நாகம் (சொல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நாகம் என்னும் பெயர்ச்சொல் தரும் பொருள்களை ஆசிரிய நிகண்டு பட்டியலிலுகிறது.[1]

விண்
நாகத்து அன்ன பாகார் மண்டிலம் (விண்ணைப போல உருகும் மண்டிலம்) [2]
குரங்கு
புன்னை
நற்றூசு (நல்லாடை)
  • கடையெழு வள்ளல்களில் ஒருவனான ஆய் தனக்குக் கிட்டிய நீலநாகம் உரித்த தோலைத் தான் அணிந்துகொள்ளாமல் தன் நாட்டுக் குற்றால நாதருக்கு அணிவித்து மகிழ்ந்தானாம்.[3]
  • நாகம் என்பது நடனமாடும் மகளிர் இடையில் உணுத்திக்கொள்ளும் ஆடையில் படமெடுதாடும் நாகம் போல் கொய்சகத்தால் செய்துகொள்ளும் ஓர் ஆடை-ஒப்பனை.[4]
மலை
பாம்பு
யானை
  • நாகம் (யானை) ஏந்தெழில் வரிநுதல் பொருது ஒழி நாகம் (யானைக்கோட்டால் அரசியின் கட்டில் கால்) [5]
  • இருங்கோள் நாகம் மடிபதம் பார்க்கும் வயமான் (யானை எப்போது சாகும் எனக் காத்திருக்கும் அரிமா(சிங்கம்) [6]என்பன அவை.
உலோகம்
கம்பர்

இதனை வைத்துக்கொண்டு கம்பன் தன் கம்பராமாயணத்தில் விளையாடுகிறான்.[7][8] நாகம் என்னும் மலையானது, நாகம் வாழும் பாதாள உலகை அடையும்படி, நாகம் என்னும் விசும்பாகி நின்றான் – என்கிறான்.

நாகநாடு[தொகு]

புகார் நகருக்கு அப்பால் 400 யோசனை தூரம் நிலப்பரந்திருந்த நாடு நாகநாடு. புகார் நகரிலிருந்து நாகநாடு செல்லும் கடல்வழியில் மணிபல்லவம் என்னும் தீவு நாகநாட்டை அடுத்து இருந்தது. மணிபல்லவத் தீவின் காவல் தெய்வம் மணிமேகலை. கோவலன் மகள் மணிமேகலையைத் தூக்கிச் சென்று காப்பாற்றியதாகக் கூற்றப்படும் தெய்வம் இது.

நாகபுரம்[தொகு]

நாகபுரம் என்பது ஆபுத்திரன் ஆண்ட நாட்டின் தலைநகர்.

அடிக்குறிப்பு[தொகு]

  1. நாகம் விண் குரங்கு புன்னை நற்றூசு மலைப்பாம்பு யானை. ஆசிரிய நிகண்டு - பதினோராவது ஒருசொல் பல்பொருள் பெயர்த்தொகுதி - ககர எதுகை பாடல் 4
  2. புறம் 367
  3. <poem> நீல நாகம் நல்கிய கலிங்கம் ஆலமர் செல்வற்கு அமர்ந்தனன் கொடுத்த சாவம் தாங்கிய சாந்துபுலர் திணிதோள் ஆர்வ நன்மொழி ஆய் - சிறுபாணாற்றுப்படை (96-99)
  4. ஒளிதிகழ் உந்தி உருகெழு நாகம் - பரிபாடல் 12-4
  5. நெடுநல்வாடை 117
  6. அகம் 73-12.
  7. பிராமணர் தென்னாட்டுத் தமிழநாகரிகச் சிறப்பைப்பற்றிக் கேள்விப்பட்டு,இங்கும் தம் மேம்பாட்டை நிறுவுமாறு, நைமிசஅடவியில் அடிக்கடி மாநாடு கூடிச் சூழ்ந்ததாகத்தெரிகின்றது. ஒரு நிமை (நொடி) நேரத்தில் ஒருபெரும்படை கொல்லப்பட்ட இடம், நைமிசம் என்றுபெயர் பெற்றதாகச் சொல்லப்படுகின்றது.இமை-நிமை - வ. நிமி - நிமிஷ - நைமிஷ - நைமிச. நைமிசாடவி மாநாட்டுத்தீர்மானத்தின்படி, அகத்தியர் தென்னாடுநோக்கிப் புறப்பட்டார். அவர் காசியினின்றுவிந்தமலை யடைந்து அங்கிருந்து தண்டக அடவி வந்துதங்கி, அதன்பின் காஞ்சி யடைந்து, பின் காவிரிதோன்றும் சையம் என்னும் குடகுமலை சென்று, குடமலைவழியாகப் பொதியமலை போய்ச் சேர்ந்ததாகக்காஞ்சிப் புராணங் கூறுகின்றது. விந்தமலை கடக்க முடியாத தென்றுஆரியர் நெடுநாளாகக் கருதிக்கொண்டிருந்ததனால்,அகத்தியர் அதைக் கடந்து வந்தபோது அதன்செருக்கை யடக்கினதாகக் கூறினர்.
  8. "யோகமுறு பேருயிர்கள் தாமுலைவு றாமல்
    ஏகுநெறி யாதெனமி தித்தடியி னேறி
    மேகநெடு மாலைதவழ் விந்தமெனும் விண்டோய்
    நாகமது நாகமுற நாகமென நின்றான்" ஆரணி. அகத்.39)


"https://ta.wikipedia.org/w/index.php?title=நாகம்_(சொல்)&oldid=1755017" இலிருந்து மீள்விக்கப்பட்டது