நாகர் (தமிழகம் மற்றும் இலங்கை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யாழ்ப்பாணத்தில் நாகபூசணி அம்பிகை
இலங்கையிலுள்ள நாக புத்தர் சிலை

நாகர் (Naga people) என்பவர்கள் தமிழ் இலக்கியங்களிலும் இலங்கை இலக்கியங்களிலும் குறிப்பிடப்படும் பழங்குடி மக்களாவர். மற்ற பகுதிகளில் வாழும் நாகர்கள் போல் இவர்களும் பாம்பு வணக்கத்தையும் தாங்கள் வாழ்ந்த இடங்களுக்கு நாகம் என்று பொருள்படும் பெயரையும் வைத்துள்ளதாகவே தெரிகிறது.

இலங்கையை ஆண்ட முடிநாகர்[தொகு]

இலங்கையை மகாவம்சம் குறிப்பிடும் விசயன் (பொ.மு. 543 – 504) என்ற மன்னனுக்கு முன்பே முடிநாகர் என்னும் தமிழ் நாகர் இனத்தவர்கள் ஆண்டனர் என்பது ஆராய்ச்சியாளர்கள் கருத்து.[1] இதற்கு ஆதாரமாக முரஞ்சியூர் முடிநாகராயர் என்னும் முடிநாகர் இனத்தைச் சேர்ந்தவர் சேர மன்னனான உதியஞ்சேரலை பாடியதை குறிப்பிடுகின்றனர். இவர்கள் நாகவுருவை தலையில் அணிந்ததால் இவர்கள் முடிநாகர் என்றும் சூட்டுநாகர் என்றும் அழைக்கப்பட்டனர்.[2]

நாகர்கள் யார்? என்ன மொழிக்குரியவர்கள்?[தொகு]

சரித்திர காலத்திற்கு முற்பட்ட, பெரும்பாலும் தமிழர்களாகவே இருந்திருக்கக்கூடிய, தென்னிந்தியாவிலும், இலங்கையிலும் பரந்து வாழ்ந்த இனத்தவரின் ஒரு கிளையினரே நாகர் என சேர் பொன். அருணாசலம் அவர்கள், ‘Sketches of Ceylon History' என்ற தமது நூலில் கூறுகின்றார். பன்மொழிப் புலவர் திரு.கா. அப்பாத்துரையாரோ மேலும் ஒருபடி சென்று, “நாகர்கள் தமிழராகவே தமிழகத்தில் வாழ்ந்தனர். எங்கும் வேறு இன மொழிக்கு உரியரென்ற பேச்சும் ஏற்படவில்லை. தனி இனமாகவே வாழ்ந்தனர். ஆகவே, அவர்கள் கடல்கொண்ட தமிழகத்திலோ, தமிழகம் சூழ்ந்த நிலத்திலோ இருந்த தமிழினப் பிரிவினர் என்றும், கடல்கோளின் பயனாகவோ, வேறு காரணங்களாலோ எங்கும் பரந்தவர் என்றும் கருத இடமுண்டு.” என்று குறிப்பிட்டுள்ளார். தென்னிந்தியத் தமிழகத்தின் திருநெல்வேலி நகரில் இருந்து 24 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள ஆதிச்சநல்லூர் (ஆதித்த நல்லூர்) என்னும் இடத்தில் குறைந்தது மூவாயிரம் ஆண்டுகளுக்கும் முன்னர் புதைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான “முதுமக்கள் தாழிகள்" (இறந்தோரின் உடலை இட்டுப் புதைக்கும் மண்சாடிகள்) அகழ்வாராய்ச்சியாளரால் சமீபத்தில் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. புதை குழிகளிலிருந்து சிலநூறு மீற்றர் தூரத்தில் மக்கள் குடியிருப்புப் பகுதியும் தொழிலகங்கள் பகுதியும் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. சிவப்பு, கறுப்பு நிற மண்பாண்டங்களின் உடைந்த துண்டுகளும், எலும்பில் செய்த ஆயுதங்களும், இரும்பு, செம்பு, பொன் முதலிய உலோகங்களில் செய்த பொருட்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

புதைகுழிகள் மூன்று அடுக்குகளாக ஒன்றின்மேல் ஒன்றாக அமைந்து இருந்தன. இவற்றுள் காணப்பட்ட மட்பாண்டம் ஒன்றின் உட்புறத்தில் தமிழ்ப் பிராமி எழுத்துக்களில் வரையப்பட்ட ஒருவருடைய பெயர் என்று கருதப்படும் ஏழு எழுத்துக்களைக் கொண்ட சொல் காணப்பட்டுள்ளது. மணிமேகலை, நற்றிணை, பதிற்றுப்பத்து, புறநானூறு முதலிய சங்கத் தமிழ் இலக்கியங்கள் விவரிக்கும் இறந்தோர் உடலைப் புதைக்கும் அல்லது இறந்தோர் எலும்புகளைப் புதைக்கும் முறை, ஆதிச்சநல்லூரில் ஒழுங்கு பிசகாமல் பின்பற்றப்பட்டுள்ளது. சரித்திர காலத்துக்கு முற்பட்ட இந்தியர் (திராவிடர்) குள்ளமான தோற்றம் உடையவர்கள் என்று இதுவரை நம்பப்பட்டதைப் பொய்யாக்கும் வகையில் இங்கு புதைக்கப்பட்டவர்கள் உயரமானவர்களாகவும் மொங்கோலிய உருவ அமைப்பின் அம்சங்களைக் கொண்டவர்களாகவும் இருந்தனர் என்று அகழ்வாராய்ச்சி மேற்கொண்ட ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இத்தகவல்களை ஒருங்கு சேரப் பார்க்கையில் புதைக்கப்பட்ட மக்கள் ‘தமிழ் நாகர்’ என்று சுட்டுவனவாக உள்ளன.

“நாகர்களின் தசைக் கட்டமைப்பு, மஞ்சள் நிறம், சப்பை மூக்கு, சிறிய கண்கள், உயர்ந்த கன்ன எலும்புகள், அற்பதாடி முதலியவை, அவர்கள் முன்னொரு காலத்தே மொங்கோலிய இனக் குழுமத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர் என்பதைக் காட்டும்” என்று ‘இந்து வரலாறு’ (Hindu History) எனும் நூலின் ஆசிரியர் திரு.ஏ.கே.மஜும்தார் என்பார் கூறுகின்றமையும் இங்கு நோக்கத் தக்கது. “தாமிரவருணி” ஆற்றங்கரையில் உள்ள ஆதிச்சநல்லூரில் அகழ்ந்து எடுக்கப்பட்ட தாழிகள் போன்ற அதே வகைத் தாழிகள் பல ஆண்டுகளுக்கு முன் இலங்கையின் மேற்குப் பகுதியில் “பொம்பரிப்பு” என்று தவறாக உச்சரிக்கப்படும் ‘பொன்பரப்பி’ (தாமிரவருணி) என்ற ஊரிலும் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இவை முறையான ஆய்வுக்குட்படுத்தப்பட்டால் புத்தர் பிறப்பதற்கு குறைந்தது 500 வருடங்களுக்கு முன்னரே இலங்கையில் தமிழ் நாகர்கள் வாழ்ந்த உண்மை நிரூபணமாகும். இவ்வாறான தாழிகள் திருநெல்வேலி மாவட்டத்தில் சங்கரன் கோவிலையடுத்த குவளக்கரைக் கிராமத்திலும், திருநெல்வேலிக்கு மேற்கே சேரநாடாகிய கேரள எல்லைக்குள் கொல்லம் நகரையடுத்த அட்டமுடி ஏரிக் கரையில் மாங்காடு எனுமிடத்திலும் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. (ஆதாரம்: திரு.டி.எஸ்.சுப்பிரமணியன் The Hindu இதழில் 14. மார்ச் 2004 இலும், 3. ஏப்ரல் 2005 இலும் வரைந்த கட்டுரைகளும், The Telegraph இதழில் 20. சூன் 2005 இல் திரு.எம்.ஆர்.வெங்கடேசு வரைந்த கட்டுரையும்) நாக வழிபாட்டில் திளைத்த தமிழ்த் தொல்குடியினரான நாகர்கள், நயினாதீவு மற்றும் தீவுகளிலும், யாழ். குடாநாட்டிலும் ஒரு காலத்தில் சிறப்புற வாழ்ந்தனர். பிற்காலத்தில் இந்து சமயம், பௌத்தம், கிறீத்தவம், இஸ்லாம் என்ற பிறமதப் பாதிப்புகளால் தமது நாக வழிபாட்டு அடையாளத்தை இழந்தும், சாதியக் கொடுமைகளால் ஒடுக்கப்பட்டும் நாகர்கள் இன்று சிறப்பொழிந்து போயினர். எனினும், நாகர்களின் வழிவந்த மக்கள் நயினாதீவில் நம்மத்தியில் இன்றும் உளர். கி.பி. 1620 அளவில், நயினாதீவில் அமைந்திருந்த "நயினார் கோவில்" போர்த்துக்கீசரால் தாக்கி அழிக்கப்பட்ட வேளையில், இங்கு வாழ்ந்த நாகர்வழிவந்த மக்களில் பெரும்பாலோர் தமது நயினார் கோவிலைப் பாதுகாக்கும் முயற்சியில் உயிர் இழந்தார்கள். நயினையில் இன்று வாழும் தொல் தமிழராகிய வள்ளுவ சமுதாயத்தவர்கள் எஞ்சிய நாகர்களின் நேரடிப் பிற்சந்ததியார் ஆவர். இவர்களே நயினையின் முதற் குடிகள் ஆவர்.

தமிழ் மற்றும் இலங்கை இலக்கியங்களில் நாகர்கள்[தொகு]

இரட்டைக்காப்பியங்களில் நாகர்கள்[தொகு]

  1. நாகர்களின் நாடு நாகரிகமும் செல்வ வளமும் நிரம்பியது என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.[3]
  2. மணிமேகலையில் நாக இளவரசியான பீலிவளை மீது கிள்ளி என்னும் சோழ வேந்தன் காதலுற்று அவளைப் பிரிந்து வருடந்தோறும் நடத்தும் இந்திர விழாவையும் நடத்த மறந்தான் என்றுள்ளது.
  3. சாவக நாட்டை ஆண்ட பூமிசந்திரனும் அவன் வளர்ப்பு மகனான புண்ணிய ராசனும் நாக மரபினரே என்றும் மணிமேகலையில் உள்ளது.

தீப வம்சமும் மணிமேகலையும்[தொகு]

இலங்கை வரலாற்று நூலான தீபவம்சம், மகாவம்சம்[4] மற்றும் தமிழ் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை போன்ற நூல்கள் நாக மன்னர்களுக்கு இடையே நடந்த போர் பற்றி விளக்குகிறது. அவையாவன,

  1. நாகராசன் என்னும் மன்னன் விசயன் என்றவனுக்கு முன்பே நாகநாடான இலங்கையை யாழ்ப்பாணம் நகரை கோநகராக்கி ஆழ்கிறான். இவனுக்கு ஒரு மகளும் மகோதரன் என்ற மகனும் இருந்தனர்.
  2. தன் மகளை மலையராட்டிர நாகராசன் என்ற வேறொரு நாக மன்னனுக்கு மணமுடித்து அவளுக்கு சீதனமாக தன் மணியாசனத்தையும் கொடுத்தனுப்பினான். அவர்களுக்கு குலோதரன் என்னும் மகன் பிறக்கிறான்.
  3. யாழ்ப்பாண நாகராசன் தான் இறக்கும் முன்பு தன் மகனான மகோதரனுக்கு பட்டம் கட்டிவிட்டு இறக்கிறான்.
  4. இப்போது யாழ்ப்பாண நாகராசனான மகோதரன் மலையராட்டிர நாகராசனான் குலோதரன் மீது மணியாசனத்தை பெரும் பெயரில் போர் தொடுக்கிறான்.
  5. இரு படைகளுக்கும் போர் நடக்கும் போது அவர்களின் நடுவில் புத்தர் தோன்றி பேரிருளை உண்டாக்கியதால் நாகர்கள் அஞ்சினர். மீண்டும் புத்தர் அங்கு வெளிச்சத்தை உருவாக்கியவுடன் நாகர்கள் புத்தரை வணங்கி போருக்குக் காரணமான மணியாசத்தில் புத்தரையே அமரச்செய்தனர்.
  6. இதே கதையை மணிமேகலையும் கூறுகிறது.[5]

தமிழ் புலவர்கள்[தொகு]

தமிழ் சங்கங்களில் நாகர் இனத்தைச் சேர்ந்த பல புலவர்கள் தன் இலக்கியங்களை அறங்கேற்றியுள்ளனர். அவர்கள்,

  1. புறத்திணை நன்னாகனார்
  2. மருதன் இளநாகனார்
  3. முரஞ்சியூர் முடிநாகராயர்
  4. வெள்ளைக்குடி நாகனார்
  5. சங்கவருணர் என்னும் நாகரியர்

இலம்பகர்ண அரசர்களின் பட்டியல்[தொகு]

இலங்கையை ஆண்ட இலம்பகர்ணர் என்னும் வம்சத்தில் நாகன் என்ற பெயர் தாங்கிய பலர் உள்ளனர். இவர்கள் நாகர் பழங்குடிகளாக இருக்கலாம் என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து.

நாகர்களும் பரதவர்களும்[தொகு]

யாழ்ப்பாணத்தில் நாகர்கள் இருந்தது போலவே தமிழகத்திலும் நாகர்கள் இருந்தார்கள் என்பதற்கு நாகர் எனப்பெயருடன் தொடங்கும் ஊர்களே சாட்சி.நாகர்+ பட்டினம் =நாகப்பட்டினம், நாகர்+ஊர் =நாகூர் , நாகர்+கோவில்=நாகர் கோவில், நாகர்+கொடையூர்=நாகக்குடையான், அவ

வர்கள் பரதவர்களாக இருக்கலாம் என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து. அதற்கு வலுச்சேர்ப்பது போல் வருணன் என்ற கடற்கடவுளின் வழிபாடு இரு மக்களுக்கும் பொதுவாக உள்ளதைக் கூறலாம்.[6]

நாகர்கள் பற்றிய ஆராய்ச்சிக் கருதுகோள்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. செந்தமிழ், ஈழமும் தமிழ் சங்கமும் - ஆ.முத்துத்தம்பிப் பிள்ளை
  2. தமிழிலக்கிய வரலாறு, பாவாணர், பப 10 – 11
  3. நாகநீள் நகரொடு நாகநாடு அதனொடு போகநீள் புகழ்மன்னும் புகார் நகர்
    - சிலப்பதிகாரம், மங்கல வாழ்த்துக் காதை.
  4. http://www.infolanka.com/org/srilanka/hist/hist4.html
  5. வேக வெந்திறல் நாகநாட் டரசர் சினமா சொழித்து மனமாசு தீர்த்தாங்கு அறச்செவி திறந்து மறச்செவியடைத்து பிறவிப்பிணி மருத்துவன் இருந்தறம் உரைக்கும் திருத்தாளி ஆசனம்
    - மணிமேகலை பீடிகை கண்டு பிறப்புணர்த்திய காதை, 58 – 61
  6. வருணன் வணக்கம், பக்கம் 77, தமிழ் சங்கத்து மாத இதழ், சூன்-சூலை 1958 – மயிலை சீனி. வேங்கடசாமி
  7. http://www.africaresource.com/rasta/sesostris-the-great-the-egyptian-hercules/ancient-african-kings-of-india-by-dr-clyde-winters/