நெய்தற் சாய்த்துய்த்த ஆவூர் கிழார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நெய்தற் சாய்த்துய்த்த ஆவூர் கிழார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது ஒரே ஒரு பாடல் அகநானூறு 112 எண் கொண்ட பாடலாக உள்ளது.

ஆவூர் கிழார் என்னும் பெயர் கொண்ட வேறொரு புலவர் உள்ளமையால் இவர் வேறு ஆவூர் கிழார் என்பதைக் காட்ட இவருக்கு நெய்தல் சாய்த்து உய்த்த என்னும் அடைமொழி தரப்பட்டுள்ளது. இவரது தொகுக்கப்படாத பாடல் ஒன்றில் இவர் இவருக்குப் பெயருக்கு முன் உள்ள அடைமொழித் தொடரைப் பயன்படுத்தியுள்ளார் போலும்.

அகம் 112 சொல்லும் செய்தி[தொகு]

மணப்பரும் காமம்[தொகு]

மிளகுக்கொடி படர்ந்திருக்கும் சிலம்பில் மான்கூட்டம் பார்த்துக்கொண்டிருக்கும்போது தலைவன் தலைவன் தலைவியைப் புணர்ந்தான். இது தழுவத் தழுவத் தணியாத காமம். இது யாருக்கும் தெரியவில்லை.

பெண்கோள் ஒழுக்கம்[தொகு]

பெற்றோர் பெண்ணைக் கொள்வது பெண்கோள் ஒழுக்கம். முன்பே இருவருக்கும் இடையே உள்ள உறவை அறியாதவர்கள் போலப் பெண்ணைக் கேட்டுப் பெற இப்போது வந்துள்ளனர். இதனை எண்ணுத் தலைவி நாணம் கொள்கிறாள்.

அறநெறி[தொகு]

'கழியக் காதலர் ஆயினும் சான்றோர் பழியொடு வரூஉம் இன்பம் வெஃகார்'

காதலன் காதலியை இழுத்துக்கொண்டு ஓடிக் குடும்பம் நடத்தும் இன்பத்தைச் சான்றோர்கள் விரும்புவதில்லை. முறைப்படிப் பெண் கேட்டுத் திருமணம் செய்துகொள்வதையே சான்றோர் விரும்புவர்.

எண்கு[தொகு]

கரடிக்கூட்டம் புற்றிலுள்ள கறையானைக் கிண்டி உண்ணும் கொடிய வழியில் தலைவன் தலைவியை நாடி வந்தானாம்.

புலி குழுமும்[தொகு]

குட்டிப் போட்டிருக்கும் தன் பெண்புலி பசியால் வாடுவதை எண்ணி ஆண்புலி ஆண்யானையை வீழ்த்தியபின் தன் பெண்புலியை அழைக்கக் குழுமும் (முழங்கும்) வழியில் தலைவன் வருவது தலைவிக்குத் தீங்கு செய்வதாகுமாம்.