தைமூரிய வம்சம்
தைமூரிய வம்சம் என்பது, துருக்க-மங்கோலிய மூலத்தைக் கொண்டவர்களும் பின்னர் பாரசீகராக மாறியவர்களுமான மத்திய ஆசிய சுன்னி முசுலிம் வம்சத்தினர் ஆவர். இவர்களது பேரரசு மத்திய ஆசியா, ஈரான், இன்றைய ஆப்கானிசுத்தான் மற்றும் பாகிசுத்தான், இந்தியா, மெசொப்பொத்தேமியா, காக்கேசியா ஆகியவற்றில் பெரும்பகுதி ஆகியவற்றை உள்ளடக்கிப் பரந்து விரிந்திருந்தது. இது புகழ் பெற்ற நாடுபிடிப்பாளரான தைமூரினால் (தாமர்லான்) 14 ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது.
16 ஆம் நூற்றாண்டில், தைமூரிய இளவரசரும் பர்கனாவின் ஆட்சியாளருமாக இருந்த பாபர் இந்தியாமீது படையெடுத்து முகலாயப் பேரரசை உருவாக்கினார். இது, 18 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில், பேரரசர் ஔரங்கசீப்புக்குப் பின்னர் மங்கத் தொடங்குவதற்கு முன் இந்தியத் துணைக்கண்டத்தின் பெரும் பகுதியை ஆட்சி செய்தது. பின்னர் 1857 இந்தியக் கிளர்ச்சிக்குப் பின்னர் இந்தியாவின் பிரித்தானிய அரசால் முறையாகக் கலைக்கப்பட்டது. இத்துடன் தைமூரிய வம்சத்தினரின் கடைசி அரசும் இல்லாதொழிந்தது.
[தொகு] தோற்றப் பின்னணி
தைமூரிய வன்சத்தினரின் தோற்றம் பர்லாசு (Barlas) என அழைக்கப்படும் மங்கோலிய நாடோடிக் கூட்டமைப்புடன் தொடங்குகிறது. பர்லாசுகள் கெங்கிசுக் கானின் படையினரில் எஞ்சிய குழுக்களாவர். மங்கோலியர் மத்திய ஆசியாவைக் கைப்பற்றிய பின்னர் பர்லாசுகள் துருக்கத்தானத்தில் குடியேறினர். இதனால் இது மகுலித்தானம் (மங்கோலியர் நாடு) எனவும் எனவும் அழைக்கப்பட்டது. உள்ளூர்த் துருக்கருடனும், பிற துருக்க மொழி பேசுவோருடனும் குறிப்பிடத்தக்க அளவு கலந்து பழகியதால், தைமூரின் காலத்தில் பர்லாசுகள் மொழியாலும், பழக்க வழக்கங்களாலும் துருக்கராகவே மாறிவிட்டனர். மேலும், இசுலாத்தைக் கைக்கொள்ளத் தொடங்கிய பின்னர், இசுலாமியச் செல்வாக்கு உருவான காலத்தின் தொடக்கத்திலிருந்து முன்னிலை வகித்த பாரசீகக் கல்வி, உயர் பண்பாடு ஆகியவற்றையும் மத்திய ஆசியத் துருக்கரும், மங்கோலியரும் ஏற்றுக்கொண்டனர். தைமூரிய உயர் குடியினர், பாரசீக-இசுலாமிய அரசவைப் பண்பாட்டுடன் ஒன்றுகலப்பதற்கு பாரசீக இலக்கியம் முக்கிய பங்காற்றியது.