திருப்பாணாழ்வார்
திருப்பாணாழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். சோழ நாட்டின் உறையூரில் பிறந்தவர். திருமால் மீது மிகுந்த பக்தி கொண்டவர் எனினும், பாணர் குலத்தைச் சேர்ந்தவர் ஆதலால் திருவரங்கத்தின் உள்ளே செல்வதற்கு இவருக்கு அனுமதி கிடையாது. அதனால் இவர் காவிரியின் மறுகரையில் இருந்தவாறே பண் இசைத்துத் திருமாலை வழிபட்டுவந்தார். ஒரு முறை இவரை இழிவுபடுத்திய சிலர் அவரைக் கல்லாலும் அடித்துக் காயப்படுத்தினர். அவரது துன்பம் தீர்க்க விரும்பிய இறைவன் இரத்தம் வடிந்த முகத்தினராய் லோகசாரங்கர் என்னும் திருமால் பக்தரொருவருக்குக் கனவில் தோன்றியதாகவும், பாணரைக் கல்லால் அடித்தபோது அவர் மனத்திலிருந்த தனக்குக் காயமேற்பட்டதாகக் கூறியதாகவும் வைணவ நூல்கள் கூறுகின்றன. இறைவன் கேட்டுக்கொண்டபடி சாரங்கர், பாணரான திருப்பாணாழ்வாரைத் தனது தோளில் சுமந்து திருவரங்கத்துள் சேர்த்ததாகவும் கூறப்படுகின்றது.
இவர் திருமாலின் மீது பத்துப் பாடல்கள் பாடியுள்ளார். இவை வைணவத் தமிழ் நூல்களின் தொகுப்பான நாலாயிர திவ்வியப் பிரபந்தம் என்னும் நூலில் சேர்க்கப்பட்டுள்ளன. இப் பத்துப் பாடல்களும் திருமாலின் திருவடிகளில் தொடங்கி தலை வரை உள்ள உறுப்புக்களான, பாதம், ஆடை, உந்தி, உதரபந்தனம், மார்பு, கழுத்து, வாய், கண்கள், உடல், தலை ஆகிய பத்தையும் பற்றிப் பாடியவை ஆகும்.
[தொகு] எடுத்துக்காட்டு
திருப்பாணாழ்வாரின் அமலனாதிபிரான் எனப்படும் பத்துப் பாடல்களிலிருந்து, திருமாலின் மார்பைப் பற்றிப் பாடிய ஒரு பாடல்:
- பாரமாய பழவினை பற்றறுத்து
- என்னைத்தன்
- வாரமாக்கி வைத்தான் வைத்ததன்றி
- யென்னுள் புகுந்தான்
- கோர மாதவம் செய்தானென்கொ
- லறியே னரங்கத் தம்மான்திரு
- வார மார்பதன் றோஅடி
- யேனை யாட்கோண்டதே
|
|||||