திருத்தந்தை பிரான்சிசு நியமித்த கர்தினால்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருத்தந்தை பிரான்சிசு நியமித்த கர்தினால்கள் என்னும் தலைப்பின் கீழ் கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக விளங்கும் திருத்தந்தை பிரான்சிசு 2004, சனவரி 12ஆம் நாள் கர்தினால் பதவிக்கு உயர்த்துவதாக அறிவித்து, பின்னர் 2014, பெப்ருவரி 22ஆம் நாளில் வத்திக்கான் நகரத்தின் புனித பேதுரு பெருங்கோவிலில் கர்தினால்மார்களாக நியமித்த 19 திருச்சபைத் தலைவர்கள் இடம் பெறுகிறார்கள். திருத்தந்தை பிரான்சிசு 2013, மார்ச்சு 13ஆம் நாள் கத்தோலிக்க திருச்சபையின் 266ஆம் திருத்தந்தையாகப் பொறுப்பேற்ற பின் முதன்முறையாக கர்தினால்களை நியமித்தார்.

இவ்வாறு கர்தினால்களை நியமிப்பது குறித்த அறிக்கையை திருத்தந்தையின் சாதாரண ஆலோசனைக்குழுகு கூட்டத்தின்போது கர்தினால்களின் முன்னிலையில் திருத்தந்தை பிரான்சிசு அறிவித்தார். புதிதாக நியமிக்கப்பட்ட 19 கர்தினால்மார்களுள் மூன்று பேர் 80 வயதினை எட்டிவிட்டதால் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை அவர்களுக்குக் கிடையாது. எஞ்சிய 16 பேரும் புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்க உரிமை கொண்டுள்ளனர்.

கர்தினால் குழுக் கூட்டம்[தொகு]

2014, பெப்ருவரி 22[தொகு]

பெயர் கர்தினாலாக உயர்த்தப்பட்டபோது வகித்த பதவி நாடு
லொரேன்சோ பால்திசேரி (Lorenzo Baldisseri) ஆயர் மன்றத்தின் பொதுச் செயலர்  இத்தாலி
குவால்த்தியேரோ பாசெத்தி (Gualtiero Bassetti) பெரூஜியா உயர் மறைமாவட்டத்தின் பேராயர்  இத்தாலி
லெயோப்போல்தோ ஹோசே பிரேனெசு சொலோர்சானோ
(Leopoldo José Brenes Solórzano)
மானாகுவா உயர் மறைமாவட்டத்தின் பேராயர்  நிக்கராகுவா
ரிக்கார்தோ எசாத்தி ஆந்த்ரேல்லொ (Ricardo Ezzati Andrello) சிலி நாட்டு சந்தியாகு உயர் மறைமாவட்டத்தின் பேராயர்  சிலி
ழான்-பியேர் குட்வா (Jean-Pierre Kutwa) அபிஜான் உயர் மறைமாவட்டத்தின் பேராயர்  ஐவரி கோஸ்ட்
ஜெரால்ட் சிப்ரியன் லக்ருவா (Gérald Cyprien Lacroix) கெபெக் உயர் மறைமாவட்டத்தின் பேராயர்  கனடா
சிப்லி லாங்ளுவா (Chibly Langlois) லே காயி மறைமாவட்டத்தின் ஆயர்  எயிட்டி
கெர்கார்ட் லூட்விக் முல்லர் (Gerhard Ludwig Müller) விசுவாசப் பேராயத்தின் தலைவர் ரேகன்சுபர்க் மறைமாவட்ட முன்னாள் ஆயர்  செருமனி
வின்சென்ட் நிக்கோல்சு (Vincent Nichols) வெஸ்ட்மின்ஸ்டர் உயர் மறைமாவட்டத்தின் பேராயர்  ஐக்கிய இராச்சியம்
பிலிப்பே கேத்ராங்கோ (Philippe Ouédraogo) உகாதூகு உயர் மறைமாவட்டத்தின் பேராயர்  புர்க்கினா பாசோ
பியேத்ரோ பரோலின் (Pietro Parolin) வத்திக்கான் நகரின் கர்தினால் செயலர்  இத்தாலி
மாரியோ அவுரேலியோ போலி (Mario Aurelio Poli) புவோனோஸ் அயிரெஸ் உயர் மறைமாவட்டத்தின் பேராயர்  அர்கெந்தீனா
ஓர்லாண்டோ கெவேடோ (Orlando Quevedo) கொத்தபாத்தோ உயர் மறைமாவட்டத்தின் பேராயர்  பிலிப்பீன்சு
ஆண்ட்ரூ யெஓம் சூ-ஜங் (Andrew Yeom Soo-jung) செயோல் உயர் மறைமாவட்டத்தின் பேராயர்  தென் கொரியா
பென்யமீனோ ஸ்டெல்லா (Beniamino Stella) குருக்கள் பேராயத்தின் தலைவர்  இத்தாலி
ஓரானி ஜோம் தெம்பேஸ்தா (Orani João Tempesta) ரியோ டி ஜெனேரோ உயர் மறைமாவட்டத்தின் பேராயர்  பிரேசில்
பெர்னாண்டோ செபாஸ்தியான் அகிய்லார் (Fernando Sebastián Aguilar) பம்ப்லோனா உயர் மறைமாவட்டத்தின் முன்னாள் பேராயர்  எசுப்பானியா
லோரிசு பிரான்செஸ்கோ காப்போவில்லா (Loris Francesco Capovilla) திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவானின் தனிச் செயலர்; கியேத்தி மறைமாவட்ட முன்னாள் ஆயர்  இத்தாலி
கெல்வின் எட்வர்ட் பேலிக்சு (Kelvin Edward Felix) காஸ்த்ரீஸ் உயர் மறைமாவட்டத்தின் பேராயர்  செயிண்ட். லூசியா

புதிய கர்தினால்கள் நியமனம் பற்றி சில குறிப்புகள்[தொகு]

திருத்தந்தை பிரான்சிசு நியமித்த கர்தினால்கள் உலகின் எத்திசையிலுமிருந்தும் வருகின்றனர். ஐரோப்பா, ஐக்கிய அமெரிக்க நாடுகள் போன்ற பகுதிகளிலிருந்து வரும் கர்தினான்களின் எண்ணிக்கை குறைகிறது; மாறாக, தென்னமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசியா போன்ற பகுதிகளிலிருந்து வரும் கர்தினால்களின் எண்ணிக்கை கூடுகிறது.

திருத்தந்தை நியமித்த 19 கர்தினால்களுள் 16 பேர் எண்பது வயதுக்கு உட்பட்டவர்கள். எனவே அவர்கள் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் அவையில் கலந்துகொண்டு வாக்களிக்கும் தகுதி பெற்றவர்கள்.

இப்போது நியமிக்கப்பட்ட கர்தினால்களுள் மிக இளையவர் 55 வயதும் மிக முதியவர் 98 வயதும் உடையோர் ஆவர். புதிய கர்தினால்களுள் நால்வர் திருச்சபையின் மைய நிர்வாகத்தில் பங்கேற்போர் ஆவர். பரோலின், முல்லர், பல்திசேரி, ஸ்தெல்லா என்னும் அந்நால்வரும் வத்திக்கான் மைய அலுவலங்களின் தலைவர்கள் ஆவர். ஆனால் 12 பேர் உலகின் பல பகுதிகளின் நேரடியாக அருட்பணி புரிவதில் ஈடுபட்டுள்ளோர் ஆவர். தென்னமெரிக்கா, மத்திய அமெரிக்கா பகுதிகள் கூடுதல் பிரதிநிதித்துவம் பெறுகின்றன. நிக்கராகுவா, ஹெயிட்டி, பிரேசில், சிலே, அர்ஜெந்தீனா நாடுகள் ஒவ்வொன்றிலிருந்தும் ஒரு கர்தினால் நியமிக்கப்பட்டுள்ளார். திருத்தந்தை பிரான்சிசு திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன் பேராயராகப் பணிபுரிந்த புவோனோஸ் அயிரெஸ் மறைமாவட்டத்தின் பேராயர் கர்தினாலாக நியமிக்கப்படுவார் என்பது எதிர்பார்க்கப்பட்டதே. ஆனால் ஐவரி கோஸ்ட்டின் அபிஜான் நகர ஆயர் பெயரும் ஹெயிட்டி நாட்டு ஆயர் பெயரும் எதிர்பார்க்கப்படவில்லை. மாறாக, திருச்சபை ஏழைகளின் குழு என்பதை வலியுறுத்தும் வகையில் அந்த ஆயர்கள் கர்தினால் நிலை பெற்றது தோன்றுகிறது.

புதிய கர்தினால்கள் நியமனம் பற்றி மேலதிக தகவல்கள்[தொகு]

  • 2014, பெப்ருவரி 22ஆம் நாள் திருச்சபைத் தலைவர்கள் 19 பேரை கர்தினால் நிலைக்கு திருத்தந்தை பிரான்சிசு உயர்த்தியபோது அவரோடு திருத்தந்தை பதினாறாம் பெனடிக்டும் கூடவே பங்கேற்றார். கடந்த அறுநூறு ஆண்டுகளில் திருத்தந்தை பதவியைத் தாமாகவே முன்வந்து துறந்து, பதவி விலகிய முதல் திருத்தந்தை இவரே.
  • கர்தினால்மாருக்கு, அவர்களுடைய பதவிக்குச் சிறப்புச் சின்னமான சிவப்பு சதுர வடிவத் தொப்பி (en:biretta), மற்றும் மோதிரம் ஆகியவற்றை திருத்தந்தை பிரான்சிசு வழங்கினார். சிவப்பு நிறத்தொப்பி, கர்தினால்மார்கள் திருச்சபைக்குப் பிரமாணிக்கமாக இருந்து, தமது கிறித்தவ நம்பிக்கையின் பொருட்டு தம் இரத்தத்தைச் சிந்தவும் தயங்கலாகாது என்பதைக் குறிக்கிறது. அதுபோலவே, அவர்களுக்கு வழங்கப்படும் மோதிரம் அவர்கள் திருச்சபையோடு கொண்டுள்ள நெருங்கிய உறவைக் குறித்துநிற்கிறது.
  • புதிதாக நியமிக்கப்பட்ட 19 கர்தினால்களுள் ஒருவர் மட்டும் நேரடியாகப் பங்கேற்க இயலவில்லை. லோரிசு பிரான்செஸ்கோ காப்போவில்லா (Loris Francesco Capovilla) என்ற அவர் கியேத்தி மறைமாவட்டத்தின் முன்னாள் ஆயர். அவர் திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவானின் தனிச்செயலராகப் பணிபுரிந்தவர். 98 வயதான அவர் உடல் நலக் குறைவின் காரணமாக நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இயலவில்லை.
  • புதிய கர்தினால்மாரை நியமித்த சடங்கின்போது திருத்தந்தை அவர்களுக்கு பல அறிவுரைகள் கூறினார். கர்தினால் என்பவர் திருச்சபைக்குப் பணிபுரிய அழைக்கப்பட்டவர். அவர் ஓர் அரசவை உறுப்பினர் அல்ல. அரசவையில் தான் வீண்பேச்சு, புறம் கூறல், சூழ்ச்சி போன்றவை நடக்கும். ஆனால் திருச்சபைத் தலைவர்களான அவர்கள் அவ்வாறு செயல்படலாகாது. அவர்கள் புனிதர்களாக வாழ்ந்திட அழைக்கப்படுகிறார்கள். - இவ்வாறு திருத்தந்தை புதிய கர்தினால்மார்களுக்கு அறிவுரை வழங்கினார்.
  • 2014, பெப்ருவரி 23ஆம் நாள், திருச்சபை வழிபாட்டு ஆண்டின் ஏழாம் ஞாயிறன்று திருத்தந்தை பிரான்சிசு புதிய கர்தினால்மார்களோடு இணைந்து திருப்பலி நிறைவேற்றினார்.[1]

ஆதாரங்கள்[தொகு]

  1. "புதிய கர்தினால்மார் நியமனம்". Archived from the original on 2014-02-28. பார்க்கப்பட்ட நாள் 2014-02-25.

1. "New Cardinals to be created in February 2014". 31 October 2013. Retrieved 27 December 2013.
2. Allen Jr., John L. (15 December 2013). "Francis shoots down women cardinals". National Catholic Reporter. Retrieved 28 December 2013.
3.Tornielli, Andrea (20 October 2013). "Francis’ first consistory". Vatican Insider. Retrieved 28 December 2013.
4. "Pope Francis announces names of new Cardinals". Vatican Radio. 12 January 2014. Retrieved 13 January 2014.
5. D'Emilio, Frances (January 12, 2014). "Pope Names 19 New Cardinals, Focusing on the Poor". ABC News. Retrieved January 12, 2014.
6.Tornielli, Andrea (January 12, 2014). "Pope Francis reveals names of new cardinals". Vatican Insider. Retrieved January 12, 2014.