பயண இலக்கியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பயணம் தொடர்பான கட்டுரை, கதை, கவிதை, படம், திரைப்படம் ஆகியவற்றை பயண இலக்கியம் எனலாம். மனிதர்கள் நாடோடிகளாக ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு இடம்பெயர்ந்தனர். அப்பொழுது தாம் கண்டவைகளை, கேட்டவைகளை, பட்டறிவை ஓவியமாக, பாடலாக படைத்தார்கள். இம்முயற்சிகள் படிப்படியாக செம்மைபெற்று பயண இலக்கியமாக வடிவம் பெற்றன. ஆனால், இவை அனைத்தும் எந்த கால கட்டத்தில் இலக்கியமாக வளர்ந்தது என்பது அறுதியிட்டுக் கூற முடியாத செய்தியாகும்.

தமிழில் பயண இலக்கியம்[தொகு]

பயண இலக்கியம் என்ற துறை தமிழுக்கு புதியது அன்று. பயண இலக்கியம் என்ற பொருளில், ஆனால் வேறு பெயர்களில், தமிழ் மொழியில் சில நூல்கள் உள்ளன. ஆற்றுப்படை, வழிநடைச் சிந்து ஆகியவற்றை இவ்வகைப்பாட்டில் அடக்கலாம். பயணம், சுற்றுலா, செலவு, சேத்ராடனம், பிரயாணம் என்பன பயணம் என்னும் பொருளை உள்ளடக்கிய சொற்களே ஆகும். தமிழ் மொழி அகராதி, செலவு என்ற சொல்லுக்கு உத்தரவு, செலவிடுதல், பயணம், பெருங்காப்பிய உறுப்புகளுள் ஒன்று, போக்கு, போதல், முடிவு, வழி என்று பொருள் தருகிறது.

பயண இலக்கியத்தின் நோக்கம்[தொகு]

நிலப்படங்களும் நிலப்பட வரைவியலும் இல்லாத அக்காலத்தில் பயணிகள் பாதை கண்டறிவதும் அதன் வழி செல்வதும் அவர்களுக்கு பெரும் இடையூறு தரும் செயல்களாகவே அமைந்தன. எனினும் பல்வேறு இடையூறுகளுக்கிடையே அவர்கள் சென்று வந்து, அந்த அறிவை தமக்குப் பின்பு வருவோர் பயன்படுமாறு பயண இலக்கியம் படைத்தனர்.

பயண இலக்கியத்தின் பொற்காலம்[தொகு]

19, 20 நூற்றாண்டுகளை பயண இலக்கியத்தின் பொற்காலம் என்று கூறலாம். கி.பி. 1988 முதல் 2008 வரையிலான காலப்பகுதியில் தமிழில் ஏறத்தாழ 600 புத்தகங்கள் வெளி வந்துள்ளன. ஜான் மர்டாக் என்பவர் தமிழில் வெளியான நூல்களை எல்லாம் பல்வேறு வகைப்படுத்திப் பட்டியலிட்டார்.[1] நூல்களை வகைப்படுத்தி பட்டியலிடும் முறைக்கு இவரே தந்தை எனலாம். பயண நூல் பட்டியலை வகைப்படுத்தி தொகுப்பதன் மூலம் பயண இலக்கியம் பற்றிய முழுமையான சித்திரிப்பை நம்மால் பெற இயலும்.

19 ஆம் நூற்றாண்டு தமிழ் இலக்கிய உலகில் மட்டுமின்றி இந்திய இலக்கிய உலகிலும் புதிய திசைகளைத் தேடிய நேரம். இந்திய விடுதலை இயக்கம் தமிழ் நாட்டில் காந்திய வழியில் போராடிய நேரம். ஜேம்ஸ் ஆகுஸ்டுஸ் ஹிக்கி வங்காளத்தில் புதிய அச்சு இயந்திரத்தை இந்தியருக்கு அறிமுகப்படுத்தினார். நவீன அச்சு இயந்திரத்தின் வரவால் புத்தகங்கள் கிடைப்பது எளிதானது. புத்தகங்களின் வரவால் மேலை, கீழை நாட்டு இலக்கியங்கள் பற்றிய அறிமுகம் கிடைத்தது. படித்த நடுதர வர்கம் என்று சமூகத்தில் ஒரு புதிய வகை மக்கள் தோன்றினார். கலை, இலக்கியம், கலாச்சாரம், பண்பாடு என்று ஒவ்வொரு துறையிலும் புதிய திசையை கண்டறிவது அவசியம் ஆனது. புதிய இலக்கிய வகை அறிமுகம் அனைத்து மொழிகளுக்கும் கிடைத்தது.

சேலம் பகடலு நரசிம்ஹலு நாயுடு[தொகு]

1888 ஆம் ஆண்டு சேலம் பகடலு நரசிம்ஹலு நாயுடு அவர்கள் எழுதிய ஆரிய திவ்யதேச யாத்திரையின் சரிதம் என்ற நூலே புதிய தமிழின் முதல் பயண இலக்கியம் எனப்படுகிறது. 1886 ஆம் ஆண்டில் கல்கட்டா நகரில் சர்வ ஜன மாநாடு நடைபெற்றது. அதில் அன்றைய கோயம்புத்தூர் மாவட்டத்தின் சார்பாக சேலம் பகடலு நரசிம்ஹலு நாயுடு கலந்து கொண்டார். அப்பயண அனுபவத்தை ஆரிய திவ்ய தேச யாத்திரையின் சரிதம் என்னும் பெயரில் 528 பக்கங்கள் கொண்ட நூலாக வெளியிட்டார். இந்நூலின் இரண்டாம் பதிப்பு 1913ஆம் ஆண்டு வெளிவந்தது. இவர் தக்சின இந்திய சரித்திரம் என்னும் தலைப்பில் இன்னுமொரு பயண இலக்கிய நூலையும் வெளியிட்டார்.

புகழ்பெற்ற பயண இலக்கியங்கள்[தொகு]

  • உலகம் சுற்றும் தமிழன் - அ. க. செட்டியார்
  • பிரயாண நினைவுகள் - அ. க. செட்டியார்
  • கனடா முதல் கரிபியன் வரை - அ. க. செட்டியார்
  • மகாத்துமாவின் அடிச்சுவட்டில் - அ. க. செட்டியார்
  • எனது பிரயாண நினைவுகள் - சோமலெ
  • பிரிட்டனில்... - நெ. து. சுந்தரவடிவேலு
  • புதிய ஜெர்மனியில் - நெ. து. சுந்தரவடிவேலு
  • சோவியத் நாட்டில் - நெ. து. சுந்தரவடிவேலு
  • சோவியத் மக்களோடு - நெ. து. சுந்தரவடிவேலு
  • உலகத் தமிழ் - நெ. து. சுந்தரவடிவேலு
  • இதயம் பேசுகிறது (தொகுதிகள்) - மணியன்
  • அலைகடலுக்கு அப்பால் - சாரதா நம்பியாரூரான்
  • நவகாளி யாத்திரை - சாவி
  • வடுகபட்டி முதல் வால்கா வரை - வைரமுத்து
  • கொய்ரோவில் - வா. மு. சேதுராமன்
  • நூலக நாட்டில் நூற்றியிருபது நாட்கள் - அ. திருமலைமுத்துசுவாமி
  • வேங்கடம் முதல் குமரி வரை - 4 பாகங்கள் - தொ. மு. பாஸ்கர தொண்டைமான்
  • வேங்கடத்திற்கு அப்பால்.. - தொ. மு. பாஸ்கர தொண்டைமான்
  • தேசாந்திரி - எஸ்.ராமகிருஷ்ணன்

சான்றடைவு[தொகு]

  1. The Contribution of European Scholars to Tamil; p.139
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயண_இலக்கியம்&oldid=3767738" இலிருந்து மீள்விக்கப்பட்டது