நவபாசானம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(நவபாஷாணம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பழனி மலை

தமிழ்நாட்டில் கடவுள் சிலைகள் பலவும் நவபாசாணத்தால் செய்யப்பட்டுள்ளன.

பாசாணம்[தொகு]

பாசாணம் அல்லது பாடாணம் என்றால் நஞ்சு என்று பொருள். பாசாணத்தில் 64 வகையுண்டு. 64 பாசாணத்தில் நீலி என்பது ஒரு பாசாணம். இந்த நீலி எனும் பாசாணம் 63 பாசாணங்களின் நச்சுத்தன்மையை முறிக்கக்கூடியது. நவ பாசாணம் என்றால் ஒன்பது வகையான நச்சுகளை சித்தர்கள் கண்ட விதி முறைகளை பயன்படுத்திக் கட்டுவதாகும்.

நவ (ஒன்பது) பாசாணம்[தொகு]

நவ பாசாணம் என்பது சித்தர் மரபறிவியலாகும் நவபாசாணம் கட்டுவது என்பது ஒரு சித்தர் வேதியியல் முறையில் வெவ்வேறு இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகளைக் கொண்ட பாசாணத்தின் அணுக்களை சேர்ப்பது மற்றும் பிரிப்பதன் மூலம் புதிய மேம்படுத்தப்பட்ட இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகளைக் கொண்ட அணுக்கட்டமைப்பை உருவாக்குவதே சித்தர்களின் வேதியியல் ஆகும். நவ பாசாணம் என்பது ஒன்பது வகையான நஞ்சுகளைக் கொண்டது. அவை:

எண் பாசாணம் (அ) நஞ்சு
1 சாதிலிங்கம் ( ரசம் )
2 மனோசிலை
3 தாரம் (அரிதாரம், மால்தேவி)
4 வீரம்
5 கந்தகம்
6 பூரம்
7 வெள்ளை பாசாணம்
8 கௌரி பாசாணம்
9 தொட்டி பாசாணம்


"பாங்கான பாடாணம் ஒன்பதினும் பரிவான விபரம்தான் சொல்லக் கேளு கௌரி, கெந்திச்சீலைமால் தேவி கொடு வீரம்கச்சால் வெள்ளை பகர்கின்ற தொட்டினொடு சூதம்சங்கு பூரணமாய் நிறைந்த சிவசக்தி நலமான மனோம்மணி கடாட்சதாலே நண்ணிநீ ஒன்பதையும் கட்டுகட்டு" - போகர்

அதற்கான நவீன வேதியல் விளக்கம்.

கௌரிப் பாசாணம் : Arsenic Penta sulphite

கெந்தகப் பாசாணம் : Sulfur

சீலைப் பாசாணம் : Arsenic Di sulphite

வீரப் பாசாணம் : Mercuric Chloride

கச்சாலப் பாசாணம் : சரியான ஆய்வு அறிவிக்கை கிடைக்கவில்லை chlorine

வெள்ளைப் பாசாணம் : Arcenic Tri Oxide

தொட்டிப் பாசாணம் : சரியான ஆய்வு அறிவிக்கை கிடைக்கவில்லை

சூதப் பாசாணம் : Mercury

சங்குப் பாசாணம் : சரியான ஆய்வு அறிவிக்கை கிடைக்கவில்லை

சித்தர் வேதியியல்[தொகு]

மேற்கண்ட ஒவ்வொரு பாசாணமும் ஒவ்வொரு விதமான தனி வேதியல் இயல்புகளைக் கொண்டதாகும். இந்த ஒன்பது பாசாணங்களை திரவமாக்கி மீண்டும் திடமாக்க ஒன்பது வகை விறகுகளும் (எரிபொருட்களும்), ஒன்பது தடவை வடிகட்ட ஏதுவாக ஒன்பது வடிகட்டிகளும் கையாளப்பட்டன.

சித்தர்கள் பாசாணங்களைக் கட்டும்போது அரைத்து, வேகவைத்து, எரித்து, நுண்ணிய அணுக்களாகப் பிரிக்கப் புடமிடுவர். எரு, வறட்டி இவற்றைக் கொண்டு எரிக்கப்படும் தீயின் அளவைக் குறிப்பிடுவது புடத்தின் வகையாகும். வறட்டியின் எண்ணிக்கைக்குத் தக்கவாறு பெயர் குறிப்பிடப்படும். புடம் ஒன்றுக்கு ஒன்று முதல் ஆயிரம் வறட்டி வரை பயன்படுத்தப்படும். காடைபுடம் 1; கவுதாரி 3; சேவல் 10; பன்றி 50; கனம் 700; கசம் 1000 என்றும், வறட்டி எண்ணிக்கையைக் கொண்டு புடத்தின் வகை குறிப்பிடப்படும். புடம்போடுவது என்பது சித்தர்களின் மற்றொரு வேதியியல் பிரிவு எனலாம்.

சித்த மருந்துக் கட்டு ஒவ்வொன்றுக்கும் அவற்றின் சேர்க்கைக்கும், தயாரிப்புக்கும் ஏற்றவாறு புடங்களின்வகை இருக்கும். சித்த மருந்துகள் தயாரிக்கப் பயன்படும் புடங்களின் பட்டியல் இது;

புடத்தின் பெயர் எரு அல்லது வறட்டி எண்ணிக்கை

எண் புடத்தின் பெயர் எரு அல்லது வறட்டி எண்ணிக்கை
1 காடைப் புடம் 1
2 கவுதாரிப் புடம் 3
3 குக்குடப் புடம் 10 (அ) 8
4 வராக புடம் 50
5 கசம் (அ) யானை புடம் 500 (அ) 1000
6 கன புடம் 700 (அ) 800
7 மணல் மறைவுப் புடம் 800
8 கோபுடம் 1000

நெருப்பினால் உண்டாகும் வெப்பம் மட்டுமல்லாது இயற்கையாகக் கிடைக்கக் கூடிய வெப்பம் தரும் புட வகைகளும் சித்தர்களால் பயன்படுத்தப்பட்டன. அவை: வரிசை எண் புடம் பெயர் பயன்படும் பொருள்.

எண் புடம் பெயர் பயன்படும் பொருள்
1 கோபுர புடம் மணல்
2 பாணிடப் புடம் தண்ணீர்
3 உமிப் புடம் உமி
4 தானியப் புடம் நெல்
5 சூரியப் புடம் வெயில்
6 சந்திரப் புடம் நிலவொளி
7 பருவப் புடம் பௌர்ணமி நிலவு
8 இருள் புடம் அமாவாசை இரவு
9 பனிப்புடம் பனி
10 பட்டைப் புடம் மரத்தூள்
11 நிழற்புடம் சூரிய ஒளி படாத அறை

நவ பாசாணக் கட்டு[தொகு]

நவ பாசாணக் கட்டு என்பது சித்தர்களுக்கு மட்டுமே சாத்தியமானது எனலாம். ஏனென்றால் நவபாசாணங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கிரகத்தின் தன்மையை கொண்டுள்ளதாம். மேலும் பாசாணத்திலிருந்து உருவாகும் சூட்சுமமான கதிர் வீச்சு, கட்டுபவரின் மனோநிலையை மேம்படுத்துகிறதாம். நவ பாசாணத்தினால் கட்டி உருவாக்கப்படும் தெய்வச் சிலைகள் நவக்கிரகத்தின் ஆற்றல்களைப் பெற்றுவிடுகின்றன என்று சித்தர்கள் நம்பினார்கள்.

போகர் சித்தர்[தொகு]

போகர் பதினெட்டு சித்தர்களில் ஒருவர். வேட்கோவர் வகுப்பைச் சார்ந்தவர். சர்வ சாத்திரங்களையும் கற்றுத் துறை போகியவர். இவர் சித்தத்தை அடக்கியதால் மட்டும் சித்தர் அல்ல, இந்த உலக இயக்கத்தை, பிரபஞ்சத்தை, இறை ஆற்றலை, உயிர் தத்துவத்தை, பிரபஞ்ச ரகசியத்தை என அனைத்தையும் ஆராய்ந்து அறிந்தவர். இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்து, இயற்கையை முற்றிலும் அறிந்தவர் இவர். இவர் காலாங்கி முனிவரின் சிறந்த மாணவர் என்று அறியப்படுகிறார்.

இவரது மருத்துவ ஞானம் அளவற்றது. இவருடைய வைத்திய நூல்களில் நிகண்டு, வைத்தியம், துவாத காண்டம், சப்ப காண்டம், வைத்திய சூத்திரம், ஆகியவையும், ஆன்மீகத்தில் ஞான சூத்திரம், அட்டாங்க யோகம், ஞான சாராம்சம் ஆகியவையும் குறிப்பிடத்தக்கன. நவ பாசாண சிலைக்கு அபிசேகம் செய்து அந்த அபிசேக தீர்த்தத்தை நாம் அருந்தினால் தீராத நோய் எதுவாக இருந்தாலும் தீர்ந்துவிடும். நவ பாசாணங்களின் சேர்க்கையில் போகர் மூன்று நவ பாசாண சிலைகள் உருவாக்கினார் என்பது உறுதி செய்ய இயலாத செவிவழி செய்தியாகும். அவை உள்ள இடங்கள்

  • பழனி தண்டாயுதபாணி (முருகன்) கோவில், திண்டுக்கல் மாவட்டம் .
  • குழ‌ந்தை வேல‌ப்ப‌ர் கோவில், பூம்பாறை, கொடைக்கான‌ல், திண்டுக்கல் மாவட்டம். கொடைம‌லை ச‌ரிவில், பூம்பாறையில் உள்ள இக்கோவில் மிக‌ப்ப‌ழ‌மை வாய்ந்த‌து என்பதற்கு இங்குள்ள கிரந்த எழுத்துக்களும், சமண கால சிலை அழகும் சான்று.
  • மூன்றாவது சிலை யாரோ ஒரு வம்சத்தினர் வீட்டில் வைத்து பூசை செய்வதாகவும் சொல்லப்படுகிறது.

போகர் மூன்று நவ பாசாண சிலைகளையும் செய்த இடம் தமிழ்நாட்டில், வருட நாடு, வத்திராயிருப்பு என்ற பகுதியில். சதுரகிரி மலையில் கோரக்கர் குகை இருப்பது பற்றியும், இவர்கள் பயன்படுத்திய நவபாசாணக் கலவைகளை கட்டிய இடம் இங்கு உள்ளதாகவும் அறியப்படுகிறது. ஆனால் இத்தகவலை உறுதி செய்யும்படி சித்தர் பாடலோ அல்லது வேறு ஆதாரமோ கிடைக்கவில்லை.

ப‌ழ‌னி ம‌லைக்கோவிலின் தென்மேற்கு திசையில் உள்ளது “போகரின் சீவ சமாதி” இங்கு அவ‌ர் பூசித்த‌ “புவ‌னேசுவ‌ரி அம்ம‌ன் சிலையும், ம‌ர‌க‌த‌ லிங்க‌மும் இன்றும் பூசையில் உள்ளது. இந்த‌ ச‌ன்னிதியில் இருந்து முருக‌னின் திருவ‌டி நிலைக்கு உள்ள சுர‌ங்க‌ பாதையில் சென்ற‌ போகர் திரும்ப‌வில்லை.

திருமாகறல்[தொகு]

காஞ்சிபுரம் மாவட்டம் திருமாகறல் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு திருமாகரலீசுவரர் நவ பாசாண சுயம்பு லிங்கம் ஆவார். அகத்தியர் பூசை செய்து இதன் பலனை கண்டுள்ளார். எலும்பு முறிவு இளம்பிள்ளை வாதம் போன்ற எலும்பு சம்பந்தமான நோய்களுக்கு தீர்த்தம் அருந்தி வர விரைவில் பலன் கிடைக்கும்.

தேவிபட்டினம்[தொகு]

இராமநாதபுரத்திலிருந்து 15 கி.மீ. தொலைவில் தேவிபட்டினம் உள்ளது. இந்துக்களின் புனித யாத்திரைத் தலம் ஆகும். இங்கு ஸ்ரீராமனால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகக் கூறப்படும் நவ பாஷாணம் (9 கற்கள்) என்ற நவக் கிரகங்கள் உள்ளன. தேவிபட்டிணம் நவபாஷாண சிலை யார் செய்தது என்று தெரியவில்லை. இவை கரையிலிருந்து சுமார் 40 மீட்டர் கடலினுள் உள்ளது.

வெளி இணைப்பு[தொகு]

  1. Navapashanam Idols...
  2. சித்தர்கள் இராச்சியம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=நவபாசானம்&oldid=3621987" இலிருந்து மீள்விக்கப்பட்டது