பண்டைய எகிப்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பண்டை எகிப்து இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பண்டை எகிப்திய நாகரிகத்தின் முக்கிய குறியீடாகத் திகழ்வது பிரமிட்டுக்களாகும்.

பண்டைய எகிப்து வடக்கு ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியில், நைல் ஆற்றின் கீழ் பகுதிகளில் செறிந்து அமைந்திருந்த ஒரு பழங்கால நாகரிகம் ஆகும். இது இன்றைய எகிப்து நாட்டுள் அடங்கியது. இந் நாகரிகம் கீழ் எகிப்தும், மேல் எகிப்தும் முதல் பாரோவின் கீழ் ஒன்றிணைந்த போது கிமு 3150 அளவில் தொடங்கியது எனலாம். இது மூன்று ஆயிரவாண்டுகளாக வளர்ச்சியடைந்தது. இதன் வரலாறு பல உறுதியான அரசுகளைக் கொண்ட காலப்பகுதிகளையும் இடையிடையே நிலையற்ற இடைக் காலங்களையும் கொண்டு அமைந்திருந்தது. புதிய அரசு எனப்பட்ட இறுதி அரசின் முடிவுடன் இந் நாகரிகம் மெதுவான ஆனால் உறுதியான இறங்குமுக நிலையை அடைந்தது. இக் காலத்தில் இப் பகுதி பல வெளிச் சக்திகளால் ஆக்கிரமிக்கப்பட்டது. கிமு 31 ஆம் ஆண்டில், தொடக்க ரோமப் பேரரசு எகிப்தைக் கைப்பற்றி அதனைப் பேரரசின் ஒரு மாகாணம் ஆக்கியபோது பாரோக்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது.

பொருளடக்கம்

அமைவிடம்[தொகு]

எகிப்திய நாகரிகமானது ஆபிரிக்கக் கண்டத்தின் இன்றைய எகிப்து பிரதேசத்தில் நைல் நதியை ஒட்டி வளர்ச்சியடைந்த நாகரிகமாகும்.உலகிலேயே மிக நீளமான நைல்நதி ஆப்பிரிக்காவின் விக்டோரியா ஏரியில் ஆரம்பித்து எகிப்து ஊடாக பாய்ந்து மத்திய தரைக்கடலில் கலக்கிறது.

ஆட்சிமுறை[தொகு]

இந்த ஆட்சியதிகாரத்தின் உன்னத இடத்தில் அரசன் காணப்பட்டான்.ஆட்சியதிகாரம் தெய்வத்திடமிருந்து அரசனுக்கு கிடைத்ததாக நம்பப்பட்டது.அரசர்கள் பாரோ என அழைக்கப்பட்டார்கள்.லோவீகத்தலைவனாகவும் ஆன்மீகத்தலைவனாகவும் அரசன் காணபட்டான்.அரசனின் கீழ் அமைச்சர்களும் உத்தியோகர்த்தகர்களும் காணப்பட்டனர்.சமய குருமார்கள் அரசனுக்கு அடுத்தகட்டத்த்தில் இருந்தனர்.பெரும்பாலும் ஆட்சியுரிமை தந்தையிடமிருந்து மகனுக்கு கடத்தப்பட்டது.ஆண் பிள்ளைகள் இல்லாத கட்டத்தில் பெண்களும் ஆட்சிபீடமேறினர்.

அரசும் பொருளாதாரமும்[தொகு]

முக்கிய நகரங்களைக் காட்டும் பண்டை எகிப்தின் நிலப்படம். (c. 3150 BC to 30 BC)

நைல் ஆற்றுப் பள்ளத்தாக்கின் நிலைமைக்கு ஏற்ப மாறிக்கொள்வதன் மூலம் எகிப்திய நாகரிகம் சிறப்புற்று விளங்கியது. கட்டுப்படுத்தப்பட்ட நீர்ப்பாசனம் வளமான இப் பகுதியில் மிகையான விளைவைக் கொடுத்தது. இது சமுதாய, பண்பாட்டு வளர்ச்சிகளைத் தூண்டியது. பயன்பாட்டுக்கான வளங்கள் அதிகமாக இருந்ததால், அரச நிவாகத்தின் சார்பில் இடம்பெற்ற கனிம அகழ்ந்தெடுப்புக்கள், தனியான எழுத்து முறையின் வளர்ச்சி, அமைப்புமுறையிலான ஒன்றிணைந்த கட்டுமானம், வேளாண்மைத் திட்டங்கள், சூழவுள்ள பகுதிகளுடனான வணிகம், எதிரிகளைத் தோற்கடித்து எகிப்தின் மேலாண்மையை நிலைநிறுத்திய படைகள் என்பவை சாத்தியமாயின. இத்தகைய நடவடிக்கைகளைத் தூண்டி ஒழுங்குபடுத்துவதற்காகச் செல்வாக்குள்ள அதிகாரிகள் குழுவும், சமயத் தலைவர்களும், நிர்வாகிகளும், தெய்வீகத் தன்மை கொண்டவராகக் கருதப்பட்ட பாரோக்களின் (மன்னர்) கீழ் இயங்கினர். இவர்கள் விரிவான சமய நம்பிக்கைகளின் துணையுடன் மக்களை ஒழுங்குபடுத்தி மக்கள் ஒத்துழைப்பை உறுதிப்படுத்தினர்.

பண்பாடும் தொழில்நுட்பமும்[தொகு]

பண்டை எகிப்தியர்களின் சாதனைகளுள், கணித முறை, கற்கள் உடைப்பு, நில அளவை, கட்டுமான நுட்பங்கள், கண்ணாடித் தொழில்நுட்பம், மருத்துவ முறை, இலக்கியம், நீர்ப்பாசனம், வேளாண்மைத் தொழில்நுட்பம் என்பவை அடங்கும். வரலாற்றில் மிகமுந்திய அமைதி ஒப்பந்தமும் இங்கேயே மேற்கொள்ளப்பட்டது. பண்டை எகிப்து ஒரு நிலையான பாரம்பரியத்தை விட்டுச் சென்றது. பிற நாட்டவரும் அவர்களுடைய கட்டிடங்களைப் பார்த்துக் கட்டினர். அவர்களுடைய கலைப் பொருட்கள் உலகம் முழுவதும் உலாவந்தன. அவர்களுடைய பாரிய நினைவுச் சின்னங்கள் பல்லாயிரக் கணக்கான சுற்றுலாப் பயணிகளையும், எழுத்தாளர்களையும் பல நூற்றாண்டுகளாகக் கவர்ந்து வருகின்றன.

சமய வழிபாடுகள்[தொகு]

எகிப்திய மக்களின் சமய, வணக்க வழிபாடு மற்றும் நம்பிக்கைகள் பற்றி அறிய உதவும் நூல் மரணித்தவர்களின் புத்தகம் ஆகும். இது பப்பிரஸ் புல்லிலாலான கடதாசியில் எழுதப்பட்டுள்ளது.இவ்வுலகில் மனிதர் செய்யும் நன்மை தீமைகள் அனைத்தும் மறு பிறவியில் செல்வாக்குச்செலுத்தும் என்று இதில் கூறப்பட்டுள்ளது.தெய்வங்கள் பேய்கள் பற்றியும் அவற்றோடு தொடர்பு கொள்ளும் முறைகள்,ஈமச்சடங்கு சம்பிரதாயங்கள் பற்றியும் இதில் கூறப்பட்டுள்ளது.

மரணத்தின் பின் வாழ்வு[தொகு]

மரணத்தின் பின்னரும் மனிதனுக்கு வாழ்க்கையுண்டு என்ற நம்பிக்கை முதன் முதலில் எகிப்திய நகரவாசிகளிடமே காணப்பட்டது.அரச வம்சத்தவர்களுக்காகவும், தனிப்பட்டவர்களுக்காகவும் அமைக்கப்பட்ட கல்லறைகளின் மூலம் மரணத்தின் பின்னரான நம்பிக்கை பற்றி அறிந்து கொள்ளலாம்.இங்கு காணப்படும் தொன்னூருக்கு மேற்பட்ட பிரமிட்டுக்கள் அவர்களின் மரணத்தின் பின் வாழ்க்கையுண்டு என்ற நம்பிக்கைக்கு ஆதாரங்களாகும்.பிரமிட்டுக்குள் வைக்கப்படும் சடலங்கள் மருந்திடப்பட்டு பழுதடையாவண்ணம் வைக்கப்பட்டுள்ளது. பிரமிட்டின் உட்புற சுவர்கள் மறு வாழ்வின் நம்பிக்கை கருதி அலங்கரிக்கப் பட்டுள்ளன.இறந்து போனவர்கள் வாழும் போது விரும்பிய போருட்களை எல்லாம் சடலங்களுடன் வைப்பதால் அவர்களை மகிழ்விக்கச்செய்யலாம் என்ற எதிர்பாப்பும் இருந்தது.இதனால் அவர்கள் பாவித்த பொருட்கள், ஆபரணங்கள், உணவுவகைகள் என்பன சடலங்களுடன் வைக்கப்பட்டது. சூரியன் உதிக்கும் போது உடலிலிருந்து பிரியும் உயிரானது வானத்தில் பயணம் செய்து சூரியன் மறையும் போது மீண்டும் தனது சரீரத்துடன் சேர்ந்து கொள்ளும் என்ற நம்பிக்கை நிலவியது.அனைத்து பிரமிட்டுகளும் நைல் நதியின் மேற்கு நோக்கி அமைக்கப்பட்டதன் காரணம் சூரியன் மறையும் போது ஆத்மாவானது இலகுவாக பிரமிட்டினுள் நுழைந்து தனது தேகத்துடன் சேர்ந்து கொள்ளும் என்பதாலேயாகும்.

கலாசாரம்[தொகு]

கட்டட நிர்மாணமும் கலைகளும் கலாசாரத்தின் முக்கிய அம்சங்களாகும்.எகிப்தின் கலையம்சங்கள் அதிகமாக தேவாலயங்கள்,பிரமிட்கள்,அரசமாளிகைகள் என்பவறின் உள்ளேயே காணப்பட்டன. எகிப்திய கட்டடக்கலையில் அதிக சிறப்பு பெற்றதாக காணப்படுவது எகிப்திய பிரமிட்களாகும்.கீசா எனும் பிரமிட் உலக புகழ் பெற்றதாகும்.

எழுத்துக்கலை[தொகு]

இக்கால எழுத்துக்கள் மூவாயிரம் ஆண்டு பழமை வாய்ந்தவையாகும்.ஆரம்பகாலத்தில் எகிப்தில் சுவர்கள் அல்லது பலகைகளே எழுதப் பயன்படுத்தப்பட்டன.முக்கியமான ஆவணங்கள் தங்கம் அல்லது வெள்ளி முலாம் பூசப்பட்டு பாதுகாக்கப்பட்டது.இவ்வெழுத்துக்கள் வலமிருந்து இடமாகவும் சில சந்தர்ப்பங்களில் மேலிருந்து கீழாகவும் எழுதப்பட்டுள்ளது.இடைவெளிகளோ,சொற்பிரிவுகளோ காணப்படவில்லை.பின்னர் எகிப்தில் பப்பிரஸ் புல்லில் எழுதப்பட்டது.பப்பிரஸ் புல்லில் எழுதப்பட்டமை எழுத்துக் கலையில் ஏற்பட்ட பாரிய வளர்ச்சியாகும்.

வைத்தியத்துறை[தொகு]

எகிப்தின் வைத்திய முறையானது மூட நம்பிக்கைகளுடன் செயற்பட்டு வந்துள்ளது.நோய்களைக் குணப்படுத்துவதில் சாதாரண அறிவுக்கு எட்டாத விடையங்களே பயன்படுத்தப்பட்டன.விளக்கெண்ணை,பேரீச்சம்பழம்,அத்தி போன்றவை புகழ் பெற்ற மருந்துகளாகப் பயன்படுத்தப்பட்டன.

"http://ta.wikipedia.org/w/index.php?title=பண்டைய_எகிப்து&oldid=1431943" இருந்து மீள்விக்கப்பட்டது