத்தில் பயன்படும் ஒரு மரமாகும். 25 மீட்டர் உயரம் வரை வளரும் இதன் இலை, பூ, விதை, காய், வேர் ஆகிய அனைத்தும் மூலிகை மருத்துவத்தில் பயன்படுகின்றன.

வேறு பெயர்கள்[தொகு]

அம்பு, அம்புவாகினி, பாடலம், புன்காலி எனவும் அழைப்பர்.

மருத்துவக் குணங்கள்[தொகு]

  • வேர் - சிறுநீர் இலகுவாக வெளியேறப் பயன்படும், உடலுக்குக் குளிர்ச்சி தந்து பலமூட்டும். பாதிரி வேர் பெரும்பஞ்ச மூலங்களுள் ஒன்று.
  • காய் - அரைத்துத் தலையில் பற்றுப் போட்டால் ஒற்றைத் தலைவலி நிற்கும்
  • பூ - நசுக்கித் தேனுடன் கலந்து உண்டால் தொடர்ச்சியான விக்கல் நிற்கும், நீரிற் காய்ச்சிப் பருகினால் ஆண்மைக் குறைவு நீங்கும்.

பாதிரி மலர்[தொகு]

பாதிரி மலரைச் சங்ககாலக் குறிஞ்சிப்பாட்டு குறிப்பிடுகிறது (சங்ககால மலர்கள்)
கடலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பாதிரிப்புலியூர்க் கோயிலிலுள்ள இறைவன் பாடலீசுவரர். கோயிலிலுள்ள தலமரம் பாதிரி. இவற்றை எண்ணும்போது பாதிரி மரத்துக்குப் பாடலம் என்னும் பெயரும் உண்டு எனத் தெரிகிறது.

பாதிரி மலர் பற்றிச் சங்கநூல் தரும் செய்திகள்[தொகு]

பண்ணன் வாழ்ந்த சிறுகுடியில் பாதிரி மரங்கள் மிகுதி [1]
ஆற்றுத் துறையில் வேனில் காலத்தில் பாதிரி மலரும் [2]
பாதிரி மரத்தில் அதிரல் கொடி ஏறிப் படரும் [3]
பாதிரி மரத்தில் இலைகள் உதிர்ந்து பூக்கள் பூத்துக் குலுங்கும். இப்படிப் பூத்துக் குலுங்கும் ஓவியத்தை யாழ் என்னும் இசைக்கருவியின் வயிற்றுப்பகுதியில் வரைந்திருப்பார்கள். [4]
பாதிரி பருத்த அடிமரம் கொண்டது. அதன் பூ குருமயிர் போல் மலர்ந்திருக்கும். அதிரல், பாதிரி, நறுமணம் மிக்க மாரோடம் ஆகிய மலர்களைச் சேர்த்துக் கட்டி மகளிர் தலையில் அணிந்துகொள்வர் [5]
ஓவியர்களின் செந்நிறம் தோய்த்த தூரிகை போலப் பாதிரியின் தூய மலர் இருக்கும். [6]
பாதிரி மலர் பழுக்கக் காய்ச்சிய தகடு போல் எரிநிறம் கொண்டிருக்கும். [7]
பாதிரிச் சினை மொட்டுகளும் அழகாக இருக்கும் [8]
வளையாத பஞ்சிழை போல் துய் இருக்கும் தலைகளைக் கொண்டிருக்கும். [9]
காம்பு சிறிதாக இருக்கும் [10]
காம்பு வளைந்திருக்கும் [11]
அடிப்பூ கருத்திருக்கும் [12]
மலர்ந்த சோறு போல் இருக்கும் [13]

மேற்கோள் குறிப்பு[தொகு]

  1. புறம் 70
  2. ஐங்குறுநூறு 361
  3. அகநானூறு 99
  4. பெரும்பாணாற்றுப்படை 4
  5. பராஅரைப் பாதிரிக் குறுமயிர் நாண்மலர் – நற்றிணை 337
  6. நற்றிணை 118
  7. மாக்கொடி அதிரல் பூவொடு பாதிரித் தூத்தகட்டு எரிமலர் வேய்ந்த கூந்தல் – நற்றிணை 52
  8. அஞ்சினைப் பாதிரி – ஐங்குறுநூறு 346
  9. அத்தப் பாதிரித் துய்த்தலைப் புது வீ – அகநானூறு 191
  10. புன்கால் பாதிரி அரிநிறத் திரள் வீ - அகநானூறு 237
  11. வேனில் பாதிரிக் கூனி மாமலர் – அகநானூறு 257
  12. கானப் பாதிரிக் கருந்தகட்டு ஒள் வீ – அகநானூறு 261
  13. பாதிரி முகை அவிழ்வது போல வடித்த அரிசிச்சோறு இருக்குமாம் - புறம் 399

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=பாதிரி_(மூலிகை)&oldid=2596415" இலிருந்து மீள்விக்கப்பட்டது