பச்சையப்ப முதலியார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பச்சையப்பா முதலியார் (Pachaiyappa Mudaliar 1754-1794) தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்கு வழிகோலிய கொடைவள்ளல். சென்னைக்கு வடமேற்கில் சுமார்23 கி.மீ. தொலைவிலிருக்கும் பெரியபாளையம் என்ற ஊரில் பிறந்தவர். இவர் தந்தையார் காஞ்சி விசுவநாத முதலியார்; தாயார் பூச்சியம்மாள் ஆவர்.[1][2]

இளமைக்காலம்[தொகு]

இவர், தாய் வயிற்றில் இருக்கும்போதே இவர் தந்தையார் இறந்துவிட்டார். கணவரையிழந்த பூச்சியம்மாள் தம் பெண்மக்கள் இருவருடன் பெரியபாளையத்திற்குச் சென்று, குடியேறிக் குடும்ப நண்பரான ரெட்டி இராயர் என்பாரின் ஆதரவிலிருந்து வருகையில் பச்சையப்பர் பிறந்தார். தம் ஐந்தாம் வயதில் ரெட்டி இராயரையும் இழந்தார். வறுமையில் வாடிய குடும்பம் சென்னைக்கு வந்து குடியேறினர். செல்வரும் வணிகருமான நாராயணப் பிள்ளை என்பவர் இக்குடும்பத்திற்கு ஆதரவு அளித்தார். பச்சையப்பர் ஆங்கிலம் எழுதப்படிக்கவும், கணக்கும், வணிக முறையும் கற்றார்.

கொடை[தொகு]

பள்ளியில் படித்துக் கொண்டிருக்க வேண்டிய பருவத்திலேயே பச்சையப்பர் வாழ்க்கைக்கு வழிதேடும் முயற்சியில் ஈடுபட்டார். மொத்த வணிகர்களுக்குச் சரக்கு வாங்கியும், விற்றுக் கொடுக்கும் முகவராக பணியாற்றினர். இத்தொழில் இவர் மொழிபெயர்ப்பாளர் ஆவதற்கு வாய்ப்பளித்தது. தம் பதினாறாம் வயதிலேயே கொடை வள்ளலானார். அறப்பணிகளுக்குக் கொடை வழங்கலாயினர். குடும்பப்புரவலர் நாராயணப் பிள்ளையின் செல்வாக்கால் நிக்கலசு என்ற ஏற்றுமதி வணிகருக்கு மொழிபெயர்ப்பாளராக பணிப்பொறுப்பினைப் பெற்றார். சில ஆண்டுகளில் சிறிது செல்வம் திரண்டது. தம் தமக்கையின் மகளான அய்யம்மாளைத் திருமணம் செய்து கொண்டார்.

வணிகம்[தொகு]

1776 இல் செங்கல்பட்டு மாவட்டத்தில் வரிவசூல் செய்தல், நவாப்பின் (Nawab) அலுவலாளர்களுக்குச் சம்பளத்தை ஒப்படைப்பு செய்தல் முதலிய ஒப்பந்தத்தொழில், ஆங்கிலநிறுவனத்தாருக்கு வரவேண்டிய தானிய வரியை (மேல்வாரங்கள்) எனும் தானிய வரியை பணமாக்கித் தரும் குத்தகைத்தொழில், ஆங்கில வணிகர்கட்கும், கருநாடக நவாப்பு அதிகாரிகளுக்கும் இடையேயும் முகவராக இருந்து கொடுக்கல் வாங்கல் செய்தல் முதலிய தொழில்களை மேற்கொண்டார். வரிவசூல் செயலில் இவர் ஆங்கிலேயர்களின் நன்மதிப்பைப் பெற்றார். குறுகிய காலத்திலேயே, சென்னை மாகாணத்தின் சிறந்த மொழிபெயர்ப்பாளராக திகழ்ந்தார்.

அரசுப்பணி[தொகு]

தனது 28ஆவது வயதில், ஆங்கிலேய நிறுவனத்தில் முக்கியப்பதவி வகித்த இராபர்ட் யோசப்பு சலிவன் (sulivan) என்பவரின் முதன்மை மொழிபெயர்ப்பாளராக ஆங்கில அரசுப்பணி ஏற்றார். அதனாலும் பேரும், பெருஞ்செல்வமும் பெற்றார். சலிவனின் அரசியல் அலுவல்களில் பேருதவிப் புரிந்தார். தஞ்சாவூர் அரசருக்கு மொழிபெயர்ப்பாளராகவும், வங்கியராகவும் இருந்து, சென்னை மாகாணத்திற்குச் சரியான முறையில், கப்பம் கட்ட துணைப்புரிந்தார். 1784 இல் தஞ்சாவூரில் குடியேறினார். தஞ்சை அரசருக்குச் சென்னை அரசாங்கத்தாரால் தொல்லை நேராமல் காத்தார். அதனால் அரசர் இவரை திவான் போன்று போற்றி, பச்சைப்பருக்கு உரிமைகளையும், சிறப்புகளையும் செய்தார்.

மறுமணம்[தொகு]

பச்சையப்பரின் முதல் மனைவிக்கு மகப்பேறின்மையால், வேதாரணியத்தைச் சேர்ந்த பழனியாயி என்ற நங்கையை, இரண்டாம் மனைவியாகத் திருமணம் செய்து கொண்டார். பழனியாயிக்கு ஒரு பெண் மகவுப் பிறந்தது. பச்சையப்பருக்கு 1791 இல் பக்கவாத நோய்க்கு உள்ளானார். எனினும், தன் வங்கிமுகமைத் தொழில்களைத் தொடர்ந்து நடத்தி வந்தார்.

இறுதிக்காலம்[தொகு]

1794 பெப்ரவரியில், இவரின் உடல்நிலை மிகவும் சீரற்றது. எனவே, கும்பகோணத்தில் கட்டத்தொடங்கிய, சத்திர வேலையை விரைந்து முடிக்க அங்கு சென்றார். கும்பகோணத்தில், மார்ச்சு மாதம் 22 நாளில், தம் உயிலை எழுதி முடித்தார். திருவையாற்றில் இறக்க விரும்பி அங்கு விரைந்தார். அதன்படி, மார்ச்சு மாதம் 31ஆம் நாளில் மரணமடைந்தார். இவர் இறப்பிற்கு, அடுத்து, பழனியாயியும் அடுத்தாற்போல் இவர்களுடைய மகளும் இறந்தனர்.

சொத்து[தொகு]

பச்சையப்பர் ஈட்டிய பொருள் எத்தனை இலகரங்கள் என வரையறுத்து அறியப்படவில்லை. இவரே தம் காலத்தில் அறப்பணிகளுக்கு ஆயிரக்கணக்கில் செலவிட்டார். இவர் இறந்தபின், இவர் சுற்றத்தாரும், பேராசைச்காரர் சிலரும் செய்த மோசடிகள், வழக்குகள் முதலியவற்றால் அளவற்ற சொத்துக்கள் மறைந்தன. இவர் காலத்தின் பின், இவர் பொருளெனக் கண்டறியப்பட்ட தொகை வட்டி முதலுடன் கூடிய தொகை சுமார் எட்டு இலட்சங்கள் ஆகும். இத்தொகையை மூலப்பொருளாகக் கொண்டு பச்சையப்பன் அறநிலைக் காப்பாளர்கள், அறப்பணிகளையும், கல்விப் பணிகளையும் நடத்தி வருகின்றனர்.

கல்விப்பணிகள்[தொகு]

கல்வி நிதிக்கென ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து, கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு காஞ்சீபுரம், சிதம்பரம், சென்னை இம்மூன்று இடங்களில் மூன்று உயர்நிலைப் பள்ளிகளும், சென்னையில் கல்லூரி ஒன்றும், காஞ்சியில் ஒரு கல்லூரியும் தொடங்கப்பட்டு, அவைகள் இன்றளவும் நடைபெற்று வருகின்றன.

இறைப்பணிகள்[தொகு]

பச்சையப்ப முதலியார் மிகுந்த கடவுட் பற்றுடையவர். இவர் செய்த அறப்பணிகள் பல. காஞ்சீபுரத்து ஏகாம்பரேசுவரர் கோயில் உள்ள திருமண மண்டபம் கட்டினார். சிதம்பரத்தில் தேர் செய்து, ஆனித் திருமஞ்சனம் என்ற புதிய விழாவைத் தோற்றுவித்தார். காசியிலும், தென்னாட்டில் சென்னை, கும்பகோணம், திருவையாறு, தஞ்சாவூர், மதுரை முதலிய இடங்களிலுள்ள திருக்கோயில்களுக்கும், பலவகையான கட்டளைகளைத் திட்டஞ்செய்து வைத்தார். பல இடங்களில் அன்னசத்திரங்கள் கட்டினார். சில இடங்களில் அக்கிரகாரம் கட்டினார். இவ்வாறாக இவர் பலப்பல அறப்பணிகளையும், கணக்கில் அடங்கா கொடைகளையும் தன் வாழ்நாளில் செய்தார்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

  1. C S Srinivasachari (1842). Madras: Pachaiyappa’s college - Madras. பக். 7. 
  2. "Vallal Pachaiyappa | Pachaiyappa's College". pachaiyappascollege.edu.in. Archived from the original on 16 நவம்பர் 2020. பார்க்கப்பட்ட நாள் 10 December 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பச்சையப்ப_முதலியார்&oldid=3688555" இலிருந்து மீள்விக்கப்பட்டது