பச்சைமலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பச்சைமலை தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி,பெரம்பலூர், சேலம் மாவட்டங்களில் பரவி நிற்கும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளைச் சேர்ந்த ஒரு மலைத்தொடர் ஆகும். தமிழ் நாட்டில் உள்ள கொல்லிமலை, கல்வராயன் மலை, சேர்வராயன் மலை, ஜவ்வாது மலை போன்ற மலைத் தொடர்களுள் ஒன்று. பழம்பெரும் பாடல்களில் பச்சைமலை பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. திருமாலைப் பற்றி பாடிய ஆழ்வாரும் “பச்சைமா மலை போல் மேனி” என்று குறிப்பிடுகிறார். சின்னாறு, கல்லாறு, வெள்ளாறு, மருதையாறு போன்ற நதிகள் பச்சைமலையில் உற்பத்தியாகின்றன.

இந்த மலையானது 527.61 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இம்மலை கடல் மட்டத்தில் இருந்து 1,072 மீட்டர் உயரம் கொண்டதாக உள்ளது. வனத்துறை கணக்கெடுப்பின்படி இந்த மலையில் 154 பறவை இனங்கள் வாழ்கின்றன. மேலும் இந்த மலைப்பகுத்திக்கு 135 வகையான பட்டாம்பூச்சி இனங்கள் வலசை வந்து செல்கின்றன. மேலும் இங்கு உள்ள காப்புக் காடுகளில் மான்கள் வாழ்கின்றன. இந்த மலையில் மங்களம் அருவி, கோரையாறு அருவி ஆகிய அருவிகள் உள்ளன.[1]

மலையின் நிலப்பிரிவுகள் மற்றும் மக்கள் தொகை[தொகு]

பச்சைமலையில் வாழும் மக்கள் மூன்று நாடுகளாக பச்சைமலையை சுட்டிக் காட்டுகின்றனர். அவைகள் தென்புறனாடு, வன்னாடு, கோவைநாடு ஆகிய மூன்று நாடுகளிலும் ௪௮ (48) கிராமங்கள் உள்ளன. ௧௯௯௧ (1991) ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, பச்சைமலை வாழ் மக்களின் எண்ணிக்கை ௰௭௭௪ (10,774) ஆகும்.

மக்களின் தொழில்கள், வாழ்க்கைமுறை, பொழுதுபோக்கு[தொகு]

இம்மலைவாழ் மக்களுக்கு வேளாண்மையே முக்கியத் தொழில். பச்சைமலையில் நாட்டின் தேசிய தாவர இனங்கள், மூலிகை வகைகள் காணக்கிடைக்கின்றன. இம்மக்கள் அணிகலன்களும், உடைகளும், வீடுகளின் அமைப்புகளும், கால மாறுதலுக்கு ஏற்ப சமவெளியில் வாழும் மக்களை ஒட்டியே அமைந்துள்ளன. வானொலியும், தொலைக்காட்சியும் எங்கும் கிடைக்கும் இக்காலத்திலும், பொழுதுபோக்கிற்காக நாடகங்களும், பாடல்களும் நடத்தி வருகின்றனர், பச்சைமலைவாழ் மக்கள்.

இலக்கியங்களில்[தொகு]

பச்சைமலை சங்ககாலத்தில் 'விச்சிமலை' [2] என்று அழைக்கப்பட்டது. மலையஞ்சிவந்தி எனப்படும் விச்சிப்பூ இம்மலையில் இக்காலத்திலும் மிகுதியாகப் பூக்கிறது. விச்சிமலைநாடு 'மடங்கா விளையுள் நாடு' என்று கபிலரால் போற்றப்பட்டுள்ளது.(புறநானூறு 200)

இந்த நாட்டு மன்னன் விச்சியர் பெருமகன் வேந்தன் ஒருவனோடு (சோழனோடு) போரிட்டதைப் பார்த்த குறும்பூர் மக்கள் புலியும் குறும்பூள் பறவையும் போரிடுவது போல் உள்ளதே என்று பேசிக்கொண்டு ஆரவாரம் செய்தார்களாம். (பரணர் - குறுந்தொகை 328) குறும்பூர் என்பது இக்காலத்துக் குரும்பலூர். இந்தக் குரும்பலூரானத் பெரும்பலூர் (பெரம்பலூர்) அருகில் உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. அ. வேலுச்சாமி (மே 27 2019). "மாலை, இரவில் 'குளுகுளு' தட்ப வெப்பநிலை இருந்தும் கோடை காலத்தில் வெறிச்சோடி காணப்படும் பச்சமலை சுற்றுலா பயணிகள் வருகை மூன்றில் ஒரு பங்காக குறைந்தது". இந்து தமிழ். 
  2. http://www.trichy.com/places/pachamalai/
"https://ta.wikipedia.org/w/index.php?title=பச்சைமலை&oldid=3407647" இலிருந்து மீள்விக்கப்பட்டது