பப்பராத்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராப்பி வில்லியம்ஸ் பார்ப்பரசிகரின் நிழற்படத்திற்கு தனது விரல்களை 'V' வடிவில் காட்டுகிறார்.
வெண்கலத்திலான பார்ப்பரசிகரின் சிலை பிராட்டிஸ்லாவா, ஸ்லோவாக்கியா.
பார்ப்பரசிகர்கள் பாணியிலான புகைப்படம்

பார்ப்பரசிகர், பப்பராத்சி (pɑːpəˈrɑːtsi) (ஒருமை:() பப்பராத்சோ (papaˈrattso) அல்லது (பெ) பப்பராத்சா) என்பது பிரபலங்கள், அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய நபர்கள் சம்பந்த பட்ட பொதுவிடங்களில் நிகழும் நேரடி நிகழ்வுகளை பதிவு செய்யும் CANDID எனப்படும் செய்தி புகைப்பட வல்லுனர்களை குறிக்கும் ஒரு இத்தாலிய சொல்வழக்கு ஆகும். பப்பராத்சிகள் பெரும்பாலும் எந்த ஒரு ஊடகங்களையோ பத்திரிக்கைகளையோ சார்ந்திராமல் சுதந்திரமாக செயல்பட்டு தங்களுக்கு தேவையான புகைப்படங்களையோ செய்திகளையோ சேகரிப்பவர்களாக இருக்கின்றனர். பப்பராத்சிகள் பிரபலங்களுக்கு நச்சரிப்பு தரும் நபர்களாகவே பெரும்பாலும் சித்தரிக்கபட்டுள்ளனர்.

பெயர்க்காரணம்[தொகு]

பப்பராத்சி என்கிற சொல் முதன் முதலாக 1960 ஆம் ஆண்டு பிடெரிகோ பெல்லினி என்பவர் இயக்கிய லா டால்ஸ் வீட்டா என்கிற திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட ஒரு சொல் ஆகும். அந்த திரைப்படத்தில் உருவகிக்கப்பட்ட ஒரு செய்தி புகைப்பட வல்லுநர் ஒருவரின் கதாபாத்திரத்தின் பெயர் பாப்பரசோ (பாத்திரம் ஏற்று நடித்தவர் சண்டேஸ்சோ) ஆகும். இவர் எழுதிய புத்தகத்திலும் இந்த வார்த்தையை உபயோகித்துள்ளார். ராபர்ட் ஹென்ரிக்சன் பெல்லினி'யை பற்றி குறிப்பிடும் பொழுது அவர் இந்த வார்த்தையை காதருகில் கொசு போன்றதொரு பூச்சி ரீங்காரமிடும் எரிச்சலூட்டும் ஓசையினை போன்ற ஒன்றை குடிப்பிடக்கூடிய இத்தாலிய வட்டாரச் சொல்வழக்கிலிருந்து எடுத்து கையாண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இதை பெல்லினியும் டைம் இதழுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். சின்னஞ்சிறிய கொசுவகையை குறிப்பிடக்கூடிய பாப்பட்டாசி என்கிற இத்தாலிய சொல்லிற்கும் இந்த தலைப்பிற்கும் ஒற்றுமை நிறைய உண்டு.

பப்பராத்சி என்கிற சொல்லின் ஆங்கில பயன்பாடு குறித்து ஜார்ஜ் கைசிங் என்பவற்றின் அயோனியன் கடல் பயணம் (1901) என்கிற புத்தகத்தின் இத்தாலிய மொழிபெயர்ப்பில் கவிதாயினி மார்கரீட்டா கைடசி அந்த புத்தகத்தில் வரும் உணவகத்தின் உரிமையாளரை கொரியோலேனோ பாப்பரசோ என்றழைக்கிறார். பின்னர் 1960களில் இத்தாலிய மொழியின் பன்மை வடிவான பப்பராத்சி'யாக உருவெடுத்து குறிப்பிட்ட நபர்களை குறிக்கும் சொல்லாக ஆங்கிலத்தில் புகுந்தது.

பார்ப்பரசிகர்களின் சட்ட உரிமைகள்[தொகு]

பார்ப்பரசிகர்கள்

நச்சரிப்புகளாலும், பொது இடங்களில் வெளி வரும் பிரபலங்களுக்கு தொல்லைகளை உருவாக்குவதாலும் பப்பராத்சிகள் பெற்ற அவப்பெயரின் காரணத்தினால் அவர்களுக்கு சில நாடுகளில் (குறிப்பாக ஐரோப்பிய நாடுகள்) கட்டுப்பாடுகளும் தடைகளும் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் மேடை நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் பப்பராத்சிகளுக்கு புகைப்படம் எடுப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நார்வே, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளில் பப்பராத்சிகள் தங்களது புகைப்படத்தை பொதுவில் வெளியிடுவதற்கு அந்த புகைப்படத்தில் உள்ள சம்பந்தபட்ட நபரிடம் அனுமதியை பெறவேண்டும்.

பப்பராத்சிகளின் தொல்லையின் உச்சமாக பாரீசில் ஆகஸ்ட் 31 ஆம் நாள் 1997 ஆம் ஆண்டு பார்பரசிகளின் புகைப்படத்திற்கு அகப்படகூடாதேன்று தப்பிப்பதற்காக நடந்த அதிவேக மகிழ்வுந்து துரத்தல் மற்றும் அதை தொடர்ந்து நடந்த விபத்தில் இளவரசி டயானா மற்றும் அவரது காதலர் டோடி ஆகிய இருவரும் இறந்ததற்கு பப்பராத்சிகளுக்கு முக்கிய பங்கு உண்டு என்பதை ஒரு மரண விசாரணை நீதிபதி தனது விசாரணையில் விளக்கினார். இதனை தொடர்ந்து பல பப்பராத்சிகள் விசாரணைக்கு அழைத்து விசாரிக்கப்பட்டனர் ஆனால் போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தினால் எவரும் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்படவில்லை. பின்னர் விசாரணை அதிகாரிகள் அந்த விபத்திற்கு இளவரசி வாகனத்தின் வேகமும் வாகனத்தை ஓட்டிய விதமும் அந்த வாகனத்தை துரத்திய மற்றொரு மர்ம வாகனம் ஓட்டப்பட்ட விதமும் தான் காரணம் என்று தெரிவித்தனர்.

1972 ஆம் ஆண்டு ரான் காலெல்லா என்கிற அமெரிக்க பாப்பராத்சி ஜாக்குலின் கென்னடி'யை சந்தித்த பொழுது எரிச்சலடைந்த ஜாக்குலின் அவரது பாதுகாவலாளியை ஏவி ரான்'னின் புகைப்படக்கருவியையும் அவரது படச்சுருள்களையும் அழிக்கும்படிக்கு கட்டளையிட்டார். பின்னர் இந்த விவகாரம் நீதிமன்றம் வரைக்கும் சென்று ரான் ஜாக்குலினிடம் இருந்து 150 அடி தூரத்தில் இருந்து புகைப்படம் எடுக்க அனுமதிக்கப்பட்டது பின்னாளில் அது 25 அடியாக குறைத்துகொள்ளபட்டது. பின்னர் இந்த நிகழ்வை அடிப்படையாக வைத்து லியோன் கஸ்ட் என்கிற இயக்குனர் 2010 ஆம் ஆண்டு ரான்'ஐ வைத்து விவரணப்படம் ஒன்றை இயக்கினார்.

இது போல பப்பராத்சிகள் பல தருணங்களில் பல நிகழ்வுகளில் சம்பந்தப்பட்டுள்ளனர்.

இவற்றிலெல்லாம் உச்சமாக 2006 ஆம் ஆண்டு டானியல் சிகாரெல்லி என்கிற பிரேசில் நாட்டு தொலைக்காட்சி பிரபலம் தனது காதலனுடன் ஸ்பெயின் நாட்டு கடற்கரையில் நெருக்கமாக அந்தரங்க உறவில் இருந்ததை ஒரு பப்பராத்சி ரகசியமாக படமெடுத்து இணையதளத்தில் டானியலின் அனுமதியின்றி வெளியிட்டுவிட்டார். பின்னர் நீதிமன்றத்தில் போராடிய பின்பு அவரது நலன் கருதி அந்த தகவல்கள் பிரேசில் நாட்டில் தடை செய்யப்பட்டன. இது பிரேசில் நாட்டவர் மீது நடத்தப்பட்ட பெரிய அளவிலான பார்ப்பரசியின் தாக்கம் ஆகும். இதன் காரணமாக பிரேசில் நாட்டின் எம்டிவி பணியாளர்கள் சிகாரெல்லி பணியிலிருந்து நீக்கப்படும் வரை வேலைநிறுத்தம் செய்யவும் இது காரணமாக அமைந்தது. அந்த படத்தொகுப்பு மீதான இணைய தடை சிலநாட்களுக்கு மட்டுமே நீடித்தது. மேலும் சிகாரெல்லியும் வேலையிலிருந்து நீக்கப்படவில்லை. ஆனால் பொது இடத்தில் அந்தரங்க உறவு வைத்துகொண்டதற்கான வழக்கு மட்டும் அவர்மீது தொடுக்கப்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பப்பராத்சி&oldid=3761886" இலிருந்து மீள்விக்கப்பட்டது