பண்ணுறவாண்மை
பண்ணுறவாண்மை அல்லது அரசனயம் (Diplomacy) என்பது குழுக்களின் அல்லது நாடுகளின் பேராளர்களுடன் பேரப் பேச்சுக்களை நடத்தும் நடைமுறையும் கலையும் ஆகும். நாடுகளிடையே விவகாரங்களைப் பகைமை இன்றிக் கையாளும் உத்தியே இது என்றும் பொருள் கொள்ளப்படுவது உண்டு. பொதுவாக இது, அமைதி, வணிகம், போர், பொருளாதாரம், பண்பாடு சூழல் மற்றும் மனித உரிமை விடயங்கள் ஆகியவை தொடர்பான விடயங்களில் நாடுகளிடையேயான உறவுகளை ஏற்படுத்துவது தொடர்பாகவே இச் சொல் பயன்படுகிறது. இவ் விடயங்களை தொழில் அடிப்படையிலான பண்ணுறவாளர்களே கையாள்வர். நாடுகளிடையேயான ஒப்பந்தங்களை நாடுகளின் அரசியலாளர்கள் ஏற்றுக் கொண்டு கைச்சாத்திடுமுன், பண்ணுறவாளர்களே இவற்றுக்கான பேச்சுக்களை நடத்துவர். முறைசாராவிதத்தில்,சமூகக் கருத்தின் அடிப்படையில் கூறுவதாயின் பொதுவான பிரச்சனைகளிற்கு இருதரப்புகளும் ஏற்றுக்கொள்ளும் தீர்வுகளைக் காணுதல் அல்லது தந்திரோபாயமான சாதகங்களைப் பெற்றுக்கொள்வதற்கான உத்திகளை மோதலற்ற விதத்தில் பிரயோகிப்பதே அரசனயம் ஆகும்.
வரலாறு [தொகு]
பண்ணுறவாண்மையைக் கையாளுவது ஒரு நாட்டுக்கு இருக்கவேண்டிய முக்கிய தகுதிகளுள் ஒன்று. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உலகின் முதல் நகர அரசுகள் உருவான போதே பண்ணுறவாண்மை நடைமுறைகள் தொடங்கி விட்டன. வரலாற்றுக் காலத்தின் பெரும் பகுதியில், குறிப்பிட்ட சில பேச்சுக்களுக்காக பண்ணுறவாளர் வேற்று நாடுகளுக்கு அனுப்பப்படுவர். பணி முடிந்ததும் உடனடியாகவே அவர்கள் திரும்பிவிடுவர். இன்னொரு நாட்டுடன் பேச்சுக்களை நடத்துவதற்காக வலுவைக் கொடுப்பதற்காக, அனுப்பப்படும் பண்ணுறவாளர்கள் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகவோ அவர்களது நெருங்கிய உறவினராகவோ அல்லது மிகவும் உயர்ந்த பதவி வகிப்பவர்களாகவோ இருப்பர்.
| விக்கி ஊடக நடுவத்தில் Diplomacy தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |