நாற்றுமேடை
நாற்றுமேடை (Plant nursery) என்பது தாவரங்களின் இளம்பருவமான நாற்று நிலையில் அதிக கவனிப்புத் வழங்கப்பட்டு, அவை தகுந்த வளர்ச்சியடைந்து வருவதற்காக உகந்த சூழ்நிலைகளை வழங்கி, அவற்றின் இலகுவான இனப்பெருக்கத்திற்காக பராமரிக்கும் இடமாகும். இந்த நாற்று மேடையில் உருவாக்கப்படும் நாற்றுக்களிலிருந்து பின்னர் வளர்ந்த தாவரங்களை உருவாக்குவதற்காக நாற்றுநடல் செய்யப்படும். நாற்றுக்களாக இருக்கும் நிலையிலேயே விற்பனைக்கு விடப்படவோ, அல்லது வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்லப்படவோ முடியும்[1].
இப்படியான நாற்றுமேடைகளில் வளர்க்கப்படும் நாற்றுக்கள் சிறிய அளவில் பொது மக்களுக்கு சில்லறையாக விற்கப்படும் நோக்கிலோ, அல்லது பெரிய அளவில் வேறு நாற்றுமேடைகளுக்கோ அல்லது வர்த்தக ரீதியான தோட்டங்களை வைத்திருப்பவர்களுக்கோ விற்கப்படக்கூடிய மொத்த விற்பனை நோக்கிலோ வளர்க்கப்படலாம். சில தனியார் நிறுவனங்களில், அல்லது தனியார் தோட்டங்களில் தமது நாற்றுத் தேவையை தாமே பூர்த்தி செய்து கொள்வதற்காகவும் இவ்வாறான நாற்றுமேடைகள் பயன்படுத்தப்படுகின்றன.
சில நாற்றுமேடைகள் பல்வேறுபட்ட தாவரங்களை இனப்பெருக்கத்துக்கு உட்படுத்தும் நோக்கிலும், வேறு சில பல தாவரங்களை வளர்த்தெடுக்கவும், இன்னும் சில நாற்றுமேடைகள் குறிப்பிட்ட ஒரு தாவரத்திற்காகவோ தயார் செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.
நாற்றுமேடை தயாரிப்பு முறை [தொகு]
பொதுவாக நவீன நாற்றுமேடைகள் கண்ணாடி அல்லது நெகிழிகளால் ஆன குகைபோன்ற அமைப்பையுடைய பசுமைக்குடில்களில் தயார் செய்யப்படுகின்றன. ஆனாலும் திறந்த வயல்/தோட்ட நிலங்களிலும் நாற்றுமேடைகள் தயாரிக்கப்படுவதுண்டு. நிலத்திலோ, வெவ்வேறு வகையான கொள்கலன்களிலோ நாற்றுக்கள் வளர்க்கப்படலாம். கொள்கலன்களைக் கொண்ட வயல்/தோட்ட நிலங்களிலோ, அல்லது கட்டடங்களிற்குள்ளாகவோ கூட நாற்றுமேடைகள் அமைக்கப்படுவதுண்டு.
நாற்றுமேடைகளில் இளம்தாவரங்களுக்கு மேலதிக கவனிப்பு கொடுக்கப்பட்டு, அவற்றிலிருந்து சிறப்பான, நலம் மிக்க தாவரங்கள் உருவாதல் உறுதிப்படுத்தப்படுகின்றது. பராமரிப்பில் சில தொழில்நுட்ப உதவியுடன் தானியங்கிகளாக அமைக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, நீர் பாய்ச்சும் இயந்திரங்கள், குறிப்பிட்ட நேரத்தில தாமாகவே இயங்க ஆரம்பித்து, குறிப்பிட்ட நேரத்திற்கு நீர் பாய்ச்சுமாறு அமைக்கப்படுவதுண்டு.
நாற்றுமேடைகளில் கலவிமுறை இனப்பெருக்கத்தால் விளைந்த வித்துக்களை இட்டு முளைக்கவிட்டு நாற்றுக்கள் பெறப்படுவதுண்டு. கலவியற்ற இனப்பெருக்க முறைகள் மூலமும் நாற்று மேடைகள் பராமரிக்கப்படுவதுண்டு. தண்டு ஒட்டல் முறை (Grafting), அல்லது அரும்பொட்டல் முறை (Budding) போன்ற கலவியற்ற இனப்பெருக்கம் மூலம் பல விரும்பப்படும் இயல்புகள் கொண்ட தாவரங்கள் பெறப்படுகின்றன.