பனிக்குடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பனிக்குடம் ஒரு தமிழ் இலக்கிய சிற்றிதழ். காலாண்டிதழான் இதன் ஆசிரியர் குட்டி ரேவதி. இவ்விதழை சென்னையிலிருந்து பனிக்குடம் பதிப்பகம் வெளியிடுகிறது.

“பெண் எழுத்தின் கடந்த கால, நிகழ்கால, எதிர்கால வடிவங்களைப் பதிப்பிக்கும் முயற்சி”யைப் பனிக்குடம் தொடர்வதாகக் கூறுகிறது இந்த இதழின் ஆசிரியர் குறிப்பு. பெண் எழுத்தைத் தனது இயக்கக் களமாகக் கொண்டு வெளியாகும் இவ்விதழில் பெண் வெளி, பெண்ணியம், பண்போவியம், நேர்காணல், உரையாடல், நூல் அறிமுகம், மதிப்புரை, கவிதை, சிறுகதை, இதழியல் பார்வை, புகைப்படம், ஓவியக் கலைஞர்களின் அறிமுகம் என்று பல்வேறு பகுதிகள் இடம்பெற்றிருக்கின்றன. புகைப்படம், ஓவியம் என்ற இரண்டு துறைகளிலும் உள்ள பெண் கலைஞர்களைப் பற்றிய அறிமுகப் பக்கங்கள், அம்பை, மகாஸ்வேதாதேவி ஆகியோரது நேர்காணல்களும் இடம்பெற்றுள்ளன. இவ்விதழின் முன் அட்டைகள் ந்வீன ஓவியங்களைக் கொண்டுள்ளன.

‘இதழியல் பார்வை’ என்னும் பகுதி, பத்தொன்பதாம் நூற்றாண்டில் இதழியல் துறையில் (குறிப்பாகத் தமிழ்ப் பத்திரிக்கைகளில்) பங்களித்த பெண் ஆளுமைகள் குறித்த அரிய தகவல்களைத் தருகிறது. நேர்காணல்கள் இடம்பெறும் ‘பண்பாளுமை’ பகுதியில் பெண் படைப்பாளிகள் மற்றும் ஆளுமைகளின் விரிவான வெளிப்பாட்டைக் காண முடிகிறது. ‘பெண்வெளி’ என்ற பகுதியில் விவாதங்கள், உரையாடல்கள் தரப்பட்டிருக்கின்றன. அம்பை, கமலா தாஸ், வ. கீதா, கிருஷாங்கினி, பூரணி, பாமா, சிவகாமி, பிரசன்னா ராமசாமி, கனிமொழி, வெண்ணிலா, சல்மா, உமா மகேஸ்வரி, சுகிர்தராணி, தமிழச்சி, தமிழ்ச் செல்வி, புதிய மாதவி, காயத்திரி காமஸ், சி. பி. கிருஷ்ணப்பிரியா, குட்டி ரேவதி போன்ற குறிப்பிடத்தக்க படைப்பாளிகள் பங்களித்திருக்கிறார்கள்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பனிக்குடம்&oldid=3370538" இலிருந்து மீள்விக்கப்பட்டது