ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பன்னாட்டு ஒரு நாள் துடுப்பாட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அவுஸ்திரேலியா எதிர் இந்தியா ஒரு நாள் பன்னாட்டு துடுப்பாட்ட போட்டி

ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் என்பது இரு நாட்டு துடுப்பாட்ட அணிகளுக்கிடையே வரையிட்ட நிறைவுகள் கொண்டதாக விளையாடப்படும் துடுப்பாட்ட வகையாகும். இது வரையிட்ட நிறைவுப் போட்டி எனவும் அழைக்கப்படுவதுண்டு. காலநிலை கோளாறு காரணமாக போட்டிகள் தடைப்பட்டு போட்டி ஒரே நாளில் முடிவுறாமல் போகும் நிலையைத் தவிர்ப்பதற்காக ஒருநாள் பன்னாட்டுப் போட்டிகளின் போது மேலதிக நாள் ஒதுக்கப்படும்.

ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் இருபதாம் நூற்றாண்டின் கடைசிப்பகுதியில் வளர்ச்சி பெற்றது. 1971 ஆம் ஆண்டு ஆத்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான தேர்வுத் துடுப்பாட்டத் தொடரின் மூன்றாவது போட்டியின் முதல் மூன்று நாட்கள் மழை காரணமாகத் தடைப்படவே, போட்டியைக் கைவிட நடுவர்களால் தீர்மானிக்கப்பட்டபோது குழுமியிருந்த பார்வையாளருக்காக 40 நிறைவுகளுடன் ஒருநாள் போட்டியொன்றை விளையாட இரண்டு அணிகளும் தீர்மானித்தன. இதன்படி முதல் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட போட்டி ஜனவரி 5 1971அன்று ஆத்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே மெல்போன் துடுப்பாட்ட மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஆத்திரேலியா 5 இழப்புகளால் வெற்றிபெற்றது. 1970களில் ஆத்திரேலியப் பதிப்பாளர் கேரி பார்கர் என்பவர் உலகத் தொடர் ஒன்றை ஆரம்பித்தார். இதில் வண்ணச் சீருடைகள், வெள்ளைப் பந்து, செயற்கை ஒளி, இலக்கு ஒலிவாங்கி போன்ற இன்றைய ஒருநாள் போட்டிகளில் உள்ள பல்வேறு அம்சங்களை அறிமுகப்படுத்தினார்.

முதல் ஒருநாள் போட்டி[தொகு]

உலகின்முதல் ஒருநாள் போட்டி 1971 ஜனவரி 5 ஆம் திகதி ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையில் நடைபெற்றது. நாற்பது நிறைவுகளைக் கொண்டதாக அமைந்த இப்போட்டியின் நாணயச்சுழற்சியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று களத்தடுப்பாட்டத் தீர்மானித்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 39.4 நிறைவுகளில் 190 ஓட்டங்களைப் பெற்றது. பின்னர் ஆடிய ஆஸ்திரேலியா 34.6 நிறைவுகளில் 191 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றது.

ஒருநாள் பன்னாட்டு போட்டி தகுதி பெற்ற அணிகள்[தொகு]

பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை எந்தெந்த அணிகள் ஒருநாள் பன்னாட்டு போட்டி தகுதி பெற்ற அணிகள் என்பதை தீர்மானிக்கிறது.தேர்வு துடுப்பாட்டத் தகுதிபெற்ற 12 அணிகள் நிரந்தர ஒநாப தகுதியைக் கொண்டுள்ளன.

  1. ஆஸ்திரேலியா
  2. இங்கிலாந்து
  3. நியூசிலாந்து
  4. பாக்கிஸ்தான்
  5.  மேற்கிந்தியத் தீவுகள்
  6. இந்தியா
  7. இலங்கை
  8. தென்னாபிரிக்கா
  9. சிம்பாப்வே
  10. வங்காளதேசம்
  11.  ஆப்கானித்தான்
  12.  அயர்லாந்து

இவற்றுக்கு மேலதிகமாக பன்னாட்டு துடுப்பாட்ட அவை தற்காலிக ஒருநாள் பன்னாட்டு போட்டி தகுதியை வழங்கும். தற்போது பின்வரும் அணிகளுக்கு அது வழங்கப்பட்டுள்ளது.

  1. ஸ்காட்லாந்து
  2.  ஐக்கிய அரபு அமீரகம்
  3.  நேபாளம்
  4.  நெதர்லாந்து
  5.  நமீபியா
  6.  ஓமான்
  7.  பப்புவா நியூ கினி
  8.  ஐக்கிய அமெரிக்கா

உசாத்துணைகள்[தொகு]