துங்கு அப்துல் ரகுமான்
துங்கு அப்துல் ரகுமான் (Tunku Abdul Rahman) புத்ரா அல்-ஹஜ் மலேசியாவின் முதல் பிரதமர் ஆவார். மன்னர் பரம்பரை வழி பிறந்த துங்கு அப்துல் ரகுமான் சுதந்திர தந்தை எனவும் மலேசிய தந்தை எனவும் இன்று வரை பரவலாகப் போற்றப்படுகிறார்.. இவர் 31-ஆம் திகதி ஆகத்து மாதம் 1957-இல் மலேசியாவிற்குச் (அன்றைய மலாயா) சுதந்திரம் பெற்றுத் தந்தார். இவர் மலாய், சீனர் மற்றும் இந்தியர் ஆகிய இனங்களை ஒருமைப்படுத்தி ஆயுதங்களைப் பயன்படுத்தாமல் அறிவுப்பூர்வமாக ஆங்கிலேயர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி சுதந்திரத்திற்கு வழி வகுத்தார். துங்கு அப்துல் ரகுமான், துன் தன் செங் லோக் மற்றும் துன் வி.தி.சம்பந்தன் ஆகிய தலைவர்களின் கூட்டு முயற்சியினால் மலேசிய நாட்டிற்குச் சுதந்திரம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து 1963-இல் மலாயாவுடன் சபா, சரவாக் மாநிலங்களை இணைத்து மலேசியாவை உருவாக்க பெரும் பங்கு வகித்தார்.